5085. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன். உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே ஆவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5086. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன்" என்று கூறினார்கள். மக்கள், "அப்படியானால், வீரன் என்பவன் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே (வீரன் ஆவான்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5087. சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர். அவர்களில் ஒருவருடைய கண்கள் (கோபத்தால்) சிவந்து, கழுத்து நரம்புகள் புடைக்கலாயின.
நபி (ஸல்) அவர்கள், "எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை அவர் சொல்வாராயின் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய (கோப) உணர்ச்சி விலகிவிடும். "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்" (ஷைத்தானிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்) (என்பதே அது)" என்று கூறினார்கள். (மக்கள் கோபத்திலிருந்த அந்த மனிதரிடம் இதை எடுத்துரைத்தபோது) அந்த மனிதர், "எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகத் தெரிகிறதா?" என்று கேட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னுல் அலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்த மனிதர்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 45
5088. சுலைமான் பின்த் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர். அவர்களில் ஒருவருக்குக் கோபமேற்பட்டு அவரது முகம் சிவக்கலாயிற்று. அவரை உற்றுப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், "எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை அவர் சொல்வாராயின் அ(வருக்கு ஏற்பட்டிருக்கும் கோபமா ன)து அவரைவிட்டுப் போய்விடும். "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்" (என்பதே அந்த வார்த்தை)" என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டவர்களில் ஒருவர் அந்த மனிதரை நோக்கிச் சென்று, "சற்று முன்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள் என்று உமக்குத் தெரியுமா? எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இ(வருக்கு ஏற்பட்டுள்ள கோபமான)து இவரைவிட்டுப் போய்விடும். "அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தா னிர் ரஜீம்" (என்பதே அந்த வார்த்தை) என்று கூறினார்கள்" என்றார். அதற்கு அந்த மனிதர், "நான் உனக்குப் பைத்தியக்காரனாகத் தெரிகிறேனா?" என்று கேட்டார்.
- மேற்கண்ட ஹதீஸ் சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 31 மனிதன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (பலவீனமான) படைப்பாகவே படைக்கப்பட்டுள்ளான்.
5089. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைச் சொர்க்கத்தில் (களிமண்ணால்) படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 32 முகத்தில் அடிக்கலாகாது.
5090. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உங்களில் ஒருவர் (தம் சகோதரரை) அடித்தால்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 45
5091. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5092. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அறைவதைத் தவிர்க்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5093. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும். ஏனெனில், அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமைத் தனது உருவத்திலேயே படைத்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5094. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 33 நியாயமான காரணமின்றி மக்களைத் தண்டிப்பதற்கு வந்துள்ள கடுமையான கண்டனம்.
5095. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டில் மக்களில் சிலரைக் கடந்துசென்றார்கள். அவர்களது தலையில் ஆலிவ் எண்ணெய் ஊற்றப்பட்டு வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி) அவர்கள், "என்ன இது?" என்று கேட்டார்கள். "கராஜ் (வரி செலுத்தாதது) தொடர்பாகத் தண்டிக்கப்படுகின்றனர்" என்று சொல்லப் பட்டது.
அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள், "அறிக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்"என்றார்கள்.
அத்தியாயம் : 45
5096. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டில் விவசாயிகளில் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி) அவர்கள், "இவர்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். மக்கள், "ஜிஸ்யா (செலுத்த மறுத்தது) தொடர்பாகப் பிடிக்கப்பட்டனர்" என்று பதிலளித்தனர்.
அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அன்றைய தினத்தில் பாலஸ்தீனத்தின் ஆட்சியாளராக உமைர் பின் சஅத் என்பவர் இருந்தார். அவரிடம் ஹிஷாம் (ரலி) அவர்கள் சென்று (மக்களுக்கு இழைக்கப்படும் வேதனையைத்) தெரிவித்தார்கள். உடனே உமைர் பின் சஅத் ஆணையின் பேரில் அந்த விவசாயிகள் விடுவிக்கப்பட்டனர்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5097. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள், "ஹிம்ஸ்" பகுதியின் ஆட்சியர் ஒருவர், ஜிஸ்யா செலுத்தாதது தொடர்பாக விவசாயிகளில் சிலரை வெயிலில் நிறுத்திவைத்திருப்பதைக் கண்டார்கள்.
அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள் "என்ன இது?" என்று கேட்டுவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 34 பள்ளிவாசல், கடைத்தெரு உள்ளிட்ட மக்கள் கூடுகின்ற பொது இடங்களில் ஆயுதத்தைக் கொண்டுசெல்பவர், அதன் முனைப் பகுதியைப் பிடித்து (மறைத்து)க் கொள்ளுமாறு வந்துள்ள கட்டளை.
5098. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஒருவர் அம்புகளுடன் நடந்து சென்றார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அம்புகளின் முனைகளைப் பிடித்து (மறைத்து)க் கொள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5099. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் பள்ளிவாசலில் அம்புகளில் சிலவற்றை, அவற்றின் முனைகள் வெளியே தெரியுமாறு எடுத்துச் சென்றார். அப்போது அவை எந்த முஸ்லிமையும் கீறி(க் காயப் படுத்தி)விடாதபடி எடுத்துச் செல்லுமாறு அவர் கட்டளையிடப்பட்டார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5100. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் பள்ளிவாசலில் அம்புகளைத் தர்மம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவற்றின் முனையைப் பிடித்து (மறைத்து)க் கொண்டுதான் செல்ல வேண்டுமெனக் கட்டளையிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5101. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் பள்ளிவாசலிலோ அல்லது கடைத்தெருவிலோ தமது கையில் அம்புடன் நடந்துசென்றால், அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க் கொண்டு செல்லட்டும்; அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க்கொண்டு செல்லட்டும்; அதன் முனையைப் பிடித்து (மறைத்து)க்கொண்டு செல்லட்டும்!" என்று (மும்முறை) கூறினார்கள்.
ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களில் சிலர் வேறுசிலரின் முகங்களுக்கெதிரே அம்புகளை உயர்த்திப் பிடிக்காத வரையில் நாங்கள் இறக்கவில்லை.
அத்தியாயம் : 45
5102. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம்முடன் அம்புகள் இருக்கும் நிலையில் நமது பள்ளிவாசலிலோ அல்லது கடைத்தெருவிலோ நடந்துசென்றால், அவற்றில் எதுவும் முஸ்லிம்களில் ஒருவரைக் காயப்படுத்திவிடாமலிருக்க "அவற்றின் முனைகளைத் தமது கரத்தால் பிடித்து (மறைத்து)க் கொள்ளட்டும்!" அல்லது "அவற்றின் முனைகளை கைக்குள் வைத்துக் கொள்ளட்டும்!"
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 35 ஒரு முஸ்லிமை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்வதற்கு வந்துள்ள தடை.
5103. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள், "ஒருவர் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்தால்,அவர் அதைக் கைவிடும்வரை அவரை வானவர்கள் சபிக்கின்றனர். அவர் உடன்பிறந்த சகோதரராய் இருந்தாலும் சரியே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5104. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பறித்து (சகோதரரைத் தாக்கி)விடக்கூடும். அதனால் நீங்கள் நரகப் படுகுழியில் வீழ்ந்து விடுவீர்கள்.
அத்தியாயம் : 45