552. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று (மீண்டும்) சொன்னார்கள்.
உடனே நான், இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள் என்று -பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச்- சொன்னேன்.
மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள்,தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று! என்றார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்லாஹ் தூயவன்! அதனால் துப்புரவு செய்துகொள் என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தை (வெட்கப்பட்டு) மறைத்துக்கொண்டார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் (பின்வருமாறு) இடம்பெற்றுள்ளது:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அஸ்மா பின்த் ஷகல் எனும் பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே, எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் நின்று விட்டால் அவர் எவ்வாறு குளிக்க வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸிலுள்ளபடி பதிலளித்தார்கள். இந்த அறிவிப்பில் பெருந்துடக்கிற்கான குளியலைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 3
பாடம் : 14 உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் பெண்களும், அவர்களது குளியல் மற்றும் தொழுகை முறையும்.
553. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப் போக்கு (இஸ்திஹாளா) ஏற்படுபவளாக இருக்கிறேன்; (மாதம் முழுதும்) நான் சுத்தமாவதில்லை. எனவே,நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை (தொழுகையை விட்டுவிடாதே!) ஏனெனில், இது(இஸ்திஹாளா), இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; (கர்ப்பப் பையிலிருந்து வெளிவரும்) மாதவிடாயன்று. (மாதத்தில் வழக்கமாக) மாதவிடாய் ஏற்படும் நாட்களில் தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் முடிந்துவிட்டால் இரத்தத்தைக் கழுவிவிட்டுத் தொழுது கொள்! என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஜரீர் (ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் பின் அப்தில் முத்தலிப் பின் அசத் (ரலி) அவர்கள் (நபியவர்களிடம்) வந்தார்கள். அவர் எங்கள் குலத்தைச் சேர்ந்த பெண்மணியாவார் எனும் குறிப்பு (கூடுதலாக) இடம்பெற்றுள்ளது.
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஒரு கூடுதலான தகவல் காணப்படுகிறது. (இரத்தத்தைக் கழுவிக்கொள்; உளூச் செய்துகொள் என்பதே அந்தத் தகவலாகும்.) ஆயினும், அதை நாம் குறிப்பிடவில்லை. (ஹம்மாத் ஒருவர் மட்டுமே இதை அறிவித்திருப்பதே அதற்குக் காரணம்.)
அத்தியாயம் : 3
554. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் உயர் இரத்தப்போக்கு ஏற்படுபவளாக இருக்கிறேன் என்று கூறி தீர்ப்புக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். எனவே (மாதவிடாய் காலம் முடிந்தவுடன்) குளித்துவிட்டுத் தொழுது கொள்! என்றார்கள். எனவே உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்துவந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், உம்மு ஹபீபா (ரலி) அவர்களை ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள் என்று கூறவில்லை. மாறாக (தனிப்பட்ட விருப்பில்) உம்மு ஹபீபா அவர்கள் தாமாகவே அவ்வாறு செய்துவந்தார்கள்.
இப்னு ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இப்னத்து ஜஹ்ஷ் என்று இடம்பெற்றுள்ளது. உம்மு ஹபீபா எனும் பெயர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 3
555. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் துணைவியாருமான உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழு வருட காலமாக உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) இருந்துவந்தது. எனவே, அவர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது மாதவிடாயன்று; இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். எனவே நீ (மாதவிடாய்க் காலம் முடிந்ததும்) குளித்துவிட்டுத் தொழுதுகொள்! என்று கூறினார்கள்.
தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் தம் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியாருமான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களது இல்லத்திலிருந்த துணி அலசும் பாத்திரத்தில் (நின்று) குளிப்பார்கள். (அவ்வாறு அவர்கள் குளிக்கும்போது அந்தப் பாத்திரத்தில்) அவர்களது இரத்தத்தின் நிறம் தண்ணீரை மிகைத்திருக்கும்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் இந்த ஹதீஸை அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அபூபக்ர் (ரஹ்) அவர்கள், ஹிந்தாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! (நபி (ஸல்) அவர்கள் அளித்த) இந்தத் தீர்ப்பை அவர் செவியுற்றிருந்தால் அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் அழுதுவிடுவார். ஏனெனில், ஹிந்தா (உயர் இரத்தப்போக்கின் காரணமாக) தொழாமல் இருந்துவந்தார் என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்களது கூற்று இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழாண்டுகளாக உயர் இரத்தப்போக்கு இருந்து வந்தது என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 3
556. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உயர்) இரத்தப் போக்கு பற்றிக் கேட்டார். நான் அவர் (நின்று) குளித்துவந்த துணி அலசும் பாத்திரத்தில் இரத்தம் நிரம்பியிருக்கக் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (வழக்கமாக) மாதவிடாய் நிற்கும் நாட்கள்வரை நீ காத்திரு! அதற்குப் பின்னர் குளித்துவிட்டுத் தொழுது கொள்! என்று அவரிடம் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
557. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் தமக்கு (உயர்) இரத்தப்போக்கு ஏற்படுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மாதவிடாய் நிற்கும் நாட்கள்வரை நீ காத்திரு! பின்னர் குளித்துக்கொள்! என்று அவரிடம் கூறினார்கள். உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராய் இருந்தார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 15 மாதவிடாய் நாட்களில் விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்பது (களாச் செய்வது) கட்டாயமாகும்; விடுபட்ட தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை.
558. முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம், எங்களில் ஒருத்தி மாதவிடாய் நாட்களில் தமக்கு விடுபட்டுப்போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ (கரிஜிய்யாக் கூட்டத்தாரின் கேந்திரமான) ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் எங்களில் ஒருத்திக்கு மாதவிடாய் ஏற்படும். பின்னர் எதையும் மீண்டும் தொழுமாறு அவள் கட்டளையிடப்பட்டதில்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
559. முஆதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், மாதவிடாய் ஏற்பட்ட பெண் விடுபட்டத் தொழுகைகளை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா?அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு மாதவிடாய் ஏற்படும்போது (விடுபட்டத் தொழுகைகளை மீண்டும்) நிறைவேற்றுமாறு அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடவா செய்தார்கள்? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
அத்தியாயம் : 3
560. முஆதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணின் நிலை என்ன? (விடுபட்ட) நோன்பை மட்டும் அவள் மீண்டும் நோற்க வேண்டும். (விடுபட்டத்) தொழுகைகளை மீண்டும் தொழக் கூடாதா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா? என்று கேட்டார்கள். நான் ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவள் அல்லள். ஆயினும், (தெரிந்துகொள்வதற்காகவே) கேட்கிறேன் என்றேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், எங்களுக்கும் அது (மாதவிடாய்) ஏற்படத்தான் செய்தது. அப்போது விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்குமாறு நாங்கள் பணிக்கப்பட்டோம். விடுபட்டத் தொழுகையை மீண்டும் தொழுமாறு நாங்கள் பணிக்கப்படவில்லை என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 16 குளிப்பவர் துணி போன்றவற்றைத் திரையாக்கிக்கொள்வது.
561. உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஒரு துணியால் திரையிட்டு மறைத்துக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 3
562. உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்காவின் மேட்டுப் பகுதியில் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளியலுக்காக எழுந்தார்கள். அப்போது அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்கள் திரையிட்டு மறைத்தார்கள். (குளித்த) பிறகு தமது ஆடையை வாங்கிப் போர்த்திக்கொண்டார்கள். பின்னர் முற்பகல் தொழுகை (ளுஹா) எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அத்தியாயம் : 3
563. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் அவர்களது ஆடையினால் திரையிட்டு மறைத்துக்கொண்டார்கள். குளித்து முடிந்த பின் அந்த ஆடையை வாங்கிப் போர்த்திக்கொண்டார்கள். பின்னர் நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அது முற்பகல் (ளுஹா) நேரமாகும் என்று உம்மு ஹானி (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
564. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்கு (குளிக்கத்) தண்ணீர் வைத்துவிட்டு அவர்களைத் திரையிட்டு மறைத்துக்கொண்டேன். அவர்கள் குளித்தார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 17 மறைக்க வேண்டிய பிறருடைய உறுப்புகளைப் பார்ப்பது தடை செய்யப் பட்டுள்ளது.
565. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஆண் மற்றோர் ஆணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம்;
ஒரு பெண் மற்றோர் பெண்ணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்; ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மறைக்க வேண்டிய உறுப்பு (அவ்ரத்) எனும் வார்த்தைக்கு பதிலாக மற்றோர் ஆணின் நிர்வாணத்தை,மற்றொரு பெண்ணின் நிர்வாணத்தை(ப் பார்க்க வேண்டாம்) என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 18 தனிமையில் குளிக்கும்போது ஆடையின்றிக் குளிக்கலாம்.
566. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் பிறந்த மேனியுடன் ஒருவர் மற்றவரது மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்த்துக்கொண்டே குளிப்பார்கள். மூசா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். (அன்னாரைக் கொச்சைப்படுத்த விரும்பிய) அந்த மக்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா குடலிறக்க நோயாளியாய் இருப்பதனால்தான் அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை என்று கூறினர். ஒரு முறை மூசா (அலை) அவர்கள் குளிக்கப் போனார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை(க் களைந்து) ஒரு கல்லின் மீது வைத்தார்கள். அந்தக் கல் அவர்களது துணியுடன் ஓடியது. மூசா (அலை) அவர்கள் அதைப் பின்தொடர்ந்து கல்லே, எனது துணி! கல்லே, எனது துணி! என்று கூறியவாறு விரைந்து ஓடினார்கள். இறுதியாக (பனூ இஸ்ராயீல் மக்கள் பகுதிக்கு வந்தபோது அவர்கள்) மூசா (அலை) அவர்களின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்த்துவிட்டு,அல்லாஹ்வின் மீதாணையாக! மூசாவிற்கு எந்தக் குறையுமில்லை என்று கூறினர். மூசா (அலை) அவர்கள் (நன்கு) பார்க்கப்படும்வரை (ஓடிய) அந்தக் கல் (பின்பு) நின்றுவிட்டது. உடனே மூசா (அலை) அவர்கள் தமது ஆடையை எடுத்துக்கொண்டு அந்தக் கல்லை (தமது கைத்தடியால்) அடிக்கலானார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா (அலை) அவர்கள் (தமது கையிலிருந்த தடியால்) கல்லின் மீது அடித்த காரணத்தால் ஆறு அல்லது ஏழு தழும்புகள் அந்தக் கல்லில் பதிந்துவிட்டன.
அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்குப் பல ஹதீஸ்களை அறிவித்தார்கள். இந்த ஹதீஸும் அவற்றில் ஒன்றாகும்.
அத்தியாயம் : 3
பாடம் : 19 மறைக்க வேண்டிய உறுப்பை (மறைத்து)க் காப்பதில் கவனம் செலுத்துதல்.
567. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியவர்களுக்கு நபித்துவம் வழங்கப்படுவதற்கு முன்பு) கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்ட போது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து எடுத்து வந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களை நோக்கி கல் சுமப்பதற்கு (வசதியாக) உமது வேட்டியை அவிழ்த்துத் தோளில் (சும்மாடாக) வைத்துக் கொள்க! என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களுடைய கண்கள் வானத்தை நோக்கி நிலைகுத்தி நின்றன. பிறகு எழுந்து என் வேட்டி, என் வேட்டி என்றார்கள். வேட்டியை (எடுத்துக் கொடுத்த உடனே அதை) இறுக்கமாகக் கட்டிக் கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மது பின் ராஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உமது தோளில் என்பதற்கு பதிலாக உமது பிடரியில் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
568. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குறைஷிக் குலத்தார் கஅபாவைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களுடன் கஅபாவுக்காகக் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ஒரு வேட்டி அணிந்திருந்தார்கள். அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தையான அப்பாஸ் (ரலி) அவர்கள், என் சகோதரரின் மகனே! நீங்கள் உங்கள் வேட்டியை அவிழ்த்து, தோள்மீது கல்லுக்குக் கீழே வைத்துக்கொள்ளலாமே!என்று கூறினார்கள். (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதரும் அவ்வாறே அதை அவிழ்த்துத் தமது தோள்மீது வைத்தார்கள். உடனே மயக்கம் ஏற்பட்டுக் கீழே விழுந்தார்கள். அந்த நாளுக்குப் பின் ஒருபோதும் அவர்கள் (ஆடையின்றி) பிறந்த மேனியுடன் காணப்பட்டதில்லை.
அத்தியாயம் : 3
569. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு கனமான கல்லைத் தூக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். அப்போது என் உடலில் ஒரு மெல்லிய வேட்டி இருந்தது. அது அவிழ்ந்துவிட்டது. என்னிடமோ பெரிய கல். எனவே, என்னால் அதை இறக்கி வை(த்துவிட்டு வேட்டியைப் பிடி)க்க முடியாமல் சேர வேண்டிய இடம்வரை போய்ச் சேர்ந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமது ஆடையை நோக்கிச் சென்று அதை எடுத்து (உடுத்தி)க்கொள்க! நிர்வாணமாக நடக்காதீர்! என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 20 இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்கான மறைவான இடங்கள்.
570. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டு சென்றார்கள். அப்போது என்னிடம் இரகசியமாக ஒரு செய்தியைச் சொன்னார்கள். அதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றச் செல்லும் மறைவிடங்களிலேயே மேடு அல்லது பேரீச்சந்தோட்டம் ஆகியனவே அவர்களுக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு அஸ்மா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ஹாயிஷு நக்ல் என்பதற்கு பேரீச்சந்தோட்டம் என்று பொருள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 21 நீர் (விந்து) வெளிப்பட்டால்தான் நீர் (குளியல்) கடமையாகும்.
571. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு திங்கள் கிழமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிற்கு அருகிலுள்ள) குபா எனும் இடத்திற்குச் சென்றேன். நாங்கள் பனூ சாலிம் கோத்திரத்தார் வசிக்குமிடத்திற்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களது வீட்டு வாசலில் நின்று அவர்களைச் சப்தமிட்டு அழைத்தார்கள். உடனே இத்பான் (ரலி) அவர்கள் தமது கீழங்கியை இழுத்தபடி (அவசர அவசரமாக) வெளியே வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் இம்மனிதரை அவசரப்படுத்திவிட்டோம் என்று கூறினார்கள்.
அப்போது இத்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (தாம்பத்திய உறவுகொள்ளும்போது) விந்து வெளிவருவதற்கு முன்பே தம் மனைவியைவிட்டு அவசரப்படுத்தப்பட்டு (விலக்கப்பட்டு)விட்டார். இந்நிலையில் என்ன சட்டம், (அவர்மீது குளியல் கடமையாகுமா) கூறுங்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தண்ணீர் (விந்து) வெளிப்பட்டால்தான் தண்ணீர் (குளியல்) கடமையாகும் என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3