பாடம் : 1 அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4747. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நாங்கள் (இருவரும் "ஸவ்ர்" எனும்) குகையில் (ஒளிந்துகொண்டு) இருந்தபோது, (எங்களைத் தேடிக்கொண்டிருந்த) இணைவைப்பாளர்களின் கால் பாதங்களை எங்கள் தலைக்கு அருகில் நான் கண்டேன்.
உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! இவர்களில் ஒருவன் தன் கால் பாதங்களைக் கண்டால் அவற்றுக்குக் கீழே (ஒளிந்திருக்கும்) நம்மைப் பார்த்துவிடுவான்" என்று (அச்சத்துடன்) சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூபக்ர் அவர்களே! தம்முடன் மூன்றாமவனாக அல்லாஹ்வே இருக்கும் இருவரைப் பற்றி என்ன கருதுகின்றீர்?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4748. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்குமுன் நோய்வாய்ப்பட்டிருந்த போது) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதமர்ந்து (உரையாற்றுகையில் பின்வருமாறு) தெரிவித்தார்கள்:
"அல்லாஹ் தன் அடியார் ஒருவருக்கு அலங்காரமான இவ்வுலக வாழ்வு, அல்லது தன்னிடமுள்ள (மறுமைப் பெரு)வாழ்வு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்பளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடமிருப்பதையே தேர்ந்தெடுத்து விட்டார்" என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் மீண்டும் மீண்டும் அழுதார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி) "தங்களுக்கு எங்கள் தந்தையரும் அன்னையரும் அர்ப்பணமாகட்டும்" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான் இப்படி வாய்ப்பு வழங்கப்பட்டவராவார். அபூபக்ர் (ரலி) அவர்கள்தான் எங்களில் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி அதிகம் அறிந்தவராக இருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தமது செல்வத்தாலும் தோழமையாலும் எனக்குப் பேருபகாரம் செய்தவர் அபூபக்ர் அவர்கள்தான். நான் (என் சமுதாயத்தாரில் ஒருவரை) உற்ற நண்பராக ஆக்கிக்கொள்வதாக இருந்தால்,அபூபக்ரையே உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாமிய சகோதரத்துவமே போதுமானதாகும். (எனது) இந்தப் பள்ளிவாசலில் உள்ள வாசல்களில் அபூபக்ர் வாசலைத் தவிர மற்றவை விட்டுவைக்கப்பட வேண்டாம்"என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே உரையாற்றினார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4749. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரை (என்) உற்ற தோழராக ஆக்கிக் கொள்வதாயிருந்தால் அபூபக்ர் அவர்களையே (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன்; எனினும், அவர் என் (கொள்கைச்) சகோதரரும் என் தோழரும் ஆவார். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்கள் தோழரை (அதாவது என்னைத் தனது) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4750. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால், அபூபக்ர் (ரலி) அவர்களையே (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4751. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஒருவரை (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால், அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) அவர்களையே (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4752. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த பூமியில் உள்ளோரில் ஒருவரை (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால், அபூகுஹாஃபாவின் புதல்வரையே என் உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன். எனினும், உங்கள் தோழர் (ஆகிய நான்) அல்லாஹ்வின் உற்ற தோழன் ஆவேன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4753. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவனியுங்கள்! நான் ஒவ்வொரு நண்பனின் நட்பிலிருந்தும் விலகிக்கொள்கிறேன் (இறைவனுக்கு மட்டுமே உற்ற தோழனாக இருக்க விரும்புகிறேன்). (யாரேனும்) ஒருவரை நான் (என்) உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால்,அபூபக்ர் அவர்களையே என் உற்றத் தோழராக ஆக்கியிருப்பேன். உங்கள் தோழர் (ஆகிய நான்) அல்லாஹ்வின் உற்ற தோழன் ஆவேன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4754. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தாத்துஸ் ஸலாஸில்" எனும் படைப் பிரிவுக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பிவைத்தார்கள். அப்போது அவர்களிடம் நான் சென்று, "மக்களிலேயே உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?"என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "ஆயிஷா" என்று பதிலளித்தார்கள். நான், "ஆண்களில் (மிகவும் பிரியமானவர் யார்)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)" என்று பதிலளித்தார்கள். "பிறகு யார்?" என்று கேட்டதற்கு, "(பிறகு) உமர்" என்று கூறிவிட்டு, மேலும் பலருடைய பெயர்களைக் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 44
4755. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பிரதிநிதியாக ஒருவரை ஆக்குவதாயிருந்தால் யாரை ஆக்கியிருப்பார்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அபூபக்ர் (ரலி) அவர்களை (ஆக்கியிருப்பார்கள்)" என்று பதிலளித்தார்கள். "அபூபக்ருக்குப் பிறகு யாரை?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "உமர் (ரலி) அவர்களை" என்று பதிலளித்தார்கள். "உமருக்குப் பிறகு யாரை?" என்று கேட்கப் பட்டபோது, "ஆபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை" என்று கூறிவிட்டு அத்தோடு நிறுத்திக் கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4756. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதையோ கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணைத் திரும்பவும் தம்மிடம் வரும்படி கட்டளையிட்டார்கள். அந்தப் பெண், "நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லை யென்றால்...?" என்று கேட்டார். -அறிவிப்பாளர் முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என் தந்தை கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பதுபோல் அப்பெண் கேட்டார்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னைக் காண முடியாவிட்டால் அபூபக்ரிடம் செல்" என்று பதில் சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, எதைப் பற்றியோ பேசினார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ கட்டளையிட்டார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற விஷயங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4757. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) நோயுற்றிருந்தபோது, "உன் தந்தை (அபூபக்ர்) அவர்களையும் உன் சகோதரரையும் என்னிடம் அழைத்துவா. நான் மடல் ஒன்றை எழுதித்தருகிறேன். ஏனென்றால், (தாமே கலீஃபாவாக ஆக வேண்டுமென) எவரும் ஆசைப்படவோ, "நானே (அதற்குத்) தகுதியானவன்" என்று யாரும் சொல்லிவிடவோகூடும் என நான் அஞ்சுகிறேன். (ஆனாலும், அவ்வாறு வேறொருவர் முன்னிறுத்தப்பட்டாலும்) அபூபக்ரைத் தவிர வேறெவரையும் அல்லாஹ்வும் இறைநம்பிக்கையாளர்களும் மறுத்துவிடுவர்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 44
4758. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?"என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான்" என்றார்கள். "இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "நான்" என்றார்கள். "இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?" என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்"என்றார்கள். "இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?" என்று கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்களே "நான்" என்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை அனைத்தும் ஒரு மனிதரில் ஒன்று சேர்ந்தால், அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை" என்றார்கள்.
அத்தியாயம் : 44
4759. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(இஸ்ரவேலர்களில்) ஒரு மனிதர் தமது மாட்டின் மீது சுமைகளை ஏற்றிவிட்டு, அதை ஓட்டிக்கொண்டு சென்றார். அப்போது அது அவரைத் திரும்பிப் பார்த்துப் பேசியது. "நான் இதற்காக (சுமை சுமப்பதற்காக)ப் படைக்கப்படவில்லை;மாறாக, நான் (நிலத்தை) உழுவதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளேன்" என்று கூறிற்று என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே மக்கள், "அல்லாஹ் தூயவன்" என்று வியப்புடனும் அதிர்ச்சியுடனும் கூறிவிட்டு, "மாடு பேசுமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம்" என்று சொன்னார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இஸ்ரவேலர்களில்) ஓர் ஆட்டு இடையர் தம் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஓநாய் ஒன்று அவற்றின் மீது பாய்ந்து ஓர் ஆட்டைக் கவ்விச் சென்றது. உடனே அந்த இடையர் அதைத் துரத்திச் சென்று ஓநாயிடமிருந்து அந்த ஆட்டை விடுவித்தார். அப்போது அந்த ஓநாய் அவரைத் திரும்பிப் பார்த்து, "கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (யுக முடிவு) நாளில் இந்த ஆட்டுக்கு (பொறுப்பாளர்) யார்? அன்று என்னைத் தவிர வேறெந்தப் பொறுப்பாளனும் இருக்க மாட்டானே!" எனக் கூறிற்று என்று சொன்னார்கள்.
உடனே மக்கள் "அல்லாஹ் தூயவன்" என்று (வியந்து) கூறினர். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஆடு மற்றும் ஓநாய் பற்றிய நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. மாட்டைப் பற்றிய நிகழ்ச்சி காணப்படவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மாடு, ஆடு ஆகியவை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், "நானும் அபூபக்ரும் உமரும் இதை நம்புகிறோம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்கள் இருவரும் அந்த இடத்தில் இருக்கவில்லை" என்று (சற்று கூடுதலான தகவலு)ம் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 2 உமர் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
4760. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப் பட்டிருந்தார்கள். அப்போது மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு பிரார்த்திக்கவும் பாராட்டவும் செய்தனர். பிரேதம் எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா தொழுகை) தொழுதனர். அவர்களிடையே நானும் இருந்தேன்.
அப்போது ஒரு மனிதர் எனக்குப் பின்னாலிருந்து என் தோளைப் பிடித்து என்னைத் திடுக்கிடச் செய்தார். (யாரென்று) நான் திரும்பிப் பார்த்தபோது, அவர் அலீ (ரலி) அவர்கள்தான்.
அவர்கள் "உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!" என்று பிரார்த்தித்துவிட்டு, "(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத்தக்கவர் யாரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள்தான் அதற்குத் தகுதியான மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை உங்களுடைய இரு தோழர்களுடன்தான் அல்லாஹ் இருக்கச் செய்வான் (அதாவது நபி (ஸல்), அபூபக்ர் (ரலி) ஆகியோருடன் நீங்கள் அடக்கம் செய்யப்படுவீர்கள்) என்றே நான் எண்ணியிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் அபூபக்ரும் உமரும் வந்தோம்". என்றும், "நானும் அபூபக்ரும் உமரும் உள்ளே சென்றோம்" என்றும், "நானும் அபூபக்ரும் உமரும் வெளியில் புறப்பட்டோம்" என்றும் சொல்வதை நான் அதிகமாகச் செவியுற்றிருக்கிறேன். அதனால்தான் உங்களை உங்கள் இரு தோழர்களுடன்தான் (அல்லாஹ்) அடங்கச் செய்வான் என்று நான் எதிர்பார்க்கிறேன் அல்லது எண்ணுகிறேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4761. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, (கனவில்) மக்கள் (பல விதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள். அவற்றில் மார்பை எட்டக்கூடிய அளவு (சட்டைகளு)ம் இருந்தன; மார்பை எட்டாதவையும் இருந்தன. உமர் பின் அல்கத்தாப் (தரையில்) இழுத்துக் கொண்டே செல்லும் அளவுக்குகு முழுநீளச் சட்டையொன்றை அணிந்தவராக என்னைக் கடந்து சென்றார்" என்று கூறினார்கள்.
மக்கள், "இதற்குத் தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்தச் சட்டைகள்) அவர்களது மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும்" (என விளக்கம் கண்டேன்) என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4762. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) கோப்பை ஒன்று என்னிடம் கொண்டுவரப்படுவதைப் போன்று கண்டேன். அதில் பால் இருந்தது. நான் அதிலிருந்த பாலை (தாகம் தணியும் அளவுக்கு) அருந்தினேன். எந்த அளவுக்கென்றால், (வயிறு நிறைந்து) அது என் நகக்கண்கள் வழியே வெளியேறி வருவதைக் கண்டேன். பின்னர் மீதியை உமர் பின் அல்கத்தாபுக்குக் கொடுத்தேன்" என்று கூறினார்கள்.
மக்கள், "இதற்குத் தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்க, அதற்கு அவர்கள், "அறிவு" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4763. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக்கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகில் கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவுக்கு(த் தண்ணீர்) இறைத்தேன்.
பிறகு அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) அவர்கள் அதை வாங்கி அதன் மூலம் "ஒரு வாளி நீரை" அல்லது "இரண்டு வாளிகள் நீரை" இறைத்தார். அவர் இறைத்தபோது சோர்வு தெரிந்தது. -அல்லாஹ் அவருக்கு மன்னிப்பருள்வானாக.- பிறகு அது மிகப் பெரிய வாளியாக மாறியது.
அப்போது அதை கத்தாபின் புதல்வர் (உமர்) அவர்கள் வாங்கினார். உமர் பின் அல்கத்தாப் இறைத்ததைப் போன்று இறைக்கின்ற (வலிமை மிக்க) அபூர்வத் தலைவர் ஒருவரை நான் மக்களில் பார்க்கவில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர்நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு (அவர் நீர் இறைத்தார்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அபூகுஹாஃபாவின் புதல்வர் (அபூபக்ர்) நீர் இறைப்பதைக் கண்டேன்" என்று இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 44
4764. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உறங்கிக்கொண்டிருக்கையில் (கனவில்) ஒரு நீர்த் தடாகத்தின் அருகில் நான் இருந்துகொண்டு, நீர் இறைத்து மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூபக்ர் என்னிடம் வந்து எனக்கு ஓய்வளிப்பதற்காக என் கரத்திலிருந்த அந்த வாளியை வாங்கி, இரண்டு வாளிகள் தண்ணீர் இறைத்தார். அவர் இறைத்தபோது (சற்று) சோர்வு தென்பட்டது. -அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு அருள்வானாக-
பிறகு கத்தாபின் புதல்வர் (உமர்) வந்தார். அவர் அபூபக்ர் அவர்களிடமிருந்து (அந்த வாளியை) வாங்கி, மக்கள் (தாகம் தீரத் தாங்களும் அருந்தி, தம் ஒட்டகங்களுக்கும் புகட்டிவிட்டுத்) திரும்பிச் செல்லும்வரை இறைத்துக்கொண்டேயிருந்தார். அவரைப் போன்று இறைக்கின்ற பலசாலியான ஒரு மனிதரை நான் ஒருபோதும் பார்க்கவில்லை. அப்போதும் தடாகம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4765. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கனவில்) நான் சுற்றுச் சுவர் இல்லாத ஒரு கிணற்றுக்கு அருகிலிருந்த வாளியால் தண்ணீர் இறைப்பதைப் போன்று எனக்குக் காட்டப்பட்டது. அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி நீரை அல்லது இரண்டு வாளிகள் நீரை (சற்று) சோர்வான நிலையில் இறைத்தார். அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு அருள்வானாக. பிறகு உமர் பின் அல்கத்தாப் வந்து இறைத்தார்.
உடனே அந்த வாளி மிகப் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போன்று செம்மையாகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தம் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவுக்கு (அவர் நீர் இறைத்தார்).
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அபூபக்ர் (ரலி), உமர் பின் அல்கத்தாப் (ரலி) ஆகியோரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கனவில் கண்டதாகக் கூறிய மேற்கண்ட ஹதீஸ், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4766. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "(கனவில்) நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன். அங்கு ஒரு "வீட்டை" அல்லது "மாளிகையைக்" கண்டேன். "இது யாருக்குரியது?" என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), "(இது) உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குரியது" என்று பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உமது தன்மான உணர்வு என் நினைவுக்கு வந்தது. (ஆகவே, உள்ளே செல்லாமல் திரும்பி வந்துவிட்டேன்)"என்று கூறினார்கள்.
அதைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் அழுதார்கள். "அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமா தன்மானத்தைக் காட்டுவது?"என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44