4707. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ன மனிதர்தான் உம்முடைய தந்தை" என்று கூறினார்கள். மேலும், (அதையொட்டியே) "இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்கள் குறித்துக் கேள்வி எழுப்பாதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு வருத்தம் தரும்" (5:101) எனும் இறைவசனம் முழுமையாக அருளப்பெற்றது.
அத்தியாயம் : 43
4708. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) சூரியன் (நடுவானிலிருந்து) சாய்ந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து மக்களுக்கு லுஹர் தொழுகை தொழுவித்தார்கள்.
(தொழுகை முடிந்து) சலாம் கொடுத்ததும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி யுக முடிவு நாள் பற்றிக் குறிப்பிட்டார்கள். அந்த நாளுக்கு முன்பாக பயங்கரமான சம்பவங்கள் பல நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். பிறகு "எதைப் பற்றியேனும் யாரேனும் என்னிடம் கேட்க விரும்பினால் அவர் என்னிடம் கேட்கலாம். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இடத்தில் நான் இருக்கும்வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்காமலிருக்கமாட்டேன்" என்றும் சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டு மக்கள் அதிகமாக அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கேளுங்கள் என்னிடம்" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் எழுந்து, "என் தந்தை, யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உம்முடைய தந்தை ஹுதாஃபாதான்" என்று கூறிவிட்டு, "கேளுங்கள் என்னிடம்" எனத் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்நிலையைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதர் எனவும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றோம்" என்று கூறினார்கள்.
இவ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். பின்னர், "(நீங்கள் விரும்பாதவை நிகழும் நாள்) நெருங்கிவிட்டது. முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சற்று முன்னர் (நான் தொழுதுகொண்டிருந்தபோது) இந்தச் சுவரி(ன் திசையி)ல் எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. இந்த நாளைப் போன்று (வேறெந்த நாளிலும்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டதேயில்லை" என்று சொன்னார்கள்.
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் தம்மிடம் கூறியதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்:
அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் (தம் தந்தை யார் என்று வினவியதால் அவருடைய) தாயார்,அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்களிடம், "உன்னைவிட பெற்ற தாயைப் புண்படுத்திய ஒரு மகனைப் பற்றி ஒருபோதும் நான் கேள்விப்பட்டதேயில்லை. அறியாமைக் காலப்பெண்கள் செய்யும் பாவச்செயல்களில் ஒன்றை உன் தாயும் செய்திருக்க, அவளை நீ மக்கள்முன் அம்பலப்படுத்தினால் (அவளுக்கு அவமானம் ஏற்படாது என) நீ அச்சமற்று இருப்பாயா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஒரு கறுப்பு அடிமையுடன் இணைத்து (அவர்தான் உன் தந்தை என்று) கூறியிருந்தாலும் நிச்சயமாக அவரோடு என்னை நான் இணைத்துக்கொண்டிருப்பேன். (அவருடைய பிள்ளை என்று என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளவே செய்வேன்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4709. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்தி கேள்வி கேட்டுவந்தனர். ஆகவே, ஒரு நாள் அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, "கேளுங்கள் என்னிடம்; (இன்று) நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப்போவதில்லை" என்று (கோபத்துடன்) கூறினார்கள்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டு மக்கள் வாய்மூடி அமைதியாகி விட்டனர். நபியவர்கள் ஏதோ அசாதாரண நிலையில் இருக்கலாம் என்று மக்கள் பயந்து விட்டனர்.
அப்போது நான் வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது, (அங்கிருந்த) ஒவ்வொருவரும் தமது ஆடையால் தலையைச் சுற்றிப் போர்த்தியபடி அழுதுகொண்டிருந்தனர். அப்போது அந்தப் பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதர் பேசத் தொடங்கினார். அம்மனிதர் பிறருடன் வழக்காடும்போது, அவருடைய தந்தையல்லாத மற்றொருவரின் மகன் என அழைக்கப்பட்டுவந்தார்.
அவர், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் தந்தை ஹுதாஃபாதான்" என்று சொன்னார்கள். பிறகு (நபியவர்களின் நிலையைக் கண்ட) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், குழப்பங்களின் தீமையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரியபின் "நாங்கள் அல்லாஹ்வை (மட்டுமே) இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதர் எனவும் மனநிறைவுடன் ஏற்றோம்" என்று கூறலானார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் ஒருபோதும் நான் கண்டதில்லை. எனக்கு (இன்று) சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்தச் சுவருக்கு அப்பால் நான் கண்டேன்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4710. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது. இவ்வாறு அதிகமாக வினவப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்து விட்டார்கள். பிறகு மக்களிடம், "நீங்கள் விரும்பிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது ஒரு மனிதர் "என் தந்தை யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உம்முடைய தந்தை ஹுதாஃபா தான்" என்று கூறினார்கள். மற்றொருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஷைபாவின் முன்னாள் அடிமையாயிருந்த சாலிம்தான் உம்முடைய தந்தை"என்று சொன்னார்கள். (இக்கேள்வியால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் தென்பட்ட கோபத்தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 38 நபி (ஸல்) அவர்கள் (விவசாயம் போன்ற) உலக நடைமுறைகள் தொடர்பாக ஆலோசனை என்ற முறையில் குறிப்பிட்டவை தவிர, மார்க்க விஷயங்களில் அவர்கள் கூறிய அனைத்துக்கும் கட்டுப்படுவது கடமையாகும்.
4711. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, "இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது,அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)
இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, "அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்து கொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததை வைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்கமாட்டேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4712. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். மக்கள் "(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்துவருகிறோம்" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம்" என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் "உதிர்ந்துவிட்டன" அல்லது "குறைந்து விட்டன".
அதைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், "நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே" என்று சொன்னார்கள்.
(இவ்வாறே சொன்னார்கள்) அல்லது இதைப் போன்று சொன்னார்கள் என அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அஹ்மத் பின் ஜஅஃபர் அல்மஅகரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆகவே, (அந்த ஆண்டில்) கனிகள் உதிர்ந்துவிட்டன" என்று ஐயப்பாடின்றி உறுதியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4713. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்துகொண்டிருந்த மக்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, "நீங்கள் (இவ்வாறு) செய்யாமலிருந்தால் நன்றாயிருக்குமே!" என்று சொன்னார்கள். ஆகவே, (அவர்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். அதனால் அந்த மகசூலில்) நன்றாகக் கனியாத தாழ்ந்த ரகக் காய்களே காய்த்தன.
அப்போது அவர்களைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றபோது, "உங்கள் (பேரீச்ச) மரங்களுக்கு என்ன நேர்ந்தது?"என்று கேட்டார்கள். மக்கள், "நீங்கள் இப்படி இப்படிச் சொன்னீர்கள். (அதனால் நாங்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டோம். அதனால் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது)" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னைவிட) நீங்களே நன்கு அறிந்தவர்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 39 நபி (ஸல்) அவர்களைப் பார்த்தல், அவர்களைப் பார்க்க வேண்டுமென ஆசைப்படல் ஆகியவற்றின் சிறப்பு.
4714. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நிச்சயமாக உங்களிடம் ஒரு நாள் வரும். (அன்று) என்னை நீங்கள் காண இயலாது. (நான் இறந்துபோயிருப்பேன்.) ஆனால், உங்களில் ஒருவர் (அன்று சிறிது நேரம்) என்னைப் பார்ப்ப(தற்கு வாய்ப்புக் கிடைப்ப)தானது, அவருடைய குடும்பத்தாரையும் செல்வங்கள் அனைத்தையும்விட அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும்.
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
என்னைப் பொறுத்தவரை இந்த ஹதீஸின் பொருளாவது: அவர்களுடன் என்னையும் அவர் பார்ப்பதானது, அவருடைய குடும்பத்தாரையும் செல்வங்களையும்விட அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும். இந்த ஹதீஸின் வாசகங்கள், முன் பின்னாக இடம்பெற்றுள்ளது என்பதே என் கருத்தாகும்.
அத்தியாயம் : 43
பாடம் : 40 (இறைத்தூதர்) ஈசா (அலை) அவர்களின் சிறப்புகள்.
4715. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மர்யமின் மைந்தருக்கு (ஈசாவுக்கு) மிகவும் நெருக்கமானவன் ஆவேன். நபிமார்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். எனக்கும் ஈசா அவர்களுக்குமிடையே வேறு எந்த இறைத்தூதரும் இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4716. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஈசா (அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன். நபிமார்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். எனக்கும் ஈசா அவர்களுக்குமிடையே வேறெந்த இறைத்தூதரும் இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4717. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இம்மையிலும் மறுமையிலும் மர்யமின் மைந்தர் ஈசா அவர்களுக்கு மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன்" என்று கூறினார்கள்.
அப்போது "அது எப்படி, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நபிமார்களின் அன்னையர்கள் (வேறுபட்ட) பலராய் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தந்தைவழிச் சகோதரர்கள் ஆவர். அவர்கள் அனைவரது மார்க்கமும் ஒன்றே. எங்கள் (இருவர்) இடையே எந்த இறைத்தூதரும் இல்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4718. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அதை ஷைத்தான் தீண்டாமல் இருப்பதில்லை. ஷைத்தான் தீண்டுவதால் குழந்தை வீறிட்டழுகிறது; மர்யமின் புதல்வரையும் அவருடைய தாயார் மர்யமையும் தவிர" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "நீங்கள் விரும்பினால், "இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாக்குமாறு உன்னிடம் நான் கோருகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்)" (3:36) எனும் இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "குழந்தை பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் குழந்தை வீறிட்டழுகிறது" என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
ஷுஐப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("ஷைத்தான் தீண்டுவதால்" என்பதைக் குறிக்க "மிம் மஸ்ஸத்திஷ் ஷைத்தான்"என்பதற்குப் பகரமாக) "மிம் மஸ்ஸிஷ் ஷைத்தான்" என்று (சிறிய மாற்றத்துடன்) காணப்படுகிறது.
அத்தியாயம் : 43
4719. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகன் (மனிதன்) ஒவ்வொருவரையும், தாய் வயிற்றிலிருந்து அவன் பிறக்கும் நாளில் ஷைத்தான் தீண்டவே செய்கிறான்; மர்யமையும் அவருடைய புதல்வரையும் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4720. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஷைத்தான் தீண்டுவதாலேயே குழந்தை பிறக்கும்போது வீறிட்டழுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4721. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மர்யமின் புதல்வர் (ஈசா (அலை) அவர்கள்), ஒரு மனிதர் திருடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவனிடம், "நீ திருடினாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "யாரைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக! இல்லை (நான் திருடவில்லை)" என்றான்.
உடனே ஈசா (அலை) அவர்கள், "அல்லாஹ்வை (முன்னிறுத்தி சத்தியமிட்டு அவன் கூறுவதால் அவன் கூறியதை) நான் நம்பினேன். (திருடுவதைப் போன்று நானாகவே எண்ணிக்கொண்டதால்) என்னை நான் நம்ப மறுக்கிறேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 41 இறையன்பர் இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறப்புகள்..
4722. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "படைப்பினங்களிலேயே மிகவும் சிறந்தவரே!" என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அது இப்ராஹீம் (அலை) அவர்கள்தான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே..." என்று கூறினார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
- மேற்கண்ட அதே ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4723. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது எண்பதாவது வயதில் வாய்ச்சியினால் விருத்த சேதனம் செய்துகொண்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4724. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்துவிட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால்) நாமே இப்ராஹீம் (அலை) அவர்களைவிடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (ஆகவே,சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.) இப்ராஹீம் (அலை) அவர்கள், "என் இறைவா! இறந்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக" என்று கேட்ட போது, "(அதை) நீர் நம்பவில்லையா?"என (அல்லாஹ்) கேட்டான். அதற்கு அவர் "அவ்வாறன்று (நம்பியிருக்கிறேன்); எனினும், எனது உள்ளம் நிம்மதியடைவதற்காகவே (கேட்கிறேன்)" என்று கூறினார். (2:260)
லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள்.
யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவுக்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால், (விடுதலையளிக்க) அழைத்தவரிடம் (அவரது அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) நான் ஒப்புக்கொண்டிருப்பேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4725. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"லூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு அருள்வானாக. வலுவான ஓர் ஆதரவாளனிடமே அவர்கள் தஞ்சம் புகுந்தார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 43
4726. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் ஒருபோதும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை:
1. (இணைவைக்கும் திருவிழாவுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களை மக்கள் அழைத்தபோது) "நான் நோயுற்றிருக்கிறேன்" என்று (அதில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியது.
2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு, மக்கள் "இப்படிச் செய்தது யார்?"என்று கேட்டபோது) "ஆயினும், இவர்களில் பெரியதான சிலைதான் இதைச் செய்தது" என்று கூறியது.
3. இன்னொரு பொய் (தம் துணைவி) சாரா விஷயத்தில் அவர்கள் சொன்னதாகும்: (அதன் விவரம் வருமாறு:)
(ஒரு நாள்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியார்) சாரா (அலை) அவர்களுடன் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய நாட்டுக்குச் சென்றார்கள். சாரா (அலை) அவர்கள் மக்களிலேயே மிகவும் அழகிய பெண்மணியாக இருந்தார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் சாரா அவர்களிடம், "இந்தக் கொடுங்கோல் மன்னன், நீ என் துணைவி என அறிந்து கொண்டால் உன்னை என்னிடமிருந்து கைப்பற்றிக்கொள்வான். (நீ யார் என) அவன் உன்னிடம் கேட்டால் "நீ என் சகோதரி" என்று கூறிவிடு. ஏனெனில், இஸ்லாத்தில் நீ என் சகோதரிதான். மேலும், பூமியில் உன்னையும் என்னையும் தவிர முஸ்லிம்கள் வேறெவரும் இருப்பதாக நான் அறியவில்லை" என்று கூறினார்கள்.
பிறகு அவர்கள் அந்த நாட்டுக்குள் நுழைந்தபோது, அந்த மன்னனுக்கு வேண்டியவர்களில் ஒருவன் சாரா அவர்களைப் பார்த்து விட்டு மன்னனிடம் சென்று, "(மன்னா!) உங்கள் நாட்டுக்குப் பெண்ணொருத்தி வந்துள்ளாள். உங்களுக்குரியவளாக இருப்பதைத் தவிர வேறெதுவும் அவளுக்குத் தகாது" என்று சொன்னான். ஆகவே, மன்னன்,சாரா அவர்களிடம் ஆளனுப்பினான். சாரா அவனிடம் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் தொழுவதற்காக நின்றுகொண்டார்கள். சாரா மன்னனிடம் சென்றபோது,அவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளாமல் சாராவை நோக்கித் தனது கையை நீட்டினான். உடனே அவனது கை (வலிப்பு நோயால்) கடுமையாக இழுத்துக்கொண்டது. உடனே அவன் சாரா அவர்களிடம், "அல்லாஹ்விடம் (என் கைகளை) விடுவிக்கும்படி எனக்காகப் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கிழைக்கமாட்டேன்" என்று சொன்னான்.
அவ்வாறே அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அவன் குணமடைந்ததும்) மீண்டும் அவன் (அவர்களை நோக்கி) கையை நீட்டினான். அப்போது முன்பைவிடக் கடுமையாக அவனுடைய கை இழுத்துக்கொண்டது. அவன் முன்பு போன்றே மீண்டும் (பிரார்த்திக்கும்படி) கூறினான். அவ்வாறே சாராவும் பிரார்த்தித்தார்கள்.
(குணமடைந்ததும்) மறுபடியும் அவன் கையை நீட்டியபோது முந்தைய இரு தடவைகள் இழுத்துக்கொண்டதைவிட மிகக் கடுமையாக அவனது கை இழுத்துக்கொண்டது. அப்போது அவன் எனது கையை விடும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். உனக்கு அல்லாஹ்வே சாட்சி. (இனி) உனக்கு நான் தீங்கிழைக்கமாட்டேன்" என்று கூறினான்.
அவ்வாறே சாரா அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவனது கை விடுவிக்கப்பட்டது. சாராவை அழைத்து வந்தவனை மன்னன் அழைத்து, "நீ ஒரு மனுஷியை என்னிடம் கொண்டுவரவில்லை. ஒரு ஷைத்தானையே என்னிடம் கொண்டுவந்துள்ளாய். இவளை எனது நாட்டிலிருந்து வெளியேற்றி விடு. இவளுக்கு ஹாஜர் எனும் (அடிமைப்) பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்துவிடு" என்று கூறினான்.
சாரா தம்மை நோக்கி நடந்துவருவதை இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்டபோது (தொழுகையை முடித்துத்) திரும்பினார்கள். அவரிடம் "என்ன நடந்தது?" என்று கேட்டார்கள். சாரா அவர்கள், "நல்லதே நடந்தது. அத் தீயவனின் கையை இறைவன் தடுத்துவிட்டான். ஒரு பணியாளரையும் கொடுத்தான்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"மாஉஸ் ஸமாஉ" (வான் மழை) குலத்தாரே! அவர் (ஹாஜர்)-தான் உங்கள் தாயார்.
அத்தியாயம் : 43