4324. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு "முஹம்மத்" என்று பெயர் சூட்ட அவர் விரும்பினார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அன்சாரிகள் செய்தது நன்றே. என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4325. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதிமூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) மற்றும் சுலைமான் பின் மிஹ்ரான் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் (சற்று) கூடுதலான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. ஹுஸைன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களிடையே பங்கிடுபவனாகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்" என்றும், சுலைமான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஏனெனில், உங்களிடையே நான் பங்கீடு செய்பவனாகவே உள்ளேன்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அன்சாரிகளான) எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு அவர் "காசிம்" எனப் பெயர் சூட்டினார். நாங்கள், "உம்மை அபுல்காசிம் (காசிமின் தந்தை) எனும் குறிப்புப் பெயரால் அழைக்கவுமாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உம்மை மகிழ்விக்கவு மாட்டோம்" என்று கூறினோம்.
ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றித் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உம்முடைய மகனுக்கு அப்துர் ரஹ்மான் எனப்பெயரிட்டுக் கொள்வீராக" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், அவற்றில் "உம்மை நாங்கள் மகிழ்விக்கவுமாட்டோம்" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 38
4326. அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4327. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கிணங்க) "நஜ்ரான்" எனும் ஊருக்கு (யமன்) சென்றபோது அ(ந்நாட்டுக் கிறித்த)வர்கள், "நீங்கள் (குர்ஆனில் அன்னை மர்யம் (அலை) அவர்களைப் பற்றி) "ஹாரூனின் சகோதரியே!" என்று ஓதுகிறீர்கள். (ஆனால், ஹாரூன் மூசாவின் காலத்தில் வாழ்ந்தவர்.) மூசாவோ ஈசா (அலை) அவர்களுக்கு இவ்வளவு இவ்வளவு ஆண்டுகளுக்கு முந்தையவர் ஆயிற்றே! (அப்படியிருக்க, மர்யம் ஹாரூனின் சகோதரியாக எப்படி இருக்க முடியும்?)" என்று கேட்டார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (இஸ்ரவேலர்கள்) தங்களுக்கு முந்தைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர் (அந்த வகையில் ஹாரூன் என்ற பெயரில் மர்யம் அவர்களுக்கு ஒரு சகோதரர் இருந்தார்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
பாடம் : 2 அருவருப்பான பெயர்களையும், "நாஃபிஉ" (பயனளிப்பவர்) மற்றும் அதைப் போன்ற (பொருள் உள்ள) பெயர்களையும் சூட்டிக்கொள்வது வெறுக்கத்தக்கதாகும்.
4328. சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4329. சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் அடிமைக்கு ரபாஹ் (இலாபம்) என்றோ, யசார் (சுலபம்) என்றோ,அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ, நாஃபிஉ (பயனளிப்பவன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 38
4330. சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும். 1.சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்).
இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை" என்று கூறிவிட்டு, "உம்முடைய அடிமைக்கு யசார் (சுலபம்) என்றோ, ரபாஹ் (இலாபம்) என்றோ, நஜீஹ் (வெற்றியாளன்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். ஏனெனில், (அந்தப் பெயர் சொல்லி) "அவன் அங்கு இருக்கிறானா" என்று நீர் கேட்கும்போது, அவன் அங்கு இல்லாவிட்டால் "இல்லை" என்று பதில் வரும். (அது திருப்தியளிப்பதற்குப் பகரமாக நற்குறியற்ற பதிலாக உங்கள் மனதுக்குப் படலாம்)" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இவை நான்கு பெயர்கள் மட்டுமே ஆகும். இவற்றைவிடக் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்து நீங்கள் அறிவிக்க வேண்டாம். - மேற்கண்ட ஹதீஸ் சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அடிமைகளுக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாகவே இடம்பெற்றுள்ளது. நான்கு (துதிச்) சொற்கள் பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 38
4331. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் யஅலா (உயர்வு), பரக்கத் (வளம்), அஃப்லஹ் (வெற்றி), யசார் (சுலபம்), நாஃபிஉ (பயனளிப்பவன்) போன்ற பெயர்களைச் சூட்ட வேண்டாம் எனத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்; அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.
பின்னர் அவற்றுக்குத் தடைவிதிக்காத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் அவற்றுக்குத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அவர்களும் (அவற்றுக்குத் தடைவிதிக்காமல்) விட்டுவிட்டார்கள்.
அத்தியாயம் : 38
பாடம் : 3 அருவருப்பான பெயரை அழகான பெயராகவும் "பர்ரா" எனும் பெயரை ஸைனப், ஜுவைரியா போன்ற பெயர்களாகவும் மாற்றியமைப்பது விரும்பத்தக்கதாகும்.
4332. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆஸியா" (பாவி) எனும் பெயரை மாற்றிவிட்டு, "நீ (பாவியல்ல), ஜமீலா (அழகி)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4333. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்கு "ஆஸியா" (பொருள்:பாவி) எனப்படும் புதல்வியொருவர் இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜமீலா (பொருள்: அழகி) என (மாற்று)ப் பெயர் சூட்டினார்கள்.
அத்தியாயம் : 38
4334. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு (முதலில்) "பர்ரா" என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஜுவைரியா" (இளையவள்) எனப் பெயர் மாற்றினார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பர்ரா"விடமிருந்து (நல்லவளிடமிருந்து) புறப்பட்டு விட்டார்கள்" என்று சொல்லப் படுவதை அவர்கள் வெறுத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4335. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) "பர்ரா" (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது "அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்" என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் (அழகிய தோற்றமுடைய நறுமணச் செடி) என்று பெயர் சூட்டினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4336. ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(முதலில்) எனக்கு "பர்ரா" (நல்லவள்) என்ற பெயரே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எனக்கு ஸைனப் (அழகான தோற்றமுள்ள நறுமணச்செடி) எனப் பெயர் சூட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் வந்தார். அவருக்கும் பர்ரா (நல்லவர்) என்ற பெயரே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அவருக்கும் "ஸைனப்" எனப் பெயர் சூட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4337. முஹம்மத் பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் புதல்விக்கு "பர்ரா" (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன். அப்போது ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதலில்) எனக்கு "பர்ரா" என்ற பெயரே சூட்டப் பெற்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களை நீங்களே பரிசுத்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று சொன்னார்கள். மக்கள், "அவருக்கு நாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்கு "ஸைனப்" எனப் பெயர் சூட்டுங்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 38
பாடம் : 4 "மன்னாதி மன்னன்" ("மலிக்குல் அம்லாக்" அல்லது "மலிக்குல் முலூக்") எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும்.
4338. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில்) அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒரு மனிதன் "மன்னாதி மன்னன்" (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்த) வேறு அரசனில்லை" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் அம்ர் அல்அஷ்அஸீ (ரஹ்) அவர்கள், "("மலிக்குல் அம்லாக்" என்பதற்கு) "ஷாஹான் ஷாஹ்" (மன்னாதி மன்னன்) என்று (பாரசீக மொழியில்) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (பொருள்) கூறினார்கள்" என்றார்கள். மற்றோர் அறிவிப்பாளரான அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மொழியியல் வல்லுநர்) அபூஅம்ர் இஸ்ஹாக் பின் மிரார் (ரஹ்) அவர்களிடம் ("மிகவும் கேவலமான" என்பதைக் குறிக்க இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) "அக்னஉ" எனும் சொல் குறித்துக்கேட்டேன். அதற்கு அபூஅம்ர் (ரஹ்) அவர்கள், இதற்கு "அவ்ளஉ" (மிகவும் கீழ்த்தரமானது) என்று பொருள் என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 38
4339. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய, அவனிடம் மிகவும் கேவலமான மனிதர் யாரெனில், (உலகில்) "மன்னாதி மன்னன்" எனப் பெயரிடப்பட்ட மனிதர்தாம். அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்த) மன்னன் வேறு யாருமில்லை.
அத்தியாயம் : 38
பாடம் : 5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளைமென்று அதன் வாயிலிடுவதும் அதற்காக நல்ல மனிதர் ஒருவரிடம் குழந்தைகளைக் கொண்டுசெல்வதும் விரும்பத் தக்கதாகும். அது பிறந்த நாளன்றே பெயர் சூட்டுவது செல்லும். அப்துல்லாஹ் எனும் பெயரையும் இப்ராஹீம் உள்ளிட்ட நபிமார்களின் பெயர்களையும் சூட்டுவது விரும்பத் தக்கதாகும்.
4340. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா அல்அன்சாரீ பிறந்தபோது அவரை(த் தூக்கிக்கொண்டு) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் நீளங்கி அணிந்து, தமது ஒட்டகத்திற்கு (சிகிச்சைக்காகத்) தார் பூசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் "உன்னிடம் பேரீச்சம் பழம் இருக்கிறதா?" என்று கேட்டார்கள்.
நான் "ஆம்” என்று கூறி, அவர்களிடம் பேரீச்சம் பழங்கள் சிலவற்றை எடுத்துக்கொடுத்தேன். அவற்றை வாங்கி அவர்கள் தமது வாயிலிட்டு மென்று, பிறகு குழந்தையின் வாயைத் திறந்து, அதில் சிறிதளவை உமிழ்ந்தார்கள்.
குழந்தை அதை நாவைச் சுழற்றி சுவைக்கலாயிற்று. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரிகளுக்கு மிகவும் விருப்பமானது பேரீச்சம் பழங்கள் ஆகும்" என்று கூறிவிட்டு, குழந்தைக்கு "அப்துல்லாஹ்" எனப் பெயர் சூட்டினார்கள்.
அத்தியாயம் : 38
4341. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் (வெளியூருக்குப்) புறப்பட்டுச் சென்றிருந்தபோது,அக்குழந்தை இறந்து விட்டது. அபூதல்ஹா (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது "என் மகன் என்ன ஆனான்?" என்று கேட்டார்கள்.
(அவருடைய துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (துக்கத்தை வெளிக் காட்டாமல்) "அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்" என்று பதிலளித்துவிட்டு, கணவருக்கு முன்னால் இரவு உணவை வைத்தார்.
அபூதல்ஹா (ரலி) அவர்கள் இரவு உணவை அருந்தினார்கள். பிறகு (அன்றிரவு) மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். உறவு கொண்ட பின், உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (தம் கணவரிடம்), "குழந்தையை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்" என்று கூறினார்கள்.
(அப்போதுதான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குக் குழந்தை இறந்த விவரமே தெரிந்தது.) விடிந்ததும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்றிரவு தாம்பத்திய உறவில் ஈடுபட்டீர்களா?" என்று கேட்டார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள், "ஆம்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அவர்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) வழங்குவாயாக!" எனப் பிரார்த்தித்தார்கள்.
பின்னர் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஆண் மகவொன்றைப் பெற்றெடுத்தார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், "குழந்தையை எடுத்துக்கொண்டு (நேராக) நபி (ஸல்) அவர்களிடம் செல்" என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன்.
(அப்போது) என்னிடம் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு, "இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?" என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள், "ஆம், பேரீச்சம் பழங்கள் உள்ளன" என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவற்றை வாங்கி (தமது வாயால்) மென்று, பிறகு தமது வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவலானார்கள். குழந்தைக்கு "அப்துல்லாஹ்" எனப் பெயர் சூட்டினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4342. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தையை நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்கு "இப்ராஹீம்" எனப் பெயர் சூட்டிப் பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதைத் தடவினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4343. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) மற்றும் ஃபாத்திமா பின்த் அல்முன்திர் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் புலம்பெயர்ந்து (மதீனாவுக்குச்) சென்றபோது, அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களைக் கருவுற்றிருந்தார்கள். அவர்கள் "குபா" வந்தடைந்தபோது, அங்கு அப்துல்லாஹ்வைப் பெற்றெடுத்தார்கள். குழந்தை பிறந்தவுடன் பேரீச்சம் பழத்தை மென்று, அதைக் குழந்தையின் வாயில் தடவுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் புறப்பட்டுச்சென்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து குழந்தையை வாங்கி, தமது மடியில் வைத்தார்கள். பிறகு பேரீச்சம் பழத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் (இது தொடர்பாகப் பின்வருமாறு) கூறினார்கள்: பேரீச்சம் பழம் கிடைக்காமல் நாங்கள் சிறிது நேரம் அதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். பேரீச்சம் பழம் கிடைத்ததும் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாயிலிட்டு மென்றார்கள். பிறகு குழந்தையின் வாயில் அதை உமிழ்ந்தார்கள். குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற முதல் பொருள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ்நீராகத்தான் இருந்தது.
அஸ்மா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தையைத் தடவிக்கொடுத்து,குழந்தைக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு அதற்கு "அப்துல்லாஹ்" எனப் பெயர் சூட்டினார்கள்.
பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கு ஏழு அல்லது எட்டு வயதானபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (பிரார்த்தனை வேண்டி) உறுதிப் பிரமாணம் செய்தவற்காக அவர்களிடம் வந்தார். அவ்வாறு செல்லுமாறு (அப்துல்லாஹ்வின் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களே அப்துல்லாஹ்வுக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் தம்மை நோக்கி வருவதைக் கண்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை புரிந்தார்கள். பிறகு உறுதிமொழி வாங்கினார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38