4299. உம்மு சலமா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அபூஅப்தில்லாஹ் நாஇம் பின் உஜைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முகத்தில் சூடு போட்டு அடையாளமிடப்பட்டிருந்த கழுதையொன்றைக் கண்டு அதைக் கண்டித்தார்கள்" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
மேலும், (அவர்களின் தந்தை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் - ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் முகத்திலிருந்து தள்ளியுள்ள (உடம்பின்) ஒரு பகுதியிலேயே நான் அடையாளமிடுவேன்" என்று கூறிவிட்டு, தமது கழுதைக்கு அதன் பின்கால் சப்பையின் ஓர் ஓரத்தில் அடையாளமிடுமாறு கட்டளையிட்டார்கள். அவர்கள்தாம் பின்கால் சப்பையின் ஓரத்தில் சூடு போட்டு அடையாளமிட்ட முதல் ஆள் ஆவார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 30 மனிதனல்லா பிற உயிரினங்களில் முகமல்லா மற்ற உறுப்புகளில் சூடிட்டு அடையாளமிடலாம் என்பதும், ஸகாத் மற்றும் ஜிஸ்யா கால்நடைகளில் அவ்வாறு செய்யுமாறு வந்துள்ள தூண்டலும்.
4300. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள், "அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சம் பழத்தை) மென்று இவன் வாயிலிடுவதற்காக இவனை அவர்களிடம் நீ எடுத்துச் செல்லாத வரை இவன் எதையும் உட்கொண்டுவிட வேண்டாம்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே, நான் அவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் "ஹுவைத்" (அல்லது ஜவ்ன்) குலத் தயாரிப்பான கோடு போட்ட கம்பளியாடை அணிந்து, மக்கா வெற்றியின்போது தம்மிடம் வந்த வாகன ஒட்டகத்துக்குச் சூடிட்டு அடையாளமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 37
4301. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது, நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சம் பழத்தை) மென்று அச்சிறுவனின் வாயிலிடுவதற்காக நபியவர்களிடம் அவனை (எங்கள் குடும்பத்தார்) கொண்டுசென்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தொழுவமொன்றில் ஓர் ஆட்டிற்குச் சூடிட்டு அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இதை எனக்கு அறிவித்த) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் "அதன் காதுகளில் (அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்)" என்று கூறியதாகவே நான் பெரும்பாலும் கருதுகிறேன்.
அத்தியாயம் : 37
4302. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தொழுவமொன்றில் ஓர் ஆட்டிற்குச் சூடிட்டு அடையாளமிட்டுக்கொண்டிருந்தபோது நாங்கள் அவர்களிடம் சென்றோம்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அதன் காதுகளில் (அடையாளமிட்டுக்கொண்டிருந்தார்கள்)" என்று ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4303. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கரத்தில் சூடிடும் கருவி இருந்தது. (அதன் மூலம்) அவர்கள் "ஸதக்கா" (ஸகாத்) ஒட்டகங்களுக்கு அடையாளமிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்.
அத்தியாயம் : 37
பாடம் : 31 குழந்தையின் தலை முடியில் சிறிதளவு மழித்துவிட்டு, சிறிதளவு மழிக்காமல் விட்டுவிடுவது (குடுமி வைப்பது) வெறுக்கத்தக்கதாகும்.
4304. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கஸஉ" வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான உமர் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (என் தந்தை) நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் "கஸஉ என்றால் என்ன?" என்று கேட்டேள். "சிறுவனின் தலைமுடியில் சில பகுதியை மழித்துவிட்டு, வேறுசில பகுதிகளை மழிக்காமல் விட்டுவிடுவதாகும்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "கஸஉ" பற்றி அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் விளக்கம் அளித்ததாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
இவ்விரு அறிவிப்புகளிலும் (கஸஉ தொடர்பான) விளக்கக் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 32 சாலைகளில் அமர்வதற்கு வந்துள்ள தடையும் (அவ்வாறு அமர்ந்தால்) சாலைக்குரிய உரிமைகளைப் பேணுவதும்.
4305. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்து தான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக் கொள்கிறோம்" என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆக வேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்" என்று கூறினார்கள்.
மக்கள், "சாலையின் உரிமை என்ன?" என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், "(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும்,முகமனுக்கு (சலாம்) பதிலுரைப்பதும், நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமை) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.-
மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 33 பெண்கள் ஒட்டுமுடி வைத்துவிடுவது, வைத்துக்கொள்வது; பச்சை குத்திவிடுவது, குத்திக்கொள்வது; (அழகிற்காக) முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்கிவிடுவது, நீக்கிக்கொள்வது; (அழகிற்காக) பல் வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்வது, (மொத்தத்தில்) அல்லாஹ்வின் (இயற்கையான) படைப்பு முறையை மாற்றுவது தடை செய்யப்பட்டதாகும்.
4306. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் மகள் (தாம்பத்திய உறவுக்குச் செல்லவிருக்கும்) மணப்பெண்ணாக இருக்கிறாள். அவளுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணத்தால் அவளது தலைமுடி கொட்டிவிட்டது. அவளது தலையில் நான் ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா?" என்று கேட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான் (தன் கருணையிலிருந்து அப்புறப் படுத்துகின்றான்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், வகீஉ மற்றும் ஷுஅபா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் ("அதனால் அவளது தலைமுடி கொட்டிவிட்டது" என்பதைக் குறிக்க "ஃப தமர்ரக ஷஅருஹா" என்பதற்குப் பகரமாக) "ஃப தமர்ரத்த ஷஅருஹா" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4307. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் என் மகளுக்கு மணமுடித்து வைத்தேன். பிறகு (அவளுக்கு ஏற்பட்ட நோயால்) அவளது தலைமுடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ அவளை அழகுபடுத்தி (அனுப்பி)விடுமாறு கூறுகிறார். ஆகவே, அவளுக்கு ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேண்டாமென அவளைத் தடுத்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 37
4308. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு பெண் மணமுடித்தார். பின்னர் அவர் உடல் நலிவுற்றுவிடவே அவரது தலைமுடி கொட்டிவிட்டது. ஆகவே, (அவருடைய குடும்பத்தார்) அவருக்கு ஒட்டுமுடி வைத்துவிட விரும்பினர். எனவே, இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் சபித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4309. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு பெண் தன்னுடைய மகளுக்கு மணமுடித்துவைத்தார். பிறகு அவள் நோய்வாய்ப்பட்டு அதன் காரணத்தால் அவளது தலைமுடி உதிர்ந்துவிட்டது. அப்போது அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன் மகளின் கணவர் விருப்பத்திற்கிணங்க அவளது தலையில் ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா? என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப் பட்டுள்ளனர்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4310. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும், பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும் சபித்தார்கள். - இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4311. அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், (அழகிற்காக) முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றிவிடும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக்கோரும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன்பற்களைப் பிரித்துக்கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ்வின் (இயற்கை) படைப்பு முறையை மாற்றிக்கொள்ளும் பெண்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!" என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த "உம்மு யஅகூப்" எனப்படும் ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் குர்ஆனை ஓதிய(றிந்த)வராக இருந்தார். அவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, "நீங்கள் பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சைக் குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக்கோரும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து தம் முன்பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், அல்லாஹ்வின் (இயற்கையான) படைப்பு முறையை மாற்றிக் கொள்ளும் பெண்களைச் சபித்ததாக எனக்கு எட்டிய செய்தி என்ன (அது உண்மையா)?" என்று கேட்டார்.
அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? அவர்கள் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டுள்ளனரே?" என்று கூறினார்கள். அதற்கு அந்தப் பெண், "குர்ஆன் பிரதியில் இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் வாசித்திருக்கிறேன். அதில் (தாங்கள் குறிப்பிட்டதை) நான் காணவில்லையே?" என்று கேட்டார்.
அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நீ குர்ஆனை (சரியாக) வாசித்திருந்தால் அதில் (நான் கூறியதை) நீ கண்டிருப்பாய். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகி இருங்கள்" (59:7) என்று கூறுகின்றானா?" என்றார்கள்.
அதற்கு அந்தப் பெண், "இவற்றில் சிலவற்றை தற்போது உங்கள் மனைவியிடமே நான் காண்கிறேனே?" என்று கேட்டார். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நீயே சென்று (என் மனைவியைப்) பார்" என்று கூறினார்கள். அப்பெண் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவியிடம் சென்றார். ஆனால், எதையும் அவர் காணவில்லை.
பிறகு அவர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் (திரும்பி)வந்து "எதையும் நான் காணவில்லை" என்று சொன்னார். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "கவனி. அவ்வாறு (நீ கூறியபடி ஏதேனும் என் மனைவியிடம்) இருந்திருக்குமானால், அவளுடன் நாம் சேர்ந்து வாழமாட்டோம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ("பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள்" என்பதைக் குறிக்க) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்வாஷி மாத்தி, வல் முஸ்தவ்ஷிமாத்" எனும் சொற்றொடரும் முஃபள்ளல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்வாஷிமாத்தி வல்மவ்ஷூ மாத்தி" எனும் சொற்றொடரும் ஆளப்பட்டுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நபி (ஸல்) அவர்களின் கூற்று மட்டுமே இடம்பெற்றுள்ளது. உம்மு யஅகூப் தொடர்பான எந்தச் செய்தியும் இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4312. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், பெண்கள் தமது தலையில் எதையும் ஒட்டுச்சேர்க்கை செய்வதைக் கண்டித்தார்கள். -இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4313. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி (மெய்க்) காவலர் ஒருவரது கையிலிருந்த முடிக்கற்றை (சவுரி முடி) ஒன்றை வாங்கி, "மதீனாவாசிகளே! உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்றதைத் தடைசெய்து, "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்துபோனதெல்லாம் அவர்களுடைய பெண்கள் இதைப் பயன்படுத்தியபோதுதான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" எனக் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்துபோனதெல்லாம்" என்பதற்குப் பகரமாக) "வேதனை செய்யப் பட்டதெல்லாம்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 37
4314. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது எங்களிடையே உரை நிகழ்த்தினார்கள். அப்போது முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, "இதை (ஒட்டுமுடி வைத்துக் கொள்ளும் செயலை) யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இது பற்றிய செய்தி எட்டியபோது, இதை "போலித்தனம்" என அவர்கள் வர்ணித்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4315. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் (எங்களிடையே உரையாற்றுகையில்), "நீங்கள் ஒரு மோசமான கலாசாரத்தை உருவாக்கிவிட்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் போலித்தனத்திற்குத் தடைவிதித்தார்கள்" என்று கூறினார்கள். (அப்போது) ஒரு மனிதர் தடியொன்றைக் கொண்டுவந்தார். அதன் முனையில் துண்டுத் துணியொன்று இருந்தது. முஆவியா (ரலி) அவர்கள் "கவனியுங்கள்! இதுவும் போலியானதுதான்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பெண்கள் துண்டுத் துணிகளைச் சேர்த்து தங்களுடைய தலை முடிகளை அதிகமாக்கிக் காட்டுவதையே அவ்வாறு முஆவியா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தம்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து (கர்வத்தோடு) நடக்கும் பெண்கள்.
4316. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு,மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.
(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை(முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும்.
அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 35 ஆடை முதலியவற்றில் போலித்தனம் காட்டுவதும் தனக்குக் கிடைக்கப்பெறாத ஒன்று நிறைய கிடைத்துவிட்டதாகக் காட்டிக்கொள்வதும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
4317. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நான் என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக்கொள்ளலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிடைக்கப்பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக்கொள்கிறவர், போலியான இரு ஆடைகளை அணிந்து கொண்டவர் போலாவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 37
4318. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எனக்குச் சகக்கிழத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக் கொண்டால், அது குற்றமாகுமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "கிடைக்கப்பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக்கொள்கிறவர், போலியான இரு ஆடைகளை அணிந்துகொண்டவர் போலாவார்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37