பாடம் : 46 பெண் குழந்தைகளுக்கு நன்மை செய்வதன் சிறப்பு.
5125. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் என்னிடம் (ஏதேனும் தரும்படி) கேட்டு வந்தார். அவருடன் அவருடைய இரு பெண் குழந்தைகளும் இருந்தனர். அப்போது அவருக்கு(க் கொடுக்க) என்னிடம் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதை வாங்கி, அதை இரண்டாகப் பிட்டு குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டார். அதிலிருந்து சிறிதளவும் அவர் சாப்பிடவில்லை.
பிறகு அவரும் அவருடைய குழந்தைகளும் எழுந்து சென்றுவிட்டனர். பின்னர் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, அந்தப் பெண்ணைப் பற்றிய செய்தியை அவர்களிடம் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "யார் இப்பெண் குழந்தைகளில் ஒன்றின் மூலம் சோதிக்கப்பட்டபோதும் அவர்களுக்கு நன்மை புரிவாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5126. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் ஏழைப்பெண் தன்னுடைய இரு பெண்குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு என்னிடம் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். உடனே அவர் தம் குழந்தைகளில் ஆளுக்கொரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுவதற்காக வாயருகில் கொண்டுசென்றார்.
அந்த ஒரு பேரீச்சம் பழத்தையும் அக்குழந்தைகள் கேட்டனர். உடனே அப்பெண் தாம் சாப்பிட நாடியிருந்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரண்டாகப் பிட்டு அவ்விரு குழந்தைகளிடையே பங்கிட்டுக் கொடுத்துவிட்டார். அவருடைய நிலை என்னை ஆச்சரியப்படுத்தியது.
ஆகவே, அவர் செய்ததை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருடைய இச்செயலின் காரணத்தால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான்". அல்லது "அவரது இச்செயலின் காரணத்தால் அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 45
5127. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்" என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 47 தமது குழந்தை இறந்தும் நன்மையை எதிர்பார்(த்துப் பொறுமை கா)ப்பவரின் சிறப்பு.
5128. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமுடைய பிள்ளைகளில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்துபோனால், அந்த மனிதரை நரகம் தீண்டாது; ("உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது" என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்த மனிதர் நரகத்தில் நுழையமாட்டார்; ("உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது" என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5129. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிப் பெண்களிடம், "உங்களில் ஒருவருடைய மூன்று பிள்ளைகள் (பருவ வயதை அடைவதற்குமுன்) இறந்தும் அப்பெண் நன்மையை எதிர்பார்(த்து பொறுமை கா)த்தால்,அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள்.
அப்போது அப்பெண்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! இரு பிள்ளைகள் இறந்தாலுமா?" என்று கேட்டார். "இரு பிள்ளைகள் இறந்தாலும்தான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 45
5130. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே (அந்த வாய்ப்புகளைத்) தட்டிச் சென்றுவிடுகின்றனர். ஆகவே,எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயம் செய்யுங்கள். அந்நாளில் நாங்கள் தங்களிடம் வருகிறோம். அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள்" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ன இன்ன நாளில் நீங்கள் ஒன்று கூடுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்றுகூடினர். அந்த நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் சென்று தமக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அப்பெண்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.
(ஒரு நாள்), "உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் பிள்ளைகளில் மூன்று பேரை இழந்துவிடுகிறாரோ அவருக்கு அப்பிள்ளைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது அப்பெண்களில் ஒருவர், "இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா? இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா? இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா?" என்று (மூன்றுமுறை திரும்பத்திரும்பக்) கேட்க, "இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும்தான்; இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும்தான்; இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும் தான்" என்று (மும்முறை) நபியவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 45
5131. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவ்வாறே, அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "பருவ வயதை அடையா மூன்று பிள்ளைகளை" எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5132. அபூஹஸ்ஸான் (முஸ்லிம் பின் அப்தில்லாஹ் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், "என்னுடைய ஆண் குழந்தைகள் இருவர் இறந்துவிட்டனர். நாங்கள் இழந்துவிடும் குழந்தைகள் தொடர்பாக எங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் ஒன்றை எனக்கு நீங்கள் அறிவிக்கக் கூடாதா?" என்று கேட்டேன்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் "ஆம்" என்று கூறிவிட்டு, "குழந்தைகள், சொர்க்கத்தின் நுண்ணுயிர்கள் ஆவர்.அக்குழந்தைகளில் ஒன்று தனது தந்தையை, அல்லது பெற்றோரைச் சந்திக்கும்போது அவரது ஆடையை, அல்லது அவரது கையைப் பிடித்துக்கொள்ளும். -(அபூஹஸ்ஸானே!) நான் உங்களுடைய இந்த ஆடையின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று- பிறகு தன்னையும் தன் பெற்றோரையும் அல்லாஹ் சொர்க்கத்திற்குள் நுழைவிக்கும்வரை விடாது; அல்லது விலகாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் சுவைத் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நாங்கள் இழந்துவிடும் குழந்தைகள் தொடர்பாக எங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஏதேனும் செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் "ஆம் என்றார்கள்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5133. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தன் குழந்தையுடன் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (உடல் நலமில்லாத) இந்தக் குழந்தைக்காகப் பிரார்த்தியுங்கள். (இதற்குமுன்) நான் மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டேன்" என்று கூறினார். "மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டாயா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண், "ஆம்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நரக நெருப்பிலிருந்து (உன்னைக் காக்க) நீ பலமான வேலி அமைத்துக்கொண்டுவிட்டாய்" என்று சொன்னார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5134. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி தன்னுடைய ஆண் குழந்தையுடன் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இவன் உடல் நலிவுற்றுள்ளான். இவனுக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன். (இதற்கு முன்) நான் மூன்று குழந்தைகளை நல்லடக்கம் செய்துவிட்டேன்" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "நரக நெருப்பிலிருந்து (உன்னைக் காக்க) நீ பலமான வேலி அமைத்துக்கொண்டுவிட்டாய்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 48 அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும் போது, அவர்மீது தன் அடியார்களுக்கும் நேசத்தை ஏற்படுத்துகிறான்.
5135. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, "நான் இன்ன மனிதரை நேசிக்கிறேன். நீரும் நேசிப்பீராக" என்று கூறுகின்றான். ஆகவே, ஜிப்ரீல் (அலை) அவர்களும் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்தில், "அல்லாஹ் இன்ன மனிதரை நேசிக்கிறான். ஆகவே, நீங்களும் அவரை நேசியுங்கள்" என்று அறிவிப்பார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு பூமியில் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
அவ்வாறே, அல்லாஹ் ஓர் அடியார்மீது கோபம் கொள்ளும்போது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, "நான் இன்ன மனிதர்மீது கோபம் கொண்டுள்ளேன். நீரும் அவர்மீது கோபம் கொள்வீராக" என்று கூறுகின்றான். ஆகவே, ஜிப்ரீல் (அலை) அவர்களும் அவர்மீது கோபம் கொள்கிறார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள்,விண்ணகத்தாரிடையே, "அல்லாஹ் இன்ன மனிதர்மீது கோபம் கொண்டுள்ளான். ஆகவே, நீங்களும் அவர்மீது கோபம் கொள்ளுங்கள்" என்று அறிவிப்பார். அவ்வாறே விண்ணகத்தாரும் அவர்மீது கோபம் கொள்வார்கள். பிறகு பூமியில் அவர்மீது கோபம் ஏற்படுத்தப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் கோபத்தைப் பற்றிய குறிப்பு இல்லை. (நேசத்தைப் பற்றிய குறிப்பு மட்டுமே இடம்பெற்றுள்ளது.)
அத்தியாயம் : 45
5136. சுஹைல் பின் அபீஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு ஹஜ்ஜின்போது) அரஃபா பெருவெளியில் இருந்தோம். அப்போது (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எங்களைக் கடந்துசென்றார்கள். அவர்கள் (அந்த ஆண்டின்) ஹாஜிகளுக்குத் தலைவராக இருந்தார்கள். அப்போது மக்கள் எழுந்து அவரை உற்றுப் பார்த்தனர்.
நான் என் தந்தை (அபூஸாலிஹ்) அவர்களிடம், "தந்தையே! (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் அவர்களை இறைவன் நேசிப்பதாகவே நான் கருதுகிறேன்" என்று சொன்னேன். என் தந்தை "அது ஏன்?" என்று கேட்டார்கள். நான், "மக்கள் மனதில் அவருக்கிருக்கும் நேசத்தின் அடிப்படையிலேயே (நான் கூறுகிறேன்)" என்றேன்.
அப்போது என் தந்தை, "நீ சொன்னது சரி தான்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று கூறிவிட்டு மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 49 உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவையாகும்.
5137. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவையாகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் நேசிக்கின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (எதிராகி)விடுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5138. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மனிதர்கள் வெள்ளி மூலகங்களையும் பொன் மூலகங்களையும் போன்றவர்கள். அறியாமைக்காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களே; மார்க்க அறிவைப் பெற்றுக்கொண்டால். உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை (உடலுக்குள் வந்த பின்பு) பரஸ்பரம் நேசிக்கின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (எதிராகி)விடுகின்றன.
இந்த ஹதீஸை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 50 மனிதன் யார்மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்.
5139. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "மறுமை நாள் எப்போது வரும்?" என்று கேட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்துவைத்திருக்கிறாய்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நேசம் வைத்துள்ளேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) இருப்பாய்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 45
5140. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?" என்று கேட்டார்கள். அம்மனிதர் (தாம் புரிந்துள்ள நற்செயல்கள்) எதையும் பெரிய அளவில் கூறவில்லை. அவர், "நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) இருப்பாய்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. ஆயினும் அவற்றில், "நான் என்னை மெச்சிக்கொள்ளும் அளவுக்கு அதிகமான நற்செயல்கள் எதையும் தயார் செய்துவைக்கவில்லை" என்று அம்மனிதர் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5141. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மறுமைக்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்துவைத்திருக்கிறாய்?" என்று கேட்டார்கள். அவர், "அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்மீதும் கொண்ட அன்பை" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால், நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பாய்" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால், நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமை யில்) நீ இருப்பாய்" என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். இதைப் போன்று நாங்கள் இஸ்லாத்தைத் தழுவியபின் வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
ஆகவே, நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன்தான் நான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களுடைய நற்செயல்கள் அளவுக்கு நான் நற்செயல்கள் புரியாவிட்டாலும் சரியே!
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஆகவே, நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்... நேசிக்கிறேன்" என்பதும் அதற்குப் பின்னுள்ளதும் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 45
5142. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது பள்ளிவாசலின் முற்றத்தின் அருகில் ஒரு மனிதரைச் சந்தித்தோம். அவர், "அல்லாஹ்வின் தூதரே! மறுமை எப்போது வரும்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதற்காக நீ (முன்னேற்பாடாக) என்ன (நற்செயல்களைத்) தயார் செய்துவைத்துள்ளாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் (பதிலளிக்காமல்) அடங்கிப் போனவரைப் போன்றிருந்தார்.
பிறகு, "அல்லாஹ்வின் தூதரே! அதற்காக நான் பெரிதாகத் தொழுகையையோ நோன்பையோ தானதர்மங்களையோ முன்னேற்பாடாகச் செய்துவைக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பாய்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5143. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (நன்)மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் தகுதியிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மனிதன் யார்மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன்தான் இருப்பான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் வாயிலாகவும் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 45
பாடம் : 51 நல்ல மனிதருக்குக் கிடைக்கும் பாராட்டு நற்செய்தியே; அதனால் அவருக்கு எந்தப் பாதிப்புமில்லை.
5144. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "ஒரு மனிதர் நற்செயல் புரிகிறார். அதற்காக அவரை மக்கள் பாராட்டிப் பேசுகின்றனர். இதைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது இறைநம்பிக்கையாளருக்கு முன் கூட்டியே வரும் நற்செய்தியாகும்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து வரும் அனைத்து அறிவிப்புகளிலும் (அப்துஸ் ஸமத் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பைத் தவிர), "அதற்காக அவரை மக்கள் நேசிக்கின்றனர்" என்று காணப்படுகிறது.
அப்துஸ் ஸமத் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸ் உள்ளதைப் போன்றே, "அதற்காக அவரை மக்கள் பாராட்டுகின்றனர்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45