பாடம் : 1 "அபுல்காசிம்" எனக் குறிப்புப் பெயர் சூட்டிக்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும், விரும்பத்தகுந்த பெயர்கள் பற்றிய விவரமும்.
4319. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மதீனாவிலுள்ள) "அல்பகீஉ" பொது மையவாடியில் ஒரு மனிதர் மற்றொருவரை "அபுல்காசிம்!" என்று அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது அவர், "அல்லாஹ்வின் தூதரே! உங்களை எண்ணி நான் அழைக்கவில்லை. இன்ன மனிதரையே நான் அழைத்தேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், ("அபுல்காசிம்" எனும்) என் குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள்" என்று கூறினார்கள். -இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4320. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும். - இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்பாத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) மற்றும் அப்துல்லாஹ் பின் உமர் (ரஹ்) ஆகிய சகோதரர்களிடம் (ஹிஜ்ரீ) 144 ஆம் ஆண்டில் செவியுற்றார்.
அத்தியாயம் : 38
4321. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்க(ள் அன்சாரிக)ளில் ஒருவருக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அதற்கு அவர் "முஹம்மத்" எனப் பெயர் சூட்டினார். அவருடைய குடும்பத்தார், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரை வைக்க உம்மை நாங்கள் விடமாட்டோம்" என்று கூறினர்.
ஆகவே, அந்த மனிதர் தம் மகனை முதுகில் சுமந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அவனுக்கு நான் "முஹம்மத்” எனப் பெயரிட்டேன். என்னுடைய சமுதாயத்தார் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயர் வைக்க உம்மை நாங்கள் விடமாட்டோம்" என்று கூறினர்" என்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் (இயற்)பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். (ஆனால் "அபுல்காசிம் எனும்) எனது குறிப்புப்பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே பங்கீடு செய்பவன் (காசிம்) ஆவேன். உங்களிடையே நான் பங்கீடு செய்கிறேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4322. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்க(ள் அன்சாரிக)ளில் ஒரு மனிதருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு அவர் "முஹம்மத்" எனப் பெயர் சூட்டினார். அப்போது நாங்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதற்கு அனுமதிபெறாத வரை உம்மை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குறிப்புப் பெயரால் ("அபூமுஹம்மத்" என) அழைக்கமாட்டோம்" என்று சொன்னோம்.
அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரைச் சூட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதிபெறாத வரை என் சமுதாயத்தார் அக்குறிப்புப் பெயரால் என்னை அழைக்கமாட்டோம் என மறுத்துவிட்டனர்" என்று சொன்னார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள்; (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்.ஏனெனில், உங்களிடையே பங்கிடுபவனாகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.-அதில் "உங்களிடையே பங்கிடுபவனாகவே நான் அனுப்பப் பட்டுள்ளேன்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 38
4323. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில்,நானே உங்களிடையே பங்கீடு செய்கின்ற "அபுல்காசிம்" ஆவேன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்" என்பதைக் குறிக்க "வலா தகன்னவ்" என்பதற்குப் பகரமாக) "வலா தக்தனூ" எனும் சொற்றொடர் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் உங்களிடையே பங்கீடு செய்பவனாகவே ஆக்கப்பட்டுள்ளேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 38
4324. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு "முஹம்மத்" என்று பெயர் சூட்ட அவர் விரும்பினார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அன்சாரிகள் செய்தது நன்றே. என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4325. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதிமூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) மற்றும் சுலைமான் பின் மிஹ்ரான் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் (சற்று) கூடுதலான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. ஹுஸைன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களிடையே பங்கிடுபவனாகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்" என்றும், சுலைமான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஏனெனில், உங்களிடையே நான் பங்கீடு செய்பவனாகவே உள்ளேன்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அன்சாரிகளான) எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு அவர் "காசிம்" எனப் பெயர் சூட்டினார். நாங்கள், "உம்மை அபுல்காசிம் (காசிமின் தந்தை) எனும் குறிப்புப் பெயரால் அழைக்கவுமாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உம்மை மகிழ்விக்கவு மாட்டோம்" என்று கூறினோம்.
ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றித் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உம்முடைய மகனுக்கு அப்துர் ரஹ்மான் எனப்பெயரிட்டுக் கொள்வீராக" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், அவற்றில் "உம்மை நாங்கள் மகிழ்விக்கவுமாட்டோம்" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 38
4326. அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4327. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கிணங்க) "நஜ்ரான்" எனும் ஊருக்கு (யமன்) சென்றபோது அ(ந்நாட்டுக் கிறித்த)வர்கள், "நீங்கள் (குர்ஆனில் அன்னை மர்யம் (அலை) அவர்களைப் பற்றி) "ஹாரூனின் சகோதரியே!" என்று ஓதுகிறீர்கள். (ஆனால், ஹாரூன் மூசாவின் காலத்தில் வாழ்ந்தவர்.) மூசாவோ ஈசா (அலை) அவர்களுக்கு இவ்வளவு இவ்வளவு ஆண்டுகளுக்கு முந்தையவர் ஆயிற்றே! (அப்படியிருக்க, மர்யம் ஹாரூனின் சகோதரியாக எப்படி இருக்க முடியும்?)" என்று கேட்டார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (இஸ்ரவேலர்கள்) தங்களுக்கு முந்தைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர் (அந்த வகையில் ஹாரூன் என்ற பெயரில் மர்யம் அவர்களுக்கு ஒரு சகோதரர் இருந்தார்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
பாடம் : 2 அருவருப்பான பெயர்களையும், "நாஃபிஉ" (பயனளிப்பவர்) மற்றும் அதைப் போன்ற (பொருள் உள்ள) பெயர்களையும் சூட்டிக்கொள்வது வெறுக்கத்தக்கதாகும்.
4328. சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4329. சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் அடிமைக்கு ரபாஹ் (இலாபம்) என்றோ, யசார் (சுலபம்) என்றோ,அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ, நாஃபிஉ (பயனளிப்பவன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 38
4330. சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும். 1.சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்).
இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை" என்று கூறிவிட்டு, "உம்முடைய அடிமைக்கு யசார் (சுலபம்) என்றோ, ரபாஹ் (இலாபம்) என்றோ, நஜீஹ் (வெற்றியாளன்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். ஏனெனில், (அந்தப் பெயர் சொல்லி) "அவன் அங்கு இருக்கிறானா" என்று நீர் கேட்கும்போது, அவன் அங்கு இல்லாவிட்டால் "இல்லை" என்று பதில் வரும். (அது திருப்தியளிப்பதற்குப் பகரமாக நற்குறியற்ற பதிலாக உங்கள் மனதுக்குப் படலாம்)" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இவை நான்கு பெயர்கள் மட்டுமே ஆகும். இவற்றைவிடக் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்து நீங்கள் அறிவிக்க வேண்டாம். - மேற்கண்ட ஹதீஸ் சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அடிமைகளுக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாகவே இடம்பெற்றுள்ளது. நான்கு (துதிச்) சொற்கள் பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 38
4331. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் யஅலா (உயர்வு), பரக்கத் (வளம்), அஃப்லஹ் (வெற்றி), யசார் (சுலபம்), நாஃபிஉ (பயனளிப்பவன்) போன்ற பெயர்களைச் சூட்ட வேண்டாம் எனத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்; அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.
பின்னர் அவற்றுக்குத் தடைவிதிக்காத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் அவற்றுக்குத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அவர்களும் (அவற்றுக்குத் தடைவிதிக்காமல்) விட்டுவிட்டார்கள்.
அத்தியாயம் : 38
பாடம் : 3 அருவருப்பான பெயரை அழகான பெயராகவும் "பர்ரா" எனும் பெயரை ஸைனப், ஜுவைரியா போன்ற பெயர்களாகவும் மாற்றியமைப்பது விரும்பத்தக்கதாகும்.
4332. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆஸியா" (பாவி) எனும் பெயரை மாற்றிவிட்டு, "நீ (பாவியல்ல), ஜமீலா (அழகி)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4333. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்கு "ஆஸியா" (பொருள்:பாவி) எனப்படும் புதல்வியொருவர் இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜமீலா (பொருள்: அழகி) என (மாற்று)ப் பெயர் சூட்டினார்கள்.
அத்தியாயம் : 38
4334. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு (முதலில்) "பர்ரா" என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஜுவைரியா" (இளையவள்) எனப் பெயர் மாற்றினார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பர்ரா"விடமிருந்து (நல்லவளிடமிருந்து) புறப்பட்டு விட்டார்கள்" என்று சொல்லப் படுவதை அவர்கள் வெறுத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4335. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) "பர்ரா" (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது "அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்" என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் (அழகிய தோற்றமுடைய நறுமணச் செடி) என்று பெயர் சூட்டினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4336. ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(முதலில்) எனக்கு "பர்ரா" (நல்லவள்) என்ற பெயரே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எனக்கு ஸைனப் (அழகான தோற்றமுள்ள நறுமணச்செடி) எனப் பெயர் சூட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் வந்தார். அவருக்கும் பர்ரா (நல்லவர்) என்ற பெயரே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அவருக்கும் "ஸைனப்" எனப் பெயர் சூட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 38
4337. முஹம்மத் பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் புதல்விக்கு "பர்ரா" (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன். அப்போது ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதலில்) எனக்கு "பர்ரா" என்ற பெயரே சூட்டப் பெற்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களை நீங்களே பரிசுத்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று சொன்னார்கள். மக்கள், "அவருக்கு நாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்கு "ஸைனப்" எனப் பெயர் சூட்டுங்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 38
பாடம் : 4 "மன்னாதி மன்னன்" ("மலிக்குல் அம்லாக்" அல்லது "மலிக்குல் முலூக்") எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும்.
4338. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில்) அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒரு மனிதன் "மன்னாதி மன்னன்" (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்த) வேறு அரசனில்லை" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் அம்ர் அல்அஷ்அஸீ (ரஹ்) அவர்கள், "("மலிக்குல் அம்லாக்" என்பதற்கு) "ஷாஹான் ஷாஹ்" (மன்னாதி மன்னன்) என்று (பாரசீக மொழியில்) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (பொருள்) கூறினார்கள்" என்றார்கள். மற்றோர் அறிவிப்பாளரான அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மொழியியல் வல்லுநர்) அபூஅம்ர் இஸ்ஹாக் பின் மிரார் (ரஹ்) அவர்களிடம் ("மிகவும் கேவலமான" என்பதைக் குறிக்க இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) "அக்னஉ" எனும் சொல் குறித்துக்கேட்டேன். அதற்கு அபூஅம்ர் (ரஹ்) அவர்கள், இதற்கு "அவ்ளஉ" (மிகவும் கீழ்த்தரமானது) என்று பொருள் என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 38