4344. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் நான் (புலம்பெயர்ந்து) மதீனா சென்றேன். (வழியில்) "குபா"வில் நான் தங்கினேன். "குபா"விலேயே அவரை நான் பெற்றெடுத்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (குழந்தையைக் கொண்டு)சென்று அவர்களது மடியில் வைத்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதை மென்று, குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் உணவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது.
பிறகு (மீண்டும்) அந்தப் பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் தடவலானார்கள். பின்னர் குழந்தைக்காகப் பிரார்த்தித்தார்கள். அதற்காக அருள்வளம் (பரக்கத்) வேண்டினார்கள். (என் குழந்தை) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்குப்) பிறந்த முதல் குழந்தை ஆவார்.
- மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் (என் புதல்வர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரைக் கருவுற்றிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (மதீனாவுக்கு) நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றேன்..." என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 38
4345. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (பிறந்த) குழந்தைகள் கொண்டுவரப்படுவதுண்டு. அப்போது அவற்றுக்காக அவர்கள் அருள்வளம் (பரக்கத்) வேண்டிப் பிராத்திப்பார்கள். பேரீச்சம் பழத்தை மென்று, அதைக் குழந்தையின் வாயில் தடவிவிடுவார்கள்.
அத்தியாயம் : 38
4346. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரை, அவரது வாயில் பேரீச்சம் பழத்தை மென்று தடவுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அப்போது பேரீச்சம்பழம் ஒன்றைத் தேடினோம். அது கிடைப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது.
அத்தியாயம் : 38
4347. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ (ரலி) அவர்களின் புதல்வர் "முன்திர்" என்பார் பிறந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது மடியில் வைத்துக்கொண்டார்கள்.
அப்போது (குழந்தையின் தந்தை) அபூஉசைத் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். எதேச்சையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நிகழ்ந்த (சம்பவம்) ஒன்றினால் அவர்களின் கவனம் (வேறு பக்கம்) திரும்பியது. எனவே, அபூஉசைத் (ரலி) அவர்கள் தம் மகனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எடுத்துவருமாறு கூற, அவ்வாறே குழந்தையை அவர்களது மடியிலிருந்து எடுத்து, (வீட்டுக்குக்) கொடுத்தனுப்பி விட்டனர்.
சிறிது நேரத்தில் முந்தைய நிலைக்குத் திரும்பிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்தக் குழந்தை எங்கே?"என்று கேட்டார்கள். அதற்கு அபூஉசைத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! குழந்தையை (வீட்டுக்கு)க் கொடுத்தனுப்பிவிட்டோம்" என்று கூறினார்கள். அப்போது "அக்குழந்தையின் பெயரென்ன?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, "இன்னது, அல்லாஹ்வின் தூதரே!" என அபூஉசைத் கூறினார்கள்.
(அப்பெயரை விரும்பாததால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, (இனி) அவர் பெயர் "முன்திர்" (எச்சரித்து நல்வழிப்படுத்துபவர்) ஆகும்" என்று கூறினார்கள். "முன்திர்" என்று அக்குழந்தைக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அன்றைக்குப் பெயர் சூட்டினார்கள்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4348. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணம் வாய்ந்தவர்களாய் இருந்தார்கள். எனக்கு (என் தாய் வழியில்) "அபூஉமைர்" எனப்படும் ஒரு சகோதரர் இருந்தார். அவர் பால்குடி மறந்தவராக இருந்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தால் என் சகோதரரைப் பார்த்து, "அபூஉமைர்! பாடும் (உனது) சின்னக் குருவி என்ன செய்கிறது?" என்று கேட்பார்கள். என் சகோதரர் அந்தக் குருவியை வைத்து விளையாடிக்கொண்டிருப்பார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
பாடம் : 6 ஒருவர் தம் மகனல்லாத வேறொரு வரைப் பார்த்து "அருமை மகனே!" என்று கூறலாம். அன்பு பாராட்டுவதற்காக அவ்வாறு கூறுவது விரும்பத்தக்கதாகும்.
4349. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என் அருமை மகனே!" என்று என்னை அழைத்தார்கள்.
அத்தியாயம் : 38
4350. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (மகா பொய்யனான) தஜ்ஜாலைப் பற்றி நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. அவர்கள் என்னிடம் "மகனே! அவனைப் பற்றி உனக்கென்ன கவலை? அவன் உனக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டான்" என்று சொன்னார்கள்.
நான், "அவனுடன் நதியளவு நீரும் மலையளவு ரொட்டியும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்களே!" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்ட விரும்புகிறானோ) அவற்றைவிட இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதே" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே நபி (ஸல்) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களை "மகனே!" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. வேறெந்த அறிவிப்பிலும் அவ்வாறு இல்லை.
அத்தியாயம் : 38
பாடம் : 7 அனுமதி கோருதல்.
4351. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவில் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் பதற்றமடைந்தவர்களாக எங்களிடம் வந்தார்கள். நாங்கள் (அவரிடம்) "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் என்னைத் தம்மிடம் வரச் சொல்லி ஆளனுப்பியிருந்தார்கள்.
நான் அவர்களது வீட்டுவாசலுக்குச் சென்று (வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) மூன்று முறை முகமன் (சலாம்) கூறினேன். ஆனால், அவர்கள் எனக்குப் பதில் (சலாம்) சொல்லவில்லை. ஆகவே, நான் திரும்பிவிட்டேன்.
பிறகு அவர்கள் (என்னிடம்) "நீங்கள் என்னிடம் வராததற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு, "நான் தங்களிடம் வந்து தங்கள் வீட்டுவாசலில் நின்று, மூன்று முறை முகமன் (சலாம்) கூறினேன். எனக்கு யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்" என்று கூறியுள்ளார்கள்" என்றேன்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் உங்களைத் தண்டிக்க வேண்டியதிருக்கும்" என்று கூறினார்கள். (இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றவர் உங்களில் யாரேனும் உள்ளாரா என்று கேட்டார்கள்.)
அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ரலி) அவர்கள், "மக்களில் மிகச் சிறியவரே இவருடன் (இப்போது சாட்சியம் சொல்ல) எழுவார்" என்று சொன்னார்கள். நான் (அபூசயீத்), "நான்தான் மக்களிலேயே மிகச் சிறியவன்" என்று சொன்னேன். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் "இவரை அழைத்துச் செல்வீராக!" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "எனவே, நான் அபூ மூசா (ரலி) அவர்களுடன் எழுந்து, உமர் (ரலி) அவர்களிடம் சென்று சாட்சியமளித்தேன்" என்று அபூசயீத் (ரலி) கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 38
4352. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் கோபத்துடன் வந்து நின்று, "அல்லாஹ்வை முன்வைத்து நான் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி கோருதல் மூன்று முறையாகும். (மூன்று முறை அனுமதிகோரி) உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் சரி! (வீட்டுக்குள் செல்லுங்கள்.) இல்லாவிட்டால் திரும்பிவிடுக" என்று கூறியதைக் கேட்டவர் உங்களில் யாரேனும் உள்ளாரா?" என்று கேட்டார்கள். உபை பின் கஅப் (ரலி) அவர்கள், "என்ன அது (என்ன நடந்தது)?" என்று கேட்டார்கள்.
அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், "நேற்று நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் மூன்று முறை அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பிறகு இன்று அவர்களிடம் வந்து, அவர்களிடம் (அவர்களது வீட்டுக்குள்) சென்று, அவர்களிடம் நேற்று நான் வந்து (அனுமதி கேட்டு) மூன்று முறை சலாம் சொன்னேன். (பதில் வராததால்) பிறகு நான் திரும்பிவிட்டேன்" என்று கூறினேன்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "உமது குரலை நாம் செவியுற்றோம். அப்போது நாம் ஒரு (முக்கிய) அலுவலில் ஈடுபட்டிருந்தோம். அனுமதி வழங்கப்படும்வரை நீங்கள் அனுமதி கேட்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமே!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றதைப் போன்றே அனுமதி கேட்டேன்"என்றேன்.
உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு உமக்குச் சாட்சியம் அளிப்பவர் ஒருவரை நீர் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் உமது முதுகிலும் வயிற்றிலும் நாம் தண்டிக்க வேண்டியதிருக்கும்" என்று கூறினார்கள் என்றார்கள்.
அப்போது உபை பின் கஅப் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களில் வயதில் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) எழுவார்" என்று கூறிவிட்டு, "அபூசயீதே! எழுந்திரும்" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் எழுந்து உமர் (ரலி) அவர்களிடம் சென்று, "இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன்" என்று (சாட்சியம்) சொன்னேன்.
அத்தியாயம் : 38
4353. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா (ரலி) அவர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களின் (வீட்டு) வாசலுக்குச் சென்று (உள்ளே நுழைய) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் "ஒன்று" என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் இரண்டாவது முறை அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் "இரண்டு" என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் மூன்றாவது முறை அனுமதி கேட்ட போது, உமர் (ரலி) அவர்கள் "மூன்று" என்றார்கள்.
பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து வந்து தம்மிடம் திரும்பிவரச் செய்து, "இவ்வாறு நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டிருந்தால் அதற்கு ஆதாரம் கொண்டுவாருங்கள். இல்லாவிட்டால் உம்மை (மற்றவர்களுக்கு) ஒரு பாடமாக ஆக்கி விடுவேன்" என்று கூறினார்கள்.
அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அனுமதி கோருதல் மூன்று முறையாகும்" என்று கூறியதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அதைக் கேட்டு மக்கள் சிரிக்கலாயினர். உடனே நான், "உங்களுடைய முஸ்லிம் சகோதரர் பீதிக்குள்ளாக்கப்பட்ட நிலையில் உங்களிடம் வந்துள்ளார். (அவரைக் கண்டு) நீங்கள் சிரிக்கிறீர்களே?" என்று கூறிவிட்டு, (அபூமூசா (ரலி) அவர்களிடம்) "நீங்கள் வாருங்கள். இந்தத் தண்டனையில் உங்களுக்கு நான் பங்காளியாவேன்" என்று கூறிவிட்டு, உமர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், "இதோ அபூசயீத் (சாட்சி)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4354. உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா (ரலி) அவர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் (சென்று அவர்களது இல்லத்திற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டார்கள். (ஆனால், அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அப்போது) உமர் (ரலி) அவர்கள் ஏதோ அலுவலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டார்கள் போலும். எனவே, அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பிவிட்டார்கள்.
(அலுவலை முடித்த) பிறகு உமர் (ரலி) அவர்கள், "அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்களின் (அபூமூசா) குரலை நீங்கள் கேட்கவில்லையா? அவருக்கு அனுமதி அளியுங்கள்" என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இவ்வாறு நீங்கள் செய்ததற்கு என்ன காரணம் (ஏன் மூன்று முறை அனுமதி கோரி விட்டுத் திரும்பிச் சென்றுவிட்டீர்கள்)?" என்று கேட்டார்கள்.
அபூமூசா (ரலி) அவர்கள், "இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இதற்குரிய சான்றை நிலைநிறுத்த வேண்டும். அல்லது நான் (இன்னின்னவாறு) நடவடிக்கை எடுப்பேன்" என்றார்கள்.
எனவே, அபூமூசா (ரலி) அவர்கள் அன்சாரிகளின் அவையொன்றை நோக்கிப் புறப்பட்டார்கள். அன்சாரிகள், "எங்களில் சிறியவர் ஒருவரே இதற்காக உமக்குச் சாட்சியமளிப்பார்" என்று கூறினர். ஆகவே, அபூசயீத் (ரலி) அவர்கள் எழுந்து (உமர் (ரலி) அவர்களிடம் சென்று), "இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்" என்று கூற, உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த விவரம் எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! (நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிய நாளில்) கடைவீதிகளில் நான் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது எனது கவனத்தைத் திசை திருப்பிவிட்டது (போலும்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கடைவீதிகளில் நான் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது எனது கவனத்தைத் திசை திருப்பிவிட்டது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 38
4355. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் வந்து, "அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அப்துல்லாஹ் பின் கைஸ் வந்துள்ளேன்" என்று கூறி (அனுமதி கோரி)னேன். அவர்கள் எனக்கு அனுமதி வழங்கவில்லை. பிறகு (மீண்டும்) நான், "அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அபூமூசா (வந்துள்ளேன்). அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அஷ்அரீ (வந்துள்ளேன்)" என்று (இன்னும் இரண்டு முறை) அனுமதி கோரினேன். (அனுமதி கிடைக்காததால்) பிறகு நான் திரும்பி வந்துவிட்டேன்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்"என்று கூறினார்கள். நான் (மீண்டும்) வந்தபோது, "அபூமூசா! ஏன் திரும்பிச் சென்றீர்? நாம் ஓர் அலுவலில் ஈடுபட்டிருந்தோம்" என்று கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அனுமதி கோருதல் மூன்று முறையாகும். (மூன்று முறைக்குள்) உமக்கு அனுமதி வழங்கப்பட்டால் சரி. இல்லாவிட்டால் நீர் திரும்பிவிடுக" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்"என்றேன்.
உமர் (ரலி) அவர்கள் "இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் இப்படி இப்படிச் செய்து விடுவேன்" என்று கூறினார்கள். ஆகவே, நான் (அன்சாரிகளின் அவைக்குச்) சென்றேன்.
உமர் (ரலி) அவர்கள், "அவருக்குச் சாட்சி கிடைத்தால் மாலையில் அவரைச் சொற்பொழிவு மேடைக்கு அருகில் நீங்கள் காண்பீர்கள். சாட்சி கிடைக்காவிட்டால் அவரை நீங்கள் காணமாட்டீர்கள்" என்று கூறினார்கள்.
மாலை நேரமானபோது என்னைக் கண்ட மக்கள், "அபூமூசா! நீர் என்ன சொல்கிறீர்? சாட்சி கிடைத்துவிட்டாரா?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் "ஆம், உபை பின் கஅப் (ரலி) அவர்களே (சாட்சி)" என்றேன். உமர் (ரலி) அவர்கள் "அவர் நேர்மையானவர்தாம்" என்று கூறி விட்டு, "அபுத்துஃபைல்! இவர் என்ன சொல்கிறார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு நீரே ஒரு வேதனையாக ஆகிவிடாதீர்" என்று கூறினார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்). இதைக் குறித்து ஒன்றைக் கேள்விப்பட்டேன். அதை உறுதி செய்துகொள்ளவே விரும்பினேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், உமர் (ரலி) அவர்கள், "அபுல்முன்திர்! நீங்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், "ஆம், கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு நீரே ஒரு வேதனையாக ஆகிவிடாதீர்" என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. அதில் உமர் (ரலி) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்" என்று கூறியதும் அதற்குப் பின் உள்ளவையும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 38
பாடம் : 8 "யார் அது?" என்று கேட்கப்படும்போது (பெயரைச் சொல்லாமல்) "நான்" என்று அனுமதி கேட்பவர் பதிலளிப்பது வெறுக்கத்தக்கதாகும்.
4356. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (அவர்களை) அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். நான் "நான்தான்" என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள் "நான்... நான் (என்றால்...?)" என்று கூறியபடி வெளியே வந்தார்கள்.
அத்தியாயம் : 38
4357. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களிடம் உள்ளேவர அனுமதி கேட்டேன். அவர்கள், "யார் அது?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "நான்தான்" என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள் "நான்... நான் (என்றால்...?)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அவ்வாறு கூறியதை அவர்கள் வெறுத்ததைப் போன்றிருந்தது" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 38
பாடம் : 9 பிறர் வீட்டில் எட்டிப்பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும்.
4358. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் கதவில் ஒரு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அறையினுள் எட்டிப்பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஈர்வலி (பேன் சீப்பு) ஒன்றிருந்தது. அதன் மூலம் அவர்கள் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள்.
அவரைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால், இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்" என்று கூறிவிட்டு, "(வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே, பார்வை (எல்லை மீறி வீட்டிலிருப்பவர்கள்மீது விழக்கூடும் என்ற) காரணத்தால்தான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4359. சஹ்ல் பின் சஅத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் கதவில் ஒரு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறையினுள் எட்டிப்பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஈர்வலி (பேன் சீப்பு) ஒன்றிருந்தது. அதன் மூலம் அவர்கள் தமது தலையைச் சீவிக்கொண்டிருந்தார்கள்.
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய் என நான் (முன்பே) அறிந்திருந்தால்,இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்கவேண்டும் என்று அல்லாஹ் சட்டமாக்கியிருப்பதே, பார்வை (எல்லை மீறி வீட்டிலிருப்பவர்கள்மீது விழக்கூடும் என்ற) காரணத்தால்தான்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4360. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப்பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் "கூர்முனையுடன்" அல்லது "கூர்முனைகளுடன்" அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவரது கண்ணில்) குத்தப் போனதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4361. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு குடும்பத்தாரின் அனுமதியின்றி அவர்களது வீட்டினுள் யாரேனும் எட்டிப்பார்த்தால், அவரது கண்ணைப் பறிக்கவும் அவர்களுக்கு அனுமதி உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 38
4362. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்தபோது, அவர்மீது நீ சிறு கல்லைச் சுண்டியெறிய, அது அவரது கண்ணைப் பறித்துவிட்டால் உன்மீது எந்தக் குற்றமுமில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 38
பாடம் : 10 எதேச்சையாகப் பார்வை விழுவது.
4363. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதேச்சையாக (அந்நியப் பெண்மீது) பார்வை விழுவதைப் பற்றிக்கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 38