4279. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் திரைச் சீலையொன்று இருந்தது. அதில் பறவையின் உருவம் இருந்தது. ஒருவர் வீட்டுக்குள் நுழையும்போது அந்தத் திரையே அவரை வரவேற்கும். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை அப்புறப்படுத்து. நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இவ்வுலக(த்தின் ஆடம்பர)ம்தான் என் நினைவுக்கு வருகிறது" என்று கூறினார்கள்.
மேலும், எங்களிடம் குஞ்சம் வைத்த துணியொன்றும் இருந்தது. அதன் கரைவேலைப்பாடுகள் பட்டினால் ஆனவை என்றே நாங்கள் கூறிவந்தோம். அதை நாங்கள் அணிந்துவந்தோம்.
அத்தியாயம் : 37
4280. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துல் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆயினும், அத்துணியைக் கிழித்துவிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிடவில்லை" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4281. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, எனது வீட்டுவாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்கவிட்டிருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிட, அவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்தா பின் சுலைமான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 37
4282. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் (வீட்டுவாசலை) உருவப்படம் உள்ள திரைச் சீலையால் மறைத்திருந்தேன். அதைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது. அந்தத் திரைச் சீலையை எடுத்துக் கிழித்துவிட்டார்கள்.
பிறகு "மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோரில், அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படைக்(க நினைக்)கின்றவர்களும் அடங்குவர்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு முடிகிறது. ஆயினும், அதில் "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் திரைச் சீலையை நோக்கிச் சென்று, தமது கையாலேயே அதைக் கிழித்துவிட்டார்கள்" என்று (கூடுதலாக) இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் மற்றும் அப்து பின் ஹுமைத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர்" என்றே இடம்பெற்றுள்ளது. "வேதனைக்குள்ளாவோரில்..." என்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 37
4283. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்திலிருந்து திரும்பி) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் எனது அலமாரியை, உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலையொன்றால் மறைத்திருந்தேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது, அதைக் கிழித்து விட்டார்கள். அவர்களது முகம் நிறம் மாறியிருந்தது.
மேலும், "ஆயிஷா! மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள் தாம்" என்று கூறினார்கள்.
பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையைக் கிழித்து ஓரிரு தலையணை (இருக்கை)களாக ஆக்கிக்கொண்டோம்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4284. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் உருவப்படங்கள் உள்ள (திரைத்) துணியொன்று இருந்தது. அது வாசலிலிருந்து (எனது) அலமாரிவரை நீண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதை நோக்கியே தொழும் நிலை ஏற்பட்டிருந்தது. எனவே, "அதை என்னைவிட்டு அப்புறப்படுத்து" என்று கூறினார்கள். ஆகவே, அதை நான் அப்புறப்படுத்தி அதைத் தலையணை (இருக்கை)களாக ஆக்கிவிட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4285. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் (எனது வீட்டில்) உருவப்படங்கள் உள்ள திரைச் சீலையைத் தொங்கவிட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் அதை அப்புறப்படுத்தினார்கள். ஆகவே, அதை நான் இரு தலையணை (இருக்கை)களாக ஆக்கிக் கொண்டேன்.
அத்தியாயம் : 37
4286. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (எனது வீட்டில்) உருவப்படங்கள் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்க விட்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்தபோது, அதை அப்புறப்படுத்திவிட்டார்கள். அதை நான் துண்டித்து இரு தலையணை (இருக்கை)களாக ஆக்கிக்கொண்டேன்.
(இதை அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் அறிவித்த) அந்த வேளையில், அங்கு அவையில் இருந்த பனூ ஸுஹ்ரா குலத்தாரின் முன்னாள் அடிமையான ரபீஆ பின் அதாஉ (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விரு தலையணைகளில் தலை சாய்த்துக்கொள்வார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னதாக (உங்கள் தந்தை) அபூமுஹம்மத் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டார்.
அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்கள் "இல்லை" என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், "ஆயினும், காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் அவ்வாறு கூறியதை நான் செவியுற்றேன்" என்று கூறினார்.
அத்தியாயம் : 37
4287. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (உயிரினங்களின்) உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். (வீட்டுக்கு வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள்; உள்ளே வரவில்லை. அவர்களது முகத்தில் அதிருப்தியை "நான் அறிந்துகொண்டேன்". அல்லது "அறியப்பட்டது". உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தத் திண்டின் நிலை என்ன?" என்று கேட்டார்கள். நான், "இதில் தாங்கள் அமர்ந்துகொள்வதற்காகவும் தலை சாய்த்துக் கொள்வதற்காகவும் தங்களுக்காகவே இதை நான் விலைக்கு வாங்கினேன்" என்றேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த உருவப்படங்களை வரைந்தவர்கள் (மறுமை நாளில்) வேதனை செய்யப்படுவார்கள். மேலும், அவர்களிடம் "நீங்கள் படைத்தவற்றுக்கு நீங்களே உயிர் கொடுங்கள்" எனக் கூறப்படும்" என்று சொல்லிவிட்டு, "(உயிரினங்களின்) உருவப்படங்கள் உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைவதில்லை" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சிலரது அறிவிப்பைவிட வேறுசிலரது அறிவிப்பு முழுமையானதாக உள்ளது. அவற்றில் அப்துல் அஸீஸ் பின் அப்தில்லாஹ் அல்மாஜிஷூன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அதை எடுத்து இரு தலையணைகளாக நான் ஆக்கிக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும்போது அவற்றில் தலை சாய்த்துக்கொள்வார்கள்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4288. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயிரினங்களின் உருவங்களைத் தயாரித்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப் படுவார்கள். அவர்களிடம் "நீங்கள் படைத்தவற்றுக்கு நீங்களே உயிர் கொடுங்கள்" என்று கூறப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4289. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திண்ணமாக மறுமை நாளில் (இறைவனிடம்) மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூசயீத் அல்அஷஜ்ஜு (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "திண்ணமாக" எனும் சொல் இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) மற்றும் அபூகுறைப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் நரகவாசிகளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோரில் அடங்குவர்" என இடம்பெற்றுள்ளது. சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது.- முஸ்லிம் பின் ஸுபைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒருமுறை) மஸ்ரூக் (ரஹ்) அவர்களுடன் ஓர் இல்லத்தில் இருந்தேன். அங்கு மர்யம் (அலை) அவர்களின் உருவச்சிலைகள் இருந்தன. அப்போது மஸ்ரூக் (ரஹ்) அவர்கள், "இவை (ரோமப் பேரரசர்) சீசரின் உருவச்சிலைகள்" என்றார்கள். "நான் இல்லை, இவை மர்யம் (அலை) அவர்களின் உருவச்சிலைகள்" என்றேன்.
அப்போது மஸ்ரூக் (ரஹ்) அவர்கள், "கவனி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போரே" என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 37
4290. சயீத் பின் அபில்ஹசன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் இந்த உருவங்களை வரை(யும் தொழில் செய்துவரு)கிறேன். இதைப் பற்றி எனக்கு மார்க்கத் தீர்ப்பு அளியுங்கள்" என்று கேட்டார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "எனக்கு அருகில் வா" என்றார்கள். அவர் அருகில் வந்தார்.
பிறகு (மீண்டும்) "இன்னும் அருகில் வா" என்றார்கள். அவர் இன்னும் அருகில் வந்தபோது, அவரது தலைமீது கையை வைத்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியை உமக்குச் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உருவங்களைப் படைக்கும் ஒவ்வொருவரும் நரகத்திற்கே செல்வர். அவர் படைத்த ஒவ்வோர் உருவத்திற்கும் அல்லாஹ் உயிர் கொடுப்பான். அதுவே அவரை நரகத்தில் வேதனை செய்யும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
மேலும் "நீர் வரைந்துதான் ஆக வேண்டும் என்றால் மரங்கள், உயிரற்ற (இயற்கைக் காட்சிகள் உள்ளிட்ட)வற்றின் படங்களை வரைந்துகொள்" என்று கூறினார்கள்.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:
நான் (இந்த அறிவிப்பாளர்தொடரில் கிடைத்த இந்த ஹதீஸை) நஸ்ர் பின் அலீ (ரஹ்) அவர்கள் (முன்னிலையில் வாசித்துக் காட்டியபோது அவர்கள்) அதை (உண்மையான ஹதீஸ் என) ஏற்றுக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 37
4291. நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (மக்களுக்கு) மார்க்கத் தீர்ப்புகள் வழங்கலானார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (எதைப் பற்றியும்) குறிப்பிட வில்லை. இந்நிலையில் இறுதியாக ஒரு மனிதர் வந்து, அவர்களிடம், "நான் இந்த உருவங்களைப் படைக்கும் (தொழில் புரிகின்ற) ஒரு மனிதன் ஆவேன்" என்று கூறி (அது குறித்துத் தீர்ப்புக் கோரி)னார்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அருகில் வா" என்று கூற, அந்த மனிதர் அருகில் வந்ததும் "உலகில் ஓர் உருவப்படத்தை வரைந்தவர், மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால்,அவரால் ஊதமுடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" எனக் கூறினார்கள்.
- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள மேற்கண்ட ஹதீஸ் நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் வாயிலாகவே வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4292. அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் (மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகமின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் உருவப்படங்கள் சிலவற்றைக் கண்டார்கள்.
அப்போது "எனது படைப்பைப் போன்று படைக்கத் தயாராகிவிட்டவனை விட அக்கிர மக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அவ்வாறாயின் அவர்கள் ஓர் உயிரணுவைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது ஒரு தானிய வித்தைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது கோதுமை வித்தைப் படைத்துக் காட்டட்டும் என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த மர்வான் அல்லது சயீத் பின் அல்ஆஸுக்கு உரிய புது மனையொன்றுக்கு நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் சென்றோம். அந்த மனையில் ஓவியர் ஒருவர் உருவப்படங்களை வரைந்துகொண்டிருந்தார்.
அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் மேற்கண்ட நபிமொழியை அறிவித்தார்கள். அதில் "அல்லது கோதுமை வித்தைப் படைத்துக் காட்டட்டும்!" எனும் வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 37
4293. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உருவச் சிலைகளோ உருவப்படங்களோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 27 பயணத்தில் நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத்தக்கவை ஆகும்.
4294. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாயும் மணியோசையும் உள்ள பயணிகளுடன் (அருள்) வானவர்கள் வரமாட்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4295. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒலியெழுப்பும் மணி, ஷைத்தானின் இசைக் கருவியாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்காக) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும்.
4296. அபூபஷீர் கைஸ் பின் உபைத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட பயணமொன்றில் அவர்களுடன் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவிப்பாளர் ஒருவரை அனுப்பி, "எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (கண்ணேறு கழிவதற்காகக் கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது வேறெந்த மாலையோ இருக்கக்கூடாது. இருந்தால் அவை துண்டிக்கப்பட வேண்டும்" என்று அறிவிக்கச் செய்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள், "அப்போது நபித்தோழர்கள் இரவில் ஓய்வெடுக்கும் இடங்களில் இருந்தார்கள்" என்று அபூபஷீர் (ரலி) அவர்கள் (கூறியதாக அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்கள் என்னிடம்) சொன்னதாகவே நான் கருதுகிறேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
கண் திருஷ்டிக்காக இவ்வாறு கட்டப்படுவதையே (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என) நான் கருதுகிறேன்.
அத்தியாயம் : 37
பாடம் : 29 உயிரினங்களின் முகத்தில் அடிப்பதும் முகத்தில் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
4297. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முகத்தில் அடிக்கவேண்டாம் என்றும், முகத்தில் அடையாளச் சூடிட வேண்டாம் என்றும் தடை செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4298. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களை, முகத்தில் அடையாளச் சூடிடப்பட்ட கழுதையொன்று கடந்து சென்றது. அப்போது அவர்கள், "இதற்கு அடையாளச் சூடிட்டவனை அல்லாஹ் சபிப்பானாக!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 37