5045. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள் ஒரே மனிதனைப் போன்றவர்கள். அவனுக்குத் தலையில் சுகவீனமேற்பட்டால் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டுவிடுகிறது. அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்திருக்கின்றன.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்கள் ஒரே மனிதனைப் போன்றவர்கள். அவனது கண்ணுக்கு நோய் ஏற்பட்டால், உடல் முழுவதும் நோய்வாய்ப்படுகிறது. அவனது தலைக்கு நோய் ஏற்பட்டால், உடல் முழுவதும் நோய் காண்கிறது.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5046. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரையொருவர் ஏசிக்கொள்ளும் இருவரில் முதலில் ஏச ஆரம்பித்தவரையே குற்றம் சாரும்; அநீதிக்குள்ளானவர் வரம்பு மீறாத வரை!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும் தியாகம் செய்ய விரும்புவோர் பற்றிய குறிப்பு.
5047. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை. மன்னிப்பதால் ஓர் அடியாருக்கு அல்லாஹ் கண்ணியத்தையே அதிகப்படுத்துகிறான். அல்லாஹ்வுக்காக ஒருவர் பணிவு காட்டினால் அவரை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5048. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்" என்று பதிலளித்தார்கள்.
அப்போது, "நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 21 அல்லாஹ் ஒருவரது குறையை இவ்வுலகில் மறைத்துவிட்டால், மறுமையிலும் அதை அவன் மறைப்பான் எனும் நற்செய்தி.
5049. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் ஓர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்துவிட்டால், அதை அவன் மறுமை நாளிலும் மறைக்காமல் இருப்பதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5050. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் மற்றோர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்தால், அவருடைய குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்காமல் இருப்பதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 22 அருவருப்பாகப் பேசும் ஒருவரிடமிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்வதற்காக அவரிடம் ஒருவர் கனிவாகப் பேசுவது.
5051. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவரை உள்ளே வரச்சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்" என்று அவரைப் பற்றிச் சொன்னார்கள். (வீட்டுக்கு உள்ளே) அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவதைப் போன்றே) அவரிட(மு)ம் நபி (ஸல்) அவர்கள் கனிவாகப் பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவரைக் குறித்து ஒரு விதமாகச் சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?" என்று கேட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஆயிஷா! அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானவர் யாரெனில், மக்கள் எவரது அருவருப்பான பேச்சுகளிலிருந்து (தம்மைத்) தற்காத்துக் கொள்ள ஒதுங்கிக்கொள்கிறார்களோ அவர்தான். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் (வார்த்தைகளில் சிறிது வேறுபாட்டுடன்) வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 23 நளினத்தின் சிறப்பு.
5052. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5053. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மையை இழந்தவர் ஆவார்.
இதை ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5054. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மைகளை இழந்தவர் ஆவார்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5055. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
5056. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5057. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஆயிஷா (ரலி) அவர்கள் (பயணத்துக்குப் பழக்கப்படாத) முரட்டு சுபாவமுடைய ஒட்டகம் ஒன்றில் ஏறிச்சென்றார்கள். அப்போது அதை விரட்டலானார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆயிஷா!) நளினத்தைக் கையாள்வாயாக" என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 24 கால்நடைகள் முதலியவற்றைச் சபிப்பது தடை செய்யப்பட்டதாகும்.
5058. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்தபோது, அன்சாரிகளில் ஒரு பெண் ஒட்டகமொன்றின்மீது அமர்ந்திருந்தார். அந்த ஒட்டகம் முரண்டு பிடித்தபோது அப்பெண் அ(ந்த ஒட்டகத்)தைச் சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதன் மீதுள்ளவற்றை அகற்றிவிட்டு, அதை விட்டு விடுங்கள். ஏனெனில், அது சாபத்திற்குள்ளானதாகும்" என்று கூறினார்கள்.
அதையடுத்து அந்த ஒட்டகம் மக்களிடையே நடந்து செல்வதையும், அதை எவரும் சீண்டாமலிருந்ததையும் இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5059. மேற்கண்ட ஹதீஸ் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்தச் சாம்பல் நிற ஒட்டகத்தை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது" என்று இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அதன் மீதுள்ளவற்றை அகற்றிவிட்டு அதை வெறுமேனியாக விட்டுவிடுங்கள். ஏனெனில், அது சாபத்துக்குரியதாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5060. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அடிமைப் பெண் ஒட்டகமொன்றின் மீதிருந்த(படி பயணம் செய்துகொண்டிருந்)தார். அதன் மீது மக்களின் பயணச் சாதனங்கள் சில இருந்தன. (முன்னே) சென்றுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களையும் குறுகலான மலை வருவதையும் கண்ட அப்பெண், "ஹல்!" என அந்த ஒட்டகத்தை அதட்டிவிட்டு, "இறைவா! இ(ந்த ஒட்டகத்)தை நீ சபிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "சாபத்தைச் சுமந்துவரும் இந்த ஒட்டகம் நம்முடன் வர வேண்டாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 45
5061. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சாபத்தைச் சுமந்துள்ள எந்த வாகனமும் நம்முடன் வரவேண்டாம் என்றோ, அல்லது இதைப் போன்றோ கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5062. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு வாய்மையாளர் அதிகமாகச் சாபமிடுபவராக இருப்பது தகாது" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5063. ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் மலிக் பின் மர்வான் (தம் விருந்தினராக வந்திருந்த நபித்தோழியரில் ஒருவரான) உம்முத் தர்தா (ரலி) அவர்களுக்குத் தம் சார்பாக வீட்டு அலங்காரப் பொருட்களை அனுப்பிவைத்தார். (உம்முத் தர்தா (ரலி) அவர்களைத் தம் மனைவியரின் இல்லத்திற்கு வரவழைத்து அவரிடம் நபிமொழிகளைக் கேட்பார்.)
ஒரு நாள் இரவில் அப்துல் மலிக் எழுந்து தம் ஊழியரை அழைத்தார். அவர் தாமதமாக வந்த போது அவரைச் சபித்தார். காலையானதும் அப்துல் மலிக்கிடம் உம்முத் தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு நீங்கள் உங்கள் ஊழியரை அழைத்தபோது, அவரைச் சபிப்பதை நான் செவியுற்றேன். (என் கணவர்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதிகமாகச் சபிப்பவர்கள் மறுமை நாளில் பரிந்துரைப்பவர்களாகவோ சாட்சியமளிப்பவர்களாகவோ இருக்கமாட்டார்கள்" எனக் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5064. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அதிகமாகச் சபிப்பவர்கள் மறுமை நாளில் சாட்சியமளிப்பவர்களாகவோ பரிந்துரைப்பவர்களாகவோ இருக்கமாட்டார்கள்.
இதை அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45