5313. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் தமக்கிடையே பரிவு காட்டுகின்றன. தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பு, மறுமை நாளுக்கு உரியவையாகும்.
இதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5314. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்த நாளில் அன்பை நூறு பாகங்களாகப் படைத்தான். அவற்றில் ஒவ்வொரு பாகமும் வானம் பூமிக்கிடையே உள்ள (இடத்)தை அடைத்துக் கொள்ளும் அளவுடையதாகும். அவற்றில் ஒரு பாகத்தையே பூமியில் வைத்தான். அந்த ஒரு பாகத்தினால்தான் தாய் தன் குழந்தைமீது பாசம் கொள்கிறாள். மிருகங்களும் பறவைகளும் ஒன்றன் மீதொன்று அன்பு காட்டுகின்றன. மறுமை நாள் வரும்போது இந்த ஓர் அன்புடன் சேர்த்து அன்பை இறைவன் (நூறாக) முழுமையாக்குவான்.
இதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5315. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். அந்தக் கைதிகளில் ஒரு பெண் (தனது மார்பில் சுரந்த பாலை ஊட்டுவதற்காகத் தனது குழந்தையைத்) தேடினாள். (குழந்தை கிடைக்கவில்லை. எனவே,) கைதிகளிடையே எந்தக் குழந்தையைக் கண்டாலும் அதை (வாரி) எடுத்து, தனது வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். (தனது குழந்தை கிடைத்ததும் அதையும் நெஞ்சணைத்துப் பாலூட்டினாள்.)
அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பெண் தனது குழந்தையைத் தீயில் எறிவாளா,சொல்லுங்கள்?" என்றார்கள். நாங்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது" என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள்மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்" என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5316. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்விடமுள்ள தண்டனையைப் பற்றி நன்கறிவாரானால், (அதிலிருந்து தப்பித்தால் போதும் என்று கருதுவாரே தவிர,) அவனது சொர்க்கத்தின் மீது (இறைநம்பிக்கையாளர்களில்) யாரும் ஆசை கொள்ளமாட்டார்கள். இறைமறுப்பாளர் அல்லாஹ்விடமுள்ள கருணையைப் பற்றி நன்கறிவாரானால், அவனது சொர்க்கத்தைப் பற்றி (இறைமறுப்பாளர்களில்) யாருமே நிராசை கொள்ளமாட்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5317. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒரு மனிதர் தம் குடும்பத்தாரிடம், "நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, (சாம்பலாக்கி) அந்தச் சாம்பலில் பாதியைத் தரையிலும் பாதியைக் கடலிலும் தூவி விடுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! என் மீது இறைவனுக்குச் சக்தி ஏற்பட்டால், உலக மக்களில் யாருக்கும் அளிக்காத வேதனையை அவன் எனக்கு அளித்துவிடுவான்" என்று சொல்லி(விட்டு இறந்து)விட்டார்.
அவ்வாறே அந்த மனிதர் இறந்ததும் அவர் சொன்னதைப் போன்றே குடும்பத்தார் செய்தனர். பிறகு அல்லாஹ் தரைக்கு ஆணையிட்டு அதிலிருந்த அவரது உடலை ஒன்று திரட்டினான்; கடலுக்கு ஆணையிட்டு அதிலிருந்த அவரது உடலை ஒன்றுதிரட்டினான். பிறகு, "நீ எதற்காக இப்படிச் செய்தாய்?" என்று கேட்டான். அதற்கு அவர், "என் இறைவா! உன்மீதுள்ள அச்சத்தால்தான் (இப்படிச் செய்தேன்). நீ நன்கறிந்தவன்" என்று சொல்ல, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5318. மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், "வியப்பூட்டும் இரு ஹதீஸ்களை உமக்கு நான் அறிவிக்கட்டுமா?" என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாக ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் தெரிவித்த பின்வரும் ஹதீஸைச் சொன்னார்கள்:
(முற்காலத்தில் பாவச்செயல்களால் ஒருவர்) தமக்குத்தாமே எல்லை மீறி நடந்தார். அவருக்கு மரண வேளை வந்தபோது, தம் புதல்வர்களிடம் இறுதி விருப்பம் தெரிவித்தார். "நான் இறந்து விட்டால் என்னை எரித்துத் தூளாக்கி,பிறகு கடலில் காற்றில் தூற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! என்மீது என் இறைவனுக்குச் சக்தியேற்பட்டால் எவரையும் வேதனை செய்யாத அளவுக்கு ஒரு வேதனையை (தண்டனையாக) எனக்கு அவன் நிச்சயமாக அளிப்பான்" என்று கூறினார்.
அவ்வாறே (அவர் இறந்ததும் அவருடைய) புதல்வர்கள் செய்தனர். பிறகு அல்லாஹ், பூமியை நோக்கி, "நீ எடுத்ததை (ஒன்றுசேர்த்து)க் கொடுத்துவிடு" என்று கட்டளையிட்டான். அப்போது அந்த மனிதர் (அல்லாஹ்வின் முன்னிலையில் முழு வடிவில்) நின்றார். அவரிடம் அல்லாஹ், "நீ இப்படிச் செய்ய என்ன காரணம்?" என்று கேட்டான்.
அந்த மனிதர், "என் இறைவா! உன் மீதுள்ள அச்சம்தான் (காரணம்)" என்று பதிலளித்தார். இவ்வாறு அவர் கூறியதால் அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேலும் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் இன்னொரு ஹதீஸையும் கூறினார்கள். அது வருமாறு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பூனையை, அது சாகும்வரை (பட்டினி போட்டு) கட்டிவைத்த காரணத்தால் ஒரு பெண் நரகத்தில் நுழைந்தாள். அவளும் அதற்குத் தீனி போடவில்லை; பூமியின் புழு பூச்சிகளைத் தின்று பிழைத்துக்கொள்ளட்டும் என அதை அவள் அவிழ்த்துவிடவுமில்லை. முடிவில் அது மெலிந்து போய் செத்துவிட்டது.
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எந்த மனிதரும் (இறையருளை) முழுவதுமாக நம்பி (நல்லறங்கள் செய்யாமல்) இருந்துவிடக் கூடாது என்பதற்காகவும், எந்த மனிதரும் (இறையருள்மீது) அவநம்பிக்கை கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவுமே இந்தத் தகவல் கூறப்படுகிறது.
அத்தியாயம் : 49
5319. மேற்கண்ட ஹதீஸ் மஅமர் (ரஹ்) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கினான்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. பூனையைக் கட்டிப்போட்ட அந்தப் பெண்ணைப் பற்றிய செய்தி இடம்பெறவில்லை.
ஸுபைதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவரது உடலிலிருந்து எடுத்துக்கொண்ட ஒவ்வொரு பொருளிடமும் "அவரது உடலிலிருந்து நீ எடுத்ததைக் கொடுத்துவிடு" என்று கட்டளையிட்டான்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 49
5320. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்குமுன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தையும் பிள்ளைகளையும் வழங்கியிருந்தான். (அவருக்கு இறப்பு நெருங்கியபோது) அவர் தம் பிள்ளைகளிடம், "நான் சொல்வதைப் போன்று நீங்கள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், என் சொத்துக்களைப் பிறருக்கு வழங்கிவிடுவேன். நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, தூளாக்கி விடுங்கள். பிறகு அந்தச் சாம்பலைக் காற்றில் தூற்றுங்கள். ஏனெனில், நான் (எனது மறுமைக்காக) அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் சேமிக்கவில்லை. அல்லாஹ் என்னைத் தண்டிப்பதற்குச் சக்தி பெற்றே உள்ளான்" என்று கூறி உறுதிமொழி வாங்கிக்கொண்டார்.
என் இறைவன் மீதாணையாக! (அவர் இறந்தவுடன்) அவ்வாறே அவர்கள் செய்தார்கள். பிறகு அல்லாஹ் (பழையபடி முழு மனிதராக அவரை எழுப்பி), "இவ்வாறு நீ செய்யக் காரணம் என்ன?" என்று கேட்டான். அம்மனிதர் "உன்மீதான அச்சத்தின் காரணத்தால்தான்" என்று கூறினார். அவரை (அந்த நேரத்தில் இறையச்சம் தான் காப்பாற்றியது) அதைத் தவிர வேறெதுவும் காப்பாற்றவில்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5321. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷைபான் மற்றும் அபூஅவானா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "மக்களில் ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தையும் பிள்ளைகளையும் வழங்கியிருந்தான்" என்று இடம்பெற்றுள்ளது.
முஅதமிர் பின் சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஃப இன்னஹு லம் யப்தயிர் இந்தல்லாஹி கைரன்" என்பதற்கு "அவர் அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் சேமித்திருக்கவில்லை" என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் பொருள் செய்ததாக இடம் பெற்றுள்ளது.
(இதைக் குறிக்க) ஷைபான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஃப இன்னஹு மப்தஅர இந்தல்லாஹி கைரன்" (அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் அல்லாஹ்விடம் எந்த நன்மையையும் சேமித்திருக்கவில்லை) என்றும்,அபூஅவானா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மம்தஅர" (அவர் சேமித்திருக்கவில்லை) என்றும் காணப்படுகிறது.
அத்தியாயம் : 49
பாடம் : 5 பாவங்களைத் திரும்பத் திரும்பச் செய்து திரும்பத் திரும்ப பாவமன்னிப்புக் கோரினாலும் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்கப்படல்.
5322. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவன் குறித்து அறிவித்தார்கள்:
ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு "இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று கூறினார். உடனே வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்;பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, "என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்.
அப்போதும் வளமும் உயர்வும் உள்ள இறைவன், "(இம்முறையும்) என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான்" என்று சொல்கிறான்.
பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, "என் இறைவா! எனது பாவத்தை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார். அப்போதும் வளமும் உயர்வும் உள்ள இறைவன், "என் அடியான் (இம்முறையும்) ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான். நீ நாடியதைச் செய்; நான் உனது பாவத்தை மன்னித்துவிட்டேன்" என்று சொல்கிறான்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் அஃலா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "நீ நாடியதைச் செய்துகொள்" என மூன்றாவது தடவையில் இறைவன் சொல்கிறானா, அல்லது நான்காவது தடவையில் சொல்கிறானா என்பது எனக்குத் தெரியவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5323. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஓர் அடியார் ஒரு பாவத்தைச் செய்துவிட்டார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அதில், "அந்த அடியார் பாவம் செய்தார்" என மூன்று முறை ஹம்மாத் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாகவும்,மூன்றாவது தடவையில் "நான் என் அடியானை மன்னித்து விட்டேன். அவன் நாடியதைச் செய்துகொள்ளட்டும்"என்று இறைவன் கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 49
5324. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், பகலில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக இரவில் தனது கையை நீட்டுகிறான்; இரவில் பாவம் புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோருவதற்காக பகலில் கையை நீட்டுகிறான். சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் (யுக முடிவு நாள்)வரை (ஒவ்வொரு நாளும் இவ்வாறு செய்துகொண்டிருக்கிறான்).
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
பாடம் : 6 அல்லாஹ்வின் தன்மானமும் மானக்கேடான செயல்களை அவன் தடை செய்திருப்பதும்.
5325. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். அதனால்தான், அவன் தன்னைத்தானே புகழ்ந்துகொண்டுள்ளான். அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான (ஆபாசமான) விஷயங்களுக்கு அவன் தடை விதித்துள்ளான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5326. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவற்றுக்கும் மறைமுகமானவற்றுக்கும் அவன் தடைவிதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர்.- இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5327. அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூவாயில் (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு அறிவித்தார்கள்:
அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவற்றுக்கும் மறைமுகமானவற்றுக்கும் அவன் தடைவிதித்துள்ளான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான்.
நான் அபூவாயில் (ரஹ்) அவர்களிடம், "இதை நீங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அபூவாயில் (ரஹ்) அவர்கள், "ஆம், அவர்கள் நபி (ஸல்) அவர் களிடமிருந்து அதை அறிவித்தார்கள்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 49
5328. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். அதனால்தான்,அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான். அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான செயல்களுக்கு அவன் தடை விதித்துள்ளான். அல்லாஹ்வைவிட அதிகமாகத் திருந்துவதற்கு வாய்ப்பு அளிப்பதை விரும்பக்கூடியவர் வேறெவருமிலர். அதனால்தான், அவன் வேதங்களை அருளினான்; தூதர்களை அனுப்பினான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5329. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வும் ரோஷம் கொள்கிறான். இறைநம்பிக்கையாளரும் ரோஷம் கொள்கிறார். ஓர் இறைநம்பிக்கையாளர்,அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்யும்போதே அல்லாஹ் ரோஷம் கொள்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறு யாருமில்லை.
இதை அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட அபூஹுரைரா (ரலி) அவர்களது ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5330. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட அதிகத் தன்மானமுள்ளவர் வேறெவருமில்லை.
இதை அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5331. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரும் ரோஷம் கொள்கிறார். அவரைவிடக் கடுமையாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
பாடம் : 7 "நன்மைகள் தீமைகளை அழித்து விடும்" (11:114) எனும் இறை வசனம்.
5332. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (அந்நியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டார். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு) நடந்ததைச் சொன்னார். அப்போது "பகலின் இரு ஓரங்களிலும், இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். இது படிப்பினை பெறுவோருக்கு ஒரு பாடமாகும்" (11:114) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரில் இப்படிச் செய்துவிட்ட அனைவருக்கும்தான்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49