பாடம் : 9 நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தாரின் சிறப்புகள்.
4807. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் ஒட்டகச் சேணத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கறுப்புநிற கம்பளிப் போர்வை அணிந்து கொண்டு புறப்பட்டார்கள். அப்போது (அவர்களுடைய பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை (தமது போர்வைக்குள்) நுழைத்துக்கொண்டார்கள்;பிறகு ஹுசைன் (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களும் (போர்வைக்குள்) நபி (ஸல்) அவர்களுடன் நுழைந்துகொண்டார்கள்; பிறகு (மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தபோது, அவர்களையும் (போர்வைக்குள்) நுழைத்துக்கொண்டார்கள். பிறகு (மருமகனும் தமது வீட்டில் வளர்ந்தவருமான) அலீ (ரலி) அவர்கள் வந்தபோது அவர்களையும் போர்வைக்குள் நுழைத்துக்கொண்டார்கள்.
பிறகு, "இவ்வீட்டாராகிய உங்களைவிட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் விரும்புகிறான்" (33:33) எனும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 10 ஸைத் பின் ஹாரிஸா (ரலி), உசாமா பின் ஸைத் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4808. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள்; அதுவே அல்லாஹ்விடம் நீதியானது" (33:5) எனும் இறைவசனம் அருளப்படும்வரை, நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வளர்க்கப்பட்ட) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை, ஸைத் பின் முஹம்மத் (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4809. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி (ஷாம் நாட்டுக்கு) ஒரு படைப்பிரிவை அனுப்பினார்கள். மக்களில் சிலர் (இளம் வயதைக் காரணம் காட்டி) உசாமா (ரலி) அவர்களின் தலைமையைக் குறை கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) நின்று, "(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதல்ல.) இதற்கு முன்பு (மூத்தா போரின்போது) இவருடைய தந்தை (ஸைத்-ரலி)யின் தலைமையையும்தான் நீங்கள் குறை கூறிக்கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராகவும் இருந்தார். அவருக்குப்பின் மக்களிலேயே இவர் (உசாமா) என் அன்புக்குரியவர் ஆவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4810. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்தபடி, "(இப்போது) இவரது தலைமையைக் குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதல்ல!) இவருக்குமுன் இவருடைய தந்தை (ஸைத்) அவர்களின் தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் அதற்குத் தகுதியானவராகவே இருந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! இவரும் அதற்குத் தகுதியானவரே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்குப்பின் (அவருடைய புதல்வரான) இவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார். இவர் தொடர்பாக உங்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன். ஏனெனில், இவர் உங்களில் தகுதியானவர்களில் ஒருவராவார்" என்று உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைக் குறித்துக் கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 11 அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4811. அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள், "நானும் நீங்களும் இப்னு அப்பாஸும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவர்கள் ஒரு பயணத்தை முடித்துத் திரும்பியபோது) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "ஆம்" என்றார்கள். அப்போது (அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸையும்) வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்கள்; உங்களை விட்டுவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அபீ முளைக்கா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4812. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தை முடித்துக்கொண்டு (ஊருக்குள்) வரும்போது, அவர்களுடைய குடும்பத்துச் சிறுவர்களால் அவர்கள் எதிர்கொண்டு வரவேற்கப் படுவார்கள். இவ்வாறு ஒருமுறை அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தபோது நான் முந்திக்கொண்டு அவர்களிடம் சென்றேன். உடனே அவர்கள் என்னை (தமது வாகனத்தில்) முன்பக்கத்தில் ஏற்றிக்கொண்டார்கள். பிறகு ஃபாத்திமா (ரலி) அவர்களின் இரு புதல்வர்களில் ஒருவர் அங்கு கொண்டுவரப்பட்டார். அவரைத் தமக்குப் பின்பக்கத்தில் ஏற்றிக்கொண்டார்கள். நாங்கள் மூவரும் ஒரே வாகனத்தில் அமர்ந்தவாறு மதீனாவிற்குள் நுழைந்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4813. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி (ஊருக்குள்) வரும்போது, (அவர்களுடைய குடும்பத்துச் சிறுவர்களான) நாங்கள் அவர்களை எதிர்கொண்டு வரவேற்போம். இவ்வாறு ஒரு முறை நானும் ஹசன் அல்லது ஹுசைன் ஆகியோரில் ஒருவரும் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றபோது, எங்களில் ஒருவரைத் தமக்கு முன்பக்கத்திலும் மற்றொருவரைப் பின்பக்கத்திலும் தமது வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்கள். நாங்கள் (மூவரும் ஒரே வாகனத்தில் அமர்ந்தபடி) மதீனாவிற்குள் நுழைந்தோம்.
அத்தியாயம் : 44
4814. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் ஏற்றிக்கொண்டு ஒரு விஷயத்தை இரகசியமாக என்னிடம் சொன்னார்கள். அதை நான் மக்களில் யாரிடமும் சொல்லமாட்டேன்.
அத்தியாயம் : 44
பாடம் : 12 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4815. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகின் (அன்றைய) பெண்களிலேயே சிறந்தவர் மர்யம் பின்த் இம்ரான் ஆவார். (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா பின்த் குவைலித் ஆவார்.
இதை அலீ (ரலி) அவர்கள் கூஃபா நகரில் குறிப்பிட்டதாக அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூகுரைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதைக் கூறியபோது அறிவிப்பாளர் வகீஉ (ரஹ்) அவர்கள் வானத்தையும் பூமியையும் நோக்கி (இம்மையிலும் மறுமையிலும் சிறந்தவர்) என்று சைகை செய்தார்கள்.
அத்தியாயம் : 44
4816. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களில் பலபேர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் புதல்வி மர்யமையும்,ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. மற்றப் பெண்களை விட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பானது, எல்லா வகை உணவுகளையும்விட "ஸரீத்" (தக்கடி) எனும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4817. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இதோ! கதீஜா தம்முடன் குழம்பு, அல்லது உணவு, அல்லது குடி பானம் உள்ள பாத்திரத்தை எடுத்துக்கொண்டு உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் முகமன் (சலாம்) கூறி, அவருக்குச் சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ காணமுடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "என் தரப்பிலிருந்தும்" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4818. இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களிடம், அவருக்குச் சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று கிடைக்கவிருப்பதாக நற்செய்தி கூறிவந்தார்களா?"என்று கேட்டேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள், "ஆம்; சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ களைப்போ இல்லாத முத்து மாளிகை ஒன்று அவர்களுக்குக் கிடைக்க விருப்பதாக நற்செய்தி சொன்னார்கள்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4819. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கதீஜா பின் குவைலித் (ரலி) அவர்களுக்குச் சொர்க்கத்தில் மாளிகை ஒன்று கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னார்கள்.
அத்தியாயம் : 44
4820. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தன்மான உணர்ச்சியால்) கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் வைராக்கியம் கொண்டதைப் போன்று (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில்) எந்தத் துணைவியரின் மீதும் நான் வைராக்கியம் கொண்டதில்லை. ஏனெனில், கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (அடிக்கடி) நினைவுகூர்வதை நான் கேட்டுவந்தேன்.
-என்னை நபி (ஸல்) அவர்கள் மணம் புரிந்து கொள்வதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே கதீஜா இறந்துவிட்டிருந்தார்.-
மேலும், முத்து மாளிகை ஒன்று சொர்க்கத்தில் கதீஜாவுக்கு கிடைக்கவுள்ளது என்று அவர்களுக்கு நற்செய்தி சொல்லும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் கட்டளையிட்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து (அதன் இறைச்சியில் சிறிதளவை) கதீஜா (ரலி) அவர்களின் தோழியருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனுப்புவார்கள்.
அத்தியாயம் : 44
4821. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கதீஜா (ரலி) அவர்கள்மீது நான் வைராக்கியம் கொண்டதைப் போன்று நபி (ஸல்) அவர்களின் வேறெந்த துணைவியர்மீதும் வைராக்கியம் கொண்டதில்லை. அவர்களை நான் சந்தித்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்தால், "கதீஜாவின் தோழியருக்கு இதைக் கொடுத்தனுப்புங்கள்" என்று கூறுவார்கள்.
ஒரு நாள் நான் வைராக்கியம் கொண்டு, "(பெரிய) கதீஜா!" என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(நான் என்ன செய்ய?) அவர்மீது எனக்கு அன்பு ஏற்படுத்தப்பட்டுவிட்டதே!" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஆட்டை அறுக்கும் செய்தி வரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள விவரங்கள் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4822. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் கதீஜா (ரலி) அவர்கள்மீது வைராக்கியம் கொண்டதைப் போன்று, நபி (ஸல்) அவர்களின் வேறெந்த துணைவியர்மீதும் வைராக்கியம் கொண்டதில்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கதீஜா அவர்களைப் பற்றி அடிக்கடி நினைவு கூர்ந்துவந்தார்கள். ஆனால், நான் கதீஜா அவர்களைப் பார்த்ததே கிடையாது.
அத்தியாயம் : 44
4823. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கதீஜா (ரலி) அவர்கள் இறக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் வேறு யாரையும் மணமுடிக்கவில்லை.
அத்தியாயம் : 44
4824. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கதீஜா (ரலி) அவர்களின் (இறப்புக்குப்பின் அவர்களுடைய) சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வர அனுமதி கேட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கதீஜா அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியால் (உணர்ச்சிவசப்பட்டு) "இறைவா! இவர் ஹாலா பின்த் குவைலித்"என்று கூறினார்கள்.
உடனே நான் ரோஷமடைந்து, "எப்போதோ இறந்துவிட்ட தாடைகள் சிவந்த ஒரு குறைஷி மூதாட்டியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைவுகூர்கிறீர்கள்? அவருக்குப் பதிலாக (பருவத்தாலும் அழகாலும்) அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்துவிட்டானே! (அப்படியிருக்க இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?)" என்று கேட்டேன்.
அத்தியாயம் : 44
பாடம் : 13 ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்பு.
4825. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று இரவுகள் உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். வானவர் ஒருவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் என்னிடம் எடுத்து வந்து, "இவர் உங்கள் மனைவி"என்று கூறுகிறார். அப்போது நான் உன் முக்காட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் "இ(க்கனவான)து அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதை அல்லாஹ் நனவாக்குவான்" என்று கூறலானேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4826. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எப்போது நீ என்மீது திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என்மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று நான் நன்றாக அறிந்துவைத்துள்ளேன்" என்று சொன்னார்கள்.
அதற்கு நான், "எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "என்மீது நீ திருப்தியுடன் இருக்கும் போது (நீ பேசினால்), "இல்லை; முஹம்மதின் அதிபதிமீது சத்தியமாக!" என்று கூறுவாய். என்மீது கோபமாய் இருந்தால், "இல்லை; இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதிமீது சத்தியமாக! என்று கூறுவாய்" என்று சொன்னார்கள்.
நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களது பெயரைத்தான் கோபித்துக்கொள்வேன் (தங்கள்மீதன்று)" என்று கூறினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்தள்ளது.
அதில், "இல்லை; இப்ராஹீம் (அலை) அவர்களின் அதிபதிமீது சத்தியமாக!" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44