3654. மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியாக்காரர்களுடன் (மக்கா குறைஷியருடன் ஹுதைபியா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டபோது, அலீ (ரலி) அவர்களே அவர்களுக்கிடையிலான ஒப்பந்தப்பத்திரத்தை எழுதினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்" என்று அவர்கள் எழுத..." என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், இந்த அறிவிப்புகளில் "இது எழுதிக்கொண்டது" ("ஹாதா மா காத்தப அலய்ஹி") எனும் வாக்கியம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3655. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டபோது, "முஸ்லிம்கள் (அடுத்த ஆண்டு) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் தங்கலாம்; நகருக்குள் உறையிலிட்ட வாளுடன்தான் நுழைய வேண்டும்; மக்காவிலிருந்து திரும்பிச் செல்லும்போது மக்காவாசிகளில் யாரையும் தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. அவர்களுடன் வந்திருப்பவர்களில் மக்காவிலேயே தங்கிக்கொள்ள விரும்பும் யாரையும் தடுக்கக்கூடாது" ஆகிய நிபந்தனைகளின் பேரில் மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "நமக்கிடையிலான சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பின்வருமாறு எழுதுவீராக:
"அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் எழுதிக்கொண்ட ஒப்பந்த பத்திரம்..." என்று கூறினார்கள். உடனே இணைவைப்பாளர்கள், "நீர் அல்லாஹ்வின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருப்போமாயின், நாங்கள் உம்மைப் பின்தொடர்ந்திருப்போமே! மாறாக, "அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மத்" என்று எழுதுங்கள்" என்று கூறினார்கள்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் அ(ந்த வாசகத்)தை அழித்துவிடுமாறு கூறினார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அதை நான் அழிக்கமாட்டேன்"என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த இடத்தை எனக்குக் காட்டுவீராக!" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அந்த (வாசகம் இருந்த) இடத்தைக் காட்டினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (தமது கரத்தால்) அழிந்துவிட்டார்கள். மேலும், "அப்துல்லாஹ்வின் புதல்வர்" என்று எழுதச் செய்தார்கள்.
(அடுத்த ஆண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். மூன்றாவது நாளானபோது மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம், "உம்முடைய தோழர் நிபந்தனையில் குறிப்பிட்டிருந்த இறுதிநாள் இதுதான். எனவே, அவரை இந்நகரைவிட்டு வெளியேறச் சொல்லுங்கள்" என்று கூறினர். அலீ (ரலி) அவர்கள் இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது "ஆம்" என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு விட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அஹ்மத் பின் ஜனாப் அல் மிஸ்ஸீஸீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("உம்மை நாங்கள் பின்தொடர்ந்திருப்போமே!" என்பதற்குப் பகரமாக) "நாங்கள் (இஸ்லாத்தை ஏற்பதாக) உம்மிடம் உறுதிமொழி அளித்திருப்போமே!" என்று (மக்காவாசிகள் கூறினார்கள் என) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3656. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குறைஷியர் தம்முடன் சுஹைல் பின் அம்ர் இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தனர். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் "(ஒப்பந்தப் பத்திரத்தில் முதலில்) பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) என எழுதுவீராக!" என்று கூறினார்கள்.
அப்போது சுஹைல், "பிஸ்மில்லாஹ்" (அல்லாஹ்வின் பெயரால்) என்பது சரி (அதை நாங்கள் அறிவோம்); அது என்ன பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்? அதை நாங்கள் அறியவில்லையே? எனவே, நாங்கள் அறிந்துள்ள "பிஸ்மிக்கல்லாஹும்ம" (அல்லாஹ்வே! உன் பெயரால்) எனும் வாசகத்தை எழுதுங்கள்" என்று கூறினார். (அவ்வாறே எழுதும்படி உத்தரவிட்டார்கள்.) பிறகு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து... என எழுதுவீராக!" என்று (அலீயிடம்) கூறினார்கள்.
அப்போது குறைஷியர், "நீர் இறைவனின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருப்போமாயின் நாங்கள் உம்மைப் பின்தொடர்ந்திருப்போம். மாறாக, உமது பெயரையும் உம் தந்தையின் பெயரையும் (ஒப்பந்தத்தில்) எழுதுக" என்று கூறினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அலீ (ரலி) அவர்களிடம்) "அப்துல்லாஹ்வின் புதல்வர் முஹம்மதிடமிருந்து என எழுதுவீராக" என்று கூறினார்கள்.
அப்போது குறைஷியர் பின்வருமாறு நபிகளாரிடம் நிபந்தனையிட்டனர்: உங்களிடமிருந்து யாரேனும் (எங்களிடம்) வந்துவிட்டால் அவரை நாங்கள் திருப்பியனுப்பமாட்டோம். எங்களிடமிருந்து யாரேனும் (உங்களிடம்) வந்துவிட்டால் அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்ப வேண்டும்.
முஸ்லிம்கள், "அல்லாஹ்வின் தூதரே! (பாதகமான நிபந்தனைகள் கொண்ட) இதை நாம் எழுத வேண்டுமா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறிவிட்டு, "யாரேனும் நம்மிடம் வந்துவிட்டு (மதமாறிச்) சென்றால் அவரை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) அப்புறப்படுத்தி விடுவான். அவர்களிடமிருந்து யாரேனும் நம்மிடம் வந்தால் (அவர் திருப்பியனுப்பப் பெற்றாலும்) அவருக்கு மகிழ்வையும் (நெருக்கடியிலிருந்து) விடுபடுவதற்கான வழியையும் நிச்சயமாக அல்லாஹ் ஏற்படுத்துவான்" என்றார்கள்.
அத்தியாயம் : 32
3657. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஸிஃப்பீன்" போர் நாளில் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் (மக்களிடையே) எழுந்து நின்று பின்வருமாறு கூறினார்கள்:
மக்களே! (இந்தப் போரில் ஈடுபாடு காட்டாததைக் குறித்து யாரையும் நீங்கள் குற்றம் சாட்டாதீர்கள்; மாறாக,) உங்களை நீங்களே குற்றம் சாட்டிக்கொள்ளுங்கள். நாங்கள் ஹுதைபியா நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம்.
போர் புரிவது சரியானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். ஆனால், அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்பாட்டில் முடிந்தது.
(ஹுதைபியாவில் இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களுக்குப் பாதகமான நிபந்தனைகளை விதித்தபோதும் நபியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.) அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் (எதிரிகள்) அசத்தியத்திலும் இல்லையா?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கிறோம்; அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள்)" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "போரில் கொல்லப்படும் நம் வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்ப வேண்டும்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்" என்று பதிலளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கோபத்தை அடக்க முடியாமல் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, "அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் "ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கிறோம். அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள்)" என்று விடையளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "போரில் கொல்லப்படும் நம் வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்ப வேண்டும்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்" என்று கூறினார்கள்.
அப்போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ("உமக்கு நாம் தெளிவான வெற்றியை அளித்துவிட்டோம்" என்று தொடங்கும்) "அல்ஃபத்ஹ்" எனும் (48ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம் (வெற்றிதான்)" என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் மனச்சாந்தியடைந்து திரும்பிச் சென்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3658. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஸிஃப்பீன்" போரின்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் "மக்களே! (நான் இந்தப் போரில் ஈடுபாடு காட்டாததைக் குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள்) உங்களது கருத்தையே குறை காணுங்கள்.
அபூஜந்தல் (அபயம் தேடிவந்த ஹுதைபியா உடன்படிக்கை) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் நான் மறுத்திருப்பேன். (அத்தகைய மன நிலையில் அன்று நான் இருந்தேன்.) (அன்று) நாங்கள் எங்கள் வாட்களை எங்கள் தோள்களில் (முடக்கி) வைத்துக்கொண்டது, ஒருபோதும் போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த ஓர் எளிய விஷய(மான சமாதான)த்திற்காகத்தான். ஆனால், உங்களது இந்த விவகாரம் (ஸிஃப்பீன் போர் அவ்வாறன்று)" எனக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருபோதும் போருக்கு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "எங்கள் தோள்களில் நாங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக்கொண்டது, எங்களுக்குச் சிரமம் தரும் போருக்கு அஞ்சி அல்ல" என்று சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3659. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஸிஃப்பீன்" போரின்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன்: (நான் இந்தப் போரில் ஈடுபாடு காட்டாதது குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள்) உங்கள் மார்க்க விஷயத்தில் நீங்கள் எடுத்துள்ள முடிவையே குறை காணுங்கள்.
அபூஜந்தல் (அபயம் தேடி வந்த ஹுதைபியா) நாளில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் (ஏற்க மறுத்திருப்பேன். அத்தகைய மனோ நிலையில்தான் நான் அன்று இருந்தேன்.)
(ஆனால், இன்று உங்கள்) பிரச்சினையில் ஒரு மூலையை (அடைத்து)ச் சீராக்கும்போது, மற்றொரு மூலை நம் முன்னே வெடித்துத் திறந்துகொள்கிறது.
அத்தியாயம் : 32
3660. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உம்ரா வழிபாட்டை நிறைவேற்ற முடியாமல் போனதால்) ஹுதைபியா எனுமிடத்திலேயே பலிப்பிராணியை அறுத்துவிட்டு, அங்கிருந்து (மதீனா நோக்கி) திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபித்தோழர்களைக் கவலையும் சோகமும் தழுவியிருந்தன.
இந்நிலையில்தான் (அவர்களுக்கு), "(நபியே!) உமக்குத் தெளிவானதொரு வெற்றியை நாம் அளித்தோம். உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னித்து, அவன் தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்தி, உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் (இந்த வெற்றியை அவன் அளித்தான்)" என்று தொடங்கி, "இது அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கிறது" என்பதுவரை (48:1-5) இறைவசனங்கள் அருளப்பெற்றன.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "எனக்கு ஓர் இறைவசனம் அருளப்பெற்றுள்ளது. அது இவ்வுலகிலுள்ள அனைத்தையும்விட எனக்கு மிகவும் உவப்பானதாகும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 35 (போரிலும்) வாக்குறுதியை நிறைவேற்றல்.
3661. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பத்ருப் போரில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி இறைமறுப்பாளர்கள் எங்களைப் பிடித்துக்கொண்டனர். "நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
நாங்கள் "(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்" என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர் "நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாது" என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டனர்.
நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், "நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 36 அகழ்ப் போர்.
3662. யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது ஒரு மனிதர், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்திருந்தால், அவர்களுடன் சேர்ந்து போர்களில் ஈடுபட்டிருப்பேன்; கடுமையாக உழைத்திருப்பேன்" என்று கூறினார்.
அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீ அவ்வாறு செய்திருக்கவாபோகிறாய்? அகழ்ப் போர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். கடுமையான காற்றும் குளிரும் எங்களை வாட்டிக்கொண்டிருந்தன.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச் செய்வான்" என்று கூறினார்கள். நாங்கள் மௌனமாக இருந்தோம். எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை.
பிறகு மீண்டும் "எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) நம்மிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச் செய்வான்" என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அமைதியாக இருந்தோம். எங்களில் யாரும் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை.
பிறகு (மூன்றாவது முறையாக), "எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) நம்மிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச் செய்வான்" என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். எங்களில் யாரும் அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹுதைஃபா! எதிரிகளைப் பற்றிய செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவா" என்று கூறினார்கள். எனது பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் என்னை அழைத்துவிட்டதால் என்னால் மறுக்க முடியவில்லை. நான் எழுந்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், " நீ சென்று எதிரிகளைப் பற்றிய செய்தியை (உள வறிந்து) என்னிடம் கொண்டுவா! எதிரிகளை எனக்கெதிராக விழிப்படையச் செய்துவிடாதே" என்று கூறினார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து விடைபெற்று (எதிரிகளை நோக்கி)ச் சென்றபோது, நான் வெண்ணீரில் நடப்பதைப் போன்றிருந்தது (குளிரே எனக்குத் தெரிய வில்லை). இந்நிலையில் நான் எதிரிகளிடம் வந்துசேர்ந்தேன். அப்போது (எதிரிகளின் தலைவர்) அபூசுஃப்யான் தமது முதுகை நெருப்பில் காட்டி, குளிர் காய்ந்துகொண்டிருந்தார்.
நான் எனது வில்லின் நடுவே ஓர் அம்பைப் பொருத்தி அவர்மீது எய்யப்போனேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "எனக்கெதிராக எதிரிகளை விழிப்படையச் செய்துவிடாதே" என்று கூறியதை நான் நினைவுகூர்ந்தேன். அப்போது மட்டும் நான் அம்பை எய்திருந்தால், அவரை நிச்சயமாக நான் தாக்கியிருப்பேன்.
பிறகு நான் வெண்ணீரில் நடப்பதைப் போன்றே, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) திரும்பி வந்தேன். அவர்களிடம் சென்று எதிரிகளைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்தேன். நான் செய்திகளைச் சொல்லி முடித்ததும் குளிர் என்னைத் தாக்கத் தொடங்கியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மீது இருந்த போர்வையின் ஒரு கூடுதலான பகுதியை எனக்கு அணி வித்தார்கள். அந்தப் போர்வையைப் போர்த்திக்கொண்டுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அப்போது) தொழுது கொண்டிருந்தார்கள். அதிகாலைவரை நான் (அப்போர்வையில்) உறங்கிக்கொண்டேயிருந்தேன். அதிகாலையானதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தூங்கு மூஞ்சி! எழுந்திரு" என்றார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 37 உஹுதுப் போர்.
3663. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போர் நாளில் (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் எழுவரும் குறைஷியரில் (முஹாஜிர்களில்) இருவரும் மட்டுமே தம்முடனிருக்க தனித்து விடப்பட்டார்கள். (மற்ற தோழர்கள் சிதறி ஓடிவிட்டனர்.)
இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிரிகள் நெருங்கிய போது, "நம்மிடமிருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? "அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்"; அல்லது "அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்"என்று கூறினார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர் முன்னேறிச் சென்று போரிட்டார். இறுதியில் அவர் கொல்லப்பட்டார். பிறகு மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிரிகள் நெருங்கினார்கள். அப்போது "நம்மிடமிருந்து இவர்களை விரட்டியடிப்பவர் யார்? "அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும்"; அல்லது "அவர் சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்" என்று கூறினார்கள்.
அப்போது அன்சாரிகளில் மற்றொரு மனிதர் முன்னேறிச் சென்று எதிரிகளுடன் போரிட்டார். அவரும் கொல்லப்பட்டார். இவ்வாறே (ஒருவர் பின் ஒருவராகச்) சென்று அன்சாரிகள் எழுவரும் கொல்லப்பட்டனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உடனிருந்த) தம்மிரு (குறைஷித்) தோழர்களிடம், "நாம் நம்முடைய (அன்சாரித்) தோழர்களிடம் நியாயமாக நடந்துகொள்ள வில்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3664. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உஹுதுப் போர் நாளில் ஏற்பட்ட காயங்கள் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறினார்கள்:
(அன்றைய தினத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் முன்வாய்ப்பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. தலைக் கவசம் அவர்களது தலையில் வைத்தே நொறுக்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முகத்திலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் (தமது) கேடயத்தில் தண்ணீர் (நிரப்பி வந்து அந்தக் காயத்தைக் கழுவுவதற்காக) ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.
தண்ணீர் மேன்மேலும் இரத்தத்தை அதிகமாக்குவதையே கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஒரு பாய்த் துண்டை எடுத்து வந்து சாம்பலாகும்வரை அதைக் கரித்து, அதைக் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.
அத்தியாயம் : 32
3665. மேற்கண்ட ஹதீஸ் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு ஹதீஸ் ஆரம்பமாகிறது:
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உஹுதுப் போரில்) ஏற்பட்ட காயங்கள் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், "இதோ! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தைக் கழுவிவிட்டவரையும், (கழுவுவதற்காகத்) தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தவரையும், மருந்துக்குப் பயன்படுத்தப்பட்ட பொருளையும் நான் அறிவேன்" என்று கூறிவிட்டுத் தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி கூறினார்கள்.
ஆயினும், இந்த அறிவிப்பில் "அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது" எனும் தகவல் (ஹதீஸின் இறுதியில்) இடம்பெற்றுள்ளது. ("உடைக்கப்பட்டது" என்பதைக் குறிக்க) "ஹுஷிமத்" என்பதற்குப் பதிலாக "குசிரத்" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 32
3666. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சயீத் பின் அபீஹிலால் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்களுடைய முகம் தாக்கப்பட்டது” என்றும், முஹம்மத் பின் முதர்ரிஃப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்களுடைய முகம் காயப்படுத்தப்பட்டது” என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3667. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, "தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிக்கிறார்" என்று கூறலானார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை" (3:128) எனும் வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 32
3668. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக்கொண்டிருந்ததை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. அந்த இறைத்தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்தனர். அவரோ தமது முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, "இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்துவிடு. ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்" என்று சொல்லிக்கொண்டிருந்தார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும் அவற்றில், "அவர் தமது நெற்றியிலிருந்து இரத்தத்தை வழித்துக்கொண்டிருந்தார்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 38 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் கொல்லப்பட்ட ஒருவன்மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாதல்.
3669. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போரில் உடைபட்ட) தமது (முன் வாய்ப்பற்களில் கீழ் வரிசையில் வலப்புறம் இருந்த) பல்லைச் சுட்டிக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரை இப்படிச் செய்துவிட்ட சமுதாயத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது" என்றும், "அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர் யாரைக் கொன்றுவிடுவாரோ அவர்மீதும் அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகி விட்டது" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 32
பாடம் : 39 நபி (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களிடமிருந்தும் நயவஞ்சகர்களிடமிருந்தும் சந்தித்த துன்பங்கள்.
3670. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அபூஜஹ்லும் அவனுடைய நண்பர்களும் (அங்கு) அமர்ந்திருந்தனர். அதற்கு முந்தையநாள் (இறைச்சிக்காக மக்காவில்) ஓர் ஒட்டகம் அறுக்கப்பட்டிருந்தது.
அபூஜஹ்ல், "உங்களில் யார், இன்ன குடும்பத்தார் (நேற்று) அறுத்த ஒட்டகத்தின் கருப்பையைச் சுற்றியுள்ள சவ்வுகளைக் கொண்டுவந்து முஹம்மத் (தொழுகையில்) சிரவணக்கத்திற்குச் செல்லும்போது, அவருடைய தோள்கள்மீது வைப்பவர்?" என்று கேட்டான். அங்கிருந்தவர்களில் மாபாதகன் ஒருவன் கிளம்பிச் சென்று, அதைக் கொண்டுவந்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்தபோது, அவர்களுடைய தோள்களுக்கு மத்தியில் அதை(த் தூக்கி) வைத்தான். அதைக் கண்டு அவனுடைய சகாக்கள் ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரிக்கலாயினர். நான் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குச் சக்தி இருந்திருந்தால் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முதுகிலிருந்து அப்புறப்படுத்தியிருப்பேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கத்திலிருந்து தலையை உயர்த்தாமல் (அப்படியே) இருந்தார்கள்.
இதற்கிடையில், யாரோ ஒருவர் சென்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டார். உடனே சிறுமியாயிருந்த ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து அதை அப்புறப்படுத்தினார்.
பிறகு அ(ந்தக் கய)வர்களை நோக்கிச் சென்று அவர்களை ஏசினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் உரத்த குரலில் எதிரிகளுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.
-பொதுவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தால் ஒவ்வொரு வாக்கியத்தையும் மூன்று முறை கூறுவார்கள்.-
பிறகு "இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள்" என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள். நபியவர்களது குரலைக் கேட்டதும் எதிரிகளின் சிரிப்பு அடங்கிவிட்டது. அல்லாஹ்வுடைய தூதரின் பிரார்த்தனையைக் குறித்து அவர்கள் அஞ்சினர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உக்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத் (ஏழாவதாக மற்றொருவரையும் குறிப்பிட்டார்கள். ஆனால், அது என் நினைவில் இல்லை.) ஆகியோரை நீயே கவனித்துக்கொள்" என்று பிரார்த்தித்தார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்தப் பிரார்த்தனையில்) பெயர் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் மாண்டு கிடந்ததை நான் கண்டேன். பின்னர் அவர்கள் அனைவரும் இழுத்துச் செல்லப்பட்டு, பத்ரிலிருந்த ஒரு பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டனர்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸில் வலீத் பின் உக்பாவின் பெயர் தவறுதலாகவே இடம்பெற்றுள்ளது. (வலீத் பின் உத்பா என்பதே சரி.)
அத்தியாயம் : 32
3671. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறையில்லம் கஅபா அருகில்) தொழுகையில் சிரவணக்கத்தில் (சஜ்தாவில்) இருந்தார்கள். அவர்களைச் சுற்றி குறைஷியர் சிலர் இருந்தனர். அப்போது உக்பா பின் அபீமுஐத் என்பான் அறுக்கப்பட்ட ஓர் ஒட்டகத்தின் கருவைச் சுற்றியுள்ள சவ்வுகளுடன் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முதுகில் அதைப் போட்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தவில்லை.
பின்னர் (அவர்களுடைய புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து அவர்களது முதுகிலிருந்தவற்றை அப்புறப்படுத்திவிட்டு, அவ்வாறு செய்தோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! குறைஷிப் பிரமுகர்களான அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, உக்பா பின் அபீமுஐத், ஷைபா பின் ரபீஆ, "உமய்யா பின் கலஃப்” அல்லது "உபை பின் கலஃப்” (அறிவிப்பாளர் ஷுஅபாவின் ஐயப்பாடு) ஆகியோரை நீயே கவனித்துக்கொள்" என்று பிரார்த்தித்தார்கள்.
அவர்கள் அனைவரும் பத்ருப் போரில் கொல்லப்பட்டு, ஒரு கிணற்றில் போடப்பட்டனர். உமய்யா அல்லது உபையின் மூட்டுகள் தனித்தனியே கழன்றுகொண்டதால் அவன் (இழுத்துச் சென்று) கிணற்றில் போடப்படவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3672. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஏதேனும் பிரார்த்தித்தால்) மூன்று முறை கோருவதையே விரும்புவார்கள். "இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள். இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள். இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள்" என்று மூன்று முறை பிரார்த்தித்தார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
மேலும் வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப் ஆகியோர் பெயரையும் குறிப்பிட்டதாகவும் இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்பிலுள்ள ஐயப்பாடு இதில் இல்லை. "ஏழாமவர் பெயரை நான் மறந்துவிட்டேன்" என்று அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் காணப்படுகிறது.
அத்தியாயம் : 32
3673. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவை முன்னோக்கி, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அறுவருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.
அவர்களில் அபூஜஹ்ல், உமய்யா பின் கலஃப், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, உக்பா பின் அபீமுஐத் ஆகியோர் இடம்பெற்றனர். (ஆறாவது நபரின் பெயர் இடம்பெறவில்லை.) அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்: அவர்கள் (அறுவரும்) சூரிய வெப்பத்தால் (உடல் உப்பி, நிறம் மாறி,) உருமாறி (பத்ருப் போர்க்களத்தில்) மாண்டு கிடந்ததை நான் கண்டேன். அன்றைய தினம் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது.
அத்தியாயம் : 32