4767. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் தூங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னைச் சொர்க்கத்தில் கண்டேன். அங்கிருந்த மாளிகை ஒன்றின் ஓரத்தில் ஒரு பெண் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருந்தாள். அப்போது நான், "இந்த மாளிகை யாருக்குரியது?" என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), "உமர் பின் அல்கத்தாபுக்குரியது" எனப் பதிலளித்தனர். (அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன்.) உமரின் தன்மான உணர்வு என் நினைவுக்கு வந்தது. உடனே அங்கிருந்து திரும்பிவந்துவிட்டேன்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இ(வ்வாறு அவர்கள் கூறிய)தைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அந்த அவையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அனைவரும் இருந்தோம். பிறகு உமர் (ரலி) அவர்கள், "என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களிடமா நான் தன்மான உணர்வைக் காட்டுவேன், அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4768. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி(ன் வீட்டுக்குள் செல்ல அவர்களி)டம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவியரான) குறைஷிப் பெண்கள் உரத்த குரலில் (குடும்பச் செலவுத் தொகையை உயர்த்தித் தரும்படி கேட்டு) பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தனர்.
உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்ட போது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தம் பர்தாக்களை அணிந்துகொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தவுடன் உமர் (ரலி) அவர்கள் உள்ளே சென்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்களை அல்லாஹ் (வாழ்நாள் முழுவதும்) சிரித்தபடி (மகிழ்ச்சியுடன்) இருக்கச் செய்வானாக" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உமரே!) இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். என்னிடம் (சகஜமாக) இருந்த இவர்கள் உம்முடைய குரலைக் கேட்டதும் அவசர அவசரமாகப் பர்தா அணிந்துகொண்(டு உள்ளே சென்றுவிட்)டார்கள்" என்று சொன்னார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இவர்கள் (எனக்கு அஞ்சுவதைவிட) அதிகமாக அஞ்சத் தாங்கள் தான் தகுதியுடையவர்கள், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறிவிட்டுப் பிறகு, "தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்பெண்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கிறீர்கள்" என்று பதிலளித்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஓர் அகன்ற பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் எதிர்கொண்டால், நீங்கள் வரும் பாதையல்லாத வேறு பாதையில் அவன் சென்றுவிடுவான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அதில், "உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்களுக்கு அருகில் (அவர்களுடைய துணைவியரான) பெண்கள் அவர்களிடம் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அவர்கள் அவசர அவசரமாகப் பர்தா அணிந்து (எழுந்து)கொண்டார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4769. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்களில் அகத்தூண்டல் மூலம் (உண்மைகள்) அறிவிக்கப் பட்டவர்கள் இருந்துள்ளார்கள். என் சமுதாயத்தாரில் அத்தகையவர் யாரேனும் இருந்தால், அவர்களில் உமர் பின் அல்கத்தாப் ஒருவராக இருப்பார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவந்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) "முஹத்தஸூன்" எனும் சொல்லுக்கு "அகத்தூண்டல் மூலம் அறிவிக்கப்பட்டவர்கள்" என்பது பொருளாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4770. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூன்று விஷயங்களில் நான் என் இறைவனுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்.
அவை: 1. மகாமு இப்ராஹீம் விஷயத்தில், 2. பர்தா விஷயத்தில், 3. பத்ருப் போரில் பிடிக்கப்பட்ட கைதிகள் விஷயத்தில்.
அத்தியாயம் : 44
4771. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்தபோது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உபை (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தம் தந்தைக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சட்டையைத் தருமாறு கோரினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவரிடம் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத் தொழுகை)த் தொழுவிக்க எழுந்தார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! (நயவஞ்சகரான) இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப் போகிறீர்கள்!" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான்" என்று கூறிவிட்டு, "(நபியே!) அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரும்! அல்லது அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோராமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்" (9:80) என்று கூறுகின்றான்.
நான் எழுபது தடவையைவிட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்" என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இவர் நயவஞ்சகராயிற்றே!" என்று சொன்னார்கள். இருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் ஒருபோதும் நீர் தொழுகை நடத்தாதீர்! அவரது சமாதி அருகிலும் நிற்காதீர்" (9:84) எனும் வசனத்தை அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ஆகவே, அவர்களுக்காக ஜனாஸாத் தொழுவிப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 3 உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4772. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டில் தமது "தொடைகளிலிருந்து" அல்லது "கணைக்கால்களிலிருந்து" (சற்று துணி) விலகியிருந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்படியே படுத்திருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் அவர்களுக்கு அனுமதியளித்தார்கள்.
அவர்கள் (வந்து) பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கும் உள்ளே வர அனுமதியளித்தார்கள். அப்போதும் அதே நிலையிலேயே (படுத்துக்கொண்டு) இருந்தார்கள். உமர் அவர்களும் (வந்து) பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எழுந்து) உட்கார்ந்து தமது ஆடையை ஒழுங்குபடுத்தினார்கள்.
- (இந்த இடத்தில்) அறிவிப்பாளர் முஹம்மத் பின் அபீஹர்மலா, "(இதுவெல்லாம்) ஒரே நாளில் நடந்தது என நான் சொல்ல (வர)வில்லை" என்று கூறுகிறார்கள்.-
உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் புறப்பட்டுச் சென்றதும் நான், "அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வந்தபோது அவருக்காக நீங்கள் அசைய வில்லை; அவர்களைப் பொருட்படுத்தவில்லை. (சகஜமாகவே இருந்தீர்கள்.) பிறகு உமர் அவர்கள் உள்ளே வந்தார்கள். அப்போதும் நீங்கள் அவர்களுக்காக அசையவில்லை; பொருட்படுத்தவில்லை. பிறகு உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்தபோது (மட்டும்) நீங்கள் (எழுந்து) உட்கார்ந்து உங்கள் ஆடையைச் சரி செய்துகொண்டீர்கள். (ஏன் அவ்வாறு செய்தீர்கள்?)" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவரைக் கண்டு வானவர்கள் நாணம் கொள்கிறார்களோ அவரைக் கண்டு நான் நாணம் கொள்ள வேண்டாமா!" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் பன்னிரெண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4773. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
(ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கம்பளியாடையைப் போர்த்தியபடி தமது விரிப்பில் ஒருக்களித்துப் படுத்திருந்தபோது, அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதே நிலையில் (படுத்துக்கொண்டு) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். அவர்கள் உள்ளே வந்து தமது அலுவலை(ப் பற்றி பேசி) முடித்துக்கொண்டு பிறகு திரும்பிச் சென்றார்கள்.
பிறகு உமர் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதே நிலையில் (படுத்துக்கொண்டே) உமர் (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் உள்ளே வந்து தமது அலுவலை(ப் பற்றி பேசி) முடித்துக்கொண்டு பிறகு திரும்பிச் சென்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு நான் வந்து உள்ளே நுழைய அவர்களிடம் அனுமதி கேட்டேன். உடனே அவர்கள் (எழுந்து) அமர்ந்துகொண்டார்கள். மேலும் (தம் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "உனது ஆடையை எடுத்து நன்கு அணிந்து கொள்" என்று கூறினார்கள். நான் அவர்களிடம் எனது அலுவலை முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றேன்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ர், உமர் ஆகியோருக்காக அசையாத நீங்கள் உஸ்மான் அவர்களுக்காக ஆடிப்போய்விட்டீர்களே!" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உஸ்மான் நாணம் மிகுந்த மனிதர். நான் அதே நிலையில் இருந்துகொண்டு அவருக்கு உள்ளே வர அனுமதியளித்தால், அவர் தமது தேவையை என்னிடம் தெரிவிக்காமலேயே போய்விடுவாரோ என்று நான் அஞ்சினேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- ஆயிஷா (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோர் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டார்கள்..."என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4774. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில், தம்மிடமிருந்த குச்சியைத் தண்ணீரிலும் களிமண்ணிலும் ஊன்றியபடி சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் (வந்து தோட்டத்தின் வாயிற்கதவைத்) திறக்கும்படி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்காகக் கதவைத் திறப்பீராக;அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்வீராக" என்று சொன்னார்கள். (நான் வாயிற்கதவைத் திறந்தேன்.) அங்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு வாயிற்கதவைத் திறந்துவிட்டு,அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னேன்.
பிறகு மற்றொரு மனிதர் (வந்து வாயிற்கதவைத்) திறக்கும்படி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவருக்குக்) கதவைத் திறப்பீராக; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி கூறுவீராக" என்று சொன்னார்கள். நான் சென்று பார்த்தபோது, அங்கு உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு, அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னேன்.
பிறகு இன்னொரு மனிதர் (வந்து கதவைத்) திறக்கும்படி கேட்டார். அப்போது (சாய்ந்து கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எழுந்து நேராக) அமர்ந்து, "அவருக்கு வாயிற்கதவைத் திறப்பீராக; (அவருக்கு) நேரவிருக்கும் துன்பத்தையடுத்து அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி கூறுவீராக" என்று சொன்னார்கள். நான் சென்று (பார்த்தபோது) அங்கு உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
நான் கதவைத் திறந்துவிட்டு, அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக நற்செய்தி சொன்னேன். மேலும்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவருக்குத் துன்பம் நேர விருப்பதாகவும் அதையடுத்து அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாகவும்) கூறியதையும் சொன்னேன்.
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், "இறைவா! எனக்குப் பொறுமையை வழங்குவாயாக!" அல்லது "(எனக்கு நேரவிருக்கும் அத்துன்பத்தின்போது) அல்லாஹ்வே உதவி புரிபவன் ஆவான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டு, அதன் வாசலில் காவலுக்கு நிற்கும்படி என்னைப் பணித்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4775. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் வீட்டில் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்) "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே இன்று (முழுவதும்) இருப்பேன்" என்று சொல்லிக்கொண்டேன். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பக்கம்தான் போனார்கள்" என்று கூறினர்.
நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற திசையில்) அவர்களைப் பின் தொடர்ந்து (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் ("குபா"வுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) "பிஃரு அரீசு"க்குச் சென்று அதன் தலை வாசலில் அமர்ந்தேன். அதன் கதவு பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். உடனே நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (எனும் அத்தோட்டத்திலுள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கணைக்கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விட்டபடி அமர்ந்திருந்தார்கள்.
நான் அவர்களுக்கு முகமன் (சலாம்) சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்) "இன்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிற்காவலனாக இருப்பேன்" என்று சொல்லிக்கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து கதவைத் தள்ளினார்கள். நான் "யார் அது?" என்று கேட்டேன். அவர்கள், "(நான்தான்) அபூபக்ர் (வந்துள்ளேன்)" என்று பதிலளித்தார்கள். உடனே நான் "சற்றுப் பொறுங்கள்"என்று சொல்லிவிட்டு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்று, "அல்லாஹ்வின் தூதரே! இதோ அபூபக்ர் அவர்கள் (வந்து தங்களிடம் உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்" என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்" என்று கூறினார்கள். நான் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கிச் சென்று அவர்களிடம் "உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவிக்கிறார்கள்" என்று சொன்னேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன் கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்துகொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே, தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டு, கணைக்கால்களைத் திறந்துகொண்டார்கள்.
பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்துகொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டு என்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி சொல்லி, விட்டுவிட்டு வந்திருந்தேன். ஆகவே (எனக்குள்), "அல்லாஹ் இன்ன மனிதருக்கு (அதாவது என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச்செய்வான்" என்று சொல்லிக்கொண்டேன்.
அப்போது ஒரு மனிதர் கதவை அசைக்கிறார். நான் "யார் அது?" என்று கேட்டேன். வந்தவர், "(நான்தான்) உமர் பின் அல்கத்தாப் (வந்துள்ளேன்)" என்று சொன்னார். நான் "சற்றுப் பொறுத்திருங்கள்" என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறி, "இதோ, உமர் அவர்கள் வந்து (தங்களிடம் உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்" என்று சொன்னேன். "அவருக்கு அனுமதி தாருங்கள்; அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி கூறுங்கள்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்து விட்டார்கள்; நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்" என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச்சுவரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப் பக்கம் அமர்ந்துகொண்டு தம் இரு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டுக்கொண்டார்கள்.
பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்துகொண்டேன். "அல்லாஹ் இன்ன மனிதருக்கு (என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச் செய்வான்" என்று (முன்பு போலவே எனக்குள்) கூறிக்கொண்டேன்.
அப்போது ஒரு மனிதர் வந்து கதவை அசைத்தார். நான் "யார் அது?" என்று கேட்டேன். அவர், "(நான்தான்) உஸ்மான் பின் அஃப்பான் (வந்திருக்கிறேன்)" என்று பதிலளித்தார். அப்போது நான், "சற்றுப் பொறுங்கள்" என்று சொல்லிவிட்டு,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (உஸ்மான் (ரலி) அவர்கள் வந்திருக்கும்) செய்தியை அறிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்கு அனுமதிகொடுங்கள். அவர் சொர்க்கவாசி என்ற நற்செய்தியை அவரிடம் கூறுங்கள். அத்துடன் அவருக்குத் துன்பம் நேரவிருக்கிறது (என்ற செய்தியையும் சொல்லுங்கள்)" என்று சொன்னார்கள்.
அவ்வாறே நான் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) சென்று அவர்களிடம், "உள்ளே வாருங்கள். உங்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறுகிறார்கள். அத்துடன் உங்களுக்குத் துன்பம் நேரவிருக்கிறது என்ற செய்தியையும் சொன்னார்கள்" என்று கூறினேன்.
அவர்கள் உள்ளே வந்து (பார்த்தபோது) சுற்றுச் சுவர் நிரம்பிவிட்டிருப்பதைக் கண்டார்கள். ஆகவே, மற்றொரு பக்கத்தில் அவர்கள் (மூவருக்கும்) எதிரே அமர்ந்துகொண்டார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும்) ஒரே சுவரில் அடுத்தடுத்து அமர்ந்திருந்த நிலையையும் உஸ்மான் (ரலி) அவர்கள் எதிர் சுவரில் தனியே அமர்ந்திருந்த நிலையையும் (தற்போது) அவர்களின் அடக்கத்தலங்கள் அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நாடி நான் புறப்பட்டேன். அவர்கள் தோட்டங்கள் உள்ள பகுதிக்குச் சென்றுள்ளதாக அறிந்தேன். அவர்களைப் பின்தொடர்ந்து சென்றதில், ஒரு தோட்டத்திற்குள் அவர்கள் சென்றிருப்பதைக் கண்டேன். அங்கு கிணற்றின் சுற்றுச் சுவரில் அமர்ந்து, தம் கணைக்கால்களைத் திறந்து, கிணற்றுக்குள் தொங்க விட்டிருந்தார்கள்" என அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அவர்களின் அடக்கத்தலங்கள் பற்றிய குறிப்பு அதில் இடம்பெறவில்லை.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷரீக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் இந்த இடத்தில்தான் எனக்கு இதை அறிவித்தார்கள்" என்று கூறிவிட்டு, அங்கிருந்த கோட்டையின் ஓர் ஓரத்தைச் சுட்டிக்காட்டினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த ஒரு தோட்டத்துக்குத் தமது (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும், "அவர்கள் மூவருடைய அடக்கத் தலங்கள் இந்த இடத்தில் ஒன்றாக இருப்பதையும் உஸ்மான் (ரலி) அவர்களின் அடக்கத் தலம் தனியாக (மற்றோர் இடத்தில்) அமைந்திருப்பதையும் குறிப்பதாக விளக்கம் கண்டேன்"எனும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 4 அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4776. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "(நபி) மூசாவிடம் (நபி) ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருக்கிறீர்கள். எனினும், எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை" என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (சஅத் (ரலி) அவர்கள் கூறியதாக ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்த) இந்த ஹதீஸை நான் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே நேரடியாகச் செவியுற விரும்பினேன்.
ஆகவே, நான் சஅத் (ரலி) அவர்களைச் சந்தித்து, எனக்கு ஆமிர் (ரஹ்) அவர்கள் அறிவித்த ஹதீஸை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது சஅத் (ரலி) அவர்கள் "நான் இதை (நபியவர்களிடமிருந்து) செவியுற்றேன்" என்று கூறினார்கள். "நீங்கள் இதைச் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அப்போது சஅத் (ரலி) அவர்கள் தம் இரு விரல்களைத் தம் காதுக்குள் வைத்து "ஆம் (நான்தான் செவியுற்றேன்); இல்லாவிட்டால் இவ்விரண்டும் செவிடாகப் போகட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4777. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும்வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், "குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக்கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4778. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் (அலீ (ரலி) அவர்களை விமர்சிக்குமாறு) எனக்கு உத்தரவிட்டார்கள். "நீர் அபுத்துராப் (அலீ) அவர்களை ஏச மறுப்பதற்கு என்ன காரணம்?" என்று முஆவியா (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பார்த்துச் சொன்ன மூன்று விஷயங்களை நான் (இன்றும்) நினைத்துப்பார்க்கிறேன். எனவே, அலீ (ரலி) அவர்களை நான் ஒருபோதும் ஏசமாட்டேன். அந்த மூன்றில் ஒன்று என்னிடம் இருப்பதுகூட, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகம் எனக்குக் கிடைப்பதைவிட மிகவும் உவப்பானதாகும். (அந்த மூன்று விஷயங்கள் வருமாறு:)
1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் எனும்) ஒரு போருக்காகப் புறப்பட்டுச் சென்ற போது, (மதீனாவில்) அலீ (ரலி) அவர்களைத் தம் பிரதிநிதியாக விட்டுச்சென்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! பெண்களையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச்செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இறைத்தூதர்) மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்,) எனக்குப்பின் நபித்துவம் இல்லை" என்று கூறினார்கள்.
2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில், "நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுக்கப்போகிறேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்" என்று கூறினார்கள். (அந்த மனிதர் நாமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில்) நாங்கள் எங்கள் தலையை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால்) உயர்த்திக்காட்டினோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அலீ அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அப்போது அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. அவர்களது கண்ணில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமிழ்ந்து (கண்வலியைக் குணப்படுத்திவிட்டு), கொடியை அவர்களிடம் கொடுத்தார்கள். அவர்களுக்கு அந்தப் போரில் அல்லாஹ் வெற்றியளித்தான்.
3. "வாருங்கள். எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும் அழைப்போம்..." (3:61) எனும் இந்த வசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) ஆகியோரை அழைத்து, "இறைவா! இவர்கள்தான் என் குடும்பத்தார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4779. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில், "நான் (இஸ்லாமியச் சேனையின்) இந்தக் கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார். அவருடைய கரங்களில் அல்லாஹ் (இந்தப் போரில்) வெற்றியை அளிப்பான்" என்று சொன்னார்கள்.
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய நாளைத் தவிர வேறெப்போதும் நான் தலைமைப் பொறுப்பை விரும்பியதில்லை. அதற்காக நான் அழைக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்த்தவனாக நான் தலையை உயர்த்திக்காட்டினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள்.
மேலும், "திரும்பிப் பார்க்காமல் செல்லுங்கள் அல்லாஹ் உங்கள் மூலம் வெற்றியளிப்பான்" என்று சொன்னார்கள்.
உடனே அலீ (ரலி) அவர்கள் சிறிது தூரம் சென்று நின்றுகொண்டு திரும்பிப் பார்க்காமலேயே, "அல்லாஹ்வின் தூதரே! எந்த அடிப்படையில் நான் மக்களுடன் போரிட வேண்டும்?" என்று உரத்த குரலில் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் அவர்கள் உறுதியளிக்கும்வரை அவர்களுடன் போரிடுவீராக. அதற்கு அவர்கள் இணங்கிவிட்டால், உரிய காரணம் இருந்தால் தவிர அவர்கள் உங்களிடமிருந்து தம் உயிர்களையும் உடைமைகளையும் காத்துக்கொள்வார்கள். (மனத்தைப் பொறுத்தவரை) அவர்களது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 44
4780. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளில் "நான் (இஸ்லாமியச் சேனையின்) இந்தக் கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன். அவருடைய கரங்களால் அல்லாஹ் வெற்றியளிப்பான். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றனர்" என்று கூறினார்கள். அந்தக் கொடி தம்மில் யாரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் மூழ்கியிருந்தனர்.
மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அலீ பின் அபீதாலிப் எங்கே?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண் வலி ஏற்பட்டுள்ளது" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்டபோது, அவருடைய கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்.
உடனே அவரது கண் அதற்குமுன் வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போன்று குணமாகி விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள்.
அப்போது அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நம்மைப் போன்று அவர்களது (ஒரே இறைவனை ஏற்றுப் பணிபவர்களாய்) ஆகும்வரை நான் அவர்களுடன் போரிடுவேன்" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் நிதானமாகச் சென்று அவர்களுடைய களத்தில் இறங்குங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து, (அதை அவர்கள் ஏற்கும்பட்சத்தில்) அவர்கள்மீது விதியாகின்ற, இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துரையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள்மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நல்வழியளிப்பது, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் உமக்குக் கிடைப்பதைவிடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4781. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது.
அப்போது அவர்கள் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டேனே!" என்று (வருத்தத்துடன்) கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள்.
எந்த நாளின் காலைப் பொழுதில் கைபரை அல்லாஹ் வெற்றிகொள்ளச்செய்தானோ அதற்கு முந்தைய மாலை நேரம் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாளை "(முஸ்லிம்களின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன்"; அல்லது "ஒரு மனிதர் (முஸ்லிம்களின்) கொடியைப் பிடித்திருப்பார்". "அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்"; அல்லது "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர் நேசிக்கிறார்". அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்" என்று கூறினார்கள்.
நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் (வந்து) எங்களுடன் இருந்தார்கள். அப்போது மக்கள், "இதோ அலீ (வந்துவிட்டார்)" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கொடியை அலீ (ரலி) அவர்களிடமே கொடுத்தார்கள். அவர்களுக்கே அல்லாஹ் வெற்றியளித்தான்.
அத்தியாயம் : 44
4782. யஸீத் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்), உமர் பின் முஸ்லிம் (ரஹ்) ஆகியோரும் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்றோம். நாங்கள் அவர்கள் அருகில் அமர்ந்தபோது, அவர்களிடம், ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "ஸைத் அவர்களே! தாங்கள் பல்வேறு நன்மைகளைச் சந்தித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டுள்ளீர்கள். அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டுள்ளீர்கள். அவர்களுடன் சேர்ந்து அறப்போர்களில் கலந்துகொண்டுள்ளீர்கள். அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளீர்கள். ஸைதே! தாங்கள் பல்வேறு நன்மைகளைச் சந்தித்துள்ளீர்கள். ஸைதே! தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸை எங்களுக்கு அறிவியுங்கள்" என்று கேட்டார்கள்.
அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "என் சகோதரர் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு வயது அதிகமாகிவிட்டது; எனது காலம் கழிந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்ட சில ஹதீஸ்களை நான் மறந்துவிட்டேன். ஆகவே, நான் உங்களுக்கு அறிவிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் அறிவிக்காதவற்றைப் பற்றி என்னிடம் கேட்டு என்னைச் சிரமப்படுத்தாதீர்கள்" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள "கும்மு" எனும் நீர்நிலையருகே எங்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, (இறைவனையும் இறுதி நாளையும்) நினைவூட்டி அறிவுரை கூறினார்கள். பிறகு, "இறைவாழ்த்துக்குப்பின்! மக்களே! கவனியுங்கள். நானும் ஒரு மனிதனே. (என் உயிரைக் கைப்பற்றும்) என் இறைவனின் தூதர் வரும் காலம் நெருங்கிவிட்டது. அவரது அழைப்பை நான் ஏற்றுக்கொள்வேன். நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தை ஏற்று அதைப் பலமாக பற்றிக்கொள்ளுங்கள்" என்று கூறி, அல்லாஹ்வின் வேதத்தின்படி வாழுமாறு தூண்டினார்கள்; அதில் ஆர்வமும் ஊட்டினார்கள்.
பிறகு, "(மற்றொன்று) என் குடும்பத்தார் ஆவர். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்.என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன். என் குடும்பத்தார் விஷயத்தில் (அவர்களுடைய உரிமைகளையும் கண்ணியத்தையும் பேணுமாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் பெயரால் நினைவூட்டுகிறேன்" என்று (மூன்று முறை) கூறினார்கள்.
அப்போது ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "ஸைதே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தார் யார்? நபியவர்களின் துணைவியர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா?" என்று கேட்டார்கள்.
அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "நபியவர்களின் துணைவியரும் அவர்களின் குடும்பத்தாரில் அடங்குவர். ஆயினும், நபியவர்களுக்குப்பின் யாருக்குத் தர்மம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதோ அவர்களே அவர்களுடைய குடும்பத்தார் ஆவர்" என்று கூறினார்கள்.
அதற்கு ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள் "அவர்கள் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், "அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், அகீல் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும்,ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாரும், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் குடும்பத்தாருமே (நபியவர்களின் குடும்பத்தார் ஆவர்)" என்று பதிலளித்தார்கள்.
ஹுஸைன் பின் சப்ரா (ரஹ்) அவர்கள், "தர்மம் பெறுவது இவர்கள் அனைவருக்கும் தடை செய்யப்பட்டுள்ளதா?" என்று கேட்டார்கள். அதற்கு ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "(அவற்றில் ஒன்று) அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நல்வழியும் பேரொளியும் உள்ளது. யார் அதைப் பெற்று அதனைக் கடைப்பிடிக்கிறாரோ அவர் நேர்வழியில் இருப்பார். யார் அதைத் தவறவிடுகிறாரோ அவர் வழிதவறிவிட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4783. மேற்கண்ட ஹதீஸ் யஸீத் பின் ஹய்யான் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்று, "தாங்கள் பல நன்மைகளைக் கண்டுள்ளீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றீர்கள். அவர்களுக்குப் பின்னால் தொழுதுள்ளீர்கள்"என்று கூறினோம்" என ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே தொடர்கிறது.
ஆயினும் அதில், "கவனியுங்கள். நான் உங்களிடையே கனமான இரண்டு பொருட்களை விட்டுச்செல்கிறேன். அவற்றில் ஒன்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதமாகும். அது அல்லாஹ்வின் கயிறாகும். அதைப் பின்பற்றுபவர் நல்வழியில் இருப்பார். அதைக் கைவிடுபவர் தவறான வழியில் இருப்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
மேலும் இதில், "நபியவர்களின் குடும்பத்தார் யார்? அவர்களுடைய துணைவியரா?" என்று நாங்கள் கேட்டோம். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு பெண் ஓர் ஆணுடன் குறிப்பிட்ட சில காலம் (மனைவியாக) இருப்பாள். பின்னர் அவளை அவன் மணவிலக்குச் செய்துவிட்டால், அவள் தன் தந்தையிடமோ அல்லது தன் குடும்பத்தாரிடமோ திரும்பிச் சென்றுவிடுவாள். நபியவர்களுடைய குடும்பத்தார் அவர்களுடைய மூல உறவினரும் அவர்களுக்குப்பின் தர்மம் பெறுவது தடை செய்யப்பட்ட அவர்களுடைய தந்தை வழி உறவினர்களுமே ஆவர் என்று பதிலளித்தார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4784. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் ஹகம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் மதீனாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் என்னை அழைத்து அலீ (ரலி) அவர்களை ஏசுமாறு உத்தரவிட்டார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். அவர் என்னிடம், "நீர் (இதற்கு உடன்படாமல்) மறுப்பதாயிருந்தால், "அல்லாஹ் அபுத் துராபை சபிக்கட்டும்! என்று கூறுவீராக" என்று சொன்னார்.
அதற்கு நான், "(தம் பெயர்களில்) "அபுத் துராப்" (மண்ணின் தந்தை) எனும் பெயரைவிட வேறெந்தப் பெயரும் அலீ (ரலி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை; அப்பெயர் கூறி அழைக்கப்படும்போது அவர்கள் பெரிதும் மகிழ்வார்கள்" என்று சொன்னேன். அதற்கு அந்த ஆளுநர், "அந்தக் கதையை எமக்குச் சொல்வீராக. ஏன் அபுத்துராப் என (அலீ) பெயர் சூட்டப்பெற்றார்?" என்று என்னிடம் கேட்டார்.
நான் பின்வருமாறு பதிலளித்தேன்: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்துக்கு வந்தார்கள். அப்போது (மருமகன்) அலீ அவர்கள் வீட்டில் இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் பெரிய தந்தையின் புதல்வர் (உன் கணவர்) எங்கே?" என்று கேட்டார்கள்.
அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள் "எனக்கும் அவருக்குமிடையே ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. ஆகவே,அவர் கோபித்துக்கொண்டு என்னிடம் மதிய ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் வெளியே சென்றுவிட்டார்" என்று பதிலளித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "அவர் எங்கே என்று பார்" என்று சொன்னார்கள். அவர் (சென்று தேடிவிட்டு) வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறார்" என்று சொன்னார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீயிடம் (பள்ளிவாசலுக்கு) வந்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் தமது மேனியிலிருந்து மேல்துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மண்ணை அவர்களின் உடலிலிருந்து துடைத்துக்கொண்டே, "அபுத்துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள். அபுத்துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள்"என்று (இரண்டு முறை) கூறினார்கள்.
அத்தியாயம் : 44
பாடம் : 5 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சிறப்பு.
4785. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு வந்த புதிதில்) ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர் (ஒரு நாள்), "இரவில் என்னைக் காவல் காப்பதற்கு என் தோழர்களில் தகுதியான ஒருவர் வேண்டுமே?" என்று கூறினார்கள்.
அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். வந்தவர், "அல்லாஹ்வின் தூதரே! (நான்தான்) சஅத் பின் அபீவக் காஸ், தங்களைக் காவல் காப்பதற்காக வந்தேன்" என்று கூறினார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் அவர்களது குறட்டைச் சப்தத்தைக் கேட்குமளவுக்கு (நிம்மதியாக) உறங்கினார்கள்.
அத்தியாயம் : 44
4786. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த புதிதில் ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர் (ஒரு நாள்), "இரவில் எனக்குக் காவல் இருப்பதற்கு என் தோழர்களில் தகுதியான ஒருவர் இருக்க வேண்டுமே!" என்று கூறினார்கள்.
இவ்வாறே நாங்கள் இருக்கும்போது ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். வந்தவர், "(நான் தான்) சஅத் பின் அபீவக்காஸ்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எதற்காக வந்தீர்?" என்று கேட்டார்கள்.
அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதும் (ஆபத்து) நேர்ந்துவிடுமோ என்று நான் அஞ்சினேன். அவர்களைக் காவல் காப்பதற்காக வந்தேன்" என்று பதிலளித்தார்கள். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (நிம்மதியாக) உறங்கினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "யார் அது?" என்று நாங்கள் கேட்டோம் எனக் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறங்காமல்) கண் விழித்திருந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44