பாடம் : 27 குகையில் சிக்கிக்கொண்ட மூவரின் நிகழ்ச்சியும், நல்லறங்களை முன்வைத்து உதவி கோருவதும்.
5293. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில்) மூன்று பேர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது (திடீரென) மழை பிடித்துக்கொண்டது. ஆகவே, அவர்கள் மலைக்குகையொன்றில் ஓதுங்கினார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டுவந்த ஒரு பாறை குகைவாசலை அடைத்துக்கொண்டது. (வெளியேற முடியாமல் திணறிய) அவர்கள் (மூவரும்) அப்போது தமக்குள், "நாம் (வேறெவருடைய திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக (என்று தூய்மையான முறையில்) செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன்வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் நம்மை விட்டு இதை அகற்றிவிடக்கூடும்" என்று பேசிக்கொண்டனர்.
எனவே, அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்:
இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருவரும் மனைவியும் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்த பின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து, என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முதலில் ஊட்டுவேன். ஒரு நாள் இலை தழைகளைத் தேடியபடி வெகுதூரம் சென்றுவிட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வர முடிந்தது.
அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். உடனே எப்போதும் போல பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். அவர்கள் இருவருக்குமுன் குழந்தைகளுக்கு ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ எனது காலருகில் (பால் கேட்டுக்) கூச்சலிட்டுக்கொண்டிந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும் இருந்து கொண்டிருக்க, வைகறை வந்துவிட்டது.
(இறைவா!) நான் இச்செயலை உனது உவப்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால், எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்துவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொள்வோம்.
அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ் பாறையைச் சற்றே நகர்த்திக்கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள்.
இரண்டாமவர் பின்வருமாறு வேண்டினார்:
இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒரு நாள்) அவளிடம் அவளைக் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டுவந்து கொடுத்தால் தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறுத்துவிட்டாள். நான் கடுமையாக உழைத்து, (அந்த) நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன்.
அவற்றை எடுத்துக்கொண்டு சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரு கால்களுக்கிடையே அமர்ந்தபோது அவள், "அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள். முத்திரையை அதற்குரிய (சட்டபூர்வ) உரிமை(யான திருமணம்) இன்றித் திறவாதே" என்று சொன்னாள். உடனே நான் அவளை விட்டுவிட்டு எழுந்துவிட்டேன்.
(இறைவா!) இதை உனது உவப்பைப் பெறவிரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக இன்னும் சற்று நகர்த்துவாயாக! அவ்வாறே அவர்களுக்கு (அல்லாஹ் இன்னும்) சற்றே நகர்த்தினான்.
மற்றொருவர் (பின்வருமாறு) வேண்டினார்: இறைவா! நான் ஒரு "ஃபரக்" அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவரை பணியமர்த்தினேன். அவர் தமது வேலையை முடித்து விட்டு, "என் உரிமையை (கூலியை)க் கொடு" என்று கேட்டார். நான் ஒரு "ஃபரக்" அளவு நெல்லை அவர்முன் வைத்தபோது அதை அவர் (பெற்றுக்கொள்ளாமல்) புறக்கணித்து(ச் சென்று)விட்டார்.
பின்னர் நான் அதை நிலத்தில் விதைத்துத் தொடர்ந்து விவசாயம் செய்துவந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)லிருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். பின்னர் (ஒரு நாள்) அவர் என்னிடம் வந்து, "அல்லாஹ்வை அஞ்சு! எனது உரிமையில் எனக்கு அநீதி இழைக்காதே" என்று கூறினார்.
அதற்கு நான், "அந்த மாடுகளிடத்திலும் அவற்றின் இடையர்களிடத்திலும் நீ சென்று, அவற்றை எடுத்துக்கொள். (அவை உனக்கே உரியவை)" என்று சொன்னேன். அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வை அஞ்சு. என்னைப் பரிகாசம் செய்யாதே" என்று சொன்னார். நான், "உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்" என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்துக்கொண்டு சென்றார்.
(இறைவா!) நான் இந்த (நற்)செயலை உன் உவப்பைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதியுள்ள அடைப்பையும் நீ அகற்றுவாயாக!
அவ்வாறே மீதியிருந்த அடைப்பையும் அல்லாஹ் அகற்றி (அவர்களை வெளியேற்றி) விட்டான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அனைவரது அறிவிப்பிலும் ("அவர்கள் மூவரும் நடந்து சென்றுகொண்டிருந்தனர்" என்பதைக் குறிக்க) "கரஜூ யம்ஷூன" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. சாலிஹ் பின் கைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "யத்தமாஷவ்ன" என்று காணப்படுகிறது.
உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் "புறப்பட்டுச் சென்றனர்" என்று இடம்பெற்றுள்ளது. ("நடந்து சென்றனர்" என்று இல்லை.)
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்றுபேர் கொண்ட ஒரு குழுவினர் நடந்து சென்றனர். இறுதியில் இரவு ஓய்வு எடுப்பதற்காக ஒரு குகைக்குள் ஒதுங்கினர்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ள விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆயினும் அவற்றில், "ஒரு மனிதர் "இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய பெற்றோர் இருந்தார்கள். நான் இரவில் அவர்கள் இருவருக்கும் பால் கறந்து கொடுப்பதற்குமுன் குடும்பத்தாருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை" என்று கூறியதாகவும், மற்றொருவர், "அவள் (எனக்கு இணங்க) மறுத்துவிட்டாள். பஞ்சம் நிறைந்த ஓராண்டு வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) அவள் என்னிடம் வந்தாள். (அவளை அடைந்துகொள்வதற்காக) அவளிடம் நான் நூற்று இருபது பொற்காசுகளைக் கொடுத்தேன்" என்று சொன்னதாகவும்,இன்னொருவர், "அவரது கூலியை முதலீடாக்கி (நான் விவசாயம் செய்து அதனால் கால்நடைச்) செல்வங்கள் பெருகி,ஆரவாரம் செய்து கொண்டிருந்தன" என்று கூறியதாகவும் காணப்படுகிறது.
மேலும், "பிறகு அவர்கள் மூவரும் அந்தக் குகையிலிருந்து வெளியேறி நடந்தனர்" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48

பாடம் : 1 பாவமீட்சி பெறுமாறு வந்துள்ள தூண்டலும் அதைக் கண்டு (இறைவன்) மகிழ்வதும்.
5294. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்கிறேன். அவன் என்னை நினைவு கூரும்போது அவனுடன் நான் இருப்பேன்" என்று கூறினான்.
அல்லாஹ்வின் மீதாணையாக! பாலைவனத்தில் தொலைத்துவிட்ட தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்கும்போது,உங்களில் ஒருவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிட, தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்.
யார் என்னிடம் ஒரு சாண் அளவு நெருங்குகிறாரோ, நான் அவரிடம் ஒரு முழம் அளவு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் நெருங்குகிறாரோ, நான் அவரிடம் (வலம் இடமாக விரிந்த) இரு கை நீட்டளவு நெருங்குகிறேன். அவர் என்னை நோக்கி நடந்து வந்தால், நான் அவரை நோக்கி ஓடிச்செல்கிறேன் (என்று அல்லாஹ் கூறினான்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5295. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காணாமல்போன ஒட்டகத்தைக் கண்டு பிடிக்கும்போது, உங்களில் ஒருவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிட, உங்களில் ஒருவர் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5296. ஹாரிஸ் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காக நான் சென்றேன். அப்போது அவர்கள் எங்களுக்கு இரு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றைத் தாமாகக் கூறினார்கள். மற்றொன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அவர்கள் சொன்னதாவது:
ஒரு மனிதன் (பயணத்தினிடையே ஓய்வெடுப்பதற்காக) ஆபத்துகள் நிறைந்த (வறண்ட) பாலைவனத்தில் (இறங்கி) உறங்கினான். அவனுடன் அவனது வாகன(மான ஒட்டக)மும் இருந்தது. அதில் அவனுடைய உணவும் நீரும் இருந்தன. அவன் (உறங்கிவிட்டு) விழித்தெழுந்தபோது, அவனது ஒட்டகம் (தப்பியோடிப்) போயிருந்தது. அவன் அதைத் தேடிச் சென்றபோது, அவனுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. அவன், "நான் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று சாகும்வரை உறங்கப்போகிறேன்" என்று கூறியபடி (அங்கு திரும்பிச் சென்று) தனது கொடுங்கையில் தலை வைத்துச் சாகும்வரை உறங்கப் போனான்.
பிறகு (திடீரென) அவன் விழித்துப் பார்த்த போது, அவனுக்கருகில் அவனது ஒட்டகம் இருந்தது. அதில் அவனது பயண உணவும் நீரும் இருந்தன. அப்போது அவன் தனது ஒட்டகத்தாலும் உணவாலும் அடைகின்ற மகிழ்ச்சியைவிட,இறைநம்பிக்கையுள்ள அடியார் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கின்றான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("வறண்ட பாலைவனம்" என்பதைக் குறிக்க "தவிய்யத்" என்பதற்குப் பகரமாக) "தாவியத்" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 49
5297. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இரு ஹதீஸ்களை எனக்குச் சொன்னார்கள். ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவும், மற்றொன்று தாமாகவும் தெரிவித்தார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 49
5298. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் உரையாற்றும்போது, பின்வருமாறு கூறினார்கள்:
ஒரு மனிதர் தமது ஒட்டகத்தில் தமது பயண உணவையும் தோல் பையையும் ஏற்றிக்கொண்டு பயணம் செய்தார். வறண்ட பாலைவனத்தில் அவர் சென்றுகொண்டிருந்த போது, மதிய ஓய்வு நேரம் வரவே, அவர் இறங்கி, ஒரு மரத்தின் கீழ் தம்மையும் அறியாமல் உறங்கிவிட்டார். அப்போது அவரது ஒட்டகம் தப்பியோடியது. அவர் விழித்தெழுந்தபோது (ஒட்டகத்தைக் காணாததால்) ஓடிப்போய் ஒரு குன்றின் மேலேறிப் பார்த்தார். எதையும் அவர் காணவில்லை. பிறகு மற்றொரு குன்றின் மீதேறிப் பார்த்தார். அங்கும் எதையும் காணவில்லை. பிறகு வேறொரு குன்றின் மீதேறிப் பார்த்தார். எதையும் காணவில்லை.
ஆகவே, முன்பு ஓய்வெடுத்த இடத்துக்கே திரும்பிவந்து அமர்ந்துகொண்டார். அப்போது அவரது ஒட்டகம் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது வந்து தனது கடிவாளத்தை அவரது கையில் இட்டது. இந்த நிலையில் அவர் தனது ஒட்டகத்தைக் காணும்போது அடைந்த மகிழ்ச்சியைவிடத் தன் அடியார் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்கள் என ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஆனால், நுஅமான் (ரலி) அவர்கள் அவ்வாறு கூறியதை நான் (சிமாக்) செவியுறவில்லை.
அத்தியாயம் : 49
5299. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "ஒரு மனிதர் உணவோ நீரோ கிடைக்காத வறண்ட பாலைவனத்தில் (ஓய்வெடுத்துக்கொண்டு) இருந்தபோது, அவரது ஒட்டகம் தனது கடிவாளத்தை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டது. அந்த மனிதரின் உணவும் பானமும் அதன் மீதே இருந்தன. அந்த மனிதர் அதைத் தேடிப் புறப்பட்டார். அதனால் அவர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். (ஓடிப்போன) அந்த ஒட்டகம் ஒரு மரத்தைக் கடந்தபோது அதன் கடிவாளம் அந்த மரத்தின் வேரில் மாட்டிக்கொண்டது. அதில் சிக்கிக்கொண்டு இருந்தபோது அந்த மனிதர் அதைக் கண்டார். அப்போது அந்த மனிதர் அடையும் மகிழ்ச்சியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு நாங்கள், "மிகவும் அதிகமாக (மகிழ்ச்சி அடைந்திருப்பார்), அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! தனது ஒட்டகத்தைக் கண்ட அந்த மனிதர் அடையும் மகிழ்ச்சியை விடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5300. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வறண்ட பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டார். (அவர் ஓரிடத்தில் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது) அவரது ஒட்டகம் தப்பியோடி விட்டது. அதன் மீதே அவரது உணவும் பானமும் இருந்தன. அவர் (தமது ஒட்டகத்தைத் தேடியலைந்து அதைக் கண்டுபிடிக்க முடியாமல்) நம்பிக்கையிழந்து, ஒரு மரத்திற்கு அருகில் வந்து, அதன் நிழலில் படுத்திருந்தார்.
தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அதே நிலையில் அவர் நிராசையுடன் இருந்தபோது, அந்த ஒட்டகம் (வந்து) தமக்கு அருகில் நிற்பதை அவர் கண்டார். உடனே அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டார். பிறகு மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், ("இறைவா! நீ என் இறைவன்; நான் உன் அடிமை" என்று சொல்வதற்குப் பதிலாக) "இறைவா! நீ என் அடிமை; நான் உன் இறைவன்" என்று தவறுதலாகச் சொல்லிவிட்டார். இந்த மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5301. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வறண்ட பாலைவனத்தில் தொலைந்து போய்விட்ட தமது ஒட்டகத்தை உறங்கியெழும்போது கண்டுபிடித்த மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி, தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
பாடம் : 2 பாவமன்னிப்புக் கோரி பாவமீட்சி பெறுவதால் பாவங்கள் அகன்றுவிடுகின்றன.
5302. அபூஸிர்மா மாலிக் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களுக்கு இறப்பு நெருங்கியபோது, "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியை உங்களிடம் கூறாமல் மறைத்துவைத்திருந்தேன். (அதை இப்போது உங்களிடம் கூறுகிறேன்:)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்து விட்டால், நிச்சயமாகப் பாவம் செய்கின்ற ஒரு படைப்பை அல்லாஹ் உருவாக்கி அவர்களுடைய பாவங்களை அவன் மன்னிக்கவே செய்வான் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 49
5303. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பாவங்கள் செய்து, அவற்றை அல்லாஹ் உங்களுக்கு மன்னிக்கும் நிலை இல்லாதிருந்தால், பாவங்கள் செய்யும் மற்றொரு சமுதாயத்தை அல்லாஹ் கொண்டு வருவான்; அப்பாவங்களை அவர்களுக்கு மன்னிக்கவும் செய்வான்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5304. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
பாடம் : 3 எல்லா நேரங்களிலும் இறைவனை நினைவுகூரல், மறுமை நிகழ்வுகளைச் சிந்தித்தல், இறைவன் கண்காணிக்கிறான் என உணர்தல் ஆகியவற்றின் சிறப்பும், சில நேரங்களில் இந்த உணர்வுகளிலிருந்து விடுபட்டு இம்மை விவகாரங்களில் ஈடுபடலாம் என்பதும்.
5305. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா பின் அர்ரபீஉ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, "ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "ஹன்ழலா நயவஞ்சகனாகிவிட்டான்" என்று சொன்னேன். அதற்கு "அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?"என்று கேட்டார்கள். அதற்கு நான், "நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம்.(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்" என்று சொன்னேன்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்" என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்ன அது?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்" என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்" என்று மூன்று முறை கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5306. ஹன்ழலா பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருப்போம். அப்போது அவர்கள் எங்களுக்கு அறிவுரை கூறுவார்கள். அப்போது நரகத்தை நினைவூட்டுவார்கள். பிறகு நான் எனது வீட்டுக்கு வரும்போது, குழந்தைகளைக் குதூகலப்படுத்துவேன்; மனைவியுடன் விளையாடி மகிழ்வேன்.
(ஒரு நாள் வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்றேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களை (வழியில்) சந்தித்தபோது, அது குறித்து அவர்களிடம் சொன்னேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், "நீங்கள் சொல்வதைப் போன்றுதான் நானும் செய்கிறேன்" என்று கூறினார்கள்.
பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தோம். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சகனாகிவிட்டான்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என்ன சொல்கிறீர்?"என்று கேட்டார்கள். அவர்களிடம் (எங்கள் நிலை குறித்த) செய்தியைச் சொன்னேன். அபூபக்ர் (ரலி) அவர்கள், "இவர் செய்ததைப் போன்றுதான் நானும் செய்கிறேன்" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இப்படிச்) சில நேரம்; (அப்படிச்) சில நேரம். இறைவனைத் துதிக்கும்போதிருக்கும் நிலையில் உங்கள் உள்ளம் எப்போதும் இருக்குமானால், வானவர்கள் உங்களிடம் கைலாகு கொடுத்திருப்பார்கள். நீங்கள் செல்லும் வழிகளில் (அவர்கள் உங்களிடம் வந்து) உங்களுக்கு முகமன் (சலாம்) கூறியிருப்பார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் (நபி (ஸல்) அவர்களின்) எழுத்தரான ஹன்ழலா அத்தமீமீ அல்உசைதீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருக்கும்போது, அவர்கள் எங்களுக்குச் சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டுவார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 49
பாடம் : 4 இறைவனின் கருணை விசாலமானது; அது அவனது கோபத்தை வென்றுவிட்டது.
5307. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது, தனது அரியணைக்கு மேலே தனக்கு அருகிலுள்ள தனது பதிவேட்டில் "என் கருணை என் கோபத்தை வெல்லும்" என்று எழுதினான்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5308. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது" என்று சொன்னான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5309. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (படைப்புகளைப்) படைக்கும் பணியை நிறைவு செய்தபோது, தனக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள தனது பதிவேட்டில் "என் கருணை என் கோபத்தை வெல்லும்" என்று (கருணையைத்) தனக்குத் தானே விதியாக்கிக்கொள்ளும் வகையில் எழுதினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5310. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது பாகங்களைத் தன்னிடமே வைத்துக்கொண்டான். (மீதியிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றன் மீதொன்று பாசம் காட்டுகின்றன. எந்த அளவுக்கென்றால், மிதித்துவிடுவோமா என்ற அச்சத்தால் பிராணி தனது குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக்கொள்கிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49
5311. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், அன்பை நூறு பாகங்களாகப் படைத்தான். அவற்றில் ஒன்றை தன் படைப்பினங்களிடையே வைத்தான். தொண்ணூற்று ஒன்பது பாகங்களைத் தன்னிடமே பத்திரப்படுத்திக்கொண்டான்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5312. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள்,ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 49