பாடம் : 36 தொல்லை தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றுவதன் சிறப்பு.
5105. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் ஒரு சாலை வழியே நடந்து செல்லும்போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டார். உடனே அதை (எடுத்து) தள்ளிப்போட்டார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் நன்றியுடன் ஏற்று, அவருக்குப் பாவமன்னிப்பு அருளினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5106. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் நடைபாதையில் கிடந்த மரக்கிளையொன்றைக் கடந்து சென்றார். அப்போது அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம் (பாதசாரி)களுக்குத் தொல்லை தராமலிருப்பதற்காக இதை நான் அப்புறப்படுத்துவேன்" என்று கூறி(விட்டு அதை அப்புறப்படுத்தி)னார். இதன் காரணமாக, அவர் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5107. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் நடுவழியில் கிடந்து மக்களுக்கு இடையூறு அளித்துவந்த மரமொன்றை வெட்டி (அப்புறப்படுத்தி)யதற்காகச் சொர்க்கத்தில் நடமாடுவதை நான் கண்டேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த மரமொன்றை, ஒரு மனிதர் வந்து வெட்டி (அப்புறப்படுத்தி)னார். இ(ந்த நற்செயலைச் செய்த)தற்காக அவர் சொர்க்கத்திற்குள் நுழைந்தார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5109. அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் நபியே! நான் பயனடையக்கூடிய (நற்செயல்) ஒன்றை எனக்குக் கற்றுத் தாருங்கள்" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம்கள் நடமாடும் பாதையிலிருந்து தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவீராக" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
5110. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (இறந்து) போய்விட்ட பின்னரும் நான் வாழக்கூடிய நிலை ஏற்படுமா என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, எனக்கு அல்லாஹ் பயனளிக்கக்கூடிய (நற்செயல்) சிலவற்றை முன்கூட்டியே சொல்லித்தாருங்கள்?" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்னின்னதைச் செய்வீராக" (அறிவிப்பாளர் அபூபக்ர் அதை மறந்துவிட்டார்) என்று கூறிவிட்டு, "தொல்லை தரும் பொருட்களைப் பாதையிலிருந்து அப்புறப்படுத்துவீராக" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 37 பூனை முதலிய தீங்கு செய்யாத பிராணிகளை வேதனை செய்வது தடை செய்யப்பட்டதாகும்.
5111. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பூனையொன்றைச் சாகும்வரை சிறை வைத்த காரணத்தால் ஒரு பெண் நரகத்தில் நுழைந்தாள். அதை அடைத்து வைத்திருந்தபோது, அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; குடிப்பதற்கும் (எதுவும்) கொடுக்கவில்லை; பூமியின் புழுப்பூச்சிகளைத் தின்பதற்கு அதை அவள் (திறந்து)விடவுமில்லை.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5112. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண், பூனையொன்றைக் கட்டிவைத்தாள். அதற்குத் தீனியும் போடவில்லை; குடிப்பதற்கு எதுவும் கொடுக்கவுமில்லை; பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை (அவிழ்த்து)விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5113. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண், தான் கட்டிவைத்த பூனையொன்றின் காரணத்தால் நரகத்திற்குள் நுழைந்தாள். அவள் அதற்குத் தீனி போடவுமில்லை. பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்துவிடவுமில்லை. இறுதியில் அது (பட்டினியால்) மெலிந்துபோய் செத்துவிட்டது.
அத்தியாயம் : 45
பாடம் : 38 பெருமை தடை செய்யப்பட்டதாகும்.
5114. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியம், அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறினான்:) ஆகவே, (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வதைத்துவிடுவேன்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 39 இறையருள்மீது யாரையும் நம்பிக்கையிழக்கச் செய்வது தடை செய்யப் பட்டதாகும்.
5115. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில் வாழ்ந்த) ஒரு மனிதர், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ன மனிதனை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்" என்று கூறினார். அல்லாஹ், "இன்ன மனிதனை நான் மன்னிக்கமாட்டேன் என என்மீது சத்தியமிட்டுச் சொன்னவன் யார்? நான் அந்த மனிதனை மன்னித்துவிட்டேன். உன் நல்லறங்களை அழித்துவிட்டேன்" என்றோ, அதைப் போன்றோ கூறினான்.
இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 40 பலவீனமானோர் மற்றும் அடக்கத்தோடு வாழ்வோரின் சிறப்பு
5116. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(புழுதி படிந்த) பரட்டைத் தலை கொண்ட, வீட்டுவாசல்களில் தடுத்து நிறுத்தப்படக்கூடிய எத்தனையோ பேர், (அல்லாஹ்விடம் தகுதியால் உயர்ந்தவர்கள் ஆவர்.) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை மெய்யாக்குவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 41 "மக்கள் நாசமாகிவிட்டனர்” என்று கூறுவது தடை செய்யப்பட்டதாகும்.
5117. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘மக்கள் நாசமாகிவிட்டனர்" என்று ஒருவர் கூறினால், அவர்களைவிட அவரே மிகவும் நாசமடைந்தவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளன.
(ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அவர் அவர்களை நாசமாக்கிவிட்டார்" ("அஹ்லகஹும்") என்பதா? அல்லது "அவரே அவர்களைவிட மிகவும் நாசமடைந்தவர்" ("அஹ்லகுஹும்") என்பதா என்று எனக்குத் தெரியவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 42 அண்டை வீட்டார் குறித்த அறிவுரையும் அவர்களுக்கு நன்மை செய்வதும்.
5118. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவுக்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு (எனது சொத்தில்) வாரிசாக்கியேவிடுவாரோ என்றுகூட நான் எண்ணினேன்" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவுக்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு அவர் வாரிசாக்கிவிடுவாரோ என்றுகூட நான் எண்ணினேன்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5120. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக்கொள்வீராக. உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5121. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் உற்ற தோழர் (நபி (ஸல்) அவர்கள்,) என்னிடம், "நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்து, உம்முடைய அண்டை வீட்டார்களில் ஒரு வீட்டாரைப் பார்த்து அதிலிருந்து சிறிதளவை அவர்களுக்கும் கொடுத்துதவுக!" என்று அறிவுறுத்தினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 43 ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது முகமலர்ச்சி காட்டுவது விரும்பத்தக்கதாகும்.
5122. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 44 தடை செய்யப்படாத விஷயங்களில் பிறருக்காகப் பரிந்து பேசுவது விரும்பத் தக்கதாகும்.
5123. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
தேவையுடையவர் யாரேனும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தால், தம்முடன் அமர்ந்திருப்பவர்களை முன்னோக்கி, "(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள்; அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்;அல்லாஹ் தன் தூதருடைய நாவால் தான் விரும்பியதைத் தீர்ப்பளிக்கட்டும்" என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 45 நல்லோருடன் நட்புகொள்வதும் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகியிருப்பதும் விரும்பத்தக்கவையாகும்.
5124. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது, கஸ்தூரி வியாபாரியின் நிலையையும், (உலைக்களத்தில்) உலை ஊதுகின்றவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரி வியாபாரி, ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால், உலை ஊதுபவனோ, ஒன்று உனது ஆடையை எரித்துக் கரித்து விடுவான்;அல்லது (அவனிடமிருந்து) துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45