5065. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர் களுக்கெதிராக(ச் சாபமிட்டுப்) பிரார்த்தியுங்கள்" என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை. நான் அருளாகவே அனுப்பப்பெற்றுள்ளேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 25 நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கெதிராகப் பிரார்த்திக்கவோ ஏசவோ சபிக்கவோ செய்து, அவற்றுக்கு அவர் தகுதியானவராக இல்லாதிருந்தால், அவருக்கு அது பாவப் பரிகாரமாகவும் நற்பலனாகவும் அருளாகவும் மாறிவிடும்.
5066. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் வந்தார்கள்; நபியவர்களிடம் எதைப் பற்றியோ பேசினார்கள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கோபப்படுத்திவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் சபித்து ஏசிவிட்டார்கள்.
அவர்கள் இருவரும் சென்றதும், நான், "அல்லாஹ்வின் தூதரே! நன்மைகளில் எதையேனும் யார் அடைந்துகொண்டாலும், இவ்விருவர் (மட்டும்) அதை அடையப்போவதில்லை" என்று கூறினேன். அதற்கு "அது எதனால்?" என்று நபியவர்கள் கேட்டார்கள். நான், "அவ்விருவரையும் தாங்கள் சபித்தீர்களே? ஏசினீர்களே?" என்று பதிலளித்தேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் என் இறைவனிடம் நிபந்தனையிட்டுக் கூறியுள்ளதை நீ அறியவில்லையா? "இறைவா! நான் ஒரு மனிதனே! நான் முஸ்லிம்களில் ஒருவரைச் சபித்திருந்தால், அல்லது ஏசியிருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் நன்மையாகவும் ஆக்கிவிடுவாயாக" என்று கூறியுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தனியாகப் பேசினர். அப்போது அவ்விருவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏசினார்கள்;சபித்தார்கள். பிறகு அவ்விருவரையும் வெளியேற்றிவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5067. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் முஸ்லிம்களில் எவரையேனும் ஏசியிருந்தால், அல்லது சபித்திருந்தால், அல்லது அடித்திருந்தால் அவற்றை அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிடுவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது.
ஆயினும் அதில், "பாவப்பரிகாரமாகவும், நன்மையாகவும் (மாற்றிடுவாயாக!)" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள் "நன்மையாகவும்" என்பதை அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பிலும், "அருளாகவும்” என்பதை ஜாபிர் (ரலி) அவர்களது அறிவிப்பிலும் இடம்பெறச்செய்துள்ளார்கள்.
அத்தியாயம் : 45
5068. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "இறைவா! நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுக்கிறேன். அதற்கு நீ மாறு செய்யமாட்டாய். (அது) நான் ஒரு மனிதனே. ஆகவே, நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) மனவேதனைப்படுத்தியிருந்தால், ஏசியிருந்தால், சபித்திருந்தால், அடித்திருந்தால், அதையே அவருக்கு அருளாகவும் பாவப்பரிகாரமாகவும் மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("அவரை அடித்திருந்தால்" என்பதைக் குறிக்க) "ஜலத்துஹு" (ஷீóகூóகுøõடூõõ) என்றே இடம்பெற்றுள்ளது. இது அபூஹுரைரா (ரலி) அவர்களின் மொழி வழக்காகும். (ஹதீஸின் மூலத்தில் இருப்பது) "ஜலத்துஹு"(ஷீóகூóகுúஸீõடூõ) என்பதேயாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5069. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! முஹம்மத் ஒரு மனிதரே! (எல்லா) மனிதர்களும் கோபப்படுவதைப் போன்றே அவரும் கோபப்படுவார். நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுத்துள்ளேன். அதற்கு நீ மாறு செய்யமாட்டாய். அதாவது நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது மனவேதனைப் படுத்தியிருந்தால், அல்லது ஏசியிருந்தால்,அல்லது அடித்திருந்தால் அதையே அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் அவருக்கு மறுமை நாளில் உன்னிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாகவும் மாற்றிடுவாயாக!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
அத்தியாயம் : 45
5070. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நான் இறைநம்பிக்கையுள்ள எந்த அடியாரையாவது ஏசியிருந்தால்,அதையே அவருக்கு மறுமைநாளில் உன்னிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மாற்றிவிடுவாயாக!" என்று கூறியதைக் கேட்டுள்ளேன்.
அத்தியாயம் : 45
5071. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நான் உன்னிடம் ஓர் உறுதிமொழி எடுத்துள்ளேன். அதற்கு நீ ஒருபோதும் மாறு செய்யமாட்டாய். அதாவது நான் எந்த இறை நம்பிக்கையாளரையாவது ஏசியிருந்தால், அல்லது அடித்திருந்தால் அதையே அவருக்கு மறுமையில் பாவப்பரிகாரமாக மாற்றி விடுவாயாக!" என்று கூறியதைக் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5072. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் ஒரு மனிதரே. நான் வல்லமையும் மாண்பும் மிக்க என் இறைவனிடம் ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளேன். (அது) நான் முஸ்லிம்களில் ஓர் அடியாரை ஏசியிருந்தால், அல்லது திட்டியிருந்தால், அதை அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் நன்மையாகவும் மாற்றி விடுவாயாக (என்பதாகும்)" என்று கூறியதைக் கேட்டுள்ளேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5073. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் அநாதைச் சிறுமி ஒருத்தி இருந்தாள். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தச் சிறுமியைப் பார்த்துவிட்டு, "நீயா அது? மிகவும் பெரியவளாகிவிட்டாயே! உன் வயது அதிகரிக்காமல் போகட்டும்!" என்று கூறினார்கள். அந்த அநாதைச் சிறுமி அழுதுகொண்டே உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் திரும்பிச் சென்றாள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "மகளே! உனக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுமி, "நபி (ஸல்) அவர்கள் என் வயது அதிகரிக்காமல் போகட்டும் என எனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டார்கள். இனி ஒருபோதும் என் வயது அதிகமாகாது?" என்று கூறினாள்.
உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தமது முக்காட்டுத் துணியை தலையில் சுற்றிக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மு சுலைமே! உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் நபியே! என்னிடமிருக்கும் அநாதைச் சிறுமிக்கெதிராகத் தாங்கள் பிரார்த்தித்தீர்களா?" என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "என்ன விஷயம், உம்மு சுலைமே?" என்று கேட்டார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "அவளுடைய வயது அதிகரிக்காமல் போகட்டும். அவளுடைய ஆயுள் கூடாமல் போகட்டும் எனத் தாங்கள் பிரார்த்தித்ததாக அச்சிறுமி கூறினாள்" என்றார்கள். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.
பிறகு, "உம்மு சுலைமே! நான் என் இறைவனிடம் முன்வைத்துள்ள நிபந்தனையை நீ அறிவாயா? நான் என் இறைவனிடம், "நான் ஒரு மனிதனே! எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியடைவதைப் போன்று நானும் மகிழ்ச்சியடைகிறேன். எல்லா மனிதர்களும் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்படுகிறேன். ஆகவே, நான் என் சமுதாயத்தாரில் யாரேனும் ஒருவருக்கெதிராகப் பிரார்த்தித்து அதற்கு அவர் தகுதியானவராக இல்லாதிருந்தால்,அப்பிரார்த்தனையையே அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் மறுமை நாளில் இறைவனிடம் நெருக்கமாக்கும் அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!" என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூமஅன் அர்ரகாஷீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (அநாதைச் சிறுமி என்று வரும்) மூன்று இடங்களிலும் (அதைக் குறிக்க "யதீமா” எனும் சொல்லுக்குப் பகரமாக) "யுதய்யிமா” எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. (பொருள்: மிகச்சிறிய அநாதைச் சிறுமி.)
அத்தியாயம் : 45
5074. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே நான் (ஓடிச் சென்று) ஒரு கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (செல்லமாக) என் தோள்களுக்கிடையே ஒரு தட்டு தட்டிவிட்டு, "நீ போய் முஆவியா (பின் அபீசுஃப்யான்) அவர்களை என்னிடம் வரச்சொல்" என்று கூறினார்கள். (அவர் நபி (ஸல்) அவர்களின் எழுத்தராக இருந்தார்.)
அவ்வாறே நான் சென்றுவிட்டு வந்து, "அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்" என்று சொன்னேன். பிறகு (மீண்டும்) என்னிடம், "நீ போய் முஆவியா அவர்களை என்னிடம் வரச் சொல்" என்று கூறினார்கள். மீண்டும் நான் சென்றுவிட்டு வந்து, "அவர் (இன்னும்) சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்" என்று சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ், அவருடைய வயிறை நிரப்பாமல் விடட்டும்!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) உமய்யா பின் காலித் (ரஹ்) அவர்களிடம், (ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) "ஹத்தஅனீ” எனும் சொல்லுக்கு என்ன பொருள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "என் பின்தலையில் ஒரு தட்டு தட்டினார்கள்" என்பது பொருள் என்றார்கள்.
அத்தியாயம் : 45
5075. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் (ஒரு முறை) சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே நான் சென்று ஒளிந்துகொண்டேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 45
பாடம் : 26 இரட்டை முகத்தான் பற்றிய பழிப்புரையும் அவனது செயல் தடை செய்யப் பட்டதாகும் என்பதும்.
5076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் மிகவும் தீயவன், இரட்டை முகம் கொண்டவன் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5077. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மனிதர்களில் மிகவும் தீயவன், இரட்டை முகம் கொண்டவன் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5078. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களிலேயே மிகவும் தீயவனாக இரட்டை முகத்தானைக் காண்பீர்கள். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 27 பொய் தடை செய்யப்பட்டதாகும் என்பதும் பொய்யில் அனுமதிக்கப்பட்டது எது என்பது பற்றிய விளக்கமும்.
5079. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாம் முஹாஜிர்களில் ஒருவரான என் தாயார் உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இருதரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்" என்று கூறுவதை நான் கேட்டேன்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!
1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).
2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.
3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், சாலிஹ் பின் கைசான் அவர்களது அறிவிப்பில், "உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள், "மக்கள் பேசும் பொய்களில் மூன்றைத் தவிர வேறெதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததை நான் கேட்டதில்லை; (மேற்கண்ட) மூன்று விஷயங்களில் தவிர" என்று கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர் நன்மையையே எடுத்துரைக்கிறார்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 45
பாடம் : 28 கோள் சொல்வது தடை செய்யப்பட்டதாகும்.
5080. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "அல்அள்ஹு" (பொய், அவதூறு) என்றால் என்னவென்று உங்களுக்கு நான் அறிவிக்க வேண்டாமா?" என்று கேட்டுவிட்டு, "அது மக்களிடையே கோள் சொல்வதாகும்" என்று கூறினார்கள். மேலும், "ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் "ஸித்தீக்" (மாபெரும் வாய்மையாளர்) எனப் பதிவு செய்யப்படுவார். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் "பெரும் பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்" என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 29 பொய் அருவருப்பானது; உண்மை அழகானது என்பதும், உண்மையின் சிறப்பும்.
5081. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மை, நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் "வாய்மையாளர்" (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்படுவார். பொய், தீமைக்கு வழி வகுக்கும்;தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் "பெரும் பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5082. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மை என்பது நன்மையாகும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஓர் அடியார் உண்மையைத் தேர்ந்தெடுத்துப் பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அல்லாஹ்விடம் "வாய்மையாளர்" (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். பொய் என்பது தீமையாகும். தீமை நரகநெருப்புக்கு வழிவகுக்கும். ஓர் அடியார் பொய்யைத் தேர்ந்தெடுத்துப் பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் "பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5083. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உண்மையே பேசுங்கள். உண்மை நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார்; அதை தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் "வாய்மையாளர்" (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
பொய் பேசாதீர்கள். பொய் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரக நெருப்புக்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டே இருப்பார்; அதைத் தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் "பொய்யர்" எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தேர்ந்தெடுத்து உண்மையே பேசிவருவார்; தேர்ந்தெடுத்துப் பொய்யே பேசிவருவார்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. இப்னு முஸ்ஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இறுதியில் அவரை அல்லாஹ் ("வாய்மையாளர்" அல்லது "பொய்யர்" எனப்) பதிவு செய்துவிடுகிறான்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 45
பாடம் : 30 கோபத்தின்போது தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்பவரின் சிறப்பும், கோபம் விலக என்ன வழி என்பதும்.
5084. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "உங்களில் "சந்ததியிழந்தவன்" (அர்ரகூப்) என்று யாரைக் கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். "குழந்தைப் பாக்கியமற்றவரையே (நாங்கள் "அர்ரக்கூப்" எனக் கருதுகிறோம்)" என்று பதிலளித்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் சந்ததியிழந்தவன் அல்லன். மாறாக,தம் குழந்தைகளில் எதுவும் (தமக்கு) முன்பே இறக்காதவனே சந்ததியிழந்தவன் ஆவான்" என்று கூறினார்கள்.
பிறகு, "உங்களில் வீரன் என யாரைக் கருதுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நாங்கள், "எவராலும் அடித்து வீழ்த்த முடியாதவனே (வீரன் என நாங்கள் கருதுகிறோம்)" என்று பதிலளித்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் வீரனல்லன். மாறாக, வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே ஆவான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45