பாடம்: 1 வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், (எண்ணிக்கையில்) குறைந்தவர்கள் அதிகமானவர்களுக்கும் (முதலில்) முகமன் (சலாம்) சொல்ல வேண்டும்.
4364. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், (எண்ணிக்கையில்) குறைந்தவர்கள் அதிகமானவர்களுக்கும் (முதலில்) முகமன் (சலாம்) சொல்லட்டும். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 2 முகமனுக்குப் பதிலுரைப்பது சாலையில் அமர்வதன் ஒழுங்கு முறைகளில் ஒன்றாகும்.
4365. அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் வீட்டு முற்றங்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களிடையே நின்று, "சாலையோரங்களில் அமர்ந்து (பேசிக்) கொண்டிருப்பதற்கு உங்களுக்கு என்ன (அவசியம்) நேர்ந்தது? சாலையோரங்களில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் "அவசியத்தை முன்னிட்டே அமர்கிறோம். (இங்கு அமர்ந்துதான் பல விஷயங்கள் குறித்து) நாங்கள் பேசிக்கொள்கிறோம்;கலந்துரையாடுகிறோம்" என்று கூறினோம்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதைத் தவிர்க்க முடியாது என்றிருந்தால், சாலைகளுக்கு அவற்றின் உரிமையை வழங்கிவிடுங்கள். (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், முகமனுக்குப் பதிலுரைப்பதும், நல்ல பேச்சுக்களைப் பேசுவதும் (அவற்றின் உரிமை) ஆகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 39
4366. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு வழங்க வேண்டிய உரிமையை வழங்கிவிடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "சாலையின் உரிமை என்ன?" என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், "(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், முகமனுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமை) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 3 முகமனுக்குப் பதிலுரைப்பது, ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகும்.
4367. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும். 1. முகமனுக்குப் பதிலுரைப்பது 2. தும்மி ("அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறி)யவருக்கு ("யர்ஹமுகல்லாஹ்" என்று) மறுமொழி கூறுவது 3. விருந்தழைப்பை ஏற்பது. 4. நோயாளியை நலம் விசாரிப்பது 5. ஜனாஸாவில் கலந்து கொள்வது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(பொதுவாக) இந்த ஹதீஸை மஅமர் (ரஹ்) அவர்கள், ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து "முர்சலா"கவே அறிவிப்பார்கள்.
ஒரு முறை மஅமர் (ரஹ்) அவர்கள், "ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடமிருந்தும்,சயீத் அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும் கூறியதாவது" என்று (முஸ்னதாக) அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 39
4368. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆறாகும்" என்று கூறினார்கள். "அவை யாவை, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுவாயாக. அவர் உன்னை விருந்துக்கு அழைத்தால் அவருக்குப் பதிலளிப்பாயாக. அவர் உன்னிடத்தில் அறிவுரை கூறச்சொன்னால் அவருக்கு அறிவுரை கூறுவாயாக. அவர் தும்மி "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினால் (யர்ஹமு கல்லாஹ் என்று) அவருக்கு மறுமொழி கூறுவாயாக. அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை உடல்நலம் விசாரிப்பாயாக. அவர் இறந்துவிட்டால் அவரது ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வாயாக" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 4 வேதக்காரர்களுக்கு (நாம்) முதலில் முகமன் கூறுவது தடை செய்யப்பட்டதாகும் என்பதும் அவர்களுக்கு எவ்வாறு பதில் முகமன் கூற வேண்டும் என்பதும்.
4369. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வேதக்காரர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால், "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4370. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "வேதக்காரர்கள் எங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால், நாங்கள் அவர்களுக்கு எவ்வாறு பதில் (முகமன்) கூற வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால் அவர்களில் சிலர் "அஸ்ஸாமு அலைக்க" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) "அலைக்க" (நீ சொன்னது உனக்கு உண்டாகட்டும்) என்று கூறுவீராக.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4372. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) "வ அலைக்க" (நீ சொன்னது உனக்கும் உண்டாகட்டும்) என்று கூறுவீராக"என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4373. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டு "அஸ்ஸாமு அலைக்கும்" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினர். உடனே நான் "அலைக்குமுஸ் ஸாமு வல்லஅனா" (உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று பதில் சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே விரும்புகிறான்" என்று கூறினார்கள்.
நான் "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்தான் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்க வில்லையா)?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான்தான் "அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லிவிட்டேனே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள்" என இடம்பெற்றுள்ளது. அவற்றில் ("அலைக்கும்" என்பதற்கு முன்) "வ" எனும் (இடைச்)சொல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 39
4374. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க"" (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (பதில்) சொன்னார்கள். நான் "அலைக்குமுஸ் ஸாமு வத்தாமு" (உங்களுக்கு மரணமும் இழிவும் உண்டாகட்டும்) என்று பதில் (முகமன்) கூறினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! அருவருப்பாகப் பேசுபவளாக இராதே" என்று கூறினார்கள். நான், "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்தான் அவர்கள் சொன்னதற்கு "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாக) பதில் சொல்லி விட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா)?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "ஆயிஷா (ரலி) அவர்கள், யூதர்கள் கூறியதைப் புரிந்துகொண்டு (பதிலுக்கு) அவர்களை ஏசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! நிதானம்! ஏனெனில், அல்லாஹ் இயற்கையாகவோ செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசுவதை விரும்புவதில்லை" என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
மேலும், அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "(நபியே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு முகமனாக ஆக்கவில்லையோ அதை உமக்கு முகமனாகக் கூறுகின்றனர்" (58:8) எனும் வசனத்தை முழுமையாக அருளினான் என்று கூடுதலாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 39
4375. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு "அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று முகமன் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாக பதில்) கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கோபப்பட்டு, "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; நான் கேட்டுவிட்டு அவர்களுக்கு (நளினமாக) பதில் சொல்லிவிட்டேனே! அவர்களுக்கு எதிராக நாம் செய்த பிரார்த்தனை ஏற்கப்படும். நமக்கெதிராக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்கப்படாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4376. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால், சாலையின் நெருக்கடியான பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "யூதர்களை நீங்கள் சந்தித்தால்" என்றும், முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "வேதக்காரர்கள் தொடர்பாக ஷுஅபா (ரஹ்) அவர்கள் (மேற் கண்ட ஹதீஸில் உள்ளபடி) கூறினார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்களை நீங்கள் சந்தித்தால்" என்று அந்த இணைவைப்பாளர்களில் யாருடைய பெயரும் குறிப்பிடாமல் அறிவிக்கப்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
பாடம்: 5 (பெரியவர்கள்) சிறாருக்கு முகமன் கூறுவது விரும்பத்தக்கதாகும்.
4377. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது, அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4378. சய்யார் பின் அபீசய்யார் வர்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது அவர்கள் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினார்கள்.
"(ஒரு முறை) நான் அனஸ் (ரலி) அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் அச்சிறுவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினார்கள். மேலும், அனஸ் (ரலி) அவர்கள், "(ஒரு முறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அச்சிறுவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகமன் (சலாம்) கூறினார்கள் என்றும் கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 6 வீட்டுவாசலில் திரையை விலக்கிவைத்திருப்பது போன்ற அடையாளங்களை, உள்ளே செல்ல அனுமதியாகக் கருதலாம்.
4379. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "(என் வீட்டுவாசலில்) திரை விலக்கப்படுவதும், எனது அரவத்தை நீ செவியுறுவதும் என்னிடம் (வீட்டுக்குள்) நீ வரலாம் என்பதற்கான அனுமதியாகும். நானாக (வரவேண்டாம் எனத்) தடுக்காதவரை" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 7 இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காகப் பெண்கள் வெளியே செல்லலாம்.
4380. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பர்தா" அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னர் (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) சவ்தா (ரலி) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக (இரவு நேரத்தில்) வெளியே சென்றார்கள். சவ்தா (ரலி) அவர்கள் பெண்களிலேயே நல்ல உயரமும் (உயரத்துக்கு ஏற்ற) பருமனும் உள்ளவராக இருந்தார்கள். அவரை அறிந்தவர்களுக்கு அவர் (பர்தா அணிந்து சென்றாலும் அவர்) யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களைப் பார்த்து (அறிந்து) விட்டு, "சவ்தாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! (பர்தா அணிந்திருந்தாலும்) நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அறிந்து கொள்ளப்படுகிற நிலையில்) எப்படி வெளியே வருகிறீர்கள் என்பது குறித்து யோசித்துப் பாருங்கள்" என்று சொன்னார்கள்.
சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பிவந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கையில் இறைச்சி கலந்த எலும்புத்துண்டு ஒன்று இருந்தது. சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் நுழைந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் (இயற்கைக் கடனை நிறைவேற்ற) வெளியே சென்றேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் இப்படி இப்படிச் சொன்னார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி (வஹீ) வந்தது. பின்னர் அந்நிலை விலக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் அந்த எலும்புத்துண்டு (அப்படியே) இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்திருக்கவில்லை. மேலும், அவர்கள் "(பெண்களே!) நீங்கள் உங்கள் (அடிப்படைத்) தேவைகளுக்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீ ஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சவ்தா (ரலி) அவர்கள் பெண்களிலேயே நல்ல உயரமான உடல்வாகு கொண்டவராயிருந்தார்" என்று இடம்பெற்றுள்ளது. மேலும் அவர்களது அறிவிப்பில் "அதாவது கழிப்பிடங்களுக்கு(ச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது)" என்று ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "சவ்தா (ரலி) அவர்கள் மக்களிலேயே நல்ல உயரமான உடல்வாகு கொண்ட பெண்ணாக இருந்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4381. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர் (மதீனாவின்) புறநகர்ப் பகுதிகளுக்கு இயற்கைக் கடனை நிறைவேற்ற இரவு வேளைகளில் புறப்பட்டுச் செல்வார்கள். ("புற நகர்ப் பகுதிகள்" என்பதைக் குறிக்க ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) "மனாஸிஉ" எனும் சொல், விசாலமான இடங்களைக் குறிக்கும். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "தங்கள் துணைவியரைத் திரைக்குள்ளிருக்குமாறு கூறுங்கள்" என்று சொல்வார்கள்.
ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இந்நிலையில் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் ஓர் இரவில் இஷா நேரத்தில் வெளியே சென்றார்கள்.
சவ்தா (ரலி) அவர்கள் உயரமான பெண்ணாக இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களை நோக்கி, "சவ்தாவே! (நீங்கள் பர்தா அணிந்திருந்தாலும்) நாங்கள் உம்மை யார் என்று அடையாளம் தெரிந்துகொண்டோம்" என்று கூறினார்கள். பர்தா தொடர்பான சட்டம் அருளப்பட வேண்டுமென்ற பேராவலிலேயே இவ்வாறு கூறினார்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அவ்வாறே பர்தா தொடர்பான வசனத்தை அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 8 அந்நியப் பெண்ணுடன் தனிமையில் இருப்பதும் அவளிடம் செல்வதும் தடை செய்யப்பட்டதாகும்.
4382. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவனத்தில் வையுங்கள்! கன்னிகழிந்த எந்தப் பெண்ணுடனும் எந்த ஆணும் இரவில் (தனியாகத்) தங்க வேண்டாம்;அவர் அவளை மணந்துகொண்டவராகவோ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினராகவோ இருந்தால் தவிர!
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4383. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர் (அவள் இருக்குமிடத்திற்குச் செல்வது) குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர் ("அல்ஹம்வு") மரணத்திற்கு நிகரானவர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39