பாடம் : 45 "தூ கரத்" உள்ளிட்ட போர்கள்.
3694. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுப்பதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். "தூ கரத்” எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்துகொண்டிருந்தன.
அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுடைய ஓர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பால் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன" என்று கூறினார். நான், "அவற்றை யார் பிடித்துச் சென்றனர்?" என்று கேட்டேன். அதற்கு அந்த அடிமை, "ஃகத்ஃபான் குலத்தார்" என்று பதிலளித்தார்.
உடனே நான் உரக்கச் சப்தமிட்டு "உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!” (யா ஸபாஹா!) என்று மதீனாவின் இரு மலைகளுக்கிடையிலிருந்த அனைவருக்கும் கேட்கும்படி மூன்று முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று "தூ கரத்” எனும் இடத்தில் அவர்களை அடைந்தேன். அவர்கள் (அங்கிருந்த நீர்நிலையில்) தண்ணீர் புகட்டத் தலைப்பட்டிருந்தனர்.
"அக்வஇன் மகன் நான்! இன்று அற்பர்கள் (அழியும்) நாள்"
என்று பாடியபடி கூறிக்கொண்டே அவர்கள்மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் "ரஜ்ஸ்" எனும் யாப்பு வகைக் கவிதையைப் பாடிக்கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன்.
(அவர்களை நான் விரட்டிச் சென்றபோது) அவர்கள் விட்டுவிட்டுப்போன முப்பது சால்வை களை நான் எடுத்துக்கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்து சேர்ந்தனர்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கூட்டத்தார் தாகத்துடன் இருந்தபோதும் அவர்களை தண்ணீர் குடிக்கவிடாமல் நான் தடுத்துவிட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச்சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படைப்பிரிவை இப்போதே அனுப்புங்கள்" என்று கூறினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அக்வஉ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்துவிட்டாய். ஆகவே, மென்மையாக நடந்துகொள்" என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவுக்குத்) திரும்பிவந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும் வரையில் என்னைத் தமக்குப் பின்னே தமது ஒட்டகத்தின் மீது அமர்த்திக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 32
3695. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபியாவை நோக்கிச் சென்றோம். அப்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அங்கு (தண்ணீர் குறைவாக இருந்ததால் எங்களுடைய) ஐம்பது (குர்பானி) ஆடுகள் நீர் புகட்டப் படாமல் (தாகத்துடன்) இருந்தன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த கிணற்றின் சுற்றுச் சுவர்மீது அமர்ந்துகொண்டு பிரார்த்தித்தார்கள். அல்லது அதனுள் உமிழ்ந்தார்கள். உடனே கிணற்றில் நீர் மட்டம் உயர்ந்தது. உடனே நாங்கள் நீர் அருந்தினோம். எங்கள் கால் நடைகளுக்கும் நீர் புகட்டினோம்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த மரத்துக்குக் கீழே உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) வாங்குவதற்காக எங்களை அழைத்தார்கள். மக்கள் அனைவருக்கும் முன்பாக (முதலில்) நானே அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். பிறகு ஒவ்வொருவராக (வந்து) உறுதிமொழி அளித்தனர்.
மக்களில் பாதிப்பேரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழி வாங்கி) இருந்தபோது "சலமா! உறுதிமொழி அளிப்பாயாக!" என்று (என்னிடம்) கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் மக்கள் அனைவருக்கும் முன்பாக தங்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டேன்" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மீண்டும் (ஒரு முறை உறுதிமொழி அளிப்பாயாக)" என்று கூறினார்கள்.
அப்போது என்னிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். எனக்கு "சிறிய தோல் கேடயம் ஒன்றை” அல்லது "தோல் கேடயம் ஒன்றை” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கினார்கள். பிறகு என்னிடம் உறுதிமொழி பெற்றார்கள்.
மக்களில் இறுதி நபரிடம் அவர்கள் (உறுதிமொழி பெற்றுக்கொண்டு) இருந்தபோது, "சலமா! என்னிடம் நீ உறுதிமொழி அளிக்கக் கூடாதா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் மக்கள் அனைவருக்கும் முன்பாகவும் மக்களில் பாதிப்பேராகவும் தங்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டேன்" என்று சொன்னேன்.
"மீண்டும் (ஒரு தடவை உறுதிமொழி அளிப்பாயாக)" என்று சொன்னார்கள். நான் மூன்றாவது தடவையாக உறுதிமொழி அளித்தேன்.
பிறகு என்னிடம், "சலமா! உனக்கு நான் வழங்கிய உனது "சிறிய தோல் கேடயம்” அல்லது "தோல் கேடயம்" எங்கே?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார். அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருப்பதை நான் கண்டேன். எனவே, அதை அவருக்குக் கொடுத்துவிட்டேன்" என்று சொன்னேன்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். மேலும், "நீர் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதரைப் போன்றவர் ஆவீர். அவர் "இறைவா! எனக்காக ஒரு நண்பரைக் கிடைக்கச் செய்வாயாக! அவர் என் உயிரைவிட எனக்கு மிகவும் பிரியமானவராக இருக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார். (அவரைப் போன்றே நீரும் உம்மைவிட உம் தந்தையின் சகோதரருக்கு முன்னுரிமை அளித்துள்ளீர்)" என்று கூறினார்கள்.
பிறகு (மக்கா) இணைவைப்பாளர்கள் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்வதாக எங்களுக்குத் தூது விட்டார்கள். இதனால், (நாங்களும் அவர்களும்) ஒருவர் பகுதிக்கு மற்றவர் சென்றுவர முடியும். நாங்கள் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டோம்.
நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களுக்கு உதவியாளராக இருந்தேன். அவரது குதிரைக்குத் தண்ணீர் புகட்டுவேன். அதைத் துடைத்துத் துப்புரவு செய்வேன். அவருக்கு ஊழியமும் செய்வேன். அவர் தரும் உணவை உண்டுகொள்வேன். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் எனது குடும்பம், சொத்து (சுகங்)கள் அனைத்தையும் விட்டுவிட்டு, நான் நாடு துறந்து (மதீனாவுக்கு) வந்திருந்தேன்.
நாங்களும் மக்காவாசிகளும் சமாதான ஒப்பந்தம் செய்து, எங்களில் ஒருவர் மற்றொருவருடன் கலந்துறவாடிக்கொண்டபோது, நான் ஒரு மரத்தை நோக்கி வந்து, அதன் (அடிப்பாகத்தில் இருந்த) முற்களை அகற்றிவிட்டு அதற்குக் கீழே படுத்துக்கொண்டேன்.
அப்போது மக்காவாசிகளான நான்கு இணைவைப்பாளர்கள் என்னிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசத் தொடங்கினர். அவர்கள் மீது எனக்குக் கோபம் வந்தது. உடனே மற்றொரு மரத்துக்கு நான் மாறிக்கொண்டேன். அந்த நால்வரும் தம் ஆயுதங்களை (அந்த மரத்தில்) தொங்கவிட்டுவிட்டு அவர்களும் படுத்துக்கொண்டனர்.
இந்நிலையில், யாரோ ஒருவர் அந்தப் பள்ளத்தாக்கின் கீழேயிருந்து "முஹாஜிர்களுக்கு ஏற்பட்ட நாசமே! (நம் தோழர்) இப்னு ஸுனைம் கொல்லப்பட்டுவிட்டார் (ஒப்பந்த மீறல் நடைபெற்றுவிட்டது)" என்று உரக்க அறிவித்தார். உடனே நான் எனது வாளை உருவிக் கொண்டு, படுத்திருந்த அந்நால்வரைத் தாக்கினேன். அவர்களின் ஆயுதங்களை எடுத்து ஒரே கட்டாக என் கையில் வைத்துக்கொண்டேன்.
பிறகு "முஹம்மத் (ஸல்) அவர்களது முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! உங்களில் யாரேனும் தலையைத் தூக்கிப் பார்த்தால் அவரது கண் உள்ள பகுதியிலேயே அடிப்பேன்" என்று கூறினேன்.
பின்னர் அவர்களை இழுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் "அபலாத்” குலத்தைச் சேர்ந்த "மிக்ரஸ்” எனப்படும் ஒரு மனிதரை பிடித்துக்கொண்டு, துணி விரிக்கப்பட்ட குதிரையொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடன் எழுபது இணைவைப்பாளர்களும் இருந்தார்கள்.
அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு "அவர்களை விட்டு விடுங்கள். (ஒப்பந்த மீறல்) குற்றம் அவர்களிடமிருந்தே தொடங்கி மீண்டும் ஏற்பட்டதாக இருக்கட்டும்" என்று கூறி, அவர்களை மன்னித்து விட்டுவிட்டார்கள்.
அல்லாஹ் (இது தொடர்பாகவே), "மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களிடமிருந்தும், அவர்கள் கைகளை உங்களிடமிருந்தும் அவனே தடுத்தான். அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருப்பதை உற்றுநோக்குபவனாக இருக்கின்றான்" (48:24) எனும் வசனத்தை அருளினான்.
பிறகு நாங்கள் மதீனாவை நோக்கித் திரும்பினோம். அப்போது ஓரிடத்தில் நாங்கள் இறங்கித் தங்கினோம். (அந்த இடத்திலிருந்த) எங்களுக்கும் இணைவைப்பாளர்களான "பனூ லஹ்யான்” குலத்தாருக்கும் இடையே ஒரு மலை மட்டுமே இருந்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(எதிரிகளைக் கண்காணிப்பதற்காக) இன்றிரவு இம்மலைமீது ஏறுபவரின் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!" எனப் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் உளவாளி போன்று (அவர் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்). அன்றிரவு நான் இரண்டு அல்லது மூன்று முறை அம்மலைமீது ஏறினேன்.
பிறகு நாங்கள் மதீனாவுக்கு வந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் (பால்) ஒட்டகங்களைத் தம் அடிமையான ரபாஹ் (ரலி) அவர்களுடன் அனுப்பிவைத்தார்கள். அவருடன் நானும் இருந்தேன். தல்ஹா (ரலி) அவர்களின் குதிரையை ஓட்டிக்கொண்டு, ஒட்டகங்களுடன் அந்தக் குதிரைக்கும் தண்ணீர் புகட்டி மேய்ச்சல் நிலத்துக்கு அனுப்புவதற்காக நானும் புறப்பட்டுச் சென்றேன்.
காலையில் அப்துர் ரஹ்மான் அல்ஃபஸாரீ என்பான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகங்களைத் திடீரெனத் தாக்கி, அவை அனைத்தையும் ஓட்டிச் சென்றுவிட்டான். அவற்றின் மேய்ப்பாளரையும் கொன்றுவிட்டான்.
உடனே நான், "ரபாஹே! (இதோ) இந்தக் குதிரையைப் பிடித்துச் சென்று, தல்ஹா பின் உபை தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சேர்த்துவிடு. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அவர்களின் கால்நடைகளை எதிரிகள் தாக்கிக் கொள்ளையடித்துச் சென்று விட்டனர் எனத் தெரிவித்துவிடு" என்று கூறினேன்.
பிறகு ஒரு மலையின் உச்சியில் ஏறி மதீனாவை முன்னோக்கி நின்றுகொண்டு, "உதவி! உதவி! அதிகாலை ஆபத்து! (யா ஸபாஹா!)" என மூன்று முறை உரத்த குரலில் கூவினேன். பிறகு அந்தக் (கொள்ளைக்) கூட்டத்தைப் பின்தொடர்ந்து சென்று, அவர்கள்மீது அம்பெய்தவனாக விரட்டிச் சென்றேன். அப்போது நான்,
"அக்வஇன் மகன் நான்
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என யாப்புக் கவிதை பாடினேன். பிறகு அவர்களில் ஒருவனை நெருங்கி அவனது ஒட்டகச் சேணத்தின் மீது அம்பெய்தேன். அதன் கூர்முனை சேணத்தில் நுழைந்து அவனது தோளில் பாய்ந்தது. நான்,
"இதோ வாங்கிக்கொள்;
அக்வஇன் மகன் நான்;
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என்று (பாடியபடி) கூறினேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு அவர்கள்மீது அம்பெய்துகொண்டும் அவர்களின் குதிரைகளை வெட்டி வீழ்த்திக்கொண்டும் நான் இருந்தேன். என்னை நோக்கிக் குதிரை வீரர் எவரேனும் திரும்பி வந்தால், நான் ஏதேனும் மரத்தை நோக்கிச் சென்று அதற்குக் கீழே அமர்ந்துகொண்டு, அவன்மீது அம்பைப் பாய்ச்சினேன். அவனது குதிரையை வெட்டி வீழ்த்தினேன். குறுகிய மலையிடுக்கு தென்பட்டபோது, அதன் இடுக்கில் அவர்கள் நுழைந்து கொண்டனர். நானும் அம்மலை மீதேறிக்கொண்டு, கல்லால் அவர்களை விரட்டியடித்தேன்.
இவ்வாறு (விரட்டியடித்த வண்ணம்) அவர்களை நான் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். இறுதியில் அல்லாஹ் படைத்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒட்டகங்கள் அனைத்தையும் என் முதுகுக்குப் பின்னால் கொண்டு வந்துவிட்டேன். அவர்கள் அவற்றை என்னிடமே விட்டுவிட்டு விரைந்துகொண்டிருந்தனர்.
பிறகு மீண்டும் அவர்கள்மீது அம்பெய்த வண்ணம் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் (ஓடிய வேகத்தில்) முப்பது சால்வைகளையும் முப்பது ஈட்டிகளையும் விட்டு விட்டு ஓடினர். அவர்கள் விட்டுச் சென்ற ஒவ்வொரு பொருள்மீதும் அல்லாஹ்வின் தூதரும் அவருடைய தோழர்களும் அறியும் விதத்தில் ஓர் அடையாளக் கல்லை வைத்துக் கொண்டேபோனேன்.
பிறகு ஒரு குறுகலான மலைக் கணவாய்க்கு அவர்கள் சென்றனர். அங்கு பத்ர் அல்ஃபஸாரீ என்பவனின் மகனிடம் அவர்கள் போய்ச்சேர்ந்து, அமர்ந்து காலை உணவை உட்கொள்ளலாயினர். நான் ஒரு மலை உச்சியில் அமர்ந்துகொண்டேன்.
அப்போது அந்த ஃபஸாரீ, "நான் காணும் இந்தக் காட்சிகள் என்ன?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "இதோ இவனிடமிருந்து கடும்துயரத்தை நாங்கள் சந்தித்துவிட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! அதிகாலை இருளிலிருந்து அவன் எங்களை விட்டு விலகவே இல்லை. எங்களை நோக்கி அம்பெய்து எங்கள் கையிலிருந்த எல்லாவற்றையும் பறித்துக்கொண்டான்" என்று கூறினர்.
அதற்கு அந்த ஃபஸாரீ, "உங்களில் நான்கு பேர் அவனை நோக்கிச் செல்லட்டும்" என்று கூறினான்.
அவர்களில் நான்கு பேர் நானிருந்த மலைமீது ஏறினர். அவர்கள் எனது பேச்சைக் கேட்கும் இடத்திற்கு வந்தபோது,நான், "என்னை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டேன்.
அவர்கள் "இல்லை, நீ யார்?" என்று கேட்டார்கள். "நான் சலமா பின் அல்அக்வஉ. முஹம்மத் (ஸல்) அவர்களது முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! உங்களில் யாரேனும் ஒருவரை நான் தேடிப் புறப்பட்டால் அவரை நான் பிடிக்காமல் விடமாட்டேன். (அதே சமயத்தில்) உங்களில் யாரேனும் ஒருவர் என்னைத் தேடிப் புறப்பட்டால் அவரால் என்னைப் பிடிக்க முடியாது" என்று நான் கூறினேன். அவர்களில் ஒருவன், "நானும் (அவ்வாறே) கருதுகிறேன்" என்றான்.
பிறகு அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்றனர். நான் அந்த இடத்திலிருந்து நகர்ந்திருக்கக்கூட இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குதிரைப் படையினர் மரங்களிடையே புகுந்து வருவதை நான் பார்த்தேன். அவர்களில முதல் ஆளாக அக்ரம் அல்அசதீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவருக்குப் பின்னால் அபூகத்தாதா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவரைத் தொடர்ந்து மிக்தாத் பின் அல்அஸ்வத் அல்கிந்தீ (ரலி) அவர்கள் இருந்தார்கள்.
நான் அக்ரம் (ரலி) அவர்களது குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டேன். அவர்கள் நால்வரும் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருந்தனர். நான் "அக்ரமே! அவர்களிடம் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வந்து சேர்வதற்கு முன் (தனியாக வரும்) உம்மை இவர்கள் பிடித்துவிட வேண்டாம்" என்று கூறினேன்.
அதற்கு அக்ரம் (ரலி) அவர்கள், "சலமா! நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவராயிருந்தால், சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என நீர் அறிந்திருந்தால் எனக்கும் வீர மரணத்துக்குமிடையே குறுக்கிடாதீர்!" என்று கூறினார்.
ஆகவே, அவரை நான் விட்டுவிட்டேன். அவரும் அப்துர் ரஹ்மான் அல்ஃபஸாரியும் (வாள் முனையில்) சந்தித்துக்கொண்டனர். அக்ரம் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மானின் குதிரையை வெட்டிவிட்டார்கள். அப்துர் ரஹ்மான்,அக்ரம் (ரலி) அவர்கள்மீது ஈட்டியைப் பாய்ச்சி அவர்களைக் கொன்றுவிட்டான்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் முகத்தைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக! பிறகு நான் காலால் நடந்தே அவர்களைப் பின்தொடர்ந்தேன். எனக்குப் பின்னால் வந்த முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களையோ,அவர்களது (குதிரை கிளப்பிய) புழுதியையோ நான் பார்க்கவில்லை.
இறுதியில் அ(ந்தப் பகை)வர்கள் சூரியன் மறைவதற்கு முன் ஒரு கணவாயை அடைந்தனர். அங்கு ஒரு நீர்நிலை இருந்தது. அதற்கு "தூ கரத்” எனப் பெயர் சொல்லப்பட்டது. அவர்கள் தாகத்துடன் இருந்ததால் அதில் நீர் அருந்தச் சென்றனர். தங்களுக்குப் பின்னால் நான் ஓடி வருவதை அவர்கள் கண்டதும் அந்த இடத்தைவிட்டு வெளியேறும் நிலைக்கு அவர்கள் உள்ளாயினர். அவர்கள் ஒரு துளி நீரைக்கூட சுவைக்கவில்லை.
அவர்கள் அங்கிருந்து கிளம்பி ஒரு மலைக் குன்றில் விரைந்து சென்றனர். நான் வேகமாக ஓடி அவர்களில் ஒருவனைச் சென்றடைந்தேன். அவனது தோள் பட்டையிலுள்ள மெல்லிய எலும்பின் மீது,
"இதோ இதை வாங்கிக்கொள்
அக்வஇன் மகன் நான்
இன்று அற்பர்களின் (அழிவு) நாள்"
என்று கூறியவாறு ஓர் அம்பைப் பாய்ச்சினேன். அவன், "உன் தாய் உன்னை இழக்கட்டும்! காலையில் வந்த அக்வஆ நீ?" என்று கேட்டான். நான் "ஆம். தனக்குத் தானே பகைவன் ஆகிவிட்டவனே! காலையில் சந்தித்த உன் அக்வஉதான் நான்" என்றேன்.
அக்கூட்டத்தார் ஒரு மலைக் குன்றின் மீது இரு குதிரைகளை விட்டுவிட்டு ஓடி விட்டனர். நான் அவ்விரு குதிரைகளையும் பிடித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓட்டி வந்தேன்.
அப்போது (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் (ரலி) அவர்கள் தோல் அடுக்குப் பாத்திரம் ஒன்றை என்னிடம் கொண்டுவந்தார். அதில் தண்ணீர் கலந்த பால் சிறிதளவு இருந்தது. இன்னொரு தோல் அடுக்குப் பாத்திரமும் அவரிடம் இருந்தது. அதில் தண்ணீர் இருந்தது. நான் அங்கத் தூய்மை (உளூ) செய்தேன்; அருந்தினேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அக்கூட்டத்தாரை நான் விரட்டியடித்த நீர்நிலை அருகில் அவர்கள் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த ஒட்டகங்களையும் அந்த இணைவைப்பாளர்களிடமிருந்து நான் கைப்பற்றிய ஈட்டிகள், சால்வைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்திருந்தார்கள்.
அப்போது பிலால் (ரலி) அவர்கள், அக்கூட்டத்தாரிடமிருந்து நான் விடுவித்த ஒட்டகங்களில் ஒன்றை அறுத்து அதன் ஈரலையும் திமிலையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகப் பொரித்துக்கொண்டிருந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். நான் (நம்) மக்களில் நூறு பேரைத் தேர்ந்தெடுத்து (அழைத்துக்கொண்டு) அக்கூட்டத்தாரைப் பின் தொடர்ந்து செல்கிறேன். அவர்களில் இறப்புச் செய்தி அறிவிக்கக்கூட ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்கள் அனைவரையும் கொன்றுவிடுகிறேன்" என்று கூறினேன்.
அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அங்கிருந்த நெருப்பின் வெளிச்சத்தில் அவர்களின் கடைவாய்ப் பற்கள் தெரிந்தன. அப்போது அவர்கள், "சலமா! உன்னால் அதைச் செய்ய முடியும் என நீ கருதுகிறாயா?"என்று கேட்டார்கள். நான் "ஆம் (செய்வேன்), தங்களைக் கண்ணியப்படுத்திய (இறை)வன் மீதாணையாக!" என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தற்போது அக்கூட்டத்தார் ஃகத்ஃபான் பகுதியில் விருந்து அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்று (இறையறிவிப்பின் மூலம்) கூறினார்கள்.
அப்போது ஃகத்ஃபான் பகுதியிலிருந்து ஒரு மனிதர் வந்தார். அவர் "அக்கூட்டத்தாருக்காக இன்ன மனிதர் இறைச்சி ஒட்டகமொன்றை அறுத்(து விருந்தளித்)தார். அவர்கள் அந்த ஒட்டகத்தின் தோலை உரித்துக்கொண்டிருந்தபோது (பாலைவன வெளியில்) புழுதி கிளம்புவதைக் கண்டனர். உடனே "அக்(குதிரைப் படைக்) கூட்டம் வந்துவிட்டது” என்று கூறியவாறு வெருண்டோடிவிட்டனர்" என்று கூறினார்.
காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்றைய தினத்தில் நம் குதிரைப் படையில் மிகச் சிறந்த வீரர் அபூகத்தாதா ஆவார். நம் காலாட் படையில் மிகச் சிறந்த வீரர் சலமா ஆவார்" என்று (பாராட்டிக்) கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரைப்படை வீரருக்கான ஒரு (பரிசுப்) பங்கும், காலாட்படை வீரருக்கான ஒரு பங்குமாக இரு பங்குகள் சேர்த்து (போர்ச் செல்வமாக) எனக்கு வழங்கினார்கள்.
பிறகு தமது "அள்பா” எனும் ஒட்டகத்தில் தமக்குப் பின்னால் என்னை அமரச் செய்து மதீனா நோக்கித் திரும்பினார்கள்.
நாங்கள் வந்துகொண்டிருந்தபோது (ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.) அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். அவரை ஓட்டப்பந்தயத்தில் யாராலும் வெல்ல முடியாது. அவர், "மதீனாவரை என்னுடன் போட்டியிட்டு ஓடுபவர் யார்? போட்டியிட்டு ஓடுபவர் யார்?" என்று திரும்பத் திரும்பக் கூறலானார்.
அவரது குரலைக் கேட்ட நான் (அவரிடம்), "மரியாதைக்குரியவர்களை நீ மதிக்கமாட்டாயா? சிறப்புக்குரியவர்களை நீ அஞ்சமாட்டாயா?" என்று கேட்டேன். அவர் "இல்லை, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களாக இருந்தால் தவிர" என்று கூறினார்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! என்னை விடுங்கள்; அந்த மனிதரை நான் வெல்கிறேன்" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உன் விருப்பம்" என்றார்கள்.
நான், "முதலில் நீ ஓடு” என்று கூறிவிட்டு, என் கால்களை உதறிவிட்டு, குதித்து ஓடினேன். ஓடிக்கொண்டிருந்தபோது ஒன்றிரண்டு மேடுகளில் ஏறியபோது, ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி மூச்சு வாங்கி ஓய்வெடுத்தேன். பிறகு அவருக்குப் பின்னால் ஓடினேன். மறுபடியும் ஒன்றிரண்டு மேடுகளில் ஏறியபோது ஓட்டத்தை மட்டுப்படுத்தினேன்.
பிறகு அவரைச் சென்றடைவதற்காக (மேட்டில்) ஏறினேன். அப்போது அவருடைய தோள்களுக்கிடையே அடித்து, "நீ தோற்கடிக்கப்பட்டாய், அல்லாஹ்வின் மீதாணையாக!" என்றேன். அவர், "நானும் (அவ்வாறே) எண்ணுகிறேன்" என்று கூறினார். மதீனாவரை அவருக்கு முன்பாகவே நான் ஓடிவந்தேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (மதீனாவிற்கு வந்த பின்) நாங்கள் மூன்று இரவுகள் மட்டுமே தங்கியிருந்தோம். (நான்காம் நாள்தான்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காக)ப் புறப்பட்டோம். அப்(பயணத்தின்)போது, என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) பின்வரும் யாப்புக் கவிதையைப் பாடினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக!
அல்லாஹ் மட்டும் இல்லாவிட்டால்
நாங்கள்
நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்
தானதர்மம் செய்திருக்கவுமாட்டோம்
தொழுதிருக்கவுமாட்டோம்
(இறைவா!) நாங்கள்
உன் கருணையிலிருந்து
தேவையற்றவர்கள் அல்லர்.
(போர் முனையில் எதிரிகளை)
நாங்கள் சந்திக்கும்போது
எங்கள் பாதங்களை
உறுதிப்படுத்துவாயாக!
எங்கள்மீது
அமைதியைப் பொழிவாயாக!
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "நான் ஆமிர்" என்றார்கள். "உம்முடைய இறைவன் உமக்கு மன்னிப்பருள்வானாக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்காக (போரில் தனிப்பட்ட முறையில்) அவரது பெயர் குறிப்பிட்டுப் பாவமன்னிப்பு வேண்டுவார்களேயானால், அவர் (அப்போரில்) வீர மரணம் அடையாமல் இருந்ததில்லை.
ஆகவே, உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், தமது ஒட்டகத்தின் மீதிருந்தவாறு, "அல்லாஹ்வின் தூதரே! ஆமிர் (நீண்ட நாள் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களைப் பயனடையச் செய்யக்கூடாதா?" என்று கேட்டார்கள். பிறகு நாங்கள் கைபர் சென்றடைந்ததும் கைபர்வாசிகளின் மன்னன் மர்ஹப் தனது வாளை மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டே,
"கைபருக்குத் தெரியும்
நான்தான் மர்ஹப் என்று
(போருக்கு ஆயத்தமாய் என்றும்)
முழு ஆயுதங்கள் தரித்த பண்பட்ட வீரன் என்று.
போர்கள் மூண்டு
கொழுந்துவிட்டு எரியும்போது
(சில நேரம் நான் ஈட்டியெறிவேன்
சில நேரம் வாள் வீசுவேன்)"
என்று பாடினான்.
அப்போது என் தந்தையின் சகோதரர் ஆமிர் (ரலி) அவர்கள் முன்னே வந்து,
"கைபருக்குத் தெரியும் நான் ஆமிர் என்று
போர்த் துன்பங்களை எதிர்கொள்ளும்
ஆயுதங்கள் தரித்த சரியான வீரன் என்று"
என்று பாடினார்கள். பிறகு இருவரும் மோதிக்கொண்டனர். அப்போது மர்ஹபின் வாள், ஆமிர் (ரலி) அவர்களின் கேடயத்தைத் தாக்கியது. ஆமிர் (ரலி) அவர்கள் (குனிந்து) அவனது கீழ் பகுதியில் (தமது வாளால்) வெட்டப்போனார்கள். அப்போது அவரது வாள் அவரையே திருப்பித் தாக்கிவிட்டது; அவரது கை நரம்பைத் துண்டித்துவிட்டது. அதிலேயே அவரது இறப்பும் ஏற்பட்டது.
பிறகு நான் புறப்பட்டுச் சென்றேன். அப்போது நபித்தோழர்களில் சிலர் "ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டன. அவர் தற்கொலை செய்துகொண்டார்" என்று பேசிக் கொண்டிருந்தனர்.
உடனே நான் அழுதுகொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஆமிரின் நற்செயல்கள் அழிந்துவிட்டனவா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவ்வாறு) யார் சொன்னது?" என்று கேட்டார்கள். "தங்கள் தோழர்களில் சிலர்" என்று பதிலளித்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவ்வாறு சொன்னவர் பொய்யுரைத்துவிட்டார். அவருக்கு அவரது நன்மை இருமுறை கிடைக்கும்" என்று கூறினார்கள்.
பிறகு கண்வலியுடன் இருந்த அலீ (ரலி) அவர்களிடம் (அவர்களை அழைத்துவர) என்னை அனுப்பிவைத்தார்கள்.
(என்னை அனுப்புவதற்கு முன்) "நான் (நாளை) இஸ்லாமிய(ச் சேனையின்) கொடியை ஒரு மனிதரிடம் கொடுப்பேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்றனர்" என்று கூறினார்கள்.
நான் அலீ (ரலி) அவர்களிடம் சென்று கண் வலியுடனிருந்த அவர்களை அழைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அலீ (ரலி) அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமிழ்ந்தார்கள். அவர்கள் கண் குணமடைந்தார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களிடம் இஸ்லாமிய(ச் சேனையின்) கொடியைக் கொடுத்தார்கள். கைபரின் மன்னன் மர்ஹப் புறப்பட்டு வந்து,
"கைபருக்குத் தெரியும் நான்தான் மர்ஹப் என்று
(போருக்கு ஆயத்தமாய் என்றும்)
ஆயுதங்கள் தரித்த பண்பட்ட வீரன் என்று.
போர்கள் மூண்டு கொழுந்துவிட்டு எரியும்போது
(சில வேளை நான் ஈட்டியெறிவேன்
சில வேளை நான் வாள் வீசுவேன்)"
என்று பாடினான்.
அதற்கு அலீ (ரலி) அவர்கள்,
என் தாயாரால் ஹைதர் (சிங்கம்)
எனப் பெயர் சூட்டப்பட்டவன் நான்
அருவருப்பான தோற்றமுடைய
அடர்வனத்தின் சிங்கம் நான்
சந்தர் எனும் பேரளவையால்
அளப்பதைப் போன்று
அவர்களைத் தாராளமாக அளந்திடுவேன்
(ஏராளமான எதிரிகளை
வெட்டி வீழ்த்துவேன்)"
என்று பாடிக்கொண்டே மர்ஹபின் தலையில் ஓங்கி அடித்து, அவனை வீழ்த்தினார்கள். பிறகு அலீ (ரலி) அவர்களின் கரங்களாலேயே (கைபரின்) வெற்றியும் கிட்டியது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 46 "அவனே அவர்கள் கைகளை உங்களிடமிருந்து தடுத்தான்" (48:24) எனும் வசனம்.
3696. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்காவாசிகளில் எண்பது பேர் நபி (ஸல்) அவர்கள்மீதும் நபித்தோழர்கள்மீதும் திடீர்த் தாக்குதல் தொடுப்பதற்காக "தன்ஈம்” மலையிலிருந்து ஆயுதங்களோடு இறங்கிவந்தனர். அப்போது சரணடைந்த அவர்களை நபி (ஸல்) அவர்கள் பிடித்து, (அவர்களை மன்னித்து) உயிரோடு விட்டுவிட்டார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின், உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களைவிட்டும் அவனே தடுத்தான்" (48:24) எனும் வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 32
பாடம் : 47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது.
3697. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஹுனைன் போர் தினத்தன்று பிச்சுவாக் கத்தி ஒன்றை எடுத்து, தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த (என் தாயாரின் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று), "அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் தம்முடன் பிச்சுவாக் கத்தி ஒன்றை வைத்திருக்கிறார்" என்று கூறினார்கள்.
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பிச்சுவாக் கத்தி எதற்கு?" என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற்காகத்தான் அதை வைத்துள்ளேன்" என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.
உம்மு சுலைம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நம்மவரைத் தவிர (மக்கா வெற்றியின்போது) தங்களிடம் சரணடைந்து தங்களால் (பொது மன்னிப்பளிக்கப்பட்டு) விடுவிக்கப்பட்டவர்களைத் தாங்கள் கொன்றுவிடுங்கள்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் போதுமானவனாக ஆகிவிட்டான். அவன் உபகாரமும் செய்துவிட்டான். (இந்த ஹுனைன் போரில் நமக்குச் சரிவு ஏற்பட்டாலும் பெருத்த பாதிப்பு ஏதுமில்லாமல் அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்)" என்று கூறினார்கள்.
- உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தொடர்பான மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3698. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது, அவர்களுடன் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் இன்னும் சில அன்சாரிப் பெண்மணிகளும் கலந்துகொள்வர். அப்பெண்கள் (அறப்போர் வீரர்களுக்கு) தண்ணீர் கொடுப்பார்கள்; காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிப்பார்கள்.
அத்தியாயம் : 32
3699. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களை(த் தனியே) விட்டுவிட்டு மக்கள் சிலர் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ஒரு தோல் கேடயத்தால் மறைத்துக்கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.
அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதிவேகமாக அம்பெடுத்து எய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். (வேகவேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை உடைத்து விட்டார்கள். யாரேனும் ஒருவர் அம்புக்கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், "அதை அபூதல்ஹாவிடம் தூக்கிப்போடு" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் (அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னாலிருந்து) தலையை உயர்த்தி எதிரிகளை எட்டிப் பார்க்க, அபூதல்ஹா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என் தந்தையும் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஓர் அம்பு தங்களைத் தாக்கிவிடலாம். என் மார்பு தங்கள் மார்ப்புக்குக் கீழே இருக்கும் (தாங்கள் எட்டிப் பார்க்காமல் இருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு நேராகக் கேடயம் போன்று இருக்கும்)" என்று சொன்னார்கள்.
(அன்று) நான் அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்களையும் உம்மு சுலைம் (ரலி) அவர்களையும் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டவர்களாகப் பார்த்தேன். அவர்கள் கால் கொலுசுகளைக் கண்டேன். அவர்கள் இருவரும் (தண்ணீர் உள்ள) தோல் பைகளை முதுகின் மீது சுமந்துவந்து, (காயம் பட்டுக்கிடந்த) வீரர்களின் வாயில் ஊற்றுவார்கள். பின்னர் திரும்பிப்போய், தண்ணீர் நிரப்பிக்கொண்டு வந்து, வீரர்களின் வாயில் ஊற்றுவார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்களின் சிற்றுறக்கத்தால் அவர்கள் கரங்களிலிருந்து இரண்டு, அல்லது மூன்று முறை வாள் (நழுவி) விழுந்துவிட்டது.
அத்தியாயம் : 32
பாடம் : 48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்குப் போர்ச் செல்வத்தில் (வீரர்களுக்கான) பங்கு வழங்காமல் சிறிதளவு (ஊக்கத் தொகை) வழங்கப்படும் என்பதும், எதிரிகளின் குழந்தைகளைக் கொல்வதற்கு வந்துள்ள தடையும்.
3700. யஸீத் பின் ஹுர்முஸ் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த) நஜ்தா பின் ஆமிர் என்பவர் ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நான் ஒரு கல்வியை மறைத்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதமாட்டேன்" என்று கூறி (அவருக்குப் பதில் எழுதி)னார்கள்.
நஜ்தா தமது கடிதத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்:
இறைவாழ்த்துக்குப் பின்! அறப்போர்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் கலந்துகொண்டார்களா?
அவ்வாறு கலந்துகொண்ட பெண்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் பங்கு கொடுத்தார்களா? (போரில்) எதிரிகளின் குழந்தைகளைக் கொன்றார்களா? அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தில் முற்றுப்பெறும்? போரில் கைப்பற்றப்படும் செல்வங்களில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதி யாருக்குரியது? இந்த ஐந்து விஷயங்கள் குறித்து எனக்கு அறிவியுங்கள்.
அவருக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதில் எழுதினார்கள்:
நீர் என்னிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் அறப்போர்களில் கலந்துகொண்டார்களா?” எனக்கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறப்போர்களில் பெண்களும் கலந்து கொண்டார்கள். போரில் காயமடைந்தவர்களுக்கு மருந்திட்டு சிகிச்சை அளித்தார்கள். போர்ச்செல்வத்திலிருந்து சிறிதளவு அவர்களுக்கு (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் பெண்களுக்கு (குறிப்பிட்ட) பங்கு எதையும் நிர்ணயிக்கவில்லை.
போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர்.
மேலும், நீர் "அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தோடு முற்றுப்பெறுகிறது?” எனக் கேட்டிருந்தீர்.என் ஆயுளின் (அதிபதி)மீதாணையாக! சிலருக்குத் தாடி கூட முளைத்துவிடும். ஆனால், தமக்குரிய ஒன்றைப் பெறுவதிலும் தமக்குரிய ஒன்றைக் கொடுப்பதிலும் பலவீனத்துடனேயே அவர்கள் இருப்பர். (ஒன்றைப் பெறும்போது) மற்றவர்களைப் போன்று சரியான பொருளைப் பெறுகின்ற பக்குவத்தை ஒருவன் அடைந்துவிட்டால் அவனைவிட்டு அநாதை எனும் பெயர் நீங்கிவிடும்.
மேலும், நீர் என்னிடம் "போர்ச்செல்வத்தில் ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) யாருக்குரியது?” எனக் கேட்டிருந்தீர். (நபியவர்களின் குடும்பத்தாராகிய) நாங்கள் அது எங்களுக்கே உரியது எனக் கூறிவந்தோம். ஆனால், எங்கள் மக்களே (பனூ உமைய்யா) அதை எங்களுக்குத் தர மறுத்துவிட்டனர். (ஆகவே, குமுஸ் நிதி ஆட்சியாளராக வரும் அனைவரின் குடும்பத்தாருக்கும் உரியதாகும்.)
அத்தியாயம் : 32
3701. மேற்கண்ட ஹதீஸ் யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நஜ்தா என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (ஐந்து விஷயங்கள் குறித்துக் கேட்டு)க் கடிதம் எழுதினார்" என்றே ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், ஹாத்திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர். "களிர்” (அலை) அவர்கள், தாம் கொன்ற சிறுவனிடமிருந்து அறிந்து கொண்டதைப் போன்று நீரும் அறிந்தால் தவிர (அது உம்மால் இயலாத காரியமாகும்)" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என இடம் பெற்றுள்ளது.
ஹாத்திம் பின் இஸ்மாயீல் (ரஹ்) அவர்களிடமிருந்து இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் "இறைநம்பிக்கையாளரை நீர் பாகுபடுத்தி அறிந்து கொள்ள முடிந்தால் தவிர. அப்போதுதான் இறைமறுப்பாளனைக் கொல்வதற்கும் இறைநம்பிக்கையாளரை விட்டுவிடுவதற்கும் உமக்கு முடியும் (ஆனால்,சிறுவன் பிற்காலத்தில் எப்படி மாறுவான் என்பதை, "களிரை”ப் போன்று அறிந்துகொள்ள உம்மால் முடியாது)" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
3702. யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யாக்களில் ஒருவரான) நஜ்தா பின் ஆமிர் அல்ஹரூரீ என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அடிமைகளும் பெண்களும் போர்ச்செல்வங்கள் பங்கிடப் படும் இடத்திற்கு வந்தால் அவர்களுக்கும் போர்ச்செல்வத்தில் பங்கு கொடுக்கப்படுமா? (எதிரிகளின்) குழந்தைகளைக் கொல்லலாமா? அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தோடு முற்றுப் பெறும்? (குமுஸைப் பற்றிக் கூறும் 8:41ஆவது வசனத்திலுள்ள) "உறவினர்கள்” யார் ஆகியவை பற்றி விளக்கம் கேட்டார்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "அவருக்காகப் பதில் கடிதம் எழுது" என்று கூறிவிட்டு, "அவர் முட்டாள்தனமான ஒரு முடிவை எடுத்துவிடுவார் என்ற அச்சம் எனக்கில்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதமாட்டேன்" என்று கூறினார்கள். பிறகு பின்வருமாறு எழுதச் சொன்னார்கள்: "நீர் என்னிடம் போர்ச் செல்வம் பங்கிடப்படும் இடத்திற்குப் பெண்களும் அடிமைகளும் வந்தால் அவர்களுக்கும் போர்ச் செல்வத்தில் பங்கு கொடுக்கப்படுமா?" எனக் கேட்டிருந்தீர். போர்ச்செல்வத்தில் அந்த இரு பிரிவினருக்கும் ஏதேனும் (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டால் தவிர (குறிப்பிட்ட) பங்கேதும் இல்லை.
(போரில் எதிரிகளின்) குழந்தைகளைக் கொல்வதைப் பற்றி என்னிடம் கேட்டிருந்தீர். (போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள். எனவே, நீரும் அவர்களைக் கொல்ல வேண்டாம். மூசா (அலை) அவர்களின் நண்பர் (களிர்), தாம் கொன்ற சிறுவனைப் பற்றி (இறைவன் மூலம்) அறிந்துகொண்டதைப் போன்று நீரும் அக்குழந்தைகளைப் பற்றி அறிந்தால் தவிர. (அது உம்மால் இயலாது.)
நீர் என்னிடம் அநாதைகளைப் பற்றி "அநாதை எனும் பெயர் எந்தப் பருவத்தோடு முற்றுப்பெறும்?” எனக் கேட்டிருந்தீர். அவன் பருவ வயதை அடைந்து, அவனிடம் பக்குவ நிலை தென்படாத வரை "அநாதை” எனும் பெயர் அவனிடமிருந்து நீங்காது.
மேலும், நீர் என்னிடம் "(8:41ஆவது வசனத்திலுள்ள) "உறவினர்" என்போர் யார்?” எனக் கேட்டிருந்தீர். (நபியவர்களின் உறவினர்களான) நாங்கள்தாம் அவர்கள் என நாங்கள் கூறினோம். ஆனால், அதை எங்கள் மக்கள் மறுத்துவிட்டனர் (எனவே ஆட்சியாளர்களின் உறவினர்களையும் அது குறிக்கும்).
- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3703. யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(காரிஜிய்யாவான) நஜ்தா பின் ஆமிர் என்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு)க் கடிதம் எழுதினார். அவரது கடிதத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாசித்தபோதும் அவருக்குப் பதில் எழுதியபோதும் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தேன்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! முடைநாற்றத்தில் வீழ்ந்துவிடாமல் அவரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுதவுமாட்டேன்; அவரைக் கண்குளிரச் செய்திருக்கவுமாட்டேன்" என்று கூறிவிட்டு, (பின்வருமாறு) அவருக்குக் கடிதம் எழுதச் சொன்னார்கள்:
"அல்லாஹ் (8:41ஆவது வசனத்தில்) குறிப்பிட்டுள்ள (குமுஸில்) பங்கு பெறுகின்ற உறவினர்கள் யார்?” என்பது குறித்து நீர் என்னிடம் கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களாகிய நாங்கள்தாம் அவர்கள் என நாங்கள் கருதினோம். ஆனால், அதை மக்கள் மறுத்துவிட்டனர்.
நீர் என்னிடம் "ஓர் அநாதைக்கு "அநாதை” எனும் பெயர் எப்போது முற்றுப்பெறும்?” எனக் கேட்டிருந்தீர். அவன் திருமண வயதை அடைந்து, அவனிடம் பக்குவம் தென்பட்டு, அவனது செல்வம் அவனிடம் ஒப்படைக்கப்படும் பருவத்தை அவன் அடையும்போது அவனிடமிருந்து "அநாதை” எனும் பெயர் முற்றுப்பெற்றுவிடும்.
நீர் என்னிடம் "(அறப்போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களின் குழந்தைகளில் எதையேனும் கொன்றிருக்கிறார்களா?” என்று கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளின் குழந்தைகள் எதையும் கொன்றதில்லை. நீரும் அவர்களின் குழந்தைகள் எதையும் கொன்றுவிடாதீர்; களிர், தாம் கொன்ற சிறுவனிடமிருந்து அறிந்துகொண்டதை நீரும் அறிந்துகொள்ள முடிந்தால் தவிர. (ஆனால், அது உம்மால் முடியாது.)
மேலும், நீர் என்னிடம் "பெண்களும் அடிமைகளும் போரில் கலந்துகொண்டால் அவர்களுக்கும் போர்ச்செல்வத்தில் குறிப்பிட்ட அளவு பங்கு உண்டா?” எனக் கேட்டிருந்தீர். அவர்களுக்கு மக்களின் போர்ச்செல்வங்களிலிருந்து சிறிதளவு (ஊக்கத் தொகையாக) வழங்கப்படுவதைத் தவிர குறிப்பிட்ட அளவு பங்கேதும் அவர்களுக்குக் கிடையாது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3704. மேற்கண்ட ஹதீஸின் ஒரு பகுதி மட்டும் யஸீத் பின் ஹுர்முஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் முழுத் தகவல்களுடன் ஹதீஸ் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3705. உம்மு அத்திய்யா அல்அன்சாரிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன். மக்கள் (போரிடச்) சென்ற பிறகு அவர்களின் இருப்பிடங்களில் அவர்களுக்குப் பின்துணையாக இருந்து நான் செயல்படுவேன்; அவர்களுக்காக உணவு சமைப்பேன். போரில் காயமுற்றவர்களுக்கு மருந்திட்டுச் சிகிச்சை செய்வேன். நோயாளிகளைக் கவனித்துக் கொள்வேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 49 நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை.
3706. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது ஆட்சியில் கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திப்பதற்காக மக்களுடன் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு மழை வேண்டிப் பிரார்த்தித்தார்.
அப்போது நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு மனிதர் மட்டுமே இருந்தார். அப்போது நான் ஸைத் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பத்தொன்பது" என விடையளித்தார்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீங்கள் கலந்துகொண்ட போர்கள் எத்தனை?" என்று வினவியபோது, "பதினேழு" என்றார்கள். "அவர்கள் கலந்துகொண்ட முதல் போர் எது?" என்று கேட்டதற்கு "தாத்துல் உசைர், அல்லது உஷைர்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
3707. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டார்கள். மேலும், அவர்கள் (மதீனாவுக்கு) நாடு துறந்து சென்ற பிறகு ஒரேயொரு ஹஜ் மட்டுமே செய்தார்கள். "விடைபெறும்” ஹஜ் எனும் அந்த ஹஜ்ஜைத் தவிர வேறெந்த ஹஜ்ஜையும் அவர்கள் செய்யவில்லை.
இதை அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 32
3708. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டேன். நான் பத்ருப் போரிலோ உஹுதுப் போரிலோ கலந்துகொள்ளவில்லை. (அப்போருக்குச் செல்லவிடாமல்) என் தந்தை (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள்) என்னைத் தடுத்துவிட்டார்கள்.
(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உஹுதுப் போர் நாளில் கொல்லப்பட்டுவிட்ட பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஒருபோதும் எந்தப் போரிலும் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.
அத்தியாயம் : 32
3709. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்தொன்பது அறப்போர்களில் கலந்து கொண்டார்கள். அவற்றில் எட்டுப் போர்களில் அவர்கள் (நேரடியாகப்) போரிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவற்றில்” எனும் சொல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 32
3710. புரைதா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பதினாறு போர்களில் கலந்து கொண்டேன்.
அத்தியாயம் : 32
3711. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டேன். அவர்கள் அனுப்பிக்கொண்டிருந்த படைப்பிரிவுகளில் பங்கேற்று ஒன்பது அறப்போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒருமுறை எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒருமுறை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (சலமா (ரலி) அவர்கள் கலந்து கொண்ட அறப்போர் மற்றும் படைப்பிரிவு ஆகிய) அவ்விரண்டின் எண்ணிக்கையும் ஏழு என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 50 "தாத்துர் ரிக்காஉ” போர்.
3712. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம்தான் இருந்தது. அதில் நாங்கள் ஒருவர் பின் ஒருவராக (முறை வைத்து) பயணம் செய்தோம். (வாகனம் இல்லாமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்து (கொப்புளங்கள் வெடித்து)விட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்துவிட்டன.
அப்போது நாங்கள் எங்கள் கால்களில் துண்டுத் துணிகளைச் சுற்றிக்கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு துண்டுத் துணிகளை நாங்கள் கால்களில் சுற்றிக் கட்டிக்கொண்டதால் தான் அந்தப் போருக்கு "தாத்துர் ரிக்காஉ”(ஒட்டுத் துணிப் போர்) எனப்பெயர் சூட்டப்பெற்றது.
இதன் அறிவிப்பாளரான அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அறிவித்த பின் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள், தம்மைப் பற்றித் தாமே இவ்வாறு அறிவித்ததை விரும்பவில்லை. தமது நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அவர்கள் விரும்பவில்லை போலும்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉசாமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
புரைத் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "அல்லாஹ் அதற்குரிய நற்பலனை அவர்களுக்கு வழங்குவானாக" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32
பாடம் : 51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது வெறுக்கத்தக்கதாகும்.
3713. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ரை நோக்கி (போருக்கு)ப் புறப்பட்டார்கள். (மதீனாவுக்கு அருகில்) "ஹர்ரத்துல் வபரா” எனும் இடத்தில் அவர்கள் இருந்தபோது அவர்களை ஒரு மனிதர் அணுகினார். அவரது வீரதீரமும் விவேகமும் (மக்களால் பெரிதும்) பேசப்பட்டு வந்தது. அவரைப் பார்த்ததும் நபித்தோழர்கள் மகிழ்ச்சியுற்றனர்.
அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகி, "உம்மைப் பின்பற்றி, உம்முடன் சேர்ந்து (எதிரிகளோடு) போரிட நான் வந்துள்ளேன்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறாயா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை” என்றார். "அப்படியானால் நீ திரும்பிச் செல். ஓர் இணைவைப்பாளரிடம் நான் உதவி கோரமாட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.
பிறகு சிறிது தூரம் சென்று, நாங்கள் "அஷ்ஷஜரா” எனும் இடத்தில் இருந்தபோது, அந்த மனிதர் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகி, முன்பு கூறியதைப் போன்றே கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்பு கூறியதைப் போன்றே கூறிவிட்டு, "நீ திரும்பிச் சென்றுவிடு. நான் ஓர் இணைவைப்பாளரிடம் உதவி கோர மாட்டேன்" என்று கூறினார்கள்.
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டு, "அல்பைதா" எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அணுகியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முன்பு கேட்டதைப் போன்றே "நீ அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புகிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "ஆம்" என்றார்.
ஆகவே, அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால், நீர் (நம்முடன்) வரலாம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 32