3674. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போர் நாளைவிடக் கடுமையானதொரு நாளைத் தாங்கள் சந்தித்ததுண்டா?" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் உன் சமுதாயத்தாரால் (நிறையத் துன்பங்களைச்) சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது, (தாயிஃபில் உள்ள) "அகபா" நாளில் சந்தித்த துன்பமேயாகும்.
ஏனெனில், அன்று நான் என்னை (இறைவனின் தூதராக) ஏற்றுக்கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவரிடம் எடுத்துரைத்தேன். எனக்கு இசைவான பதிலை அவர் அளிக்கவில்லை.
ஆகவே, நான் கவலையோடு எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். "கர்னுஸ் ஸஆலிப்" எனும் இடத்தை அடையும்வரை நான் சுயஉணர்வுக்குத் திரும்பவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது அங்கே (வானத்தில்) ஒரு மேகம் என்மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது, அதில் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் என்னை அழைத்து, "உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் செவியுற்றான். அவர்களை நீங்கள் விரும்பியபடி (தண்டிப்பதற்கு) ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்" என்று கூறினார்கள்.
உடனே மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து, எனக்கு முகமன் (சலாம்) கூறினார். பிறகு "முஹம்மதே! உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் பேசியதை அல்லாஹ் கேட்டான். நான் மலைகளுக்கான வானவர். (இந்த மக்கள் விஷயத்தில்) நீங்கள் விரும்பியபடி கட்டளையிடுவதற்காக உங்களிடம் என்னை அல்லாஹ் அனுப்பியுள்ளான். உங்கள் விருப்பம் என்ன? (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள்மீது நான் புரட்டிப் போட்டுவிட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)" என்று கூறினார்.
உடனே நான் அவரிடம், "வேண்டாம். இந்த (நகரத்து) மக்களின் வழித்தோன்றல்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வழிபடுவோரை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களைத் தண்டிக்க வேண்டாம்)" என்று கூறிவிட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3675. ஜுன்துப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பங்குபெற்ற ஒரு போரில் அவர்களது (கால்) விரலில் (காயம் ஏற்பட்டு) இரத்தம் சொட்டியது. அப்போது அவர்கள்,
நீ இரத்தம் சொட்டுகின்ற
ஒரு விரல்தானே
நீ பட்டதெல்லாம்
இறைவழியில்தானே
என்று (ஈரடிச் சீர்பாடல் வடிவில்) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3676. மேற்கண்ட ஹதீஸ் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படையில் இருந்தபோது, அவர்களது (கால்) விரலில் கல் பட்டு (காயமேற்பட்டு)விட்டது" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3677. ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (சில நாட்கள்) தாமதமாக வந்தார்கள். அப்போது இணைவைப்பாளர்கள், "முஹம்மத் விடை கொடுக்கப்பட்டு விட்டார்" என்று கூறினர்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "முற்பகலின் மீது சத்தியமாக! இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உம்முடைய இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவுமில்லை" (93:1-3) எனும் வசனங்களை அருளினான்.
அத்தியாயம் : 32
3678. ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு "இரண்டு இரவுகள்” அல்லது "மூன்று இரவுகள்” (இரவுத் தொழுகைக்காகக்கூட) எழவில்லை. அவர்களிடம் ஒரு பெண் வந்து, "முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டு விட்டான் என்றே நான் கருதுகிறேன். அதனால்தான் "இரண்டு இரவுகளாக" அல்லது "மூன்று இரவுகளாக” உம்மை அந்த ஷைத்தான் நெருங்கி வரவில்லை" என்று கூறினாள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "முற்பகலின் மீது சத்தியமாக! இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்கள் இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங் கொள்ளவுமில்லை" எனும் (93: 1-3)வசனங்களை அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுன்துப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 40 நபி (ஸல்) அவர்கள் (மக்களை) இறைவன்பால் அழைத்ததும் நயவஞ்சகர்கள் அளித்த துன்பங்களைப் பொறுத்ததும்.
3679. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதில் "ஃபதக்" நகர் குஞ்சம் வைத்த முரட்டுத் துணி விரித்து, அதில் அமர்ந்தவாறு பயணம் செய்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டார்கள். ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள்.
இது பத்ருப் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது. (வழியில்) நபியவர்கள் ஓர் அவையைக் கடந்துசென்றார்கள். அந்த அவையில் முஸ்லிம்களும் சிலை வழிபாட்டாளர்களான இணைவைப்போரும் யூதர்களும் கலந்து இருந்தார்கள்.
அவர்களிடையே (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் இருந்தார். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள் வாகனப்) பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது, அப்துல்லாஹ் பின் உபை தனது மேல்துண்டால் தனது முகத்தைப் பொத்திக்கொண்டு, "எங்கள்மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்" என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள் அந்த அவையோருக்கு முகமன் (சலாம்) கூறினார்கள். பிறகு, தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி,அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல், "மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிட அழகியது வேறொன்றுமில்லை. ஆனாலும், அதை எங்களுடைய (இத்தகைய) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர். உமது இருப்பிடத்திற்குச் செல்லும். எங்களில் யார் உம்மிடம் வருகிறார்களோ அவர்களுக்கு எடுத்துச் சொல்லும்" என்றார்.
(இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், "(ஆம்; அல்லாஹ்வின் தூதரே! இதை) எங்கள் அவைகளில் வெளிப்படுத்துங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்" என்று சொன்னார்கள்.
இதற்கிடையே முஸ்லிம்களும் இணைவைப்போரும் யூதர்களும் ஒருவரையொருவர் ஏசிக் கொண்டே ஒருவர் மீதொருவர் பாய்ந்து (தாக்கிக்)கொள்ள முற்பட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களை அமைதிப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.
பின்னர் தமது வாகனத்தில் ஏறி (உடல்நலமில்லாமல் இருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, "சஅதே! (உங்கள் குலத்தாரான) அபூஹுபாப் -அப்துல்லாஹ் பின் உபை- சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?" என்று கூறி, "அப்துல்லாஹ் பின் உபை இப்படி இப்படிக் கூறினார்" என்று தெரிவித்தார்கள்.
அதற்கு சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அவரை மன்னித்து விட்டுவிடுங்கள், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (மதீனா) நகரத்தார் அவருக்குக் கிரீடம் அணிவித்து அவருக்கு முடிசூட்ட முடிவு செய்திருந்த நிலையில்தான், அல்லாஹ் தங்களுக்கு இ(ந்த நபித்துவம் மற்றும் தலைமைத்துவத்)தை வழங்கினான். அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய (மார்க்க)த்தின் மூலம் அவர்களின் முடிவை நிராகரித்தபோது, அதனால் அவர் பொருமினார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்" என்று கூறினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்துவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இது அப்துல்லாஹ் தம்மை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொள்வதற்கு முன்னர் (இறைமறுப்பாளராக இருந்தபோது) நடந்ததாகும்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3680. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், "தாங்கள் அப்துல்லாஹ் பின் உபையிடம் சென்றால் நன்றாயிருக்குமே!" என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது.
அப்துல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது, அவர், "தூர விலகிப்போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது" என்று கூறினார்.
அப்போது அன்சாரி(த் தோழர்)களில் ஒருவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னைவிட நல்ல வாசனையுடையதுதான்" என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவரது (கஸ்ரஜ்) குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரப்பட்டார்.
அவ்விருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். ஈச்ச மட்டையாலும் கைகளாலும் செருப்பாலும் அடித்துக்கொண்டார்கள்.
அப்போது, "இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தம்மிடையே சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள்" (49:9) எனும் வசனம் அவர்கள் குறித்து அருளப்பட்டது எனும் செய்தி எங்களுக்கு எட்டியது.
அத்தியாயம் : 32
பாடம் : 41 அபூஜஹ்ல் கொல்லப்படுதல்.
3681. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பத்ருப் போர்க் களத்தில்) "அபூஜஹ்ல் என்ன ஆனான் எனப் பார்த்து வருபவர் யார்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்துவரச்) சென்றார்கள். அவனை (அன்சாரியான) அஃப்ரா என்பவருடைய இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் (குற்றுயிராக) வீழ்ந்து கிடப்பதைக் கண்டார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக்கொண்டு, "அபூஜஹ்ல் நீதானே!" என்று கேட்டார்கள். அதற்கு அபூஜஹ்ல், "நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக” அல்லது "தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக” ஒருவன் உண்டா?" என்று (தன்னைத்தானே பெருமைப்படுத்திய) அவன் கேட்டான்.
அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "விவசாயக் குடியில் பிறக்காத ஒருவன் (அன்சாரி அல்லாதவன்) என்னைக் கொன்றிருந்தால் நன்றாயிருந்திருக்குமே!" என அபூஜஹ்ல் கூறினான் என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அபூஜஹ்ல் என்ன செய்கிறான் என எனக்காக அறிந்துவருபவர் யார்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களின் குறிப்பும் இதில் இடம்பெறுகிறது.
அத்தியாயம் : 32
பாடம் : 42 யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.
3682. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு” என அனுமதியளித்தார்கள்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, "இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்" என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான்.
அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
அதற்கு கஅப், "இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், "உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா? (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)" என்று சொன்னார்கள்.
"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "(எங்கள் குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது "இவன் இரண்டு "வஸ்க்” பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்" என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்" என்று கூறினார்கள். "அப்படியானால் சரி" என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.
பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.
அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.
-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "கஅபின் மனைவி அவனிடம், "நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது" என்று கூறினாள்.
அதற்கு கஅப் "அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்" என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.
அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), "கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்" என்று கூறினார்கள்.
கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், "உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்" என்று கூறினர். அதற்கு கஅப் "ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்" என்று கூறினான்.
முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் "ஆம்; நுகர்ந்து கொள்" என அனுமதியளித்தான்.
அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, "மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா?" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது "பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 43 கைபர் போர்.
3683. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, கைபருக்கு அருகில் இரவின் இருட்டு இருக்கவே சுப்ஹுத் தொழுகையை நாங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது) வாகனத்தில் ஏறி (கைபரை நோக்கி)ப் பயணம் செய்தார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்களும் தமது வாகனத்தில் ஏறிப் பயணம் செய்தார்கள். நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் செல்லும் சாலையில் தமது வாகனத்தை (விரைவாகச்) செலுத்தினார்கள். எனது முழங்கால், (அருகில் வாகனத்தில் சென்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டுக்கொண்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வேட்டி அவர்களது தொடையிலிருந்து விலகியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொடையின் வெண்மையை நான் பார்த்தேன்.
நகருக்குள் நுழைந்தபோது, "அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழா(வது உறுதியா)கி விட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் முற்றத்தில் (போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட் டோரின் காலைப் பொழுது கெட்டதாக ஆகிவிடும்" என்று மூன்று முறை கூறினார்கள்.
அப்போது (யூத) மக்கள் தம் வேலைகளுக்காகப் புறப்பட்டுவந்தனர். (எங்களைப் பார்த்ததும்), "முஹம்மத் வந்துவிட்டார்" என்று கூறினர். நாங்கள் கைபரைப் போர் செய்தே கைப்பற்றினோம் (சமாதான ஒப்பந்தத்தின் மூலம் கைப்பற்றவில்லை).
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "முஹம்மதும் அவருடைய ஐந்து அணிகள் கொண்ட படையும் வந்துவிட்டனர்" என யூதர்கள் சொல்லிக்கொண்டார்கள் என என் சகாக்களில் சிலர் கூறினர்.
அத்தியாயம் : 32
3684. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் நாளில் நான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தேன். எனது பாதம், (அருகில் வாகனத்தில் சென்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பாதத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. நாங்கள் கைபர்வாசிகளிடம் சூரியன் உதிக்கும் நேரத்தில் சென்றடைந்தோம். அப்போது அவர்கள் தங்களுடைய கால்நடைகள், கோடரிகள், (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகள் மற்றும் மண் வெட்டிகள் ஆகியவற்றுடன் (வயல்வெளிகளை நோக்கி) வெளியேறி வந்தனர்.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்ததும்) "முஹம்மதும் அவருடைய (ஐந்து அணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்)" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் முற்றத்தில் (போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்டோரின் காலைப் பொழுது கெட்டதாக ஆகிவிடும்" என்று கூறினார்கள். அவ்வாறே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களைத் தோற்கடித்தான்.
அத்தியாயம் : 32
3685. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபருக்கு வந்தபோது, "நாம் ஒரு சமுதாயத்தின் முற்றத்தில் (போரிட) இறங்குவோமாயின், எச்சரிக்கப்பட்டோரின் காலைப்பொழுது கெட்டதாக ஆகிவிடும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3686. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காக)ப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது மக்களில் ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம், "உங்கள் கவிதைகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடமாட்டீர்களா?" என்று கேட்டார்.
ஆமிர் (ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காக (பின்வரும் யாப்பு வகைக் கவிதையை)ப் பாடி அவர்களுடைய ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள்:
இறைவா!
நீ இல்லையென்றால்
நாங்கள்
நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்.
தர்மமும் செய்திருக்கமாட்டோம்.
தொழுதிருக்கவுமாட்டோம்.
நாங்கள் புரிந்துவிட்ட
பாவங்களுக்காக
எங்களை மன்னிப்பாயாக.
உனக்கே நாங்கள் அர்ப்பணம்.
(போர்முனையில் எதிரியை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக.
எங்கள்மீது அமைதியைப்
பொழிவாயாக. (அறவழியில் செல்ல)
நாங்கள் அழைக்கப்பட்டால்
நாங்கள் (தயாராக) வந்துவிடுவோம்.
எங்களிடம்
மக்கள் (அபயக்) குரல்
எழுப்பினால்
(உதவிக்கு வருவோம்).
என்று பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இந்த ஒட்டகவோட்டி?" என்று கேட்டார்கள். "ஆமிர் பின் அல்அக்வஉ” என்று மக்கள் பதிலளித்தனர். அப்போது, "அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
அங்கிருந்த மக்களில் ஒருவர், "இறைத்தூதரே! (அவருக்கு வீரமரணமும் அதையடுத்துச் சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக்கூடாதா?" என்று கேட்டார்.
பிறகு நாங்கள் கைபருக்குச் சென்று, கைபர்வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உங்களுக்குக் கைபரை வெற்றியாக்கிவிட்டான்"என்று கூறினார்கள். வெற்றியளிக்கப்பட்ட அன்று மாலை, மக்கள் நிறைய நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது என்ன நெருப்பு? எதற்காக இவற்றை மூட்டியிருக்கிறீர்கள்?"என்று கேட்டார்கள். "இறைச்சி சமைப்பதற்காக" என்று மக்கள் விடையளித்தனர். "எந்த இறைச்சி?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "நாட்டுக் கழுதைகளின் இறைச்சி” என்று மக்கள் கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றைக் கொட்டிவிட்டு, பாத்திரங்களை உடைத்து விடுங்கள்" என்று கூறினார்கள்.
அப்போது ஒருவர், "இறைச்சிகளைக் கொட்டிவிட்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொள்ளலாமா?" என்று கேட்டார். "அப்படியே ஆகட்டும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்றபோது, ஆமிர் (ரலி) அவர்களின் வாள் குட்டையாக இருந்தது. குனிந்து ஒரு யூதனின் காலை அவர்கள் வெட்டப் போனபோது, ஆமிர் அவர்களின் வாளின் மேற்பகுதி அவர்களது முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.
(கைபர் வெற்றிக்குப் பின் மதீனாவை நோக்கி) மக்கள் திரும்பியபோது -சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்- அமைதியாக இருந்த என்னைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, "உமக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள்.
நான், "என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! (என் தந்தையின் சகோதரர்) ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன. (அவர் தமது வாளால் தம்மைத் தாமே குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார்) என்று மக்கள் கூறுகிறார்கள்" எனத் தெரிவித்தேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதைச் சொன்னவர் யார்?" என்று கேட்டார் கள். "இன்ன மனிதரும் இன்ன மனிதரும் உசைத் பின் ஹுளைர் அல்அன்சாரீ (ரலி) அவர்களுமே இவ்வாறு கூறினர்" என்று நான் பதிலளித்தேன். "இதைச் சொன்னவர் பொய்யுரைத்து விட்டார். நிச்சயமாக ஆமிருக்கு (நற்செயல் புரிந்த நன்மை,அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு" என்று கூறியவாறு, தம் இரு விரல்களையும் இணைத்துக் காட்டினார்கள்.
தொடர்ந்து, "அவர் துன்பங்களைத் தாங்கினார். (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்து) பூமியில் உலவிய இவரைப் போன்ற அரபியர் மிகவும் அரிதே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் அப்பாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("எங்கள்மீது அமைதியைப் பொழிவாயாக" என்பதைக் குறிக்க "வ அல்கியன் சகீனத்தன் அலைனா” என்பதற்குப் பகரமாக) "வ அல்கீ சகீனத்தன் அலைனா" என்று இடம்பெற்றுள்ளது (பொருள் ஒன்றே).
அத்தியாயம் : 32
3687. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று என் (தந்தையின்) சகோதரர் (ஆமிர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (யூதர்களுடன்) கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருடைய வாள் முனை அவரையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர் இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (சிலர்) இது தொடர்பாக (பல விதமாக)ப் பேசிக் கொண்டனர். அவர் (மரணம்) தொடர்பாக சந்தேகம் வெளியிட்டனர். "அவர் தமது ஆயுதத்தாலேயே இறந்துவிட்ட மனிதர்" என்றும், அவருடைய நடவடிக்கைகளில் இன்னும் சிலவற்றைக் குறித்தும் சந்தேகமாகப் பேசினர்.
கைபரிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபோது (அவர்களிடம்) நான், "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்காகச் சில யாப்பு வகைக் கவிதையைப் பாட எனக்கு அனுமதி அளியுங்கள்" என்று கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதியளித்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "நீ சொல்லவிருப்பதை நான் அறிவேன்" என்று கூறினார்கள். அப்போது நான் பின்வரும் யாப்பு வகைக் கவிதைகளைப் பாடினேன்:
"அல்லாஹ்வின் மீதாணை!
அல்லாஹ் இல்லாவிட்டால்
நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்
தர்மமும் செய்திருக்கமாட்டோம்.
தொழுதிருக்கவும் மாட்டோம்"
என்று பாடினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ உண்மையுரைத்தாய்" என்று கூறினார்கள். பிறகு நான்,
"எங்கள் மீது
அமைதியைப் பொழிவாயாக.
(போர் முனையில் எதிரிகளை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக.
இணைவைப்பாளர்கள்
எங்கள்மீது வரம்புமீறிவிட்டார்கள்"
என்று பாடினேன்.
நான் பாடி முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை யாத்தவர் யார்?" என்று கேட்டார்கள். நான் "என் (தந்தையின்) சகோதரர் (ஆமிர்)" என்றேன். "அவருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக" என்று நபியவர்கள் பிரார்த்தித்தார்கள்.
அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! சிலர், என் சகோதரருக்கு (இறுதித் தொழுகை) தொழுவதற்கு அஞ்சுகின்றனர். அவர் தமது ஆயுதத்தாலேயே தற்கொலை செய்துகொண்ட ஒரு மனிதர் என்று கூறுகின்றனர்" என்றேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர் துன்பங்களைத் தாங்கி, (இறை வழியில்) அறப்போரும் புரிந்து இறந்தார்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு நான் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவரிடம் (இந்த ஹதீஸைப் பற்றிக்) கேட்டேன். அவரும் தம் தந்தையாரிடமிருந்து இதைப் போன்றே எனக்கு அறிவித்தார்.
ஆயினும், "மக்களில் சிலர் ஆமிருக்காக (இறுதித் தொழுகை) தொழுவதற்கு அஞ்சுகின்றனர்" என்று நான் கூறியபோது "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர்கள் பொய்யுரைத்துவிட்டனர். அவர் துன்பங்களைத் தாங்கி (இறைவழியில்) அறப்போரும் புரிந்து இறந்தார். அவருக்கு (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு" என்று கூறியபடி, தம் இரு விரல்களை இணைத்துக் காட்டினார்கள்" என்று அவர் கூறினார்.
அத்தியாயம் : 32
பாடம் : 44 "அஹ்ஸாப்" எனும் அகழ்ப் போர்.
3688. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின்போது (அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டு இருந்தார்கள். மண், அவர்களது வயிற்றின் வெண்மையை மறைத்துவிட்டிருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டு இருந்தார்கள்:
அல்லாஹ்வின் மீதாணை!
அல்லாஹ் இல்லாவிட்டால், நாங்கள்
நேர்வழி அடைந்திருக்கமாட்டோம்
தர்மமும் செய்திருக்கமாட்டோம்
தொழுதிருக்கவுமாட்டோம்.
எங்கள்மீது அமைதியைப்
பொழிவாயாக! இவர்கள்
(கூட்டுப் படையினர்) எங்களுக்கு
அக்கிரமம் இழைத்துவிட்டனர்.
சில வேளை இவ்வாறு கூறினார்கள்:
இந்தப் பிரமுகர்கள்
எங்களை நிராகரித்துவிட்டனர்.
இவர்கள் எங்களைச்
சோதனையில் ஆழ்த்த விரும்பினால்
நாங்கள் இடம் தரமாட்டோம்.
"(நாங்கள் இடம் தரமாட்டோம்; நாங்கள் இடம் தரமாட்டோம் என) இந்த (இறுதி) வாசகத்தை உரத்த குரலில் கூறிக்கொண்டு இருந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ("இவர்கள் எங்களை நிராகரித்து விட்டனர்" என்பதற்குப் பகரமாக) "இவர்கள் எங்கள்மீது எல்லை மீறிவிட்டனர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3689. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அகழ் தோண்டிக்கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டும் இருந்தபோது, எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள்,
"இறைவா! மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு எதுவுமில்லை
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!"
என்று (பாடியபடி) கூறினார்கள்.
அத்தியாயம் : 32
3690. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (அகழ் தோண்டிக்கொண்டிருந்தபோது),
"இறைவா! மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு எதுவுமில்லை
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பருள்வாயாக!"
என்று (பாடியபடி) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3691. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ் தோண்டிக்கொண்டிருந்தபோது),
"இறைவா! மறுமை வாழ்வே
(நிரந்தரமான) வாழ்வாகும்"
அல்லது "இறைவா!
மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு
வேறெதுவுமில்லை"
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்
அன்சாரிகளையும் முஹாஜிர்களையும்
நீ கண்ணியப்படுத்துவாயாக"
என்று (பாடியபடி) கூறினார்கள். "அல்லது" எனும் ஐயப்பாட்டுடன் ஷுஅபா (ரஹ்) அவர்களே அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3692. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அகழ் தோண்டிக்கொண்டு) இருந்த போது பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப் பாடிக்கொண்டிருந்தார்கள்:
இறைவா!
மறுமையின் நன்மையைத் தவிர
வேறு (நிலையான) நன்மை
எதுவுமில்லை.
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்
நீ உதவி செய்வாயாக.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஷைபான் பின் ஃபர்ரூக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உதவி செய்வாயாக" என்பதற்குப் பகரமாக "மன்னிப்பருள்வாயாக" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3693. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போர் நாளில் முஹம்மத் (ஸல்)
அவர்களின் தோழர்கள்,
"நாங்கள் (எத்தகையோர் எனில்)
உயிரோடிருக்கும் காலம்வரை
நாங்கள் "இஸ்லாத்தில் நிலைப்போம்”
அல்லது "அறப்போர் புரிவோம்”
என முஹம்மத் (ஸல்) அவர்களிடம்
உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்"
என்று (பாடியபடி) கூறிக்கொண்டிருந்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
"இறைவா! மறுமையின் நன்மையே
(நிலையான) நன்மையாகும்.
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்
நீ மன்னிப்பருள்வாயாக!"
என்று (பாடியபடியே) சொன்னார்கள்.
அத்தியாயம் : 32