5333. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தாம் (அந்நியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டதாக,அல்லது தொட்டுவிட்டதாக, அல்லது வேறேதோ செய்துவிட்டதாகச் சொன்னார். அவர் அதற்குப் பரிகாரம் கேட்பதைப் போன்றிருந்தது. அப்போது அல்லாஹ் அந்த வசனத்தை (11:114) அருளினான்" என்றும் அதற்கு பின்னுள்ளவையும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 49
5334. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் (அந்நியப்) பெண் ஒருத்தியிடம் உடலுறவு நீங்கலாக (மற்றச் செயல்) ஒன்றைச் செய்துவிட்டார். பிறகு உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் வந்(து அதைப் பற்றித் தெரிவித்)தார். அதைப் பெருங்குற்றமாக உமர் (ரலி) அவர்கள் கருதினார்கள். பிறகு அந்த மனிதர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்(து தெரிவித்)தபோது, அவர்களும் அதைப் பெருங்குற்றமாகக் கருதினார்கள். பிறகு அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்" என்றும் மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 49
5335. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டேன். அவளுடன் உடலுறவு கொள்வதைத் தவிர வேறு செயல்களைச் செய்துவிட்டேன். இதோ நான் (இங்கு தயாராக நிற்கிறேன்). என் விஷயத்தில் நீங்கள் நாடியதை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார்.
அவரிடம் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வே உனது குற்றத்தை மறைத்துவிட்டிருக்க, நீ உன் குற்றத்தை மறைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள். ஆனால், அந்த மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலேதும் கூறவில்லை.
பிறகு அந்த மனிதர் எழுந்து சென்றுவிட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்துவர அவருக்குப் பின்னால் ஆளனுப்பினார்கள். அவரிடம், "பகலின் இரு ஓரங்களிலும் இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். இது படிப்பினை பெறுவோருக்கு ஒரு பாடமாகும்" (11:114)எனும் இந்த இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! இது இவருக்கு மட்டும் உரியதா? (அல்லது அனைவருக்குமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை; மக்கள் அனைவருக்கும் உரியதுதான்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5336. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "முஆத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இ(ந்தப் பரிகாரமான)து இவருக்கு மட்டும் உரியதா? அல்லது எங்கள் அனைவருக்கும் உரியதா?" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், "இல்லை; உங்கள் அனைவருக்கும் உரியதுதான்" என்று பதிலளித்ததாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 49
5337. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, என்மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்றார். அப்போது தொழுகை நேரம் வந்துவிடவே, அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார்.
தொழுகையை முடித்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ளபடி தண்ட னையி)னை என்மீது நிறைவேற்றுங்கள்" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம் (தொழுதேன்)"என்றார். நபி (ஸல்) அவர்கள், "உமது பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 49
5338. அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். அவருக்குப் பதிலளிக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
பிறகு (மீண்டும்) அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே,எனக்குத் தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார்கள்.
பிறகு தொழுகைக்காக "இகாமத்" சொல்லப்பட்டது. தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபோது, அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன பதிலளிக்கிறார்கள் என்பதைக் காண்பதற்காக அவர்களை நான் பின்தொடர்ந்தேன். அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குரிய தண்டனையை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார்.
அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உமது வீட்டிலிருந்து புறப்படும்போது அழகிய முறையில் அங்கத்தூய்மை (உளூ) செய்யவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் "ஆம் (செய்தேன்);அல்லாஹ்வின் தூதரே!" என்றார். "பிறகு நம்முடன் சேர்ந்து நீர் தொழவில்லையா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அந்த மனிதர் "ஆம் (தொழுதேன்); அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் "உமக்குரிய தண்டனையை" அல்லது "உமது பாவத்தை" மன்னித்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
பாடம் : 8 அதிகமான கொலைகள் செய்தவராயிருந்தாலும், கொலையாளியின் பாவமன்னிப்புக் கோரிக்கையும் ஏற்கப்படும்.
5339. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களைக் கொன்றுவிட்டிருந்தார்.
பிறகு அவர் அக்கால மக்களில் நன்கறிந்த அறிஞர் யார் என விசாரித்தார். அவருக்கு ஒரு பாதிரியார் காட்டப்பட்டார். அவர் அந்தப் பாதிரியாரிடம் சென்று, "நான் தொண்ணூற்று ஒன்பது மனிதர்களைக் கொன்றுவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?" என்று கேட்டார். அந்தப் பாதிரியார், "கிடைக்காது" என்று கூறவே, அவரையும் அந்த மனிதர் கொன்று, எண்ணிக்கையை நூறாக முழுமையாக்கிவிட்டார்.
பிறகு மீண்டும் அக்கால மக்களில் நன்கறிந்த அறிஞரைப் பற்றி அவர் விசாரித்தார். அப்போது அறிஞர் ஒருவர் அவருக்குக் காட்டப்பட்டார். (அவரிடம் சென்று) அந்த மனிதர், "நான் நூறு கொலைகள் செய்துவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?" என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், "ஆம் (கிடைக்கும்). இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்"என்று சொன்னார்.
அவ்வாறே, அந்த மனிதர் (நல்லோர் வாழும்) அந்த ஊரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, பாதி வழியில் இறந்துவிட்டார். அப்போது இறையருளைக் கொண்டுவரும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது) என்று சர்ச்சை செய்துகொண்டனர்.
அப்போது அருளின் வானவர்கள், "இவர் பாவமன்னிப்புக் கோரி பாவத்திலிருந்து மீண்டு தமது உள்ளத்தால் இறைவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்" என்று கூறினர். தண்டனையின் வானவர்கள், "இவர் சிறிதும் நன்மைகளைச் செய்யாதவர்" என்று கூறினர்.
அப்போது மற்றொரு வானவர் மனிதத் தோற்றத்தில் அங்கு வந்தார். அவரை அவ்விரு வானவர்களும் நடுவராக வைத்துக்கொண்டனர். அப்போது அந்த வானவர், "இவ்விரு ஊர்களுக்குமிடையிலுள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள். அவற்றில் எந்த ஊருக்கு மிக அருகில் அவரது உடல் இருக்கிறதோ அந்த ஊருக்குரியவராகவே அவர் இருப்பார்"என்று சொன்னார்.
அவ்வாறே கணக்கெடுத்தபோது, (அவர் வசித்துவந்த ஊரைவிட) அவர் நாடிவந்த ஊரே அவருக்கு மிகவும் சமீபமாக இருப்பதைக் கண்டனர். ஆகவே, அவரை அருளின் வானவர்கள் கைப்பற்றிக்கொண்டனர்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அவர் (இறக்கும் தறுவாயில்) தமது நெஞ்சை (அந்த நல்ல ஊர் இருக்கும் திசை நோக்கி சாய்த்துக்கொண்(டே இறந்துவிட்)டார்" என்று எங்களிடம் கூறப்பட்டது என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 49
5340. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த) ஒரு மனிதர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்றுவிட்டு, "எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?" என்று கேட்கலானார். ஒரு பாதிரியாரிடம் சென்று கேட்டபோது அவர் "உனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்காது" என்று சொல்லி விட்டார்.
ஆகவே, அவர் அந்தப் பாதிரியாரையும் கொன்றுவிட்டார். பிறகும் அவர் ("எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?"என்று) கேட்கலானார். (நல்லவர்கள் வாழும் இன்ன ஊருக்குப் போ. உனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்கும் என்று கூறப்பட்டது.) பிறகு அவர் (தமது) ஊரிலிருந்து நன்மக்கள் வாழும் மற்றோர் ஊருக்குப் புறப்பட்டார். அவர் (பாதி) வழியில் ஓரிடத்தில் இருந்தபோது, மரணம் அவரைத் தழுவியது. (இறக்கும் தறுவாயில்) அவர் தமது நெஞ்சை அந்த (நன்மக்கள் வாழும் ஊர் இருக்கும் திசை நோக்கி) சாய்த்துக்கொண்டே இறந்துவிட்டார்.
அப்போது இறையருளைக் கொண்டுவரும் வானவர்களும் இறைதண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரது உயிரை யார் எடுத்துச்செல்வது என்று) சச்சரவிட்டுக் கொண்டனர். அப்போது அந்த மனிதருடைய உடல், அவர் செல்லவிருந்த ஊருக்கு (அவர் புறப்பட்டுவந்த ஊரைவிட) ஒரு சாண் அளவுக்குச் சமீபமாக இருந்த காரணத்தால், அவர் அந்த (நன்மக்கள் வாழும்) ஊர்க்காரர்களில் ஒருவராகவே ஆக்கப்பட்டார். - இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5341. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அப்போது அல்லாஹ் அ(வர் புறப்பட்டு வ)ந்த ஊரை நோக்கி, "நீ விலகிச்செல்" என்றும், அ(வர் செல்லவிரு)ந்த ஊரை நோக்கி "நீ நெருங்கிவா" என்றும் அறிவித்தான்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 49
5342. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரையோ அல்லது கிறித்தவரையோ ஒப்படைத்து, "இவன்தான் உன்னை நரகத்திலிருந்து விடுவித்தான்" என்று சொல்வான்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5343. அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
"ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (தம் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள் என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தார்கள்.
அப்போது உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவனில்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீது சத்தியமாக! இதை உம்முடைய தந்தை (அபூமூசா (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக உம்மிடம் கூறினார்களா?" என்று மூன்று முறை கேட்டார்கள். அபூபுர்தா (ரஹ்) அவர்கள், அவ்வாறே சத்தியமிட்டுக் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அபூபுர்தா (ரஹ்) அவர்களைச் சத்தியமிட்டுக் கூறச் சொன்னதாக சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் என்னிடம் அறிவிக்கவில்லை. ஆனால், அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அவ்வாறு அறிவித்தபோது, அதற்கு சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5344. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான்.இவ்வாறே நான் கருதுகிறேன்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூரவ்ஹ் ஹரமீ பின் உமாரா (ரஹ்) அவர்கள், "இவ்வாறே நான் கருதுகிறேன் எனும் ஐயப்பாட்டைத் தெரிவித்த அறிவிப்பாளர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூறுகிறார்கள்.
அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற (அவர்களுடைய புதல்வரான) அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், "இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தா உம்முடைய தந்தை அறிவித்துள்ளார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "ஆம்" என்றேன்.
அத்தியாயம் : 49
5345. ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையே நடக்கும்) இரகசிய உரையாடல் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன செவியுற்றீர்கள்?" என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர் ஒருவர் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவனுக்கு அருகில் கொண்டுசெல்லப்படுவார். இறைவன் தனது திரையைப் போட்டு (அவரை மறைத்து)விடுவான். அப்போது அந்த இறைநம்பிக்கையாளர் இறைவனிடம் தம் பாவங்களை ஒப்புக் கொள்வார். "நீ (உலகத்தில் செய்த இன்னின்ன பாவங்களை) அறிவாயா?" என்று இறைவன் கேட்பான்.
அதற்கு அந்த நம்பிக்கையாளர், "என் இறைவா! நான் (அவற்றை) அறிவேன்" என்று கூறுவார். அப்போது இறைவன், "நான் அவற்றை உலகில் (மற்றவருக்குத் தெரியாமல்) மறைத்தேன்; இன்று நான் அவற்றையெல்லாம் உனக்காக மன்னித்துவிடுகிறேன்" என்று சொல்வான். பின்னர் அவருடைய நன்மைகளின் ஏடு அவரிடம் கொடுக்கப்படும். இறைமறுப்பாளர்களையும் நயவஞ்சகர்களையும் காட்டி, "இவர்கள்தான் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தவர்கள்"என்று படைப்பினங்களுக்கிடையே அறிவிக்கப்படும்.
அத்தியாயம் : 49
பாடம் : 9 கஅப் பின் மாலிக் (ரலி) மற்றும் அவர்களுடைய இரு தோழர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்கப்பட்ட நிகழ்ச்சி.
5346. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தபூக் போரைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட எந்தப் போரிலும் ஒருபோதும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. தவிரவும், நான் பத்ருப் போரிலும் கலந்துகொள்ளவில்லைதான். ஆயினும்,பத்ரில் கலந்துகொள்ளாத எவரையும் (அல்லாஹ்) கண்டிக்கவில்லை. (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் குறைஷியரின் வணிகக் குழுவை (வழிமறிக்க) நாடியே (பத்ருக்குப்) போனார்கள். (போன இடத்தில்) போர் செய்யும் திட்டம் இல்லாமலேயே முஸ்லிம்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்துவிட்டான்.
"இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப்போம்" என (அன்சாரிகளான) நாங்கள் உறுதிமொழி அளித்த "அகபா இரவில்" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் இருந்தேன். இதற்குப் பதிலாகப் பத்ருப் போரில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை. "அல்அகபா" பிரமாணத்தை விட "பத்ருப்போர்" மக்களிடையே பெரிதாகப் பேசப்பட்டாலும் சரியே!
தபூக் போரில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளாதது(ம் அதையடுத்து நடந்த நிகழ்ச்சிகளும்) குறித்த என் செய்திகள் சில பின்வருமாறு:
அந்த (தபூக்) போரில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளாத போது இருந்த உடல் பலமும் பொருள் வசதியும் (என் வாழ்நாளில்) வேறெப்போதும் எனக்கு இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குமுன் ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டக வாகனங்கள் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், அந்தப் போரின்போது ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்களை நான் வைத்திருந்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான கோடை காலத்தில் அந்தப் போருக்குப் புறப்படவிருந்தார்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும் (பாலைவன) வனாந்திரப் பிரதேசத்தைக் கடந்துசெல்ல வேண்டியிருக்கும் என்றும் அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்த்தார்கள்.
எனவே, முஸ்லிம்களுக்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டியது பற்றி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார்கள். அப்போதுதான் அவர்கள் தங்களின் போருக்காக ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள முடியும். தாம் விரும்பிய இலக்(கான "தபூக்")கை முஸ்லிம்களுக்குத் தெரிவித்தும் விட்டார்கள்.
"எழுதப்படும் எந்த (பெயர்)ப் பதிவேடும் இத்தனை பேருக்கு இடமளிக்காது" எனும் அளவுக்கு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள்.
(போரில் கலந்துகொள்ளாமல்) தலைமறைவாகிவிடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து அறிவிப்பு (வஹீ) வராதவரையில் (தாம் போருக்கு வராத) விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரியவராது என நினைக்காமலிருப்பது அரிதேயாகும் (அந்த அளவுக்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம்) பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்திருந்த (அறுவடைக் காலமான அந்த வெப்பம் மிகுந்த வெயில்) காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள். அதற்குச் செல்ல நானும் ஆசைப்பட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடன் முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்ய காலை நேரத்தில் செல்லலானேன். எனது பயணத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்துவிடுவேன். "நினைக்கும்போது அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்க எனக்குத்தான் சக்தியிருக்கிறதே! (பிறகு, நான் ஏன் அவசரப்பட வேண்டும்?)" என்று என் மனத்திற்குள் கூறிக்கொள்வேன். என் நிலை இப்படியே நீடித்துக்கொண்டிருந்தது. மக்கள் (பயணம் புறப்பட) சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். (ஒரு வழியாகப் பயண ஏற்பாடு முடிந்தது.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் முஸ்லிம்களும் (ஒரு) காலை நேரத்தில் புறப்பட்டுவிட்டார்கள். அப்போதும் நான் என் பயணத்துக்கு வேண்டிய எந்த ஏற்பாட்டையும் செய்து முடித்திருக்கவில்லை. பிறகு (மறுநாள்) காலை சென்றேன். எதையும் முடிக்காமல் திரும்பினேன். என் நிலை இப்படியே (இன்று, நாளை என) இழுத்துக்கொண்டே சென்றது.
முஸ்லிம்கள் விரைவாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். (எனக்கு) அந்தப் போர் கை நழுவி விட்டது. நான் உடனடியாகப் புறப்பட்டுச் சென்று படையினருடன் சேர்ந்துகொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படி நான் செய்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். (ஆனால், என்ன செய்வது?) அது என் விதியில் எழுதப்பட்டிருக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றதன் பின்னர், மதீனாவில் நான் மக்களிடையே சுற்றிவரலானேன். அப்போது எனக்குப் பெரும் வருத்தமே ஏற்பட்டது. நயவஞ்சகர் எனச் சந்தேகிக்கப்பட்ட மனிதர்களையும், இறைவனால் சலுகை வழங்கப்பட்ட (முதியோர், பெண்கள் போன்ற) பலவீனர்களையும் தவிர வேறெவரையும் எனக்கு முன்மாதிரியாக நான் (மதீனாவிற்குள்) பார்க்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தபூக் சென்றடையும்வரையில் என்னை நினைவு கூரவேயில்லை. தபூக்கில் மக்களிடையே அமர்ந்திருந்தபோதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் மாலிக் என்ன ஆனார்?" என்று கேட்டார்கள். பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அவருடைய இரு ஆடைகளும் அவற்றைத் தம் தோள்களில் போட்டு அவர் (அழகு) பார்த்துக்கொண்டிருப்பதும்தான் அவரை வரவிடாமல் தடுத்துவிட்டன" என்று கூறினார்.
உடனே முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் (அந்த மனிதரை நோக்கி), "நீர் சொன்னது தவறு. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலேதும் கூறாமல்) மௌனமாகவே இருந்தார்கள். இவ்வாறு அவர்கள் இருந்தபோது, (பாலைவெளியில்) கானல் நீரினூடே வெள்ளை ஆடை அணிந்து ஒரு மனிதர் வருவதைக் கண்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் அபூகைஸமாவாகவே இருக்க வேண்டும்" என்று சொன்னார்கள். அவர் அபூகைஸமா அல்அன்சாரீ (ரலி) அவர்களாகவே இருந்தார். அவர்தான் ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்தைத் தானமாகக் கொண்டுவந்தபோது நயவஞ்சகர்களின் பரிகாசத்திற்கு ஆளானவர் ஆவார்.
(தொடர்ந்து) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு எட்டிய போது, பெருங்கவலை என்னை ஆட்கொண்டது. (அல்லாஹ்வின் தூதரிடம் சாக்குப்போக்குச் சொல்வதற்காகப்) பொய்யான காரணங்களை நான் யோசிக்கத் தொடங்கினேன்.
"நாளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடுங்கோபத்திலிருந்து நான் எப்படித் தப்புவேன்?" என்று (எனக்கு நானே) கேட்டுக்கொண்டேன். அதற்காக நான் என் குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் (ஆலோசனை) உதவி தேடலானேன்.
ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவை) நெருங்கி வந்துவிட்டார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டபோது, (நான் புனைந்துவைத்திருந்த) பொய்மை என் மனத்தை விட்டு விலகிவிட்டது. பொய்யான காரணம் எதையும் சொல்லி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக்கொள்ள முடியாது (அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன். அவன் தன் தூதருக்கு உண்மை நிலவரத்தைத் தெரிவித்துவிடுவான்) என்று உணர்ந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உண்மையே சொல்ல வேண்டும் என முடிவு செய்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை நேரத்தில் (மதீனாவுக்கு) வருகை புரிந்தார்கள். (பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால், முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுதபின் மக்களைச் சந்திப்பதற்காக (அங்கு) அமர்ந்துகொள்வது அவர்களது வழக்கம்.
(வழக்கம்போல்) அவ்வாறு அவர்கள் செய்தபோது, (தபூக் போரில் கலந்துகொள்ளச் செல்லாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அவர்களிடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டு (தாம் போருக்கு வராமல் போனதற்கு) சாக்குப்போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்தனர். அவர்கள் சொன்ன வெளிப்படையான காரணங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டு, அவர்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கிக் கொண்டு, அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டார்கள்.
இறுதியில் நான் (அவர்களிடம்) வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்னபோது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அவ்வாறு புன்னகைத்தார்கள். பிறகு, "(அருகில்) வாருங்கள்!" என்று கூறினார்கள். உடனே நான் (சில எட்டுகள் வைத்து) நடந்து சென்று அவர்கள் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம், "(போரில்) நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை? நீங்கள் (போருக்காக) ஒட்டக வாகனம் வாங்கி வைத்துக்கொண்டிருக்கவில்லையா?" என்று கேட்டார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாயதவாதிக்கு அருகில் நான் அமர்ந்திருந்தால், ஏதாவது (பொய்யான) சாக்குப்போக்குச் சொல்லி அவரது கோபத்திலிருந்து தப்பிக்க உடனடியாக வழி கண்டிருப்பேன். (எவராலும் வெல்ல முடியாத) வாதத்திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் திருப்திபடுத்திவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என்மீது தங்களைக் கடுங்கோபம் கொள்ளச் செய்துவிடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன்.
(அதே சமயம்) தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்சமயம்) அது தொடர்பாக என்மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், இந்த விஷயத்தில் அல்லாஹ்விடமே இறுதி முடிவை நான் எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் போரில் கலந்துகொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களுடன் நான் வராமல் பின்தங்கிவிட்ட அந்த நேரத்தில் எனக்கிருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை" என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதோ இவர் உண்மையே சொன்னார்" (என்று கூறிவிட்டு, என்னை நோக்கி) "சரி, எழுந்து செல்லுங்கள். உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்" என்று சொன்னார்கள். உடனே நான் எழுந்து சென்றுவிட்டேன்.
பனூ சலிமா (எனும் என்) குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து ஓடிவந்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்னால் எந்தக் குற்றத்தையும் நீங்கள் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. போரில் கலந்துகொள்ளாத (மற்ற)வர்கள் சொன்ன அதே (பொய்க்) காரணத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்குக்கூட உங்களால் இயலாமற்போய்விட்டதே! நீங்கள் செய்த குற்றத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்கும் பாவமன்னிப்பே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே!" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! பனூ சலிமா குலத்தார் என்னைக் கடுமையாகப் பழித்துக்கொண்டேயிருந்தனர். எந்த அளவுக்கென்றால், நான் (அல்லாஹ்வின் தூதரிடம்) திரும்பிச் சென்று (இதற்குமுன்) நான் சொன்னது பொய் என்று (கூறி, போரில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது பொய்க் காரணத்தைச்) சொல்லிவிடலாமா என்றுகூட நினைத்தேன்.
பிறகு நான் பனூ சலிமா குலத்தாரை நோக்கி, "(தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட) இந்த நிலையை, என்னுடன் வேறு யாரேனும் சந்தித்திருக்கிறார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். உம்முடன் இரண்டு பேர் இதே நிலையைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் நீங்கள் சொன்னதைப் போன்றே (உண்மையான காரணத்தை அல்லாஹ்வின் தூதரிடம்) கூறினர். உங்களிடம் சொல்லப்பட்டதுதான் அவர்களிடமும் சொல்லப்பட்டது" என்று கூறினர்.
அப்போது நான், "அவர்கள் இருவரும் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "முராரா பின் அர்ரபீஆ அல்ஆமிரீ (ரலி) அவர்களும், ஹிலால் பின் உமய்யா அல்வாகிஃபீ (ரலி) அவர்களும்" என்று பத்ருப் போரில் கலந்துகொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களை என்னிடம் கூறினர். அவர்கள் இருவராலும் (எனக்கு) ஆறுதல் கிடைத்தது. அவர்கள் இருவரின் பெயர்களையும் பனூ சலிமா குலத்தார் என்னிடம் சொன்னவுடன் நான் (என் இல்லத்திற்குச்) சென்று விட்டேன்.
அந்தப் போரில் கலந்துகொள்ளாதவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குத் தடைவிதித்து விட்டார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தனர். அவர்கள் (முற்றிலும்) எங்கள் விஷயத்தில் மாறிப்போய்விட்டனர். (வெறுத்துப்போனதால்) என் விஷயத்தில் இப்புவியே மாறிவிட்டது போலவும், அது எனக்கு அந்நியமானது போலவும் நான் கருதினேன்.
இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாட்கள் இருந்தோம். என்னுடைய இரு சகாக்களும் (முராராவும் ஹிலாலும்) செயலிழந்துபோய்த் தம் இல்லங்களிலேயே அமர்ந்துகொண்டு அழுதுகொண்டிருந்தனர். ஆனால், நான் மக்களிலேயே இளம் வயதினனாகவும் பலமிக்கவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டைவிட்டு) வெளியேறி (முஸ்லிம்களுடன்) தொழுகையில் கலந்துகொண்டும், கடை வீதிகளில் சுற்றிக்கொண்டும் இருந்தேன். என்னிடம் யாரும் பேசமாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் போது அவர்களிடம் நான் சென்று அவர்களுக்கு சலாம் கூறுவேன். எனக்குப் பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.
பிறகு அவர்களுக்கு அருகிலேயே (கூடுதலான) தொழுகைகளை நிறைவேற்றுவேன். அப்போது (என்னை அவர்கள் பார்க்கிறார்களா என்று) ஓரக்கண்ணால் திருட்டுத்தனமாகப் பார்ப்பேன். நான் எனது தொழுகையில் ஈடுபட்டவுடன் அவர்கள் என்னைக் கவனிப்பதும், அவர்கள் பக்கம் நான் திரும்பும்போது அவர்கள் என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தார்கள்.
மக்களின் புறக்கணிப்பு நீடித்துக்கொண்டே சென்றபோது, நான் நடந்துபோய் அபூகத்தாதா (ரலி) அவர்களின் தோட்டத்தின் மதில்மீது ஏறினேன். -அவர் என் தந்தையின் சகோதரர் புதல்வரும், மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார்- அவருக்கு நான் சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் எனக்குப் பதில் சலாம் சொல்லவில்லை. உடனே நான், "அபூகத்தாதா! அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர் (பதிலேதும் கூறாமல்) மௌனமாயிருந்தார்.
பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து முன்பு போலவே கேட்டேன். அப்போதும் அவர் மௌனமாகவே இருந்தார். (மூன்றாம் முறையாக) மீண்டும் அவரிடம் நான் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்டேன். அப்போது அவர், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று (மட்டும்) பதிலளித்தார். அப்போது என் இரு விழிகளும் (கண்ணீரைப்) பொழிந்தன. பிறகு (மறுபடியும்) சுவரேறி திரும்பி வந்துவிட்டேன்.
(நிலைமை இவ்வாறு நீடித்துக்கொண்டிருக்க ஒரு நாள்) மதீனாவின் கடைத்தெருவில் நடந்துகொண்டிருந்தேன். அப்போது மதீனாவுக்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் (சிரியா) நாட்டு விவசாயிகளில் ஒருவர், "கஅப் பின் மாலிக்கை எனக்கு அறிவிப்பவர் யார்?" என்று (என்னைக் குறித்து) விசாரித்துக்கொண்டிருந்தார். மக்கள் என்னை நோக்கி அவருக்குச் சைகை செய்யலாயினர். உடனே அவர் என்னிடம் வந்து, "ஃகஸ்ஸான்" நாட்டின் அரசனிடமிருந்து (எனக்கு எழுதப்பட்டிருந்த) கடிதமொன்றைத் தந்தார். நானும் எழுத(ப் படிக்க)த் தெரிந்தவனாக இருந்தேன். ஆகவே, அதை நான் வாசித்துப் பார்த்தேன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
இறைவாழ்த்துக்குப் பின்! உங்கள் தோழர் (முஹம்மத்) உங்களைப் புறக்கணித்து (ஒதுக்கி)விட்டார் என்று எமக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்களிடம் வந்துவிடுங்கள். நாங்கள் உங்களிடம் நேசம் காட்டுகிறோம்.
இதை நான் படித்தபோது, "இது இன்னொரு சோதனையாயிற்றே!" என்று (என் மனதிற்குள்) கூறிக்கொண்டு, அதை எடுத்துச் சென்று (ரொட்டி சுடும்) அடுப்பிலிட்டுப் பொசுக்கிவிட்டேன்.
ஐம்பது நாட்களில் நாற்பது நாட்கள் கழிந்து, இறை அறிவிப்பு (வஹீ) வருவதும் தாமதமாயிருந்த போது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தூதர் ஒருவர் என்னிடம் வந்தார். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் மனைவியரிடமிருந்து விலகிவிட வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள்" என்று அவர் கூறினார். அதற்கு நான், "அவளை நான் விவாகரத்துச் செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். அவர், "இல்லை (விவாகரத்துச் செய்ய வேண்டாம்). அவரைவிட்டு நீங்கள் விலகியிருக்க வேண்டும். அவரை நெருங்கக்கூடாது (இதுவே இறைத்தூதர் உத்தரவு)" என்று கூறினார்.
இதைப் போன்றே, என் இரு சகாக்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உத்தரவு) அனுப்பியிருந்தார்கள். ஆகவே, நான் என் மனைவியிடம், "உன் குடும்பத்தாரிடம் சென்றுவிடு; இந்த விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் அவர்களிடமே இருந்துவா" என்று சொன்னேன்.
(என் சகா) ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்களின் துணைவியார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஹிலால் பின் உமய்யா செயல்பட முடியாத முதியவர். அவரிடம் ஊழியர் யாருமில்லை. நானே (தொடர்ந்து) அவருக்கு ஊழியம் செய்வதைத் தாங்கள் வெறுப்பீர்களா?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை. ஆயினும், அவர் உன்னை (தாம்பத்திய உறவு கொள்ள) நெருங்க வேண்டாம்" என்று சொன்னார்கள். ஹிலால் அவர்களின் மனைவி, "அல்லாஹ்வின் மீதாணையாக! என் கணவரிடம் எந்த இயக்கமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவரது விஷயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதிலிருந்து இன்றுவரையில் அவர் அழுதுகொண்டேயிருக்கிறார்" என்று (அல்லாஹ்வின் தூதரிடம்) கூறினார்.
(தொடர்ந்து) கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
என் வீட்டாரில் ஒருவர், தம் கணவருக்குப் பணிவிடை செய்ய ஹிலால் பின் உமய்யா அவர்களின் மனைவியை அனுமதித்ததைப் போன்று, உங்கள் மனைவியை (உங்களுக்குப் பணிவிடை செய்ய) அனுமதிக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டால் (நன்றாயிருக்குமே!)" என்று கூறினார்.
அதற்கு நான், "என் மனைவி விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்கமாட்டேன். என் மனைவி விஷயமாக நான் அனுமதி கோரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன (பதில்) சொல்வார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. நானோ இளைஞனாகவேறு இருக்கிறேன். (ஹிலால், என்னைவிட வயதில் பெரியவர். அதனால் அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலுகை காட்டியிருக்கலாம்)" என்று கூறி (மறுத்து)விட்டேன். அதற்குப் பின் பத்து நாட்கள் இவ்வாறே கழிந்தன. எங்களிடம் பேசக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்த நாளிலிருந்து ஐம்பது நாட்கள் பூர்த்தியாயின.
நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் நிறை வேற்றிவிட்டு, அல்லாஹ் எங்கள் மூவரையும் குறித்து (9:118ஆவது வசனத்தில்) குறிப்பிட்டுள்ள நிலையில் அமர்ந்திருந்தேன்: (அதாவது:) "பூமி இத்தனை விசாலமாய் இருந்தும் என்னைப் பொறுத்தவரையில் அது குறுகி, நான் உயிர்வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது." அப்போது "சல்உ" மலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில், "கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி பெறுவீராக!" என்று கூறினார்.
உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். மகிழ்ச்சி வந்துவிட்டது என்று நான் அறிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்த போது, (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களது பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான் என்று அறிவித்துவிட்டார்கள். உடனே மக்கள் எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல வரலாயினர். என் இரு சகாக்களையும் நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார்.
"அஸ்லம்" குலத்தைச் சேர்ந்த ஒருவர் எனக்காக (நற்செய்தி சொல்ல) ஓடிச்சென்று மலைமீது ஏறிக்கொண்டார். (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி சொன்னார். மலைமீதிருந்து வந்த) அந்தக் குரலொலி அக்குதிரையைவிட வேகமாக வந்துசேர்ந்தது.
எவரது குரலை (மலைமீதிருந்து) கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்தபோது, நான் என் இரு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பகரமாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன்.அல்லாஹ்வின் மீதாணையாக! (ஆடைகளில்) அந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது எனக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை (அபூகத்தாதா அவர்களிடமிருந்து) இரவல் வாங்கி அணிந்துகொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தேன்.
அப்போது (வழியில்) மக்கள் கூட்டங்கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, எனக்குப் பாவ மன்னிப்புக் கிடைத்ததால், "அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னித்துவிட்டதற்காக உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம்" என்று கூறலாயினர். நான் சென்று (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்களிருக்க,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள்.
அப்போது என்னை நோக்கி தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் எழுந்தோடி வந்து எனக்குக் கைலாகு கொடுத்து என்னை வாழ்த்தினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹாஜிர்களில் தல்ஹாவைத் தவிர வேறெவரும் என்னை நோக்கி எழுந்து வரவில்லை. -தல்ஹா (ரலி) அவர்கள் காட்டிய இந்த அன்பை ஒருபோதும் கஅப் மறக்கவில்லை.-
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முகமன் (சலாம்) சொன்னபோது, சந்தோஷத்தில் அவர்கள் முகம் ஒளிர, "உம்மை உம்முடைய தாய் பெற்றெடுத்தது முதல் நீர் கடந்துவந்த நாட்களில் மிகச் சிறந்த நாளான இன்று உமக்கு (பாவமன்னிப்புக் கிடைத்த) நற்செய்தி பெறுக" என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (இந்த நற்செய்தி யைத்) தாங்களே தங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேதஅறிவிப்பின் அடிப்படையில்) அறிவிக்கிறீர்களா?" என்று கேட்டேன்.
அவர்கள், "இல்லை (என் தரப்பிலிருந்து நான் இதைத் தெரிவிக்கவில்லை). அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்துள்ள வேதஅறிவிப்பின் அடிப்படையில்)தான் தெரிவிக்கிறேன்" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதாவது மகிழ்ச்சி ஏற்படும்போது அவர்களது முகம் சந்திரனின் ஒரு துண்டு போன்றாகி ஒளிரும். அவர்களது முகம் ஒளிர்வதை வைத்து அவர்களது மகிழ்ச்சியை நாங்கள் அறிந்துகொள்வோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! எனது பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் சொத்துகள் அனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக் கொள்வதற்காக) தானமாக அளித்துவிடுகிறேன்" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது" என்று கூறினார்கள்.
"கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் (எனக்காக) வைத்துக்கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசிய காரணத்தால்தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து நான் உயிரோடு வாழும்வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேசமாட்டேன்" என்று கூறினேன்.
ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து இன்றுவரை உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்ததைப் போன்று வேறெந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் அருள் புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதிமொழியை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்ன நாளிலிருந்து இந்த நாள்வரை நான் பொய்யை நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியிருக்கும் நாட்களிலும் அல்லாஹ் என்னை (பொய் சொல்லவிடாமல்) பாதுகாப்பான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
மேலும், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "உறுதியாக, அல்லாஹ் இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்சாரிகளையும் மன்னித்துவிட்டான். அவர்களில் ஒரு பிரிவினரின் உள்ளங்கள் தடம்புரள முற்பட்ட பின்னரும், சிரமமான காலகட்டத்தில் நபியைப் பின்பற்றிய அவர்களை அல்லாஹ் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்). பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்தவரையில் அது குறுகிவிட்டது" என்று தொடங்கி, "இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். உண்மையாளர்களுடன் இருங்கள்" (9:117-119) என்பதுவரையுள்ள வசனங்களை அருளினான்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழிகாட்டியபின், தன் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னை உண்மை பேசவைத்து உபகாரம் புரிந்ததைப் போன்று வேறெந்த உபகாரத்தையும் நான் மிகப்பெரியதாக ஒருபோதும் கருதவில்லை. நான் அவர்களிடம் பொய் பேசியிருந்தால், (போருக்குச் செல்லாமல்) பொய் சொன்னவர்(களான நயவஞ்சகர்)கள் அழிந்துபோனதைப் போன்று நானும் அழிந்துவிட்டிருப்பேன். ஏனெனில், இறைவன் வேதஅறிவிப்பு (வஹீ) அருளியபோது, யாருக்கும் சொல்லாத கடுமையான சொற்களைப் பொய் சொன்னவர்கள் குறித்து அருளினான்.
"நீங்கள் அவர்களிடம் திரும்பும்போது அவர்களை நீங்கள் விட்டுவிடுவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்களின் தங்குமிடம் நரகம். இது அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கான தண்டனை. நீங்கள் அவர்கள்மீது திருப்தியடைய வேண்டுமென்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்கின்றனர். நீங்கள் அவர்கள்மீது திருப்தி கொண்டாலும், அல்லாஹ் குற்றம்புரியும் இக்கூட்டத்தாரைப் பொருந்திக் கொள்ளமாட்டான்" (9:95,96) என்று (கண்டித்து) அல்லாஹ் கூறினான்.
குறிப்பாக, எங்கள் மூவரின் விவகாரம் மட்டும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,தம்மிடம் (பொய்ச்) சத்தியம் செய்தவர்களை ஏற்றுக் கொண்டு, அவர்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்று,அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். (எங்களது) இந்த விவகாரத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிக்கும்வரையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் விவாகரத்தைத் தள்ளிப்போட்டுவந்தார்கள்.
இதனால்தான் அல்லாஹ் எங்களைக் குறித்து, "போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்ட மூவர்" என்று (போரைக் குறிப்பிட்டுக்) கூறாமல், "பின்தங்கிவிட்ட மூவர்" (9:118) என்று பொதுவாகவே குறிப்பிட்டுள்ளான். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடம் பொய்யான சாக்குப்போக்குக் கூறியவர்களின் காரணங்களை உடனுக்குடன் ஏற்றுக் கொண்டது போலல்லாமல், எங்கள் விவகாரத்தை (உடனே தீர்க்காது) அல்லாஹ் தள்ளிப் போட்டு வந்தான்" என்பதே அதன் கருத்தாகும்.
"தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தாம் பின்தங்கிவிட்ட காலகட்டத்தைக் குறித்து தம் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தபோது, இதை அவர்கள் கூற நான் கேட்டேன்" என்று கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் முதுமை அடைந்து கண்பார்வை இழந்துவிட்ட சமயத்தில், அவர்களுடைய மக்களிலேயே அவர்களை அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்களே கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்தார்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோம பைஸாந்தியர்களையும் ஷாமிலிருந்த அரபுக் கிறித்தவர்களையும் நோக்கி தபூக் போருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்" என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5347. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தாம் பின்தங்கிவிட்டதைக் குறித்து கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தபோது இதை அவர்கள் கூற நான் கேட்டேன்" என கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் புதல்வர் உபைதுல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
"இந்த உபைதுல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்களே கஅப் (ரலி) அவர்கள் முதுமை அடைந்து, கண்பார்வை இழந்துவிட்ட சமயத்தில் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்தார்" என்றும் அதில் இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அறப்போருக்குச் செல்ல நாடினால் பெரும்பாலும் வேறெதற்கோ செல்வதைப் போன்று (தந்திரமாக) அதை மறைப்பார்கள். இந்த நிலையில் தபூக் போர் (நேரம்) வந்தபோது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி கூடுதல் தகவலுடன் இடம்பெற்றுள்ளது.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் சகோதரர் புதல்வரான முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அபூகைஸமா (ரலி) அவர்களைப் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்த போது) அவர்களிடம் அபூகைஸமா (ரலி) அவர்கள் வந்துசேர்ந்ததைப் பற்றியும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 49
5348. மேற்கண்ட ஹதீஸ், உபைதில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் தம் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இந்த அறிவிப்பிலும் உபைதுல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்களே தம் தந்தை கஅப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்ததாகவும், அவரே தம் தந்தை கஅப் (ரலி) அவர்கள் கண்பார்வை இழந்துவிட்ட சமயம் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராகவும், அவருடைய குலத்தாரிலேயே நன்கறிந்தவராகவும், நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களை நன்கு மனனம் செய்தவராகவும் இருந்தார் என்று காணப்படுகிறது.
மேலும், அதில் "உபைதில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள், பாவமன்னிப்பு ஏற்கப்பட்ட மூவரில் ஒருவரான என் தந்தை கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இரு போர்களைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட எந்தப் போரிலும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை" என்று கூறினார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மேலும், இந்த அறிவிப்பில், "பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக்) போருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். பதிவு செய்து பாதுகாக்கப்படும் எந்த ஏடும் அத்தனைப் பேருக்கு இடமளிக்காது (அந்த அளவுக்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள் இருந்தார்கள்)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 49
பாடம் : 10 அவதூறு சம்பவமும் அவதூறு கூறியோரின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்கப்பட்டதும்.
5349. இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், அல்கமா பின் வக்காஸ், உபை துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்களென்று அல்லாஹ் (குர்ஆனில்) அறிவிப்புச் செய்ததைப் பற்றியும் தெரிவித்தனர்.
மேற்கண்ட நால்வரில் ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதியினை எனக்கு அறிவித்தனர். அவர்களில் சிலர் வேறுசிலரைவிட ஹதீஸை நன்கு மனனமிட்டு வைத்திருந்தாலும், ஒருவரது அறிவிப்பு மற்றவரது அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அறிவித்ததை நான் மனனமிட்டுள்ளேன். ஒருவரது அறிவிப்பு மற்றவரது அறிவிப்பை உறுதிப்படுத்துகிறது. அவர்கள் (நால்வரும்) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்கேனும் பயணம்) புறப்பட விரும்பினால், தம் துணைவியரிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல்வார்கள்.
இவ்வாறே அவர்கள் தாம் மேற்கொண்ட (பனுல் முஸ்தலிக் என்ற) ஒரு போரின்போது, எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது.
ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய "ஹிஜாப்" எனும்) "பர்தா" சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும்.
(அப்பயணத்தின்போது) நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்துத் தூக்கிச் செல்லப் படுவேன். பயணத்தினிடையே அதனுள் நான் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கிவைக்கவும் படுவேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக் கொண்டிருந்தபோது, நாங்கள் மதீனாவை நெருங்கியதும் இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.
அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்தபோது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். எனது இயற்கைத் தேவையை நான் முடித்துக்கொண்டபின் முகாமை நோக்கி வந்தேன்.
அப்போது (என் கழுத்திலிருந்து யமன் நாட்டு) "ழஃபாரீ" நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து)விட்டது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக் கொண்டிருந்தது, (நான் சீக்கிரம் திரும்பிவந்து படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது.
எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் (ஏற்றிக்) கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தூக்கி, நான் பயணம் செய்துவந்த ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர்.
அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கும் அளவுக்கு அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. (அப்போதைய) பெண்கள் சிறிதளவு உணவையே உண்பார்கள். ஆகவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோதும் அதை ஒட்டகத்தில் வைத்துக் கட்டியபோதும் அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம்பெண்ணாகவேறு இருந்தேன்.
எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்து)க்கொண்டு சென்றுவிட்டனர். படை கடந்து சென்ற பிறகு, (காணாமற்போன) கழுத்து மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அங்கு அழைப்பதற்கு யாருமில்லை; பதிலளிப்பதற்கும் எவருமில்லை. எனவே, நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மேலிட்டது. நான் தூங்கிவிட்டேன்.
படை சென்றதற்குப் பின்னர் (படையினர் முகாமிட்டிருந்த இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருட்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமீ அத்தக்வானீ என்பார் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு, நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் வந்துசேர்ந்தார்.
அங்கே தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தைப் பார்க்கவே அவர் என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். அவர் என்னை அறிந்துகொண்டு, "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே எனது மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர் "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்" என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியுறவுமில்லை. பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக்கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங்காலை (தமது காலால்) மிதித்துக்கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை இழுத்துச் செல்லலானார்.
இறுதியில் படையினர் (மதிய ஓய்வுக்காக) நண்பகல் வெயில் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்ட பின்னர் நாங்கள் அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி) என் விஷயத்தில் அழிந்தவர்கள் அழிந்துபோனார்கள். என்மீது அவதூறு (பிரசாரம்) செய்ததில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.
பிறகு நாங்கள் (அனைவரும்) மதீனா வந்தடைந்தோம். நாங்கள் மதீனா வந்தபின் ஒரு மாத காலம் நான் நோயுற்றுவிட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லில் மூழ்கிப்போயிருந்தார்கள். இந்த அவதூறு எதுவுமே எனக்குத் தெரியாது.
நான் நோயுறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இம்முறை நான் நோயுற்றிருந்தபோது) அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்பார்கள். அவ்வளவுதான். இதுவே எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைப் பற்றி வெளியே பேசப்பட்டுவந்த) அந்தத் தீயசொல் பற்றி ஒரு சிறிதும் (உடல் நலம் தேறுவதற்குமுன்) எனக்குத் தெரியாது.
நோயிலிருந்து குணமடைந்தபின் நானும் மிஸ்தஹின் தாயாரும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்திவந்த "மனாஸிஉ" (எனப்படும் புறநகர்ப் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டுமே இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கு முன்னால் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். கழிப்பிடம் நோக்கி வெளியே செல்லும் எங்களது இந்தப் பழக்கம் பண்டைய அரபுகளின் பழக்கத்தை ஒத்ததாயிருந்தது. அன்று நாங்கள் எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதைத் தொந்தரவாகக் கருதிவந்தோம்.
நானும் உம்மு மிஸ்தஹும் நடந்தோம். அவர் அபூருஹ்ம் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப் அவர்களின் புதல்வியாவார். (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான "(ராயித்தா) பின்த் ஸக்ர் பின் ஆமிர்"தான் உம்மு மிஸ்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்தஹின் புதல்வரே மிஸ்தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் முத்தலிப் ஆவார்.
ஆக, (என் உறவினரான) அபூருஹ்மின் மகள் உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் இயற்கைக் கடனை முடித்துக்கொண்டு எனது வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தமது ஆடையில் இடறிக்கொண்டார். உடனே அவர், "மிஸ்தஹ் நாசமாகட்டும்" என்று (தம் புதல்வரைச் சபித்தவராகக்) கூறினார். நான் அவரிடம், "மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்கள்?" என்று கேட்டேன்.
அதற்கு அவர், "அம்மா! அவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?" என்று கேட்டார். "என்ன சொன்னார்?" என நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அப்போது அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு எனது உடல்நிலை இன்னும் மோசமாகிவிட்டது.
நான் எனது வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எனக்கு சலாம் சொல்லிவிட்டு, "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டார்கள். அப்போது நான், "என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?" என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதா என்று விசாரித்து என்மீதான அவதூறு) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக் கொள்ளவே அப்போது நான் விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். உடனே நான் என் பெற்றோரிடம் வந்(து சேர்ந்)தேன்.
நான் என் தாயாரிடம், "அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக்கொள்கிறார்கள்?" என்று கேட்டேன். என் தாயார், "அன்பு மகளே! உன்மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, தம் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்" என்று கூறினார்.
நான் "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) இப்படியா மக்கள் பேசிவிட்டார்கள்!" என்று (வியப்புடன்) சொன்னேன். அன்றிரவு விடிய விடிய நான் அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்தபோதும் அழுதேன்.
(இதற்கிடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (அதாவது என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அத்தருணத்தில் வேதஅறிவிப்பு (வஹீ) தாமதமாயிருந்தது.
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களோ, நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் (குடும்பத்தார்மீது) இருந்த பாசத்தில் தாம் அறிந்துள்ளதையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் உங்கள் துணைவியர். அவர்களிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை" என்று உசாமா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
அலீ பின் அபீதாலிப் அவர்களோ (நபியவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக), "அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றி மனைவியர் பலர் இருக்கின்றனரே! பணிப்பெண் (பரீரா) இடம் கேட்டால், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்" என்று கூறினார்கள்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப்பெண்) பரீராவை அழைத்து, "பரீரா! ஆயிஷாவிடம் உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது நீ பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, "தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர், தம் வீட்டாரின் குழைத்த மாவை அப்படியே விட்டுவிட்டு உறங்கிப்போய்விடுவார். வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (விவரமும்) வயது(ம்) குறைந்த இளம் பெண் என்பதைத் தவிர, அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை" என்று பதில் கூறினார்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலுக்கு எதிராக உதவி கோரியபடி சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி, "முஸ்லிம் சமுதாயமே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி எனக்கு) மனவேதனையை அளித்த ஒரு மனிதனுக்கெதிராக எனக்கு உதவி புரிபவர் யார்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நான் நல்லதையே அறிவேன். அவர்கள் (அவதூறு கிளப்பியோர்) ஒரு மனிதரை (என் வீட்டாருடன் இணைத்து) அவதூறு கூறியுள்ளனர். அந்த மனிதரைப் பற்றியும் நான் நல்லதையே அறிவேன். நான் இருக்கும்போதுதான் அவர் என் வீட்டிற்கு வந்திருக்கிறார் (தனியாக வந்ததில்லை)" என்று கூறினார்கள்.
உடனே (அவ்ஸ் கூட்டத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவனுக்கெதிராகத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால்,அவனது கழுத்தை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அவன் எங்கள் சகோதரர்களான "கஸ்ரஜ்" குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால், (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் செய்து முடிக்கிறோம்" என்று கூறினார்கள்.
உடனே கஸ்ரஜ் குலத்தின் தலைவரான சஅத் பின் உபாதா எழுந்தார். இவர் (அதற்குமுன்) நல்ல மனிதராகத்தான் இருந்தார். குல மாச்சரியம் அவரை விவரமில்லாமல் பேச வைத்துவிட்டது. அவர் (அவ்ஸ் குலத்தவரான) சஅத் பின் முஆதை நோக்கி, "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தவறாகச் சொல்லிவிட்டீர். அவனை நீர் கொல்லமாட்டீர். அவனைக் கொல்ல உம்மால் முடியவும் செய்யாது" என்று சொன்னார்.
உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்றார். இவர் (அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் புதல்வர் ஆவார். உசைத் (ரலி) அவர்கள் சஅத் பின் உபாதா அவர்களிடம் "நீர்தான் தவறாகப் பேசினீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். அதனால்தான் நயவஞ்சகர்களுக்காக வாதாடுகின்றீர்" என்று சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்றுகொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட்டுக் கொள்ளத் தயாராகிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் அனைவரும் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பிறகு தாமும் அமைதியாகிவிட்டார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அன்றைய நாள் முழுவதும் நான் அழுது கொண்டேயிருந்தேன். என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. அடுத்த நாள் இரவும் அழுதுகொண்டிருந்தேன். அப்போதும் என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. அழுகை என் ஈரலைப் பிளந்துவிடுமோ என என் பெற்றோர் எண்ணி (கலங்கி)க்கொண்டிருந்தனர்.
நான் அழுதுகொண்டிருக்க, என்னருகில் என் தாய் தந்தையர் அமர்ந்துகொண்டிருந்த போது, அன்சாரிப்பெண் ஒருவர் வந்து என்னிடம் (உள்ளேவர) அனுமதி கோரினார். நான் அவருக்கு அனுமதியளித்தவுடன் அவரும் அழுதபடி அமர்ந்துகொண்டார்.
நாங்கள் இவ்வாறு இருக்கையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு அமர்ந்தார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாதகாலம்வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு "வஹீ"யாக அருளப்படாமலேயே இருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தபின், ஏகத்துவ உறுதிமொழி கூறி (இறைவனைப் புகழ்ந்துவிட்டு), "ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்துவிடுவான். (ஒருகால்) நீ குற்றமேதும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு. ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு, (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால், அவனது கோரிக்கையை ஏற்று அவனை அல்லாஹ் மன்னிக்கின்றான்" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்தபோது, எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை. அப்போது நான் என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்குப் பதில் சொல்லுங்கள்" என்றேன். அதற்கு என் தந்தை, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வது என்பதே எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள்.
பிறகு நான் என் தாயார் (உம்மு ரூமான்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதில் கூறுங்கள்" என்று சொன்னேன். அதற்கு என் தாயார், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பதே எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். அதற்கு நான், "நானோ வயது குறைந்த இளம்பெண். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள். இந்நிலையில் (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட) இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்துபோய், அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக நான் அறிவேன்.
ஆகவே, உங்களிடம் நான் குற்றமற்றவள் என்று கூறினால், -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- அதை நீங்கள் நம்பப்போவதில்லை. நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால், -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- நான் சொல்வதை அப்படியே (உண்மை என்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (எனக்கும்) உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (நபி யஅகூப் - அலை) அவர்களையே உவமானமாகக் காண்கிறேன் (அதாவது:) "(இதைச்) சகித்துக்கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும்" (12:18) என்று (யஅகூப் (அலை) அவர்கள் கூறியதைச்) சொன்னேன்.
பிறகு படுக்கையில் திரும்பிப் படுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அப்போது நான் குற்றமற்றவள் என்பதையும், நான் குற்றமற்றவள் என நிச்சயம் அல்லாஹ் அறிவிப்பான் என்பதையும் நன்கறிவேன். ஆயினும்,அல்லாஹ்வின் மீதாணையாக! ஓதப்படுகின்ற வஹீயை (வேதஅறிவிப்பை) என் விஷயத்தில் அல்லாஹ் அருள்வான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் ஓதப்படுகின்ற ஒன்றைச் சொல்கின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்திருந்தேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (எங்கள் வீட்டில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்திருக்கவுமில்லை; வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு (குர்ஆன் வசனங்களை) அருளத் தொடங்கிவிட்டான்.
உடனே அவர்களுக்கு (வேதஅறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை அவர்களைப் பற்றிக்கொண்டது. அது கடுங்குளிர் காலமாயிருந்தும், அவர்களின் மேனியிலிருந்து வியர்வைத் துளிகள் முத்துகளைப் போன்று வழியத் தொடங்கிவிட்டன. அவர்களுக்கு அருளப்பெற்ற இறைவசனத்தின் பாரத்தினால்தான் (அவர்களுக்கு வியர்வை அரும்பி வழியுமளவுக்கு) இந்தச் சிரமநிலை ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் (மகிழ்ச்சியோடு) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை, "ஆயிஷா! நற்செய்தி பெற்றுக்கொள். அல்லாஹ் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்துவிட்டான்" என்பதாகவே இருந்தது.
உடனே என் தாயார் என்னிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்துசெல்" என்று கூறினார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் எழுந்து செல்லமாட்டேன். என்னைக் குற்றமற்றவள் என அறிவித்த அல்லாஹ்வையே புகழ்(ந்து அவனுக்கு நன்றி செலுத்து)வேன்" என்று சொன்னேன். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்" என்று தொடங்கும் பத்து வசனங்களை (24:11-20) அருளினான்.
என் குற்றமற்ற நிலை தொடர்பாக வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் இந்த வசனங்களை அருளியபோது, (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து "மிஸ்தஹ்" அவதூறு கூறிய பின்பு ஒருபோதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன்" என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா (தாய் வழியில்) தமக்கு உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் உதவித் தொகை வழங்கிவந்தார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "உங்களில் செல்வமும் தயாள குணமும் படைத்தோர் (தம்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ எதுவும் வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்" என்று தொடங்கி, "அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு வழங்குவதை நீங்கள் விரும்பமாட்டீர்களா..." (24:22) என்பது வரையிலான வசனத்தை அருளினான்.
-"அல்லாஹ்வின் வேதத்திலுள்ள வசனங்களிலேயே (இறைமன்னிப்பை) மிகவும் எதிர் பார்க்கவைக்கும் வசனம் இதுதான்" என்று அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஹிப்பான் பின் மூசா (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.
உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்" என்று கூறிவிட்டு, மிஸ்தஹுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். "அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்தமாட்டேன்" என்றும் சொன்னார்கள்.
(குர்ஆனில் எனது கற்பொழுக்கம் குறித்த வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பற்றித் தம்முடைய (இன்னொரு) துணைவியான ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் விசாரித்திருந்தார்கள். "(ஸைனபே!) நீ (ஆயிஷா குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்? அல்லது பார்த்திருக்கிறாய்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! என் காதையும் என் கண்ணையும் (அவற்றின்மேல் பழி போடாமல்) நான் பாதுகாத்துக்கொள்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன்" என்று கூறினார்கள்.
ஸைனப் அவர்கள்தான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபியின் அன்பிலும்) போட்டியாக இருந்தவர். ஆயினும், அல்லாஹ் அவரை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பைக் கொடுத்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவருடைய சகோதரி ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (என்னுடன்) மோதிக்கொள்ளலானார். (என் விஷயத்தில்) அவதூறு பேசி அழிந்துபோனவர்களுடன் அவரும் அழிந்துபோனார்.
அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், "இதுதான் அந்த (நால்வர்) குழுவிடமிருந்து எனக்குக் கிடைத்த அறிவிப்பாகும்"என்று கூறுகிறார்கள்.
யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("சஅத் பின் உபாதா அவர்களைக் குலமாச்சரியம் விவரமில்லாமல் பேசவைத்துவிட்டது" என்பதற்குப் பகரமாக) "குலமாச்சரியம் அவரை உசுப்பிவிட்டது" என்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5350. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஃபுலைஹ் பின் சுலைமான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "சஅத் பின் உபாதா அவர்களைக் குலமாச்சரியம் விவரமில்லாமல் பேசவைத்துவிட்டது" என்று இடம் பெற்றுள்ளது.
சாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "குலமாச்சரியம் அவரை உசுப்பி விட்டது" என்றும், உர்வா பின் அஸ்ஸுபைர் பின்வருமாறு கூறியதாகக் கூடுதலாகவும் இடம்பெற்றுள்ளது:
ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்கு முன்னால் (அவதூறு கூறியவர்களில் ஒருவரான) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஏசப்படுவதை விரும்பாதவர்களாக இருந்தார்கள். மேலும், "அந்த ஹஸ்ஸான் (ரலி) அவர்கள்தான், "(பகைவர்களே!) என் தந்தையும், என் தந்தையின் தந்தையும், எனது மானமும் உங்களிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களின் மானத்தைக் காக்கும் கேடயமாகும்" எனும் கவிதையைச் சொன்னவர்" என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! எவரைக் குறித்து (அந்தப் பழிச்சொல்) சொல்லப்பட்டதோ அந்த மனிதர் (ஸஃப்வான், தம் அன்னையான என்னுடன் தம்மை இணைத்து அவதூறு பேசுவதைக் கேட்டு), "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்); எனது உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் ஒருபோதும் எந்த (அந்நியப்) பெண்ணின் ஆடையையும் அகற்றியதில்லை" என்று கூறினார். அதன் பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் (உயிர்த் தியாகியாகக்) கொல்லப்பட்டார்" என்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
யஅகூப் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "படையினர் கடுமையான வெயிலுள்ள நண்பகல் நேரத்தில் (மதிய ஓய்வுக்காக) இறங்கித் தங்கியிருந்தனர் ("மூஇரீன ஃபீ நஹ்ரிழ் ழஹீரா")" என்று இடம் பெற்றுள்ளது. அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூஃகிரீன" என்று இடம்பெற்றுள்ளது.
அப்து பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களிடம் "மூஃகிரீன் என்பதற்குப் பொருள் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(அதன் வேர்ச்சொல்லான) "வஃக்ரத்" என்பது "கடுமையான வெயிலைக் குறிக்கும்" என்றார்கள்.
அத்தியாயம் : 49
5351. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது, எனக்கு இன்னும் அதைப் பற்றி தெரிந்திராத நிலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னைப் பற்றி உரையாற்ற மக்களிடையே) எழுந்து நின்றார்கள்.
ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வை அவன் தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டு, "என் வீட்டார்மீது அபாண்டமாகப் பழி சுமத்தியவர்கள் விஷயத்தில் (அவர்களை என்ன செய்வதென்று) எனக்கு ஆலோசனை கூறுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என் வீட்டாரிடம் எந்தக் கெட்டப்பழக்கத்தையும் நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! எவரிடம் எந்தத் தீய நடத்தையையும் நான் காணவில்லையோ அத்தகைய ஒருவருடன் என் வீட்டாரை இணைத்து அவர்கள் பழி சுமத்தியுள்ளார்கள். நான் இருக்கும்போதே தவிர வேறெப்போதும் அவர் என் வீட்டினுள் நுழைந்ததில்லை. நான் பயணத்தில் வெளியே செல்லும்போதெல்லாம், அவரும் என்னுடனேயே இருப்பார்" என்று சொன்னார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகி மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த அறிவிப்புகளில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்திருந்து என் பணிப்பெண்ணிடம் என்னைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். அவள், "அல்லாஹ்வின் மீதாணையாக! ஆடு நுழைந்து அவர் "குழைத்துவைத்த மாவை" அல்லது "அவர் பிசைந்துவைத்த மாவை"த் தின்றுவிட்டுச் செல்லும் அளவுக்கு (மெய்மறந்து) உறங்கி விடுவார் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையையும் நான் (ஆயிஷாவிடம்) அறிய வில்லை" என்று சொல்லியிருந்தாள்.
அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் அவளை அதட்டி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்" என்று அவளிடம் வெளிப்படையாக விஷயத்தை விளக்கினார்.
அப்போது அவள், "அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் மீதாணையாக! பொற்கொல்லன், (தூய்மையான) சிவப்புத் தங்கக்கட்டியை எப்படி மாசு மருவற்றதாகக் கருதுவானோ அவ்வாறே நான் அவரைக் கருதுகிறேன்" என்று சொன்னாள்.
எந்த மனிதருடன் (என்னை இணைத்து) அவதூறு பேசப்பட்டதோ அந்த மனிதருக்கும் இந்த விஷயம் எட்டியது. அவர் "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்). நான் ஒருபோதும் எந்த (அந்நியப்) பெண்ணின் ஆடையையும் அகற்றியதில்லையே!" என்று சொன்னார். பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் (ஓர் அறப்போரில்) வீரமரணம் அடைந்தார்.
மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது: (முஸ்லிம்களில்) அதைப் பற்றிப் பேசியவர்கள் மிஸ்தஹும் ஹம்னாவும் ஹஸ்ஸானும் ஆவர். நயவஞ்சகன் "அப்துல்லாஹ் பின் உபை"தான் (நடக்காத ஒன்றை நடந்ததாக) ஜோடித்து, அதைப் பரப்பிவந்தவன் ஆவான். அவதூறு பரப்பியவர்களில் பெரும்பங்கு வகித்தவனும் அவன்தான்; ஹம்னாவும்கூட.
அத்தியாயம் : 49
பாடம் : 11 நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்மீது சுமத்தப்பட்ட அவதூறுக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதாகும்.
5352. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணுடன் இணைத்து ஒரு மனிதர் அவதூறு சொல்லப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "நீங்கள் சென்று அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே அலீ (ரலி) அவர்கள் சென்ற போது, அவர் (சுற்றுச்சுவர் இல்லாத) ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார். அவரிடம் அலீ (ரலி) அவர்கள், "மேலே வா" என்று தமது கையைக் கொடுத்து அவரை வெளியேற்றினார்கள்.
அப்போது அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவராக, இன உறுப்பே அற்றவராக இருந்தார். ஆகவே, அலீ (ரலி) அவர்கள் அவரை(க் கொல்லாமல்) விட்டுவிட்டார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவர்; இன உறுப்பே அற்றவர் ஆவார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 49