4827. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். என் தோழியர் என்னிடம் (விளையாட) வருவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் என் தோழியர் (பயந்துபோய்) ஒளிந்துகொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை (என்னுடன் சேர்ந்து விளையாட) என்னிடம் அனுப்பிவைப்பார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் நபி (ஸல்) அவர்களது இல்லத்தில் பொம்மைகள் ("பனாத்")வைத்து விளையாடுவேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4828. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் தங்கும் முறை நாளையே, தம்முடைய அன்பளிப்புகளை (அவர்களுக்கு) வழங்குவதற்காகத் தேர்ந்தெடுத்துவந்தார்கள். அதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உவப்பைப் பெற விரும்பியே அப்படிச் செய்தனர்.
அத்தியாயம் : 44
4829. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியர் நபியவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களை (ஒரு முறை) நபியவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, உள்ளே வர அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னுடன் எனது போர்வைக்குள் படுத்திருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் (உள்ளே வந்து), "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியர் அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) உடைய மகள் (ஆயிஷா) விஷயத்தில் (தாங்கள் அன்பு காட்டுவதைப் போன்றே பிற துணைவியரிடமும் அன்பு காட்டி) நீதியுடன் நடந்து கொள்ளும்படி கேட்டு என்னைத் தங்களிடம் அனுப்பிவைத்துள்ளார்கள்" என்று கூறினார். நான் அமைதியாக இருந்தேன்.
நபி (ஸல்) அவர்கள், "என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிப்பாய் அல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்)" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (என்னைக் காட்டி) "அப்படியானால், இவரை நேசிப்பாயாக" என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டு ஃபாத்திமா (ரலி) அவர்கள் எழுந்து, நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடம் திரும்பிச் சென்று, தாம் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னதையும் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலையும் தெரிவித்தார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்களின் துணைவியர், எங்களுக்கு நீங்கள் எந்த நன்மையும் செய்து விட்டதாக நாங்கள் கருதவில்லை. ஆகவே, (மீண்டும்) நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று, "தங்கள் துணைவியார் அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) உடைய மகள் (ஆயிஷா) விஷயத்தில் நீதியுடன் நடந்துகொள்ளும்படி கேட்கிறார்கள்" என்று கூறுமாறு சொன்னார்கள்.
அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! (இனி) ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பாக நான் நபியவர்களிடம் ஒருபோதும் பேசமாட்டேன்" என்று கூறி (மறுத்து) விட்டார்கள்.
ஆகவே, நபி (ஸல்) அவர்களின் துணைவியர் தங்களில் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள். ஸைனப் அவர்கள்தான் நபியவர்களின் துணைவியரில் நபியவர்களிடம் அந்தஸ்து பெற்றிருந்த விஷயத்தில் எனக்குப் போட்டியாக இருந்தவராவார். மார்க்க ஈடுபாட்டிலும் இறைவனை அஞ்சி நடப்பதிலும் உண்மை பேசுவதிலும் உறவுகளை அனுசரிப்பதிலும் தாராளமாகத் தானம் வழங்குவதிலும் இறைநெருக்கத்தையும் வாய்மையையும் தரும் நற்செயல்களில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்வதிலும் ஸைனப் அவர்களைவிடச் சிறந்த ஒரு பெண்ணை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஆயினும், அவர் விரைவாகக் கோபப்படக்கூடியவராக இருந்தார். அதே வேகத்தில் கோபம் தணியக்கூடியவராகவும் இருந்தார்.
அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் போர்வைக்குள் என்னுடன் இருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம்மிடம் வந்தபோது இருந்த நிலையிலேயே அப்போதும் நபியவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களுக்கு உள்ளேவர அனுமதியளித்தார்கள்.
ஸைனப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) உடைய புதல்வி (ஆயிஷா) விஷயத்தில் (அவரிடம் அன்பு காட்டுவதைப் போன்றே தங்களிடமும் அன்புகாட்டி) நீதியுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டு என்னைத் தங்களிடம் தங்களுடைய துணைவியர் அனுப்பியுள்ளார்கள்" என்று கூறினார்கள்.
பிறகு ஸைனப் என்னை எல்லைமீறி ஏசினார். நான் (அவருக்குப் பதில் சொல்ல) நபி (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கிறார்களா எனக் காத்திருந்தேன். கண் சாடையாவது செய்கிறார்களா என்று எதிர்பார்த்தேன். ஆனால்,ஸைனப் அவர்கள் தொடர்ந்து ஏசிக்கொண்டேபோக அவருக்கு நான் பதிலடி கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வெறுக்கமாட்டார்கள் என நான் அறிந்து கொண்டேன்.
நான் அவருக்குப் பதில் சொல்ல ஆரம்பித்து, அவரை வாயடைக்கச் செய்ய நீண்ட நேரம் பிடிக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தபடியே "இவள் அபூபக்ரின் மகளாயிற்றே!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், அதில் "நான் அவருக்குப் பதில் சொல்ல ஆரம்பித்து, வெகுவிரைவிலேயே அவரை முற்றாக அடக்கிவிட்டேன்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4830. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மரணப் படுக்கையில் இருந்தபோது) என்னிடம் தங்கும் நாள் தள்ளிப்போவதாக எண்ணிக் கொண்டு, "இன்று நான் எங்கிருப்பேன்? நாளை நான் எங்கிருப்பேன்?" என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனது முறைநாளில் எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் காறையெலும்பு(ள்ள பகுதி)க்கும் நடுவில் (அவர்கள் தலை சாய்ந்திருந்த நிலையில்) அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றினான்.
அத்தியாயம் : 44
4831. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பு அவர்கள் என் நெஞ்சின் மீது தம்மைச் சாய்த்தபடி இருக்க,அவர்கள் (வாய்) பக்கம் நான் காது தாழ்த்திக் கேட்டுக் கொண்டிருந்த போது, அவர்கள் "இறைவா! என்னை மன்னித்து,எனக்குக் கருணை புரிவாயாக! (சொர்க்கத்தில்) என்னை (உயர்ந்த) தோழர்களுடன் சேர்த்தருள்வாயாக" என்று பிரார்த்திப்பதை நான் செவியுற்றேன்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4832. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை" என்று (நபி (ஸல்) அவர்கள் கூறுவதை) நான் செவியுற்று வந்தேன்.
நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்டிக்கொண்டுவிட (கம்மிய, கரகரப்பான குரலில்), "அல்லாஹ்வின் அருள் பெற்ற இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள், நல்லவர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள்தான் மிகச் சிறந்த நண்பர்கள் ஆவர்" (4:69) எனும் இறைவசனத்தைக் கூறுவதை நான் கேட்டேன்.
ஆகவே "இம்மை மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இப்போது அவர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது" என்று நான் எண்ணிக்கொண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4833. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, "சொர்க்கத்தில் தமது இருப்பிடம் காட்டப்பட்டு, பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப் படவில்லை" என்று கூறுவார்கள்.
பிறகு அவர்களுக்கு நோய் கண்டு, அவர்கள் தமது தலையை எனது மடிமீது வைத்திருந்த நிலையில் சிறிது நேரம் மயக்கமுற்றார்கள். பிறகு அவர்களுக்கு மயக்கம் தெளிந்த போது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலைகுத்தி நின்றது. பிறகு, "இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)" என்று சொன்னார்கள். அப்போது நான், "அவர்கள் (இப்போது) நம்முடன் இருப்பதை விரும்பவில்லை; (மறுமைப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டார்கள்)" என்று (மனதிற்குள்) கூறிக்கொண்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, "சொர்க்கத்தில் தமது இருப்பிடம் காட்டப்பட்டுப் பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப் படவில்லை" என்று அவர்கள் கூறிய சொல் இதுதான் என நான் புரிந்துகொண்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேசிய இறுதி வார்த்தை "அல்லாஹும்மர் ரஃபீக்கல் அஃலா" (இறைவா! உயர்ந்த தோழர்களுடன் என்னையும் சேர்த்தருள்) என்பதாகவே இருந்தது.
இதை அறிஞர்கள் பலர் கூடியிருந்த அவையில் சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) ஆகியோர் அறிவித்தனர்.
அத்தியாயம் : 44
4834. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) எனது பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றோம். இரவு நேரப் பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக் கொண்டேவருவார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா என்னிடம், "இன்றிரவு நீங்கள் எனது ஒட்டகத்தில் பயணம் செய்துபாருங்கள்; நான் உங்களது ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்" என்று கேட்டார்கள். நான் "சரி" என்று (சம்மதம்) கூறினேன்.
ஆகவே, நான் ஹஃப்ஸாவின் ஒட்டகத்தில் ஏறிக்கொண்டேன்; ஹஃப்ஸா எனது ஒட்டகத்தில் ஏறிக்கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறிவந்த) எனது ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகமன் (சலாம்) சொன்னார்கள். பிறகு அவருடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
(பயணத்தின் இடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கித் தங்கினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணாமல் அவர்களை நான் தேடினேன். (தன்மான உணர்வினால்) எனக்கு ரோஷம் ஏற்பட்டது. அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் எனது இரு கால்களையும் "இத்கிர்" புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, "இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என்மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்" என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்து கொள்ளத்தான் முடிந்ததே தவிர,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4835. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பானது, (மற்ற) உணவுகளைக் காட்டிலும் "ஸரீத்" (தக்கடி) எனும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4836. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) என்னிடம், "(இதோ வானவர்) ஜிப்ரீல் உனக்கு முகமன் (சலாம்) கூறுகிறார்" என்று சொன்னார்கள். நான் "வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத் துல்லாஹி" (அவர்மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4837. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் என்னிடம்) "ஆயிஷ்! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கின்றார்" என்று சொன்னார்கள். நான் "வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி" (அவர்மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன். நான் பார்க்க முடியாததை அவர்கள் பார்க்கிறார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 14 "உம்மு ஸர்உ" எனும் பெண்ணைப் பற்றிய செய்தி.
4838. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்துகொண்டு ஒவ்வொருவரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடிமறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) உரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர்.
முதலாவது பெண் கூறினார்: என் கணவர் (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும் அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால், (அந்த மலைப் பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை.
இரண்டாவது பெண் கூறினார்: நான் என் கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்றுகூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரது வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங்களைத்தான் கூற வேண்டியதிருக்கும்.
மூன்றாவது பெண் கூறினார்: என் கணவர் மிகவும் உயரமான மனிதர். அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரது காதுக்கு எட்டி)னால் நான் விவாகரத்துச் செய்யப்பட்டு விடுவேன்; (அதே நேரத்தில் அவரைப் பற்றி எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடியாக வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.)
நான்காவது பெண் கூறினார்: என் கணவர் (மக்கா உள்ளிட்ட) "திஹாமா" பகுதியின் இரவு நேரத்தைப் போன்றவர் (இதமானவர்). (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை; கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை; (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை.
ஐந்தாவது பெண் கூறினார்: என் கணவர் (வீட்டுக்குள்) நுழைந்தால், சிறுத்தையாகிவிடுவார். வெளியே போனால் சிங்கமாகிவிடுவார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார்.
ஆறாவது பெண் கூறினார்: என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டுவிடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமல் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக்கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை.
ஏழாவது பெண் கூறினார்: என் கணவர் "விவரமில்லாதவர்" அல்லது "ஆண்மையில்லாதவர்"; சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் உன்னை ஏசுவார். கேலி செய்தால்) உன் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) உன் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார்.
எட்டாவது பெண் கூறினார்: என் கணவர் முகர்வதற்கு மரிக்கொழுந்தைப் போன்று மணக்கக்கூடியவர்; தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர்.
ஒன்பதாவது பெண் கூறினார்: என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்கு சமைத்துப் போட்டு வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிறைத்து வைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்திருப்பவர்.
பத்தாவது பெண் கூறினார்: என் கணவர் செல்வந்தர். எத்துணை பெரும் செல்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும்விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே இருக்கும். (விருந்தினர் வராத சில நாட்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முன்னிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால், தாம் அழிந்தோம் என அவை உறுதி செய்துகொள்ளும்.
பதினொன்றாவது பெண் (அவர்தான் உம்மு ஸர்உ) கூறினார்: என் கணவர் (பெயர்) அபூஸர்உ. அபூஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் புஜங்களைக் கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது "ஷிக்" எனுமிடத்தில்) சிறிய ஆட்டு மந்தையுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரது பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார்.
நான் அவரிடம் (சுதந்திரமாகப்) பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப்பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரை தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவுக்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.
(என் கணவரின் தாயார்) "உம்மு அபீஸர்உ" எத்தகையவர் தெரியுமா? அவரது வீட்டுத் தானியக் களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும். அவரது வீடு விசாலமானதாகவே இருக்கும்.
(என் கணவரின் புதல்வர்) "இப்னு அபீ ஸர்உ" எத்தகையவர் தெரியுமா? அவரது படுக்கை உருவப்பட்ட கோரையைப் போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று மெல்லியதாக) இருக்கும். (கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் சப்பை (இறைச்சி) அவரது வயிறை நிறைத்துவிடும். (அந்த அளவுக்குக் குறைவாக உண்ணுபவர்.)
(என் கணவரின் புதல்வி) பின்த் அபீஸர்உ எத்தகையவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல்வாகு கொண்ட) அவரது ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள்.
(என் கணவர்) அபூஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவர் தெரியுமா? அவள் எங்கள் (இரகசியச்) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருட்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பைகூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்பு மிக்கவள்; தூய்மை விரும்பி.)
(ஒரு நாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) "அபூஸர்உ" வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரு குழந்தைகள் இருந்தன. அந்தக் குழந்தைகள் அவளது இடுப்புக்குக் கீழே (மடியில்) இருந்து இரு மாதுளங்கனிகளைத் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். ஆகவே, (அவளது கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை மணவிலக்குச் செய்துவிட்டு, அவளை மணமுடித்துக் கொண்டார்.
அவருக்குப் பின்னர் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாழ்க்கைப்பட்டேன். அவர் அதி விரைவாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) "கத்து" எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டியொன்றைப் பிடித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது, ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டுவந்தார். ஒவ்வொரு கால்நடையிலிருந்தும் ஒரு ஜோடியை எனக்கு வழங்கினார். "(இவற்றை அறுத்து) உம்மு ஸர்உவே! (நன்றாக) நீயும் சாப்பிடு; உன் தாய் வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு" என்றார்.
(ஆனாலும்) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய அனைத்துப் பொருள்களையும் ஒன்றாய்க் குவித்தாலும், (என் முதல் கணவரான) அபூஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தின் அந்தஸ்தைக் கூட அவை எட்டா.
(ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) (என்னருமைக் கணவரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "(ஆயிஷாவே!) உம்மு ஸர்வுக்கு அபூஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (சிறிதைக் கொடுத்தாலும் சிறப்பாகக் கொடுக்கும் அன்பான கணவராக) இருப்பேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ஏழாவது பெண் "(என் கணவர்) ஆண்மையில்லாதவர்" என்று மட்டும் கூறியதாக இடம் பெற்றுள்ளது; (அல்லது விவரமில்லாதவர் எனும்) ஐயப்பாடு இடம்பெறவில்லை.
(அபூஸர்உவின் புதல்வி குறித்து) "அவள் மேலாடை வெறுமையானவள்; (அவளுடைய கணவரின்) துணைவியரிலேயே மேலானவள்; அவளுடைய சக்களத்தியரை மலடியாக்கி விட்டாள்" என்று காணப்படுகிறது.
(அபூஸர்உவின் பணிப்பெண் குறித்து) "அவள் (உணவுப் பொருட்களை) சேதப்படுத்துவ தில்லை" என்பதைக் குறிக்க ("வலா துனக்கிஸு" என்பதற்குப் பதிலாக) "வலா தன்குஸு மீரத்தனா தன்கீஸா" என்று காணப்படுகிறது.
"(என் இரண்டாம் கணவர்) இறைச்சிக்காக அறுக்கப்படும் ஒவ்வொரு கால்நடையிலிருந்தும் ஒரு ஜோடியை எனக்கு வழங்கினார்" என்று "உம்மு ஸர்உ" கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 15 நபி (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4839. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி, "ஹிஷாம் பின் அல்முஃகீரா கோத்திரத்தார், தங்கள் (உறவினரான அபூ ஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்துவைக்க (என்னிடம்) அனுமதி கோரினர். அவர்களுக்கு நான் அனுமதியளிக்க மாட்டேன். மீண்டும் அவர்களுக்கு நான் அனுமதியளிக்க மாட்டேன். மீண்டும் அவர்களுக்கு நான் அனுமதியளிக்க மாட்டேன். (எத்தனை முறை கேட்டாலும் அனுமதியளிக்க மாட்டேன்.)
அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) மணவிலக்குச் செய்துவிட்டு, அவர்களுடைய மகளை மணமுடித்துக்கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு நான் அனுமதி வழங்கமாட்டேன்). என் மகள் (ஃபாத்திமா),என்னில் ஒரு பகுதியாவார். அவரை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை மனவேதனைப் படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4840. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(என் மகள்) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார்; அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும்.
இதை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4841. அலீ பின் அல்ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (எங்கள் தந்தை) ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட காலத்தில் யஸீத் பின் முஆவியாவைச் சந்தித்துவிட்டு, மதீனாவுக்கு வந்தோம். அங்கு என்னை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் சந்தித்தார்கள்.
அப்போது அவர்கள், "என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித்தர ஆயத்தமாயிருக்கிறேன்)" என்று கேட்டார்கள். நான் அவர்களிடம், "அப்படி ஏதுமில்லை" என்று பதிலளித்தேன்.
மிஸ்வர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாளை என்னிடம் கொடுக்கிறீர்களா? ஏனெனில்,அந்த (பனூ உமய்யா) கூட்டத்தார் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடமிருந்து அந்த வாளைப் பறித்துக்கொள்வார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை என்னிடம் கொடுத்தால் என் உயிர் போகும்வரை ஒருபோதும் அது அவர்களிடம் போய்ச் சேராது" என்று கூறினார்கள். (பிறகு பின்வரும் சம்பவத்தை விவரிக்கலானார்கள்:)
ஃபாத்திமா (ரலி) அவர்கள் (தம் துணைவியாக) இருக்கும்போதே, அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அபூஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காதுக்கு எட்டிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அது குறித்து மக்களிடம் தமது இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை நான் செவியுற்றேன். -அப்போது நான் பருவவயதை அடைந்து விட்டிருந்தேன்.-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் மகள்) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தனது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம்முடைய மருமகன் ஒருவரை ("அபுல்ஆஸ் பின் ரபீஆ") பற்றிக் குறிப்பிட்டார்கள்; அவர் (அவருடைய மாமனாரான) தம்முடன் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைப் பாராட்டினார்கள்: அப்போது அவர்கள், "அவர் என்னிடம் பேசினார். (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார்; அதை எனக்கு நிறைவேற்றித்தந்தார்.
மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றை தடை செய்யக்கூடியவன் அல்லன்; தடை செய்யப் பட்ட ஒன்றை அனுமதிக்கக்கூடியவனும் அல்லன். (அலீ இரண்டாவது பெண்ணை மணந்து கொள்வதை நான் தடுக்க முடியாது.)
ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதரின் மகளும் இறை விரோதியின் (அபூ ஜஹ்லின்) மகளும் ஒரே இடத்தில் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒருபோதும் ஒன்றுசேர முடியாது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4842. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம்மிடம் (மனைவியாக) இருக்கவே, அபூஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்துகொள்ள)ப் பெண் பேசினார்கள்.
அதைப் பற்றிக் கேள்விப்பட்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "(தந்தையே!) நீங்கள் உங்களுடைய புதல்வியருக்காக (அவர்கள் மனவேதனைக்கு உள்ளாக்கப்படும்போது) கோபப்படமாட்டீர்கள் என்று உங்கள் சமுதாயத்தார் பேசிக்கொள்கின்றனர். இதோ (உங்கள் மருமகன்) அலீ அபூஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்" என்று சொன்னார்கள்.
இதையொட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்ற) எழுந்தார்கள்.
அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி (இறைவனைப் புகழ்ந்து)விட்டு, "இறைவாழ்த்துக்குப் பின்! (என் மூத்த மகள் ஸைனபை) அபுல்ஆஸ் பின் அர்ரபீஉக்கு நான் மணமுடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தம் மனைவியை மதீனாவுக்கு அனுப்பிவைப்பதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்துகொண்டார். முஹம்மதின் மகள் ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். (அபூஜஹ்லின் குடும்பத்தாராகிய) அவர்கள் என் மகளை (அவருடைய மார்க்க விஷயத்தில்) குழப்பிவிடுவதையே நான் வெறுக்கிறேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் (அவரது மணபந்தத்தில்) ஒருபோதும் ஒன்றுசேர முடியாது" என்று கூறியதை நான் கேட்டேன்.
பிறகு அலீ (ரலி) அவர்கள் (அபூஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை (தொடராமல்) விட்டு விட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4843. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மரணப்படுக்கையில் இருந்தபோது) தம் புதல்வி ஃபாத்திமாவை அழைத்து,அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டு ஃபாத்திமா அழுதார். மீண்டும் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். (அதைக் கேட்டவுடன்) ஃபாத்திமா சிரித்தார்.
நான் ஃபாத்திமாவிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் ஏதோ இரகசியமாகச் சொல்ல, அதைக் கேட்டு நீங்கள் அழுதீர்கள். பிறகு உங்களிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அப்போது நீங்கள் சிரித்தீர்களே,அது என்ன?" என்று கேட்டேன்.
அதற்கு ஃபாத்திமா, "என்னிடம் இரகசியமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த நோயிலேயே) தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். ஆகவே, நான் அழுதேன். பிறகு அவர்களின் குடும்பத்தாரில் முதலாவதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நான்தான் என்று இரகசியமாகச் சொன்னார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4844. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்கூட விடுபடாமல் அனைவரும் நபி (ஸல்) அவர்(களின் இறப்பு நெருங்கியபோது அவர்)களுக்கு அருகில் இருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்கள் நடந்துவந்தார்கள். அவரது நடை சிறிதும் பிசகாமல் அப்படியே நபி (ஸல்) அவர்களின் நடையைப் போன்றே இருந்தது.
ஃபாத்திமாவைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள், "என் மகளே! வருக!" என்று வரவேற்றார்கள். பிறகு அவரை "தமது வலப் பக்கத்தில்" அல்லது "இடப் பக்கத்தில்" அமர்த்திக்கொண்டார்கள். பிறகு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய பதற்றத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.
அப்போது அவரிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே?" என்று கேட்டேன்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தபோது ஃபாத்திமாவிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன soசொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு ஃபாத்திமா, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை" என்று கூறிவிட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நான், "உங்கள்மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்து நம்பிக்கையுடன் கேட்கிறேன். அந்த இரகசியம் என்னவென்று நீங்கள் சொல்லியே ஆகவேண்டும்" என்றேன். ஃபாத்திமா, "சரி! இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு தெரிவித்தார்:
முதலாவது முறை என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஓரிரு முறை குர்ஆனை ஓதிக்காட்(டி நினைவூட்)டுவார். ஆனால், அவர் இந்த முறை இரண்டு தடவை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடியாக (இவ்வுலகைவிட்டு) சென்றுவிடுவேன்.
ஆகவேதான், உங்கள் முன்னிலையில் நான் அவ்வாறு அழுதேன். எனது பதற்றத்தைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, "ஃபாத்திமா! "இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு" அல்லது "இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு" தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?" என்று இரகசியமாகக் கேட்டார்கள். ஆகவேதான், உங்கள் முன்னிலையில் அவ்வாறு சிரித்தேன்.
அத்தியாயம் : 44
4845. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்கூட விடுபடாமல் (நாங்கள்) அனைவரும் (நபி (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிக்கொண்டிருந்தபோது) அவர்களுக்கு அருகில் இருந்தோம்.
அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் (தம் தந்தையை நோக்கி) நடந்துவந்தார். அவரது நடை அப்படியே நபி (ஸல்) அவர்களின் நடையைப் போன்றே இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "வருக! என் மகளே!" என்று அழைத்து,தமக்கு வலப் பக்கத்தில் அல்லது இடப் பக்கத்தில் அமர்த்திக்கொண்டார்கள்.
பிறகு ஃபாத்திமாவிடம் இரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா அழுதார். பிறகு அவரிடம் இரகசியமாக ஏதோ (இன்னொரு விஷயத்தைச்) சொன்னார்கள். அதைக் கேட்டதும் அவர் சிரித்தார். நான் அவரிடம் "ஏன் அழுதீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை" என்று கூறினார்.
அப்போது நான், "இன்றைய தினத்தைப் போன்று துக்கம் அண்டிய ஒரு மகிழ்ச்சியை (எப்போதும்) நான் பார்த்ததில்லை"என்று சொல்லிவிட்டு, அழுதுகொண்டிருந்த அவரிடம், "எங்களை விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ சொன்னார்கள். (அதைக் கேட்டு) பிறகு நீங்கள் அழுகிறீர்களே! (அப்படி) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று (மீண்டும்) கேட்டேன்.
அப்போதும் அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை" என்று கூறிவிட்டார்.
இறுதியில் நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "(வானவர்) ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்துவந்தார். இந்த ஆண்டு மட்டும் என்னை இரு முறை ஓதச் செய்தார். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை நான் கருதுகிறேன். என் குடும்பத்தாரில் என்னை முதலில் வந்தடையப்போவது நீதான். நான் உனக்கு முன்னால் நல்லபடியாக (இவ்வுலகை விட்டு) சென்றுவிடுவேன்" என்று கூறினார்கள். ஆகவே, நான் அழுதேன்.
பிறகு என்னிடம் "இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு" அல்லது "இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு"த் தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா என்று இரகசியமாகக் கேட்டார்கள். அதற்காக நான் சிரித்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 16 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு சலமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4846. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள், "உங்களால் இயன்றால் கடைத்தெருவுக்குள் நுழையும் முதல் ஆளாகவும் அதைவிட்டு வெளியேறும் இறுதி ஆளாகவும் இருக்காதீர்கள். ஏனெனில், கடைத்தெருவே ஷைத்தானின் போர்க்களமாகும். அங்குதான் ஷைத்தான் (முகாமிட்டு) தனது சேனையின் கொடியை நட்டுவைக்கிறான்" என்று கூறினார்கள்.
இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மேலும் (பின்வருமாறும்) எனக்குச் செய்தி எட்டியது:
நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவி) உம்மு சலமா (ரலி) அவர்கள் இருந்தபோது, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு எழுந்து (சென்று)விட்டார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் "இவர் யார் (தெரியுமா)?" என்றோ, அல்லது இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், "இவர் (தங்களுடைய தோழர்) திஹ்யா" என்று பதிலளித்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் ஏதும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டார்கள்.)
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள், நாங்கள் பேசிக்கொண்ட விஷயம் குறித்து (மக்களிடையே) நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை அ(ப்போது வந்த)வர் திஹ்யா (ரலி) அவர்கள்தான் என்றே நினைத்திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த வானவர் ஜிப்ரீல் என்று நான் விளங்கிக்கொண்டேன்.)
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (இந்தச் செய்தியை எனக்கு அறிவித்த) அபூஉஸ்மான் (ரஹ்) அவர்களிடம், "இந்த ஹதீஸைத் தாங்கள் யாரிடமிருந்து செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அவர்கள், "உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44