3754. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இன்பத்திலும் துன்பத்திலும் விருப்பிலும் வெறுப்பிலும் எங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப் படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்திலிருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பாகச் சண்டையிடமாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையே பேசுவோம் என்றும், அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்புக்கு அஞ்சமாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி அளித்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உபாதா பின் அஸ் ஸாமித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3755. ஜுனாதா பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாங்கள் அவர்களிடம் (உடல்நலம் விசாரிக்கச்) சென்றோம். நாங்கள், "அல்லாஹ் உங்களுக்குக் குணமளிக்கட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஒரு ஹதீஸை (செய்தியை) எங்களுக்கு அறிவியுங்கள். அதனால் அல்லாஹ் பயன் அளிப்பான்" என்று சொன்னோம்.
அதற்கு உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம். எங்களுக்கு விருப்பமான விஷயத்திலும் எங்களுக்கு விருப்பமில்லாத விஷயத்திலும் நாங்கள் சிரமத்திலிருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் எங்களைவிட மற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்போதும்கூட (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றும், ஆட்சியதிகாரத்தில் இருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பான விஷயத்தில் நாங்கள் சண்டையிடமாட்டோம் என்றும் உறுதிமொழி அளித்தோம்.
"எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளர்களிடம் நீங்கள் கண்டாலே தவிர" என்று எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.
அத்தியாயம் : 33
பாடம் : 9 ஆட்சித் தலைவர் ஒரு கேடயம்; அவரோடுதான் எதிரிகள் போரிடுகின்றனர்; அவர் மூலமே மக்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.
3756. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆட்சித் தலைவர் ஒரு கேடயமே ஆவார். அவருடன் போரிடப்படுகிறது. அவர் மூலம் பாதுகாப்புப் பெறப்படுகிறது. அவர் (தமது தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறையச்ச உணர்வைக் கைகொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்துகொண்டால், அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதற்கு மாற்றமாக (தீமையானவற்றை) அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர்மீது(ம்) சாரும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
பாடம் : 10 கலீஃபாக்களில் முதலாவதாக வருபவருக்கே முன்னுரிமை அளித்து உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும்.
3757. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கல்வி கற்பதற்காக) அமர்ந்திருந்தேன். (ஒரு முறை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"பனூ இஸ்ராயீல் மக்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். ஓர் இறைத்தூதர் இறக்கும்போது மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். (ஆனால்,) எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், எனக்குப் பின் கலீஃபாக்கள் (பிரதிநிதிகள்) பலர் தோன்றுவார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "(அவர்கள் வரும்போது) நாங்கள் என்ன செய்ய வேண்டுமெனத் தாங்கள் உத்தரவிடுகிறீர்கள்?" என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (அளிக்க வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்). அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடமே அல்லாஹ் கேட்கவிருக்கின்றான்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3758. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை அன்சாரிகளிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்குப் பின் விரைவில் உங்களைவிடப் பிறருக்கு (ஆட்சியதிகாரம் மற்றும் போர் நிதிகளைப் பங்கிடுதல் ஆகியவற்றில்) முன்னுரிமை வழங்கப்படுதலும் நீங்கள் வெறுக்கின்ற சில நிகழ்வுகளும் நடக்கும்" என்று கூறினார்கள். அன்சாரிகள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் அவற்றைச் சந்திக்கக்கூடியவர் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?" என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆட்சியாளர்களான) அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்துவிடுங்கள். உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3759. அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இறையில்லம் கஅபாவுக்குச் சென்றேன். கஅபாவின் நிழலில் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் மக்கள் கூடியிருந்தனர். நான் அங்கு சென்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் அமர்ந்துகொண்டேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஓர் இடத்தில் இறங்கித் தங்கினோம். எங்களில் சிலர் தம் கூடாரங்களைச் சீரமைத்துக்கொண்டிருந்தனர். வேறுசிலர் அம்பெய்து (பயிற்சி எடுத்துக்)கொண்டிருந்தனர். மேலும் சிலர் தம் கால்நடைகள் மேயுமிடத்தில் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர்களில் ஒருவர் "கூட்டுத் தொழுகை நடைபெறப் போகிறது" என அறிவித்தார்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒன்றுகூடினோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வாழ்ந்த ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கு எது நன்மை என்பதை அறிந்திருந்தாரோ அதை அவர்களுக்கு அறிவித்துவிடுவதும் அவர்களுக்கு எது தீமையென்பதை அறிந்திருந்தாரோ அது குறித்து அவர்களை எச்சரிப்பதும் அவர்மீது கடமையாகவே இருந்தது.
உங்களுடைய இந்தச் சமுதாயத்தின் நிம்மதியான வாழ்வு அதன் ஆரம்பக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சமுதாயத்தில் இறுதியானவர்களுக்குச் சோதனைகளும் நீங்கள் வெறுக்கின்ற பல விஷயங்களும் ஏற்படும். ஒரு குழப்பம் தோன்றும். அது இன்னொரு குழப்பத்தை எளிதானதாகக் காட்டும்.
பிறகு மற்றோரு குழப்பம் தோன்றும். அப்போது இறைநம்பிக்கையாளர், "இதில்தான் என் அழிவு உள்ளது" என்று கூறுவார். பிறகு அந்தக் குழப்பம் விலகிவிடும். பிறகு மற்றொரு குழப்பம் தோன்றும். அப்போது இறைநம்பிக்கையாளர், "இதுதான்; இதுதான்" என்பார்.
ஆகவே, (நரக) நெருப்பிலிருந்து ஒதுக்கப்பட்டு, சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட யார் விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையிலேயே இறப்பு அவரைத் தழுவட்டும். தமக்கு எது கிடைக்க வேண்டும் என்று விரும்புவாரோ அதையே மக்களுக்கும் அவர் விரும்பட்டும். ஓர் ஆட்சித் தலைவருக்கு வாக்குறுதிப் பிரமாணம் (பைஅத்) அளித்தவர், அவருடன் தமது கரத்தை இணைப்பதுடன் உளப்பூர்வமான ஆதரவையும் அவருக்கு வழங்கட்டும்; தம்மால் இயன்ற வரை அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கட்டும். அவரு(டைய ஆட்சி)க்கெதிராக அவருடன் சண்டையிடுவதற்காக மற்றொருவர் வந்தால் அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்.
இவ்வாறு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதும் நான் அவர்களை நெருங்கி, அல்லாஹ்வின் பெயரால் நான் உங்களிடம் கேட்கிறேன். "இதைத் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் தம் கரங்களால் தம் காதுகளையும் உள்ளத்தையும் நோக்கி சைகை செய்துகாட்டி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை என் காதுகள் கேட்டன; என் உள்ளம் அதை மனனமிட்டது" என்று கூறினார்கள்.
நான் அவர்களிடம், "இதோ! உங்கள் தந்தையின் சகோதரர் புதல்வர் முஆவியா (ரலி) அவர்கள் (கலீஃபா அலீ (ரலி) அவர்களுக்கெதிராக நிதியும் படையும் திரட்டி) எங்கள் பொருட்களை எங்களுக்கிடையே தவறான முறையில் உண்ணும்படியும் நம்மை நாமே கொலை செய்யும்படியும் எங்களுக்கு உத்தரவிடுகிறார். ஆனால், அல்லாஹ்வோ, "இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களின் பரஸ்பரத் திருப்தியுடன் நடக்கும் வணிகமாக இருந்தால் தவிர, (வேறு வழிகளில்) உங்களுக்கிடையே உங்கள் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். உங்களை நீங்களே கொலை செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களிடம் மிகவும் கருணை உடையவனாக இருக்கின்றான் (4:29) என்று கூறுகின்றானே?" என்று கேட்டேன்.
அதற்கு (பதிலளிக்காமல்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில் அவருக்கு நீ கட்டுப்படு! அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் விஷயத்தில் அவருக்கு மாறுசெய்துவிடு" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3760. மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் அப்தி ரப்பில் கஅபா அஸ்ஸாஇதீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் இறையில்லம் கஅபா அருகில் ஒரு கூட்டத்தைக் கண்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 33
பாடம் : 11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் (உரியவர்களை விட்டுவிட்டு மற்றவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கும்போதும் பொறுமைகாக்குமாறு வந்துள்ள கட்டளை.
3761. உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தனியாகச் சந்தித்து, "தாங்கள் இன்ன மனிதரை அதிகாரியாக நியமித்ததைப் போன்று என்னையும் அதிகாரியாக நியமிக்கமாட்டீர்களா?" என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அன்சாரிகளே!) எனக்குப் பிறகு (உங்களைவிட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாக வழங்கப்படும் "ஹவ்ளுல் கவ்ஸர்" எனும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தனியாகச் சந்தித்து" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
பாடம் : 12 உரிமைகளைத் தர மறுத்தாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல்.
3762. வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
சலமா பின் யஸீத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எங்களை நிர்வகிக்கும் ஆட்சித் தலைவர்கள், அவர்களுக்கு நாங்கள் செலுத்த வேண்டிய உரிமைகளைக் கோருகின்றவர்களாகவும், எங்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய உரிமைகளை மறுப்பவர்களாகவும் அமைந்துவிட்டால், அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள், கூறுங்கள்?" என்று கேட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலமா (ரலி) அவர்களைவிட்டுத் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.
பிறகு மீண்டும் சலமா (ரலி) அவர்கள் கேட்டபோதும் அவர்களைவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இரண்டாவது தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ (அவ்வாறு) சலமா (ரலி) அவர்கள் கேட்டபோது,அவர்களை அல்அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் இழுத்தார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,) "நீங்கள் (உங்கள் தலைமையின் கட்டளையைச்) செவியுற்று, (அதற்குக்) கீழ்ப்படியுங்கள். ஏனெனில், அவர்கள்மீது சுமத்தப்பட்டது அவர்களைச் சாரும். உங்கள்மீது சுமத்தப்பட்டது உங்களைச் சாரும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 33
3763. மேற்கண்ட ஹதீஸ் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் சலமா (ரலி) அவர்களை இழுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்கள் தலைமையின் கட்டளையைச்) செவியுற்று, (அதற்குக்) கீழ்ப்படியுங்கள். ஏனெனில், அவர்கள்மீது சுமத்தப்பட்டது அவர்களைச் சாரும். உங்கள்மீது சுமத்தப்பட்டது உங்களைச் சாரும்" என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 13 (அரசியல்) குழப்பங்கள் தோன்றும்போதும் மற்ற சமயங்களிலும் முஸ்லிம்களின் கூட்டமைப்போடு (ஜமாஅத்) சேர்ந்திருப்பது கடமையாகும்; தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பதும் கூட்டமைப்பிலிருந்து விலகுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
3764. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியதே காரணம்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம் (இருக்கிறது)" என்று பதிலளித்தார்கள்.
நான், "அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்" என்று பதிலளித்தார்கள். நான், "அந்தக் கலங்கலான நிலை என்ன?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "ஒரு கூட்டத்தார் எனது வழிமுறை (சுன்னா) அல்லாததைக் கடைப்பிடிப்பார்கள். எனது நேர்வழியல்லாததைக் கொண்டு வழிகாட்டுவார்கள். அவர்களில் நீ நன்மையையும் காண்பாய்; தீமையையும் காண்பாய்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம். நரகத்தின் வாசல்களில் நின்றுகொண்டு (அங்கு வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவரை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்)களை எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் நம் (அரபு) இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். நம் மொழிகளையே பேசுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! இத்தகைய கால கட்டத்தை நான் அடைந்தால் என்ன செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அதன் ஆட்சியாளரையும் பற்றிக்கொள்" என்று பதிலளித்தார்கள்.
அதற்கு நான், "அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஆட்சியாளரோ இல்லை (என்ற நிலையில் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)?" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கிவிடு. (ஒதுங்கி வாழும் சூழலுக்கு முட்டுக்கட்டையாகப் பல்வேறு சிரமங்கள் நேர்ந்தாலும்) ஒரு மரத்தின் வேர் பாகத்தைப் பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, இறுதியில் அதே நிலையில் நீ இருக்கவே இறப்பு உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் நீ சேர்ந்துவிடாதே)" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 33
3765. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (மாச்சரியங்கள் நிறைந்த அறியாமைக் காலத்) தீமையில் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். அதில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம். இந்த நன்மைக்கு அப்பால் தீமை (அரசியல் குழப்பம்) ஏதும் உண்டா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
நான், "அந்தத் தீமைக்கு அப்பால் நன்மை (நல்லாட்சி) ஏதும் உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்று விடையளித்தார்கள். நான், "அந்த நன்மைக்கு அப்பால் தீமை (அரசியல் குழப்பம்) ஏதும் உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். நான், "அது எப்படி?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "எனக்குப் பிறகு சில தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் எனது நேர்வழி அல்லாத வழியில் நடப்பார்கள். எனது வழிமுறையை (சுன்னா) கடைப் பிடிக்கமாட்டார்கள். அவர்களிடையே சிலர் தோன்றுவார்கள். அவர்கள் மனித உடலில் ஷைத்தான்களின் உள்ளம் படைத்தவர்களாய் இருப்பார்கள்" என்று கூறினார்கள்.
நான், "அந்தக் கால கட்டத்தை அடைந்தால் நான் என்ன செய்ய வேண்டும், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு "அந்த ஆட்சியாளரின் கட்டளையைச் செவியுற்று அவருக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள். நீ முதுகில் தாக்கப்பட்டாலும் சரியே! உன் செல்வங்கள் பறிக்கப்பட்டாலும் சரியே! (அந்த ஆட்சித்தலைவரின் கட்டளையைச்) செவியுற்றுக் கட்டுப்பட்டு நடந்துகொள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 33
3766. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன மாச்சரியத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன மாச்சரியத்துக்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன மாச்சரியத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும்.
யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3767. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல் (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, பின்னர் (அதே நிலையில்) இறந்துபோகிறாரோ அவர் அறியாமைக்கால மரணத்தையே சந்திப்பார். (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகக் கொடிக்குக் கீழே நின்று ஒருவர் போரிட்டு இன மாச்சரியத்திற்காகக் கோபப்படுகிறார்; அல்லது இன மாச்சரியத்திற்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார் எனில், அவர் என் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்லர்.
யார் என் சமுதாயத்திலிருந்து என் சமுதாயத்திற்கெதிராகப் புறப்பட்டு அவர்களில் இறை நம்பிக்கையாளர்கள் என்றுகூடப் பார்க்காமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, அவர்களில் ஒப்பந்தம் செய்தவர்களிடம் அவர்களது ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" எனும் குறிப்பு இல்லை. முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
3768. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர், பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (ஒன்றுபட்டக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்துபோனாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3769. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர், பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து யார் ஒரு சாண் அளவு வெளியேறி, அதே நிலையில் இறந்துபோகிறாரோ, அவர் அறியாமைக் கால மரணத்தையே எய்துவார்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3770. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மௌடீகத்தின் கொடிக்குக் கீழே இன மாச்சரியத்திற்கு அழைப்பு விடுக்கவோ, இன மாச்சரியத்திற்காக ஒத்துழைக்கவோ செய்து அதற்காகக் கொல்லப்படுபவர் அறியாமைக் கால மரணத்தையே சந்திப்பார்.
இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3771. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஸீத் பின் முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த "அல்ஹர்ரா"ப் போரினால் பிரச்சினை ஏற்பட்டபோது, (யஸீத் பின் முஆவியாவின் ஆட்சிக்கெதிராக மக்களைத் திரட்டியிருந்த) அப்துல்லாஹ் பின் முதீஉ அல்குறஷீ (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சென்றார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் முதீஉ (ரலி) அவர்கள் "அபூஅப்திர் ரஹ்மானுக்குத் தலையணையை எடுத்துப் போடுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நான் உட்காருவதற்காக உங்களிடம் வரவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு ஹதீஸை உங்களுக்கு அறிவிப்பதற்காகவே உங்களிடம் நான் வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(தலைமைக்குக்) கட்டுப்படுகின்ற செயலிலிருந்து கையை விலக்கிக்கொண்டவர், தம(து செயல்பாடுகளு)க்கு(ம் அதற்கான சாக்குப் போக்குகளுக்கும்) எந்தச் சான்றும் இல்லாமலேயே மறுமை நாளில் இறைவனைச் சந்திப்பார். தமது கழுத்தில் (தம் ஆட்சியாளரிடம் அளித்திருந்த) உறுதிமொழிப் பிரமாணம் இல்லாத நிலையில் யார் இறக்கிறாரோ, அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுவார்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ஸல்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 14 முஸ்லிம்களின் (அரசியல்) நிலை (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும் போது, அவர்களிடையே பிளவை ஏற்படுத்துகின்றவருக்குரிய சட்டம்.
3772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(எனக்குப் பிறகு) விரைவில் குழப்பங்களும் பிரச்சினைகளும் தோன்றும். இந்தச் சமுதாயத்தின் (அரசியல்) நிலை (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது, அவர்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்புகின்றவரை வாளால் வெட்டிக் கொல்லுங்கள். அவர் யாராக இருந்தாலும் சரியே!
இதை அர்ஃபஜா பின் ஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அர்ஃபஜா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஆயினும், இந்த அறிவிப்புகள் அனைத்திலும், "அவரைக் கொல்லுங்கள்" என்றே இடம் பெற்றுள்ளது. (வாளால் வெட்டிக் கொல்லுங்கள்" என்று இடம்பெறவில்லை.)
அத்தியாயம் : 33
3773. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரின் (தலைமையின்) கீழ் உங்கள் (அரசியல்) நிலை ஒன்றுபட்டிருக்கும்போது, உங்கள் ஐக்கியத்தை உடைக்கும் அல்லது உங்கள் கட்டமைப்பைக் குலைக்கும் நோக்கத்தோடு உங்களிடம் யாரேனும் வந்தால் அவரைக் கொன்றுவிடுங்கள்.
இதை அர்ஃபஜா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33