4787. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின் மாலிக் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்காகவும் (அர்ப்பணிப்பதாகக்) கூறிய தில்லை. ஏனெனில், உஹுதுப் போர் நாளில் "சஅதே! அம்பெய்யுங்கள். என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்" என்று சஅத் (ரலி) அவர்களிடம் கூறலானார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4788. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து ("என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்" என்று) கூறி (போர்புரிய உற்சாக மூட்டி)னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின் போது எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து (அர்ப்பணிப்பதாக)க் கூறினார்கள். இணைவைப்பாளர்களில் ஒருவன் முஸ்லிம்களை (நெருப்பு போல) தாக்கிக் கொண்டிருந்தான். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அம்பெய்யுங்கள். என் தந்தையும் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!" என்று கூறி (உற்சாகமூட்டி)னார்கள்.
நான் முனை பொருத்தப்படாத அம்பொன்றை எடுத்து அவனது விலாப்புறத்தில் தாக்கினேன். அவன் கீழே விழுந்தான். அவனது (ஆடை விலகி) மறைவிடங்கள் வெளியே தெரிந்தன. (எதிரி வீழ்த்தப்பட்டதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள்,தம் கடை வாய்ப்பற்கள் தெரிய சிரித்ததை நான் கண்டேன்.
அத்தியாயம் : 44
4789. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் விஷயத்தில் குர்ஆனின் சில வசனங்கள் அருளப்பெற்றன. (அவை வருமாறு:)
(என் தாயார்) உம்மு சஅத், நான் எனது (இஸ்லாமிய) மார்க்கத்தை நிராகரிக்காத வரை என்னுடன் பேசமாட்டேன்;உண்ணமாட்டேன்; பருகமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டார். மேலும், அவர் "உன் பெற்றோரிடம் நீ நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுறுத்தியுள்ளான் என்று நீ கூறுகிறாய். நான் உன் தாய். நான்தான் இவ்வாறு (மார்க்கத்தைக் கைவிடுமாறு) கட்டளையிடுகிறேன். (அதற்கு நீ கட்டுப்பட வேண்டும்)" என்று கூறினார்.
இவ்வாறு என் தாயார் மூன்று நாட்கள் (உண்ணாமலும் பருகாமலும்) இருந்து பசியால் மயக்கமுற்று விட்டார். அப்போது அவருடைய உமாரா எனப்படும் ஒரு மகன் எழுந்து அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராகப் பிரார்த்தித்தார். அப்போதுதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் குர்ஆனில், "மனிதனுக்கு, அவனுடைய பெற்றோர் குறித்து நாம் அறிவுறுத்தியுள்ளோம்" என்று தொடங்கி, "உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக ஆக்கும்படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே. இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமையோடு நடந்துகொள்" (31:14,15) என்பதுவரையிலான வசனங்களை அருளினான்.
அடுத்து (ஒரு போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரிய அளவில் போர்ச் செல்வங்கள் கிடைத்தன. அவற்றில் வாள் ஒன்றும் இருந்தது. அதை நான் எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இந்த வாளை எனக்குப் போர்ச் செல்வத்தின் சிறப்புப் பரிசாகத் தாருங்கள். எனது நிலை குறித்துத் தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்" என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) "அதை எடுத்த இடத்திலேயே மறுபடியும் வைத்துவிடுவீராக" என்று சொன்னார்கள். நான் சென்று போர்ச்செல்வக் குவியலில் அதை வைக்க முற்பட்டபோது, என் மனம் என்னை இடித்துப் பேசியது. அதை (அங்கு வைக்காமல்) மறுபடியும் நானே எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இதை எனக்குக் கொடுத்துவிடுங்கள்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான குரலில் என்னிடம், "எடுத்த இடத்திலேயே மறுபடியும் அதை வைத்து விடுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களைப் பற்றி (நபியே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்..." (8:1) என்று தொடங்கும் வசனத்தை அருளினான்.
அடுத்து ("விடைபெறும்" ஹஜ்ஜின்போது) நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினேன். அவர்கள் என்னிடம் வந்த போது நான், "என் செல்வங்கள் முழுவதையும் நான் நாடிய விதத்தில் (அறவழியில்) பங்கிட்டுவிட என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் (வேண்டாமென்று) மறுத்துவிட்டார்கள். "அவ்வாறாயின், (அதில்) பாதியையாவது (தர்மம் செய்கிறேன்)?" என்று நான் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். "அவ்வாறாயின், மூன்றில் ஒரு பகுதியை (தர்மம் செய்து விடுகிறேன்)?" என்று கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்(து அரை மனதுடன் சம்மதித்)தார்கள். அதன் பின்னரே மூன்றில் ஒரு பகுதி(யை மரண சாசனம் செய்வது) அனுமதிக்கப்பட்டது.
அடுத்து (ஒரு முறை) நான் அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் சிலர் இருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அவர்கள், "வாரும்! நாங்கள் உமக்கு உண்பதற்கு உணவும் பருகுவதற்கு மதுவும் தருகிறோம்" என்று கூறினர். -இது மது தடை செய்யப்படுவதற்குமுன் நடைபெற்ற நிகழ்வாகும்.- அவ்வாறே நான் ஒரு தோட்டத்திற்கு அவர்களிடம் சென்றேன்.
அங்கு அவர்களுக்கு அருகில் பொரிக்கப்பட்ட ஒட்டக இறைச்சியும் ஒரு தோல் பையில் மதுவும் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து நான் அந்த இறைச்சியை உண்டேன்; (மதுவைப்) பருகினேன்.
அப்போது அவர்களிடையே முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிக(ளின் சிறப்புக)ள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது நான் "அன்சாரிகளைவிட முஹாஜிர்களே சிறந்தவர்கள்" என்று சொன்னேன். அப்போது ஒருவர் ஒட்டகத்தின் தாடையெலும்பு ஒன்றை எடுத்து என்னை அடித்துவிட்டார்; எனது மூக்கில் காயமேற்பத்திவிட்டார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் என் விஷயத்தில் மது தொடர்பாக "இறைநம்பிக்கை கொண்டோரே! மது, சூது, நட்டுவைக்கப்பட்ட (சிலை போன்ற)வை, (குறி பார்க்கும்) அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாகும்" (5:90) என்று தொடங்கும் வசனத்தை அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4790. மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "என் தொடர்பாக நான்கு இறைவசனங்கள் அருளப்பெற்றன..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. இவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மக்கள் என் தாயாருக்கு உணவளிக்க விரும்பினால், ஒரு குச்சியை அவரது வாய்க்குள் நுழைத்து (அவரை வாய் மூடாமல் தடுத்து) அதில் உணவைப் போடுவார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
மேலும், அவரது அறிவிப்பில், "(விருந்தின் போது கோபமுற்ற அந்த மனிதர்) தாடையெலும்பை எடுத்து எனது மூக்கில் அடித்து மூக்கைக் கிழித்துவிட்டார்" என்று சஅத் (ரலி) அவர்கள் கூறியதாகவும், "சஅத் (ரலி) அவர்களின் மூக்கு பிளவுற்றதாகவே இருந்தது" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4791. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் விஷயத்திலேயே, "(நபியே!) தம் இறைவனின் உவப்பை நாடி காலையிலும், மாலையிலும் அவனை அழைப்பவர்களை நீர் விரட்டாதீர்" (6:52) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
ஆறு பேர் தொடர்பாகவே மேற்கண்ட வசனம் அருளப்பெற்றது. அவர்களில் நானும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அடங்குவோம். இணைவைப்பாளர்(களில் தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டவர்)கள் நபி (ஸல்) அவர்களிடம், "இ(ந்தச் சாமானிய எளிய)வர்களையா நீர் நெருக்கத்தில் வைத்திருக்கிறீர்?" என்று கேட்டனர்.
அத்தியாயம் : 44
4792. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஆறு பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது இணைவைப்பாளர்கள் நபி(ஸல்) அவர்களிடம் "இவர்களை விரட்டிவிடுங்கள்; எங்கள்மீது அவர்களுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிடக் கூடாது" என்று கூறினர். நானும் இப்னு மஸ்ஊதும் ஹுதைல் குலத்தாரில் ஒருவரும் பிலாலும் நான் பெயர் குறிப்பிட (விரும்பா)த இன்னும் இரு மனிதர்களுமே அந்த ஆறு பேர்.
(இணைவைப்பாளர்கள் இவ்வாறு கூறியதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மனதில் (இணைவைப்பாளர்களின் கூற்றுக்கு ஆதரவான) அல்லாஹ் நாடிய ஓர் எண்ணம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குள் (அவர்கள் சொல்வது சரியாயிருக்குமோ) என்று நினைத்தார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "(நபியே!) தம் இறைவனின் உவப்பை நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைப்பவர்களை நீர் விரட்டாதீர்..." (6:52) எனும் வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 44
பாடம் : 6 தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4793. தல்ஹா (ரலி) அவர்களும் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இணைவைப்பாளர்களுடன்) போரிட்ட அந்த நாட்களில் ஒன்றில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை.
இதை அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் தல்ஹா (ரலி), சஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4794. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போரின்போது ("இன்றைய இரவில் தனியாகச் சென்று எதிரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என உளவு பார்ப்பதற்கு முன்வருபவர் யார்?" என்று தம் தோழர்களுக்கு) அழைப்பு விடுத்தார்கள். ஸுபைர் (ரலி) அவர்கள் அதற்கு முன்வந்தார்கள். மீண்டும் மக்களிடையே அழைப்பு விடுத்த போது (மீண்டும்) ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களிடையே அழைப்பு விடுத்தபோது அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்களே முன்வந்தார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தனிப்பட்ட) உதவியாளர் ஒருவர் உண்டு; எனது (தனிப்பட்ட) உதவியாளர் ஸுபைர் ஆவார்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4795. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது நானும் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் பெண்களுடன் (அவர்களுக்குப் பாதுகாப்பாக) "ஹஸ்ஸான்" கோட்டையில் இருந்தோம். அப்போது உமர் பின் அபீசலமா ஒருமுறை எனக்காகத் தலையைத் தாழ்த்துவார். நான் (எதிரிகளின் திசையில்) பார்ப்பேன். மறுமுறை நான் தலையைத் தாழ்த்திக்கொள்வேன். உமர் பின் அபீசலமா (எதிரிகளின் திசையில்) பார்ப்பார். என் தந்தை (ஸுபைர்) அவர்கள் குதிரை மீதமர்ந்து பனூ குறைழா (யூதர்களை) நோக்கி ஆயுதத்துடன் கடந்து சென்றபோது, அவர்களை நான் அறிந்துகொண்டேன்.
அப்துல்லாஹ் பின் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:
பின்னர் (ஒரு முறை) அதைப் பற்றி நான் என் தந்தையிடம் பேசியபோது, "அன்பு மகனே! அப்போது என்னை நீ பார்த்தாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். கவனமாகக் கேள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அன்றைய தினம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காகத் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து, "என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணம்" என்று கூறினார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அகழ்ப்போர் தினத்தன்று நானும் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் பெண்கள் - அதாவது நபி (ஸல்) அவர்களின் துணைவியர்- இருந்த கோட்டையில் இருந்தோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அதில் அப்துல்லாஹ் பின் உர்வா (ரஹ்) அவர்கள் தெரிவித்த செய்தி இடம்பெறவில்லை. ஹிஷாம் பின் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே அந்தக் குறிப்பு இடையில் சேர்க்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 44
4796. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி),தல்ஹா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரும் "ஹிரா" மலைமீது இருந்தார்கள். அப்போது அந்தப் பாறை அசைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அமைதியாக இரு. உன்மீது நபியும் ஸித்தீக்கும் ஷஹீது(களு)மே இருக்கின்றனர்" என்று கூறினார்கள். - அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹிரா" மலைமீது இருந்தபோது மலை அசைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹிராவே! அமைதியாக இரு. உன்மீது நபியும் ஸித்தீக்கும் ஷஹீது(களு)மே இருக்கின்றனர்" என்று சொன்னார்கள்.
அப்போது மலைமீது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), தல்ஹா (ரலி),ஸுபைர் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோர் இருந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4797. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! உன் பெற்றோர் "தமக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் செவிசாய்த்தார்கள்" (3:172)என்பதில் அடங்குவர்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அபூபக்ர் (ரலி) அவர்களையும் ஸுபைர் (ரலி) அவர்களையும் கருத்தில் கொண்டே ஆயிஷா (ரலி) அவர்கள் அவ்வாறு கூறினார்கள்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4798. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள் உன் பெற்றோர், "தமக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் செவிசாய்த்தார்கள்" (3:172) எனும் இறை வசனத்தில் அடங்குவர் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 7 அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4799. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு சமுதாயத்துக்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நமது நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் அவர்கள்தான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4800. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யமன் (ஏமன்)வாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்களுக்கு நபிவழியையும் இஸ்லாத்தையும் கற்றுக்கொடுப்பதற்காக எங்களுடன் ஒரு மனிதரை அனுப்பிவையுங்கள்" என்று கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களின் கையைப் பிடித்து, "(இதோ) இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் ஆவார். (இவரை அழைத்துச் செல்லுங்கள்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 44
4801. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நஜ்ரான் (யமன்)வாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நம்பிக்கைக்குரிய மனிதர் ஒருவரை எங்களுடன் அனுப்பிவையுங்கள்" என்று கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம்பகத் தன்மையில் மிகவும் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுடன் நான் உறுதியாக அனுப்புவேன்" என்று சொன்னார்கள். அப்போது மக்களில் பலர் (அந்த "அமீன்" எனும் பெயருடன் அழைப்பாளராய்ச் செல்லும் சிறப்பு தமக்குக் கிட்டாதா என) தலையை உயர்த்தி (பேரார்வம்) காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 8 ஹசன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.
4802. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் (ரலி) அவர்கள் குறித்து, "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4803. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பகல் வேளையில் புறப்பட்டுச் சென்றேன். அவர்கள் என்னுடன் பேசவில்லை; நானும் அவர்களுடன் பேசவில்லை. (மௌனமாக நடந்தோம்.) "பனூ கைனுகா" கடைவீதி வந்தது.
பிறகு அங்கிருந்து திரும்பி (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களின் குடிசைக்கு வந்து, "இங்கே அந்தப் பொடிப் பையன் (அதாவது ஹசன்) இருக்கிறானா? இங்கே அந்தப் பொடிப் பையன் இருக்கிறானா?" என்று கேட்டார்கள்.
ஹசனின் தாயார், அவரை நீராட்டி நறுமண மாலையை அணிவிப்பதற்காகவே தாமதப்படுத்துகிறார் என்றே நாங்கள் எண்ணினோம். நீண்ட நேரம் கடந்திருக்கவில்லை. அதற்குள் குழந்தை (ஹசன்) ஓடிவந்தார். உடனே நபியவர்களும் அவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4804. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் தோள்மீது ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். நபி (ஸல்) அவர்கள், "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக" என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 44
4805. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்களைத் தமது தோள்மீது வைத்துக்கொண்டு, "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக" என்று கூறிக்கொண்டிருந்ததை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4806. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களையும் (அவர்களுடைய பேரர்களான) ஹசன், ஹுசைன் (ரலி) ஆகியோரையும் அவர்களது கறுப்பு வெள்ளைக் கோவேறு கழுதையில் ஏற்றி அழைத்து வந்து, நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தேன். இதோ இவர் (நபிக்கு) முன்பக்கத்திலும் இதோ இவர் (நபிக்கு) பின்பக்கத்திலும் இருந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44