பாடம் : 42 மூசா (அலை) அவர்களின் சிறப்புகள்..
4727. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் ஒருவர் மற்றவரது வெட்கத்தலத்தைப் பார்த்துக்கொண்டு நிர்வாணமாகவே குளிப்பார்கள்; மூசா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். ஆகவே, இஸ்ர வேலர்கள், "இறைவன் மீதாணையாக! மூசாவுக்கு விரைவீக்கம் உள்ளது. எனவேதான், அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை" என்று (குறை) கூறினர்.
ஒரு முறை மூசா (அலை) அவர்கள் குளிப்பதற்குச் சென்றார்கள்; அப்போது ஆடையை(க் கழற்றி) ஒரு கல்மீது வைத்தார்கள். அவர்களது ஆடையோடு அந்தக் கல் ஓடியது. மூசா (அலை) அவர்கள் அந்தக் கல்லைப் பின்தொடர்ந்து "கல்லே! எனது ஆடை! கல்லே! எனது ஆடை! என்று சப்தமிட்டுக்கொண்டு வேகமாக ஓடினார்கள்.
இறுதியில் இஸ்ரவேலர்கள் (இருந்த பகுதிக்கு வந்தபோது அவர்கள்) மூசா (அலை) அவர்களின் வெட்கத்தலத்தைப் பார்த்துவிட்டு, "இறைவன் மீதாணையாக! மூசாவுக்கு எந்தக் குறையுமில்லை" என்று கூறினர்.
பின்னர் அந்தக் கல் அப்படியே நின்றது. அதற்குள் அனைவரும் மூசா (அலை) அவர்களை (நன்கு) பார்த்துவிட்டனர். பின்னர் மூசா (அலை) அவர்கள் தமது ஆடையை எடுத்துக் கொண்டு (தமது கையிலிருந்த தடியால்) கல்லை அடிக்கலானார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா (அலை) அவர்கள் அந்தக் கல்மீது அடித்ததால் அதன்மீது ஆறோ ஏழோ வடுக்கள் ஏற்பட்டன.
அத்தியாயம் : 43
4728. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூசா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுகின்ற மனிதராக இருந்தார்கள். ஆகவே, நிர்வாணமாக அவர்கள் காணப்படவேமாட்டார்கள். எனவே, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் "மூசாவுக்கு விரைவீக்கம் உள்ளது" என்று கூறிக்கொண்டனர்.
இந்நிலையில் மூசா (அலை) அவர்கள் ஒரு குட்டையில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை ஒரு கல்மீது வைத்தார்கள். அந்தக் கல் (ஆடையோடு) விரைந்தோடலாயிற்று. மூசா (அலை) அவர்கள் தமது தடியால் அதை அடித்துக்கொண்டு, "கல்லே! எனது ஆடை!" "கல்லே! எனது ஆடை!" என்று கூறிக்கொண்டே அதை விரட்டிக்கொண்டு ஓடினார்கள்.
இறுதியில் அந்தக் கல் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் பிரமுகர்கள் இருக்குமிடத்திற்குச் சென்று நின்றது. (இது குறித்தே) "நம்பிக்கை கொண்டோரே! மூசாவுக்குத் தொல்லை தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக்கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூசா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்" (33:69) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 43
4729. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மலக்குல் மவ்த்" (உயிரை எடுத்துச்செல்ல வரும் வானவர்) மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் வானவர் வந்த போது, மூசா (அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்து, அவரது கண்ணைப் பறித்துவிட்டார்கள். உடனே அந்த வானவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று "மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்!" என்று கூறினார்.
அந்த வானவருக்கு மீண்டும் கண்ணைக் கொடுத்த இறைவன், "நீர் அவரிடம் திரும்பிச் சென்று அவரது கையை ஒரு காளை மாட்டின் முதுகின்மேல் வைக்கச் சொல்வீராக. (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவுக்கு) அவரது கை மறைக்கின்றதோ அதில் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு இந்த உலகில் வாழ அவருக்கு அனுமதி உண்டு"என்று சொல்வீராக" என்றான்.
(அவ்வாறே அந்த வானவர் மூசா (அலை) அவர்களிடம் கூறியபோது) மூசா (அலை) அவர்கள், "இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடித்த) பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டார்கள். இறைவன் "மரணம்தான்" என்று பதிலளித்தான்.
மூசா (அலை) அவர்கள், "அப்படியென்றால், இப்போதே (என் உயிரை எடுத்துக்கொள்)" என்று கூறிவிட்டு, (பைத்துல் மக்திஸ் எனும்) புனித பூமிக்கு நெருக்கமாக, அங்கிருந்து கல்லெறி தூரத்தில் தமது அடக்கத்தலம் அமைய வேண்டுமென அல்லாஹ்விடம் வேண்டினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதை எடுத்துரைத்தபோது), "நான் அந்த இடத்தில் இருந்தால் செம்மணற்குன்றின் கீழே சாலையோரத்தில் அவர் அடக்கப்பட்டிருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டியிருப்பேன்"என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4730. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மலக்குல் மவ்த்" (உயிரை எடுத்துச்செல்லவரும் வானவர்) மூசா (அலை) அவர்களிடம் வந்து, உங்கள் இறைவன் (உங்கள் உயிரை எடுத்து வருமாறு உத்தரவிட்டுள்ளான். அவனது) உத்தரவுக்குப் பணியுங்கள்" என்று கூறினார்.
உடனே மூசா (அலை) அவர்கள் வானவரை (முகத்தில்) அறைந்து, அவரது கண்ணைப் பெயர்த்துவிட்டார்கள். அந்த வானவர் இறைவனிடம் திரும்பிச் சென்று, "மரணத்தை விரும்பாத உன் அடியார் ஒருவரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்! அவர் எனது கண்ணைப் பறித்துவிட்டார்" என்று கூறினார்.
அவருக்கு மீண்டும் கண்ணை வழங்கிய இறைவன், "நீர் என் அடியாரிடம் திரும்பிச் சென்று, நீங்கள் உயிர்வாழத்தானே விரும்புகிறீர்கள்? அவ்வாறு நீங்கள் (இன்னும் நீண்ட நாட்கள்) உயிர்வாழ விரும்பினால், ஒரு காளை மாட்டின் முதுகின்மேல் கையை வையுங்கள்; (அதன் முதுகிலுள்ள முடிகளில்) உங்களது கை மறைக்கும் அளவுக்கு ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில்) நீங்கள் வாழலாம்" என்று சொல்வீராக என்று கூறினான்.
(அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூசா (அலை) அவர்களிடம் கூறியபோது) மூசா (அலை) அவர்கள், "(அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டார்கள். வானவர், "பிறகு நீங்கள் மரணிக்கத்தான் வேண்டும்" என்றார்.
மூசா (அலை) அவர்கள், "அப்படியானால் இப்போதே விரைவாக (என் உயிரை எடுத்துக் கொள். இறைவா! பைத்துல் மக்திஸ் எனும் புனித பூமியிலிருந்து கல்லெறி தூரத்தில் என்னை இறக்கச் செய்து (அங்கேயே அடக்கம் செய்து)விடு"என்று வேண்டினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (இப்போது) அந்த இடத்தில் இருந்தால், செம்மணற்குன்றின் கீழே சாலையோரமாக அவர் அடக்கப்பட்டிருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டியிருப்பேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4731. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர் ஒருவர் (சந்தையில்) தமது சரக்கை எடுத்துக் காட்டியபோது, அவருக்குப் "பிடிக்காத" அல்லது "அவர் விரும்பாத" (குறைந்த) விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. (அறிவிப்பாளர் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் ஐயம்.)
அப்போது அந்த யூதர், "மனிதர்கள் அனைவரையும்விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக! இல்லை (இந்த விலை கட்டுப்படியாகாது)" என்று கூறினார். இதை அன்சாரி (முஸ்லிம்)களில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே அந்த யூதரை முகத்தில் அறைந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, "மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக! என்றா நீ கூறுகிறாய்?" என்று கேட்டார்.
உடனே அந்த யூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அபுல்காசிமே! (சிறுபான்மை மக்களான எங்கள் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக எங்களிடம் நீங்கள் வாக்குறுதி அளித்திருக்கும் அடிப்படையில்) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். இன்ன மனிதர் எனது முகத்தில் அறைந்துவிட்டார்" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமிடம்), "நீ ஏன் இவரது முகத்தில் அறைந்தாய்?" என்று கேட்டார்கள். "(அல்லாஹ்வின் தூதரே!), தாங்கள் எங்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கவே இவர் மனிதர்கள் அனைவரையும்விட மூசாவைத் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!" என்று (மூசா (அலை) அவர்களைச் சிறப்பித்துக்) கூறினார்" என்றார்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக்கென்றால், கோபக்குறி அவர்களது முகத்தில் தென்பட்டது. பிறகு கூறினார்கள்: இறைத் தூதர்களுக்கிடையே ("ஒருவர் மற்றவரைவிடச் சிறந்தவர்" என்று) ஏற்றத்தாழ்வு பாராட்டாதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ("ஸூர்") ஊதப்படும். உடனே வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்துவிடுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர.
பிறகு மற்றொரு முறை எக்காளம் ஊதப்படும். அப்போது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அந்த வேளையில் மூசா (அலை) அவர்கள் இறை அரியணையைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் "தூர் சினாய்" (மலையில் இறைவனைச் சந்தித்த) நாளில் மூர்ச்சையாகி விழுந்தது கணக்கி லெடுக்கப்(பட்டு,அங்கு அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப்பட்டுவிட்டாரா?" என்பது எனக்குத் தெரியாது. மேலும், யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்களைவிட ஒருவர் சிறந்தவர் என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4732. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு யூதரும் ஒரு முஸ்லிமும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர். அந்த முஸ்லிம், "உலகத்தார் அனைவரைவிடவும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மேன்மை அளித்தவன் மீதாணையாக!" என்று (ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுக்) கூறினார். அதற்கு (பதிலாக) அந்த யூதர், "உலகத்தார் அனைவரைவிடவும் மூசா (அலை) அவர்களுக்கு மேன்மை அளித்தவன் மீதாணையாக!" என்று கூறினார்.
அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். உடனே அந்த யூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்ததைத் தெரிவித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை வரவழைத்து), "மூசாவைவிட என்னைச் சிறப்பாக்கி (உயர்த்திப் பேசி)விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் (மறுமை நாளில்) மூர்ச்சையாகிவிடுவார்கள். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது மூசா (அலை) அவர்கள் இறை அரியணையின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்துவிட்டிருப்பாரா? அல்லது அவருக்கு மட்டும் இறைவன் (மூர்ச்சையடை வதிலிருந்து) விதிவிலக்கு அளித்திருப்பானா என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4733. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 43
4734. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "யூதர் ஒருவர் (ஒரு முஸ்லிமிடம்) முகத்தில் அறை வாங்கிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்"என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
ஆயினும், அதில் "மூர்ச்சையடைந்துவிட்டவர்களில் மூசா (அலை) அவர்கள் (முதலாவதாக) மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது தூர்சினாய் மலையில் (இறைவனைப் பார்க்க முற்பட்டபோது) அடைந்த மூர்ச்சைக்குக் பகரமாக அத்தோடு போதுமென விடப்பட்டார்களா என்பது எனக்குத் தெரியாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (சிறு வேறுபாட்டுடன்) காணப்படுகிறது.
அத்தியாயம் : 43
4735. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களுக்கிடையே ("ஒருவர் மற்றவரைவிடச் சிறந்தவர்" என) ஏற்றத்தாழ்வு கற்பிக்காதீர்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4736. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹத்தாப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4737. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் தொழுதுகொண்டிருந்தார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச்செல்லப்பட்ட இரவில் கடந்து சென்றேன்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 43 யூனுஸ் (அலை) அவர்கள் பற்றிய குறிப்பும், "நான் யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன்" என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த அடியாருக்கும் தகாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும்.
4738. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என் அடியார் ஒருவர் (தம்மைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது" என்று அல்லாஹ் கூறினான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4739. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "யூனுஸ் பின் மத்தா அவர்களைவிட நான் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக் கூறுவது) எந்த அடியாருக்கும் தகாது" என்று கூறினார்கள். இவ்வாறு யூனுஸ் (அலை) அவர்களை, அவர்களுடைய தந்தையுடன் இணைத்து (மத்தாவின் மகன் யூனுஸ் என்று) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 44 யூசுஃப் (அலை) அவர்களின் சிறப்புகள்.
4740. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "மனிதர்களிலேயே இறைவனை அதிகமாக அஞ்சுபவர்தான்" என்று பதிலளித்தார்கள். உடனே மக்கள், "நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், இறைவனின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய புதல்வரான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய புதல்வரான இறைத்தூதர் (யஅகூப்) உடைய புதல்வரான இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்கள்தான்" என்று பதிலளித்தார்கள். மக்கள், "இதைப் பற்றியும் நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை" என்று கூறினர்.
உடனே நபி (ஸல்) அவர்கள், "அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியர் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? அறியாமைக் காலத்தில் மக்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் தான் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 45 ஸகரிய்யா (அலை) அவர்களின் சிறப்புகள்..
4741. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஸகரிய்யா (அலை) அவர்கள் தச்சுத் தொழில் செய்பவராக இருந்தார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அத்தியாயம் : 43
பாடம் : 46 களிர் (அலை) அவர்களின் சிறப்புகள்..
4742. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "(களிர் (அலை) அவர்களைச் சந்தித்த) மூசா, இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பெற்ற மூசா (அலை) அவர்கள் அல்லர்; அவர் வேறு ஒரு மூசா என்று நவ்ஃப் அல்பிகாலீ கூறுகிறாரே?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "இறைவனின் விரோதி (யான அவர்) பொய்யுரைக்கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக உபை பின் கஅப் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்"என்றார்கள்:
(ஒரு முறை) மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் "மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள் "(என்னைப் பொறுத்தவரையில்) நானே அறிந்தவன்" என்று கூறிவிட்டார்கள். "இது பற்றி அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று அவர்கள் (கூறியிருக்க வேண்டும்; ஆனால், அவ்வாறு அவர்கள்) கூறவில்லை.
இதனால் அல்லாஹ், மூசா (அலை) அவர்களைக் கண்டித்து, "இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்" என்று அவர்களுக்கு (வஹீ) அறிவித்தான்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "என் இறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?" என்று கேட்டார்கள். "நீங்கள் ஒரு கூடையில் ஒரு மீனை எடுத்துக்கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்குதான் அவர் இருப்பார்" என்று அல்லாஹ் சொன்னான்.
(அவ்வாறே) மூசா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளர் யூஷஉ பின் நூன் அவர்களும் நடந்தனர். மூசா (அலை) அவர்கள் ஒரு கூடையில் மீனை எடுத்துக்கொண்டு தம் உதவியாளருடன் நடந்து (இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) அந்தப் பாறைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு இருவரும் உறங்கினர்.
கூடையிலிருந்த அந்த மீன், கூடையிலிருந்து குதித்து வெளியேறிக் கடலில் விழுந்தது. அப்போது மீனுக்காக நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிடவே, மீனைச் சுற்றி ஒரு வளையம் போல் நீர் ஆகிவிட்டது. அது அந்த மீனுக்குச் சுரங்கம் போல் ஆனது. அது மூசா (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய உதவியாளருக்கும் பெரும் வியப்பாக அமைந்தது.
பிறகு எஞ்சிய பகலிலும் இரவிலும் அவர்கள் இருவரும் நடந்தனர். மூசா (அலை) அவர்களின் (பயணத்) தோழர் மீனைப் பற்றி மூசா (அலை) அவர்களுக்குத் தெரிவிக்க மறந்துவிட்டார்.
(இரண்டாம் இரவு முடிந்து) காலை வேளையானபோது மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம், "நமது காலை உணவைக் கொண்டுவருக. நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்பு அடைந்துவிட்டோம்" (18:62) என்று சொன்னார்கள்.
தமக்குக் கட்டளையிடப்பட்ட இடத்தைக் கடக்கும்வரை மூசா (அலை) அவர்களுக்குக் களைப்பு ஏற்படவில்லை. யூஷஉ பின் நூன், "நாம் அப்பாறையில் ஒதுங்கியபோது கவனித்தீர்களா? (அங்கு தான்) நான் மீனை மறந்துவிட்டேன். அதை (உங்களிடம்) கூறவிடாமல் ஷைத்தான் என்னை மறக்கச் செய்துவிட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமான முறையில் அமைத்துக்கொண்டது" (18:63) என்று கூறினார்.
அதற்கு மூசா (அலை) அவர்கள் "அதுதான் நாம் தேடிவந்த இடம்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் இருவரும் தம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பினார்கள். இறுதியில் அந்தப் பாறைக்கு இருவரும் வந்துசேர்ந்தார்கள்.
அங்கு தம்மை முழுவதுமாக ஆடையால் மூடிக்கொண்ட ஒரு மனிதரை (களிரை)க் கண்டார்கள். அவருக்கு மூசா (அலை) அவர்கள் முகமன் (சலாம்) கூற, அம்மனிதர், "உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)?" என்று கேட்டார்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "நான்தான் மூசா" என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், "இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசாவா?" என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள். அவர், "அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் கொடுத்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன். அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறினார்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "உமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள நல்லறிவை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின்தொடரலாமா?" என்று அவரிடம் கேட்டார்கள்.
அதற்கு அம்மனிதர், "என்னுடன் பொறுமையாக இருக்க உங்களால் முடியாது; உங்களுக்குத் தெரியாத விஷயத்தில் உங்களால் எவ்வாறு பொறுமையாக இருக்க இயலும்?" என்று கேட்டார்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர். உமது எந்தக் கட்டளைக்கும் நான் மாறுசெய்யமாட்டேன்" என்று கூறினார்கள்.
அதற்கு களிர் அவர்கள், "நீங்கள் என்னைப் பின்தொடர்வதானால், நானாக எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் உங்களுக்குச் சொல்லாதவரையில் நீங்கள் என்னிடம் (அதைப் பற்றி ஏன், எதற்கு என்று விளக்கம்) கேட்கக் கூடாது"என்று சொன்னார். மூசா (அலை) அவர்கள் "ஆம் (அப்படியே செய்கிறேன்)" என்று (சம்மதம்) தெரிவித்தார்கள்.
பிறகு களிர் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் கடலோரமாக நடந்தனர். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்துசென்றது. அப்போது அவர்கள் இருவரும் தங்களை ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (ஏழைகளான மரக்கல உரிமையாளர்கள்) களிர் (அலை) அவர்களை அடையாளம் கண்டுகொண்டு,கட்டணம் ஏதுமின்றி அவர்களிரு வரையும் மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டனர்.
(அவர்களிருவரும் ஏறியமர்ந்ததும்) களிர் அவர்களின் கவனம் மரக்கலத்தின் (அடித்தளப்) பலகைகளில் ஒன்றை நோக்கிச் சென்றது. உடனே அதைக் கழற்றி (அந்த இடத்தில் முளைக்குச்சி ஒன்றை அறைந்து)விட்டார்கள்.
உடனே மூசா (அலை) அவர்கள், "கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றிக்கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே ஓட்டை போடுகிறீர்களே? இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் பெரியதோர் (அபாயமான) காரியத்தைச் செய்துவிட்டீர்கள்" என்று கூறினார்கள்.
அதற்கு களிர் "என்னுடன் உங்களால் பொறுமையாக இருக்க முடியாது என்று உங்களிடம் நான் கூறவில்லையா?"என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், "நான் மறந்ததற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள். என் விஷயத்தில் சிரமத்தை ஏற்படுத்திவிடாதீர்கள்" என்று சொன்னார்கள்.
பிறகு இருவரும் மரக்கலத்திலிருந்து இறங்கி, கடலோரமாக நடந்துகொண்டிருந்த போது, சிறுவன் ஒருவன் மற்றச் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். உடனே களிர் (அலை) அவர்கள் அச்சிறுவனின் தலையைப் பிடித்துத் தமது கரத்தால் திருகிக் கொன்றுவிட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் களிர் அவர்களிடம், "எந்த உயிரையும் கொல்லாத, ஒரு பாவமும் அறியாத உயிரைக் கொன்றுவிட்டீரே! தகாத காரியத்தைச் செய்துவிட்டீரே!" என்று கூறினார்கள்.
அதற்கு களிர், "நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) உங்களிடம் நான் கூறவில்லையா?" என்று கேட்டார்.
(அறிவிப்பாளர்) கூறுகிறார்: இம்முறை களிர் (அலை) அவர்கள் சொன்னது, முதல் முறை சொன்னதைவிடக் கடுமையானதாகும்.
பிறகு மூசா (அலை) அவர்கள், "இதற்குப் பிறகு நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டாம். (இரு முறை) நான் கூறிய சமாதானத்தை ஏற்றுக் கொண்டுவிட்டீர்" என்று சொன்னார்கள்.
தொடர்ந்து இருவரும் நடந்து, முடிவில் ஒரு கிராமத்தாரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அங்கு கீழே விழலாமா என யோசித்துக்கொண்டிருந்த -சாய்ந்த நிலையில் இருந்த- ஒரு சுவரைக் கண்டார்கள். உடனே அம்மனிதர் இவ்வாறு தமது கரத்தால் அதை(த் தூக்கி) நிறுத்தினார்.
அப்போது மூசா (அலை) அவர்கள், "இவர்களிடம் நாம் வந்து (உணவு கேட்டு)ம் இவர்கள் நம்மை உபசரிக்கவில்லை;உணவளிக்கவுமில்லை. (அவ்வாறிருந்தும் விழவிருந்த அவர்களது சுவரைத் தூக்கி நிறுத்திவிட்டீர்கள்.) நீங்கள் நினைத்திருந்தால் இதற்குக் கூலி பெற்றிருக்கலாமே!" என்றார்கள்.
களிர் (அலை) அவர்கள், "இதுவே நானும் நீங்களும் பிரிய வேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத (இம்மூன்று) செயல்களுக்கான விளக்கத்தை உங்களுக்கு (இப்போது) கூறுகிறேன்" என்று கூறினார்கள்.
(இந்நிகழ்ச்சியை கூறிக்கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மூசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும். அவர் பொறுமையாக இருந்திருப்பாரானால், அவ்விருவர் பற்றிய (இன்னும்) பல தகவல்கள் நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்குமே என்று நான் ஆசைப்பட்டதுண்டு" என்று கூறினார்கள்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முதல் தடவை மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினாலாகும்" என்றும் கூறினார்கள்.
(தொடர்ந்து அந்த நிகழ்ச்சியைக்) கூறினார்கள்:
(அப்போது) சிட்டுக் குருவியொன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின்மீது விழுந்தது. பிறகு (தனது அலகால்) கடலில் ஒரு முறை கொத்தி (நீர் அருந்தி)யது. அப்போது மூசா (அலை) அவர்களிடம் களிர், "உம்முடைய அறிவும் என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகையில், இந்தச் சிட்டுக் குருவி (தனது அலகால்) இந்தக் கடலிலிருந்து எடுத்த (நீரின்) அளவுதான் (நம் அறிவு உள்ளது)" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (இந்நிகழ்ச்சி பற்றிக் கூறும் 18:79ஆவது வசனத்தின் மூலத்தை) "வ கான அமாமஹும் மலிக்குன் யஃகுது குல்ல சஃபீனத்தின் ஸாலிஹத்தின் ஃகஸ்பா" என்று ஓதுவார்கள். (பொருள்: அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் பழுதில்லாத நல்ல மரக்கலங்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக் கொண்டிருந்தான்.) மேலும், (18:80ஆவது வசனத்தின் மூலத்தை) "வ அம்மல் ஃகுலாமு ஃப கான காஃபிரன்" என்று ஓதுவார்கள். (பொருள்: அச்சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான்.)
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4743. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "(பேச்சாளர்) நவ்ஃப் அல்பிகாலீ என்பார் கல்வியைத் தேடிச் சென்ற மூசா, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் (இறைத்தூதராக நியமிக்கப் பெற்ற) மூசா அல்லர் என்று கூறுகிறாரே?" எனக் கேட்கப்பட்டது.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "சயீதே! அவ்வாறு அவர் கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?"என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நவ்ஃப் பொய்யுரைக்கிறார்" என்று கூறிவிட்டு, உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாகப் பின் வருமாறு கூறினார்கள்:
அத்தியாயம் : 43
4744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூசா (அலை) அவர்கள் தம் (பனூ இஸ்ரா யீல் சமுதாய) மக்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளையும் சோதனைகளையும் நினைவூட்டி (அறிவுரை கூறி)க் கொண்டிருந்தார்கள்.
அப்போது "இந்தப் பூமியில் என்னைவிடச் "சிறந்த" அல்லது "நன்கறிந்த" மனிதர் வேறெவரும் இல்லை" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், "உம்மைவிடச் சிறந்தவரை, அல்லது உம்மை விட அதிக ஞானம் உள்ளவரை நான் அறிவேன்" என அறிவித்தான்; "இந்தப் பூமியில் ஒரு மனிதர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகம் அறிந்தவர்" என்று கூறினான்.
மூசா (அலை) அவர்கள் "இறைவா! அவரை எனக்கு அறிவித்துக்கொடு" என்று கேட்டார்கள். அப்போது அவர்களிடம், "உப்பிட்ட மீனொன்றைப் பயண உணவாக எடுத்துக்கொண்டு (கடலோரமாகச்) செல்வீராக. அந்த மீனை எந்த இடத்தில் நீங்கள் தவறவிடுவீர்களோ அங்கு அவர் இருப்பார்" என்று கூறப்பட்டது.
அவ்வாறே மூசா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளரும் (கடலோரமாக) நடந்து சென்று அந்தப் பாறையை அடைந்தனர். மூசா (அலை) அவர்கள் பாதை மாறி (தம் உதவியாளரை) விட்டுச் சென்றுவிட்டார்கள்.
அப்போது (உதவியாளரின் கூடையிலிருந்த) மீன் குதித்துத் தண்ணீரில் விழுந்துவிட்டது. அது சென்ற நீர்த்தடம் இணையாமல் வளையம் போன்று மாறிவிட்டது.
அப்போது அவர்களுடைய உதவியாளர், "நான் இறைத்தூதரிடம் சென்று, இதைப் பற்றி தெரிவிக்க வேண்டாமா?" என்று கூறிக்கொண்டு, (மூசா (அலை) அவர்களிடம்) சென்றார். ஆனால், (அதைக் கூறவிடாமல்) அவருக்கு மறதி ஏற்படுத்தப்பட்டது.
அந்த இடத்தைவிட்டு அவர்கள் இருவரும் கடந்து சென்றதும், மூசா (அலை) அவர்கள் "நமது காலை உணவைக் கொண்டுவாரும்! இந்தப் பயணத்தில் நாம் களைப்படைந்து விட்டோம்" என்று கூறினார்கள்.
அந்த இடத்தைக் கடக்கும்வரை அவர்கள் இருவருக்கும் களைப்பு ஏற்படவில்லை. அந்த இடத்தைக் கடந்ததும் உதவியாளர் (மீன் தப்பிச் சென்றுவிட்டதைப் பற்றி) நினைத்தார். "கவனித்தீர்களா? நாம் அந்தப் பாறை அருகில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் மறந்து விட்டேன். அதைப் பற்றிக் கூறவிடாமல் ஷைத்தான் என்னை மறக்கவைத்துவிட்டான். அது கடலில் ஆச்சரியமான முறையில் தனது வழித்தடத்தை அமைத்துச் சென்றது" என்று கூறினார்.
மூசா (அலை) அவர்கள், "அதுதான் நாம் தேடிவந்த இடம்" என்று கூறியபடி, தம் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே அவ்விருவரும் திரும்பினர். அப்போது அந்த மீன் குதித்தோடிய இடத்தை உதவியாளர் காண்பித்தார். மூசா (அலை) அவர்கள், "இதுதான் எனக்குச் சொல்லப்பட்ட இடமாகும்" என்று கூறிவிட்டு, அவரைத் தேடிக்கொண்டு சென்றார்கள்.
அங்கு ஆடையால் போர்த்தியபடி "பிடரியின் மீது" அல்லது "நடுப் பிடரியின் மீது" மல்லாந்து களிர் (அலை) அவர்கள் படுத்திருந்தார்கள். மூசா (அலை) அவர்கள் "உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்" என்று சொன்னார்கள். உடனே களிர் அவர்கள் தமது முகத்திலிருந்து ஆடையை விலக்கி "வ அலைக்குமுஸ் ஸலாம்" என்று பதில் சலாம் சொல்லிவிட்டு, "நீங்கள் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) "நான்தான் மூசா" என்றார்கள்.
களிர் அவர்கள், "எந்த மூசா?" என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள், "பனூ இஸ்ராயீல் (சமுதாய மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பெற்ற) மூசா" என்று பதிலளித்தார்கள். "எதற்காக வந்துள்ளீர்கள்?" என்று களிர் அவர்கள் கேட்க, "உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக நான் (உங்களிடம்) வந்துள்ளேன்" என்று மூசா (அலை) அவர்கள் கூறினார்கள்.
அதற்கு களிர் (அலை) அவர்கள், "என்னுடன் உங்களால் பொறுமையாக இருக்க இயலாது. உங்களுக்கு ஞானமில்லாத ஒரு விஷயத்தில் உங்களால் எவ்வாறு பொறுமையாக இருக்க முடியும்? எதைச் செய்ய வேண்டுமென எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளதோ அதை நான் செய்வதை நீங்கள் கண்டால், உங்களால் பொறுமையாக இருக்க முடியாது"என்று கூறினார்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாக நீங்கள் காண்பீர்கள். உங்களின் எந்தக் கட்டளைக்கும் நான் மாறுசெய்யமாட்டேன்" என்று கூறினார்கள். "நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வருவதாயிருந்தால், எதைப் பற்றியும் நானாக (விளக்கம்) சொல்லாத வரை அதைப் பற்றி என்னிடம் நீங்கள் (விளக்கம்) கேட்கக் கூடாது" என்று களிர் (அலை) அவர்கள் சொன்னார்கள்.
பிறகு இருவரும் (கடலோரமாக) நடந்து சென்று ஒரு மரக்கலத்தில் ஏறினர். அப்போது களிர் (அலை) அவர்கள் வேண்டுமென்றே அந்த மரக்கலத்தில் ஓட்டை போட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், "இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா ஓட்டை போடுகிறீர்? நீங்கள் மாபெரும் (அபாயமான) செயலையன்றோ செய்து விட்டீர்கள்?" என்று களிரிடம் கேட்டார்கள்.
அதற்கு களிர் அவர்கள், "உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று நான் சொல்லவில்லையா?"என்று கேட்டார்கள்.
மூசா (அலை) அவர்கள், "நான் மறந்துவிட்டதை வைத்து என்னைத் தண்டித்துவிடாதீர்கள். என் விஷயத்தில் சிரமத்தைக் கொடுத்துவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
தொடர்ந்து இருவரும் நடந்தார்கள்; விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைச் சந்தித்தார்கள். உடனே களிர் அவர்கள் யோசிக்காமல் சென்று, அவர்களில் ஒரு சிறுவனைக் கொன்று விட்டார்கள். அதைக் கண்டு மூசா (அலை) அவர்கள்,பெரிதும் திடுக்குற்றார்கள்; வெறுப்படைந்தார்கள். எந்தப் பாவமும் அறியாத, எந்த உயிரையும் கொல்லாத உயிரைக் கொன்றுவிட்டீர்களே? தகாத காரியத்தைச் செய்துவிட்டீர்களே?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நிகழ்ச்சியைச் சொல்லிக்கொண்டே) இந்த இடத்திற்கு வந்தபோது "நம்மீதும் மூசா அவர்கள் மீதும் அல்லாஹ்வின் கருணை பொழியட்டும். மூசா (அலை) அவர்கள் மட்டும் அவசரப்பட்(டுக் கேள்வி கேட்)டிருக்காவிட்டால் இன்னும் (அரிய) விந்தை(யான பல காட்சி)களைக் கண்டிருப்பார். ஆயினும், (இவ்வாறு கேட்ட) மூசா (அலை) அவர்களை, தம் தோழர் (களிர்) முன்பாக நாணம் கவ்விக்கொண்டது" என்றார்கள்.
மூசா (அலை) அவர்கள் "இதற்குப் பிறகு ஏதேனும் உங்களிடம் நான் கேட்டால் உங்களுடன் என்னைச் சேர்த்துக்கொள்ளாதீர். என்னிடமிருந்து (இரு முறை) சமாதானத்தை ஏற்றுக் கொண்டீர்" என்று கூறினார்கள்.
மூசா (அலை) அவர்கள் பொறுமையாக இருந்திருந்தால், ஆச்சரியமானவற்றைக் கண்டிருப்பார்கள். -(பொதுவாகவே) நபி (ஸல்) அவர்கள் நபிமார்கள் எவரைப் பற்றியாவது பேச்செடுத்தால் "நம்மீதும் என்னுடைய இன்ன சகோதரர்மீதும் அல்லாஹ்வின் கருணை பொழியட்டும்" என்று முதலில் தமக்காகவும் பிறகு அந்த நபிக்காகவும் பிரார்த்திப்பார்கள்- நம் மீதும் அல்லாஹ்வின் கருணை பொழியட்டும்.
தொடர்ந்து அவர்கள் இருவரும் நடந்து, அற்பக் குணமுடைய ஒரு கிராமவாசிகளிடம் வந்தனர். அந்த மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று உணவு கேட்டுச் சுற்றிவந்தனர். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.
அப்போது அங்கு விழுந்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த ஒரு சுவரைக் கண்டனர். உடனே களிர் அதைத் தூக்கி நிறுத்தினார்கள். அதைக் கண்ட மூசா (அலை) அவர்கள், "நீர் நினைத்திருந்தால் இதற்குக் கூலியைப் பெற்றிருக்கலாமே?" என்று கூறினார்கள்.
களிர், "இதுவே எனக்கும் உமக்குமிடையே பிரியும் நேரமாகும்" என்று கூறி, மூசாவின் ஆடையைப் பிடித்தார். மேலும்,உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கத்தை உமக்குக் கூறுகிறேன். அந்த மரக்கலம் கடலில் தொழில் செய்யும் ஏழைகள் சிலருக்குரியது..." என்று தொடங்கி, வசனத்தின் (18:79) இறுதிவரை சொல்லிக்காட்டினார்கள்.
அந்த மரக்கலத்தை அபகரித்துக்கொள்பவன் வந்து, ஓட்டையான நிலையில் மரக்கலத்தைக் கண்டால் அதை விட்டுவிடுவான். பிறகு அவர்கள் மூங்கில் கழியால் (ஓட்டையை அடைத்து) அதைப் பழுது பார்த்துவிடுவார்கள்.
அந்தச் சிறுவனோ, படைக்கும்போதே "இறைமறுப்பாளன்" என (இறைவனால்) தீர்மானிக்கப்பட்டு படைக்கப்பட்டான். அவனுடைய பெற்றோர் அவன்மீது மிகுந்த பாசம் வைத்திருந்தனர். அவன் பருவ வயதை அடைந்தால் அவ்விருவரையும் தவறான வழியிலும் இறைமறுப்பிலும் தள்ளிவிடுவான். (இறைவன் கூறுகிறான்:) "அவ்விருவரின் இறைவன் அவனுக்குப் பதிலாக அவனைவிடச் சிறந்த தூய்மையான நெருங்கி உறவாடக்கூடிய குழந்தையை மாற்றாக வழங்குவான்" என நினைத்தோம். (18:81)
அந்தச் சுவர், அந்நகரத்தில் உள்ள இரண்டு அநாதைச் சிறுவர்களுக்கு உரியதாகும். அதற்குக் கீழே அவ்விருவருக்கும் உரிய புதையல் இருந்தது என்று அந்த வசனத்தின் (18:82) இறுதிவரை சொல்லிக்காட்டினார்கள்.
இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4745. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் 18:77ஆவது வசனத்தின் மூலத்தில் ("லத்தகத்த அலைஹி அஜ்ரா" என்பதற்குப் பகரமாக) "லதகித்த அலைஹி அஜ்ரா" என்று ஓதினார்கள். (ஓதல் மாறுபட்டாலும் பொருள் ஒன்றே: இதற்குக் கூலியைப் பெற்றிருக்கலாமே!)
அத்தியாயம் : 43
4746. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"மூசா (அலை) (அவர்கள் சில ஞானங்களைக் கற்றுக்கொள்வதற்காக ஓர் அடியாரைத் தேடிச் சென்றார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகின்ற) அவர்களுடைய அந்தத் தோழர் யார்? அவர் "களிர்" அவர்கள்தானா என்பது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஹுர்ரு பின் கைஸ் பின் ஹிஸ்ன் அல்ஃபஸாரீ என்பாரும் கருத்து வேறுபாடு கொண்டு வழக்காடிக் கொண்டனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர் களிர் (அலை) அவர்கள்தான்" என்றார்கள்.
அப்போது உபை பின் கஅப் அல்அன் சாரீ (ரலி) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அவர்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அழைத்து, "அபுத்துஃபைல் அவர்களே! இங்கே வாருங்கள். நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூசா (அலை) அவர்கள் யாரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழி கேட்டார்களோ அந்தத் தோழர் யார் என்பது தொடர்பாக வழக்காடிக்கொண்டோம். அவரது நிலை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?" என்று வினவினார்கள்.
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) பதிலளித்தார்கள்:
(ஆம்;) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்: பனூ இஸ்ராயீல் மக்களின் ஒரு கூட்டத்தாரிடையே மூசா (அலை) அவர்கள் இருந்தபோது, அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "உங்களைவிட அறிந்தவர் எவரும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்க, மூசா (அலை) அவர்கள், "இல்லை (என்னைவிட அறிந்தவர் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை)" என்று சொன்னார்கள்.
உடனே மூசா (அலை) அவர்களுக்கு, "இருக்கிறார்; அவர்தான் நம் அடியார் களிர் ஆவார்" என்று அல்லாஹ் (வஹீ) அறிவித்தான்.
அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் அவர்களைச் சந்திக்க வழி கேட்டார்கள். அப்போது அல்லாஹ் மீன் ஒன்றை அவர்களுக்கு அடையாளமாக ஆக்கி, "நீர் எந்த இடத்தில் மீனைத் தவற விடுகிறீரோ அந்த இடத்திலிருந்து (வந்த வழியே) திரும்பிச் செல்லும். அங்கு களிரைச் சந்திப்பீர்" என்று அவரிடம் கூறப்பட்டது.
அவ்வாறே மூசா (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய தூரம்வரை (தம் உதவியாளருடன்) நடந்தார்கள். பிறகு தம் ஊழியரிடம் "நமது காலை உணவைக் கொண்டுவாரும்" என்று கூறினார்கள்.
அதற்கு மூசா (அலை) அவர்களின் உதவியாளர், "கவனித்தீர்களா! நாம் அந்தப் பாறையில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் மறந்துவிட்டேன். அதைக் கூறவிடாமல் ஷைத்தான்தான் என்னை மறக்கச் செய்துவிட்டான்" என்று கூறினார்.
மூசா (அலை) அவர்கள், "அதுதான் நாம் தேடிவந்த இடம்" என்று தம் உதவியாளரிடம் சொல்ல, இருவரும் தம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்தவழியே திரும்பிச் சென்றார்கள். அங்கே களிர் (அலை) அவர்களைக் கண்டார்கள் (18:63-65). பின்னர் அவ்விருவர் தொடர்பாக அல்லாஹ் தனது வேதத்தில் எடுத்துரைத்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூசா (அலை) அவர்கள் கடலில் அந்த மீன் ஏற்படுத்திச் சென்ற வழித்தடத்தைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43