4687. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 33 நபி (ஸல்) அவர்கள் மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்?
4688. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் (நபியாக்கப்பட்ட பின்னர்) மக்காவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "பத்து ஆண்டுகள்" என்று பதிலளித்தார்கள். நான், "ஆனால், பதிமூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்" என்று சொன்னேன்.
- அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உர்வா (ரஹ்) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் (நபியாக்கப்பட்ட பின்பு) மக்காவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பத்து ஆண்டுகள்" என்று பதிலளித்தார்கள். "ஆனால்,பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தங்கியிருந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்களே?" என்று நான் கேட்டேன்.
அப்போது உர்வா (ரஹ்) அவர்கள், "அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக!" என்று பாவ மன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்துவிட்டு, "இப்னு அப்பாஸ், அந்த (அபூகைஸ் என்ற) கவிஞரின் வரிகளிலிருந்தே அதை எடுத்துரைக்கிறார்"என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4689. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் பதிமூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்கள். தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4690. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் மக்காவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள். (புலம் பெயர்ந்தபின்) மதீனாவில் பத்தாண்டுகள் இருந்தார்கள். தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள்.
அத்தியாயம் : 43
4691. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது அ(ங்கிருந்த)வர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வயது பற்றிப் பேசிக்கொண்டனர். சிலர், "அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட அதிக வயதுடையவராக இருந்தார்கள்" என்று கூறினர். அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் அறுபத்து மூன்று வயதில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அறுபத்து மூன்றாம் வயதில் கொல்லப் பட்டார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது அங்கிருந்த மக்களில் ஆமிர் பின் சஅத் (ரஹ்) எனப்படும் ஒருவர் கூறினார்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் பின்வருமாறு எங்களிடம் கூறினார்கள்:
(ஒரு முறை) நாங்கள் முஆவியா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அ(ங்கிருந்த)வர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வயது பற்றிப் பேசிக் கொண்டனர். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் அறுபத்து மூன்று வயதில் இறந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அறுபத்து மூன்று வயதில் கொல்லப் பட்டார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 43
4692. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றும்போது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து மூன்றாம் வயதில் இறந்தார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அறுபத்து மூன்றாம் வயதிலேயே இறந்தனர். நானும் அறுபத்து மூன்றாம் வயதிலேயே (இறக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4693. பனூ ஹாஷிம் குலத்தாரின் முன்னாள் அடிமையான அம்மார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்போது அவர்களுக்கு எத்தனை வயது நடந்துகொண்டிருந்தது?" என்று கேட்டேன். "ஒரு கூட்டத்தில் உள்ள உம்மைப் போன்ற ஒருவருக்கு இந்த விவரம்கூட தெரியாமலிருக்கும் என்று நான் கருதவில்லை" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான், "இதைப் பற்றி மக்களிடம் நான் கேட்டு விட்டேன். ஆனால், அவர்கள் மாறுபட்ட கருத்தை என்னிடம் தெரிவித்தார்கள். ஆகவே, அதில் தங்களது கருத்தை அறிய விரும்பினேன்" என்று சொன்னேன்.
உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நீர் எண்ணிக் கணக்கிடுவாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "நாற்பது வயதிலிருந்து தொடங்குவீராக. நாற்பதாவது வயதில் அவர்கள் நபியாக அனுப்பப்பெற்றார்கள். பதினைந்து ஆண்டுகள் மக்காவில் (சில வேளை எதிரிகளைப் பற்றிய) பயமின்றியும் (சில வேளை) பயத்துடனும் இருந்தார்கள். மதீனாவிற்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4694. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அறுபத்து ஐந்தாம் வயதில் இறந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4695. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நபித்துவத்துக்குப்பின்) மக்காவில் பதினைந்து ஆண்டுகள் தங்கினார்கள். (அங்கு வானவர்) யாரையும் (நேரடியாகப்) பார்க்காமல் வெறும் (அசரீரி) சப்தத்தைக் கேட்டுக்கொண்டும் (வானவரின்) ஒளியைப் பார்த்துக்கொண்டும் ஏழு ஆண்டுகள் இருந்தார்கள். மேலும், எட்டு ஆண்டுகள் வேதஅறிவிப்பு (குர்ஆன்) அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இருந்தார்கள். (புலம்பெயர்ந்தபின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள்.
4696. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் "முஹம்மத்" (புகழப்பட்டவர்) ஆவேன். நான் "அஹ்மத்" (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் "மாஹீ" (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் (ஏக) இறைமறுப்பு அழிக்கப்படுகிறது. நான் "ஹாஷிர்" (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் எனக்குப் பின்னால் ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் "ஆகிப்" (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் இல்லை.
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4697. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் "முஹம்மத்" (புகழப்பட்டவர்) ஆவேன். நான் "அஹ்மத்" (இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் "மாஹீ" (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறைமறுப்பை அழிக்கின்றான். நான் "ஹாஷிர்" (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் "ஆகிப்" (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை" என்று கூறினார்கள்.
அவர்களுக்கு அல்லாஹ் "ரஊஃப்" (பேரன்புடையவர்) என்றும் "ரஹீம்" (இரக்கமுடையவர்) என்றும் பெயர் சூட்டியுள்ளான்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் "ஆகிப்" என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "தமக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லாதவர்" என்று பதிலளித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
மஅமர், உகைல் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "(என் மூலம் ஏக இறை)மறுப்பாளர்களை (அல்லாஹ் அழிக்கிறான்)"என்று இடம்பெற்றுள்ளது. ஷுஐப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இறைமறுப்பை (அழிக்கிறான்)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4698. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பல பெயர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். "நான் "முஹம்மத்" (புகழப்பட்டவர்), "அஹ்மத்" (இறைவனை அதிகமாகப் போற்றுபவர்), "முகஃப்பீ" (இறுதியானவர்), "ஹாஷிர்" (ஒன்றுதிரட்டுபவர்), "நபிய்யுத் தவ்பா" (பாவமன்னிப்புடன் வந்த தூதர்), "நபிய்யுர் ரஹ்மத்" (இரக்கத்துடன் நடந்துகொள்ளுமாறு போதிக்க வந்த தூதர்) ஆவேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 35 நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிகவும் அறிந்திருந்ததும் அவனை மிகவும் அஞ்சி நடந்ததும்.
4699. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு செயலைத் தாமும் செய்துவிட்டு (மற்றவர் களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். இச்செய்தி நபித்தோழர்களில் சிலருக்கு எட்டியபோது, அதை விரும்பாததைப் போன்று அதைச் செய்வதிலிருந்து அவர்கள் தவிர்ந்து கொண்டனர்.
இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (மக்களிடையே) நின்று உரையாற்றினார்கள்.
அப்போது "சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் ஒன்றைச் செய்வதற்கு அனுமதியளித்த செய்தி அவர்களுக்கு எட்டியும்கூட அதை அவர்கள் வெறுத்து, அதைச் செய்வதிலிருந்து தவிர்ந்துகொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களையெல்லாம் விட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4700. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்வதற்கு (மக்களுக்கு) அனுமதி யளித்தார்கள். மக்களில் சிலர் அதைச் செய்வதிலிருந்து தவிர்ந்துகொண்டனர். (அதைச் செய்வதை வெறுத்தனர்.) இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக்கென்றால் கோபம் அவர்களது முகத்தில் வெளிப்பட்டது.
பிறகு, "சிலருக்கு என்ன நேர்ந்தது? எனக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள ஒரு விஷயத்தை வெறுக்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களையெல்லாம்விட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி நடப்பது கடமையாகும்.
4701. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவாசிகள், தம் பேரீச்சந்தோப்புகளுக்கு நீர் பாய்ச்ச பயன்படுத்திவந்த "ஷிராஜுல் ஹர்ரா" எனும் கால்வாய் தொடர்பாக அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் தகராறு செய்தார். அந்த அன்சாரித் தோழர், "மடையைத் திறந்துவிடுங்கள்; தண்ணீர் பாயட்டும்!" என்று சொன்னார். ஸுபைர் (ரலி) அவர்கள், (மடையைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள். (இதையடுத்து) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுசென்றனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களிடம், "ஸுபைரே! (உங்கள் தோப்புக்கு) நீர் பாய்ச்சிவிட்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்குத் தண்ணீரைத் திறந்துவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
உடனே அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, "அவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவர் முதலில் நீர் பாய்ச்சிக்கொண்டு, பிறகு எனக்குத் திறந்துவிடும்படி அவருக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?" என்று கேட்டார்.
இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது. அவர்கள் (என் தந்தையிடம்), "ஸுபைரே! நீங்கள் உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சுங்கள். பிறகு வரப்புகள் எட்டும்வரை தண்ணீரை (மடை கட்டி)த் தேக்கி நிறுத்தி விடுங்கள்" என்று சொன்னார்கள்.
ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! "உம்முடைய இறைவன் மீதாணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட வழக்கில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்குகின்ற தீர்ப்பால் தம் உள்ளங்களில் அவர்கள் எந்த அதிருப்தியும் கொள்ளாமல் (அதற்கு) முழுமையாகக் கட்டுப்படாத வரை நம்பிக்கை கொண்டவர்களாக ஆகமாட்டார்கள்" (4:65) எனும் இறைவசனம் இந்த விவகாரத்தில்தான் அருளப்பெற்றது என்று நான் எண்ணுகிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும், அவர்களிடம் தேவையற்ற விஷயங்கள் அல்லது மார்க்க விதிகளுக்குத் தொடர்பில்லாதவை மற்றும் நிகழாத விஷயங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகமாகக் கேள்விகள் கேட்காமலிருப்பதும்.
4702. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் எதை(ச் செய்ய வேண்டாமென) உங்களுக்குத் தடை செய்துள்ளேனோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். நான் எதை(ச்செய்யுமாறு) உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளேனோ அதை உங்களால் இயன்ற வரை செய்யுங்கள். ஏனெனில், உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தம் இறைத்தூதர்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4703. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் எதை(ச் செய்யுங்கள் என்றோ செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களிடம் (உங்களது முடிவுக்கு) எது விடப்பட்டுள்ளதோ (அதைப் பற்றி எதுவும் கேட்காமல் நீங்களும் விட்டு விடுங்கள்). ஏனெனில், உங்களுக்குமுன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம்..." என்று (சிறிது வேறுபாட்டுடன்) காணப்படுகிறது.
அத்தியாயம் : 43
4704. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முஸ்லிம்களுக்குத் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றி (என்னிடம்) கேள்வி கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்டு விடுமானால், அவர்தான் முஸ்லிம்களிலேயே முஸ்லிம்களுக்குப் பெரும் குற்றம் இழைத்தவர் ஆவார்.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4705. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்விகேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே மக்களுக்கு அது (இறைவனால்) தடை செய்யப்பட்டுவிடுமானால், அவர் தான் முஸ்லிம்களிலேயே முஸ்லிம்களுக்குப் பெருங்குற்றம் இழைத்தவர் ஆவார்.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவிக்கும்போது,) "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை நான் மனனமிட்டுள்ளதைப் போன்று இந்த ஹதீஸை நான் (நன்கு) மனனமிட்டுள்ளேன்" என்று கூறியதாகவும் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அந்த மனிதர் (தடை செய்யப்படாத) ஒன்றைப் பற்றிக் கேட்டார்;அதைப் பற்றி துருவித் துருவி வினவினார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4706. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, தம் தோழர்கள் (ஒன்றைக் குறித்து அதிருப்தியாகப்) பேசியது தொடர்பாகத் தகவல் கிடைத்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். (அதில்) அவர்கள், "(சற்று முன்னர்) எனக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. இந்த நாளைப் போன்று வேறெந்த நாளிலும் நல்லதையும் கெட்டதையும் நான் கண்டதேயில்லை. நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்;அதிகமாக அழுவீர்கள்" என்று குறிப்பிட்டார்கள்.
அதைவிட (மனவேதனை அளித்த) கடினமான ஒரு நாள் நபித்தோழர்களுக்கு வந்ததில்லை. அவர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதனர்.
உடனே உமர் (ரலி) அவர்கள் எழுந்து, "அல்லாஹ்வை (மட்டுமே) இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றோம்" என்று கூறினார்கள்.
அ(ங்கிரு)ந்த மனிதர் (ஒருவர்) எழுந்து, "என் தந்தை யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ன மனிதர்தான் உம்முடைய தந்தை" என்று சொன்னார்கள். அப்போதுதான் "இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சில விஷயங்கள் குறித்துக் கேள்வி எழுப்பாதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு வருத்தம் தரும்" (5:101) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43