பாடம் : 28 விலைக்கோள் உரிமை (அஷ் ஷுஃப்ஆ).
3285. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருவருக்குக் கூட்டாக உள்ள குடியிருப்பு அல்லது தோட்டத்தில் தம்முடைய (பங்கை விற்க நாடுபவர்) பங்காளிக்கு அறிவிப்பதற்கு முன் விற்பதற்கு உரிமை இல்லை. பங்காளி விரும்பினால் அதை வாங்கிக்கொள்வார்;விரும்பாவிட்டால் விட்டுவிடுவார்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3286. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பிரிக்கப்படாத குடியிருப்பு, அல்லது தோட்டத்தில் விலைக்கோள் உரிமை உள்ளது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். பங்காளிக்கு அறிவிப்புச் செய்வதற்கு முன்னர் (தமது பங்கை) விற்க ஒருவருக்கு அனுமதி இல்லை. பங்காளி விரும்பினால் அதை வாங்கிக்கொள்வார்; விரும்பாவிட்டால் விட்டுவிடுவார். அவரிடம் அறிவிக்காமல் விற்றுவிட்டாலும் அவரே அதிக உரிமையுடையவர் ஆவார்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3287. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிலம், வீடு, தோட்டம் ஆகிய (பிரிக்கப்படாத) கூட்டுச் சொத்துகள் ஒவ்வொன்றிலும் விலைக்கோள் உரிமை உள்ளது. எனவே, பங்காளிக்கு அறிவிப்பதற்கு முன் விற்பது தகாது. ஒன்று அவரே வாங்கிக் கொள்வார்; அல்லது விட்டுவிடுவார். அவர் (தம் பங்காளிக்கு அறிவிக்க) மறுத்தாலும் பங்காளியே அதற்கு மிகவும் உரிமையுடையவர் ஆவார்; அவரிடம் அறிவிக்கும்வரை.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 29 அண்டை வீட்டாரின் சுவரில் மரக்கட்டையைப் பதிப்பது.
3288. அப்துர் ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஒருவர் தமது வீட்டுச் சுவரில் தம் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (சாரம்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்" என்று கூறினார்கள்" என்று சொல்லிவிட்டு, "என்ன இது? (நபியவர்களின்) இ(ந்த உபதேசத்)தைப் புறக்கணிப்பவர்களாகவே உங்களை நான் காண்கிறேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும்) இதை நான் உங்களுக்கு வலியுறுத்திக் கொண்டுதான் இருப்பேன்"என்று கூறுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 30 அநீதியிழைத்தல், பிறர் நிலத்தை அபகரித்தல் உள்ளிட்டவை தடை செய்யப் பட்டுள்ளன.
3289. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரிக்கிறாரோ, அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டுவான்.
இதை சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3290. சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அர்வா பின்த் உவைஸ் என்ற பெண், எனக்குரிய வீட்டின் ஒரு பகுதி தொடர்பாக வழக்காடினாள். அப்போது நான், "அவளையும் அந்த வீட்டையும் விட்டுவிடுங்கள். ஏனெனில், "யார் நியாயமின்றி (பிறருக்குச் சொந்தமான) ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக் கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். இறைவா! அவள் (தனது வாதத்தில்) பொய் சொல்பவளாக இருந்தால், அவளது பார்வையைப் பறித்துவிடு. அவளது சவக்குழியை அந்த வீட்டிலேயே அமைத்துவிடு" என்று கூறினேன்.
இந்த ஹதீஸை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஸைத் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பின்னர் நான் அந்தப் பெண்ணைப் பார்வையற்றவளாகப் பார்த்தேன். அவள் சுவர்களைத் தடவிக்கொண்டு இருந்தாள். "சயீத் பின் ஸைதின் பிரார்த்தனை எனது விஷயத்தில் பலித்துவிட்டது" என்று கூறுவாள். இந்நிலையில் அவள் (ஒரு நாள்) தனது வீட்டில் நடந்துகொண்டிருந்தபோது, வீட்டுக்குள்ளிருந்த கிணறு ஒன்றை அவள் கடந்து சென்றாள். அப்போது அதில் அவள் (தவறி) விழுந்துவிட்டாள். அதுவே அவளது சவக்குழியாக அமைந்தது.
அத்தியாயம் : 22
3291. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் தமது நிலத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார் என அர்வா பின்த் உவைஸ் (அல்லது உனைஸ்) என்ற பெண் குற்றம் சாட்டினார். (அப்போதைய மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகமிடம் சயீதுக்கு எதிராக அவர் வழக்குத் தொடுத்தார். (விசாரணையின்போது) சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (ஒரு ஹதீஸை) செவியுற்ற பிறகும் அவளது நிலத்தில் ஒரு பகுதியை அபகரிப்பேனா?" என்று கேட்டார்கள்.
அதற்கு மர்வான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் என்ன செவியுற்றீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு சயீத் (ரலி) அவர்கள், "யார் ஒரு சாண் நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக்கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.அதற்கு மர்வான், "இதற்குப் பின் உங்களிடம் நான் ஆதாரம் கேட்கமாட்டேன்" என்றார்கள்.
அப்போது சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் "இறைவா! இவள் பொய் சொல்லியிருந்தால் அவளது பார்வையைப் பறித்துவிடு. அந்த நிலத்திலேயே அவளைக் கொன்றுவிடு" என்று பிரார்த்தித்தார்கள்.
பிறகு பார்வை பறிபோனவளாகவே அவள் இறந்தாள். அவள் தனது நிலத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு குழியில் (தவறி) விழுந்து மாண்டுபோனாள்.
அத்தியாயம் : 22
3292. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு சாண் நிலத்தை அநியாயமாகக் கைப்பற்றிக்கொள்கிறாரோ, அவரது கழுத்தில் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதி யி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3293. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையின்றி ஒரு சாண் நிலத்தைக் கைப்பற்றிக்கொள்கிறாரோ அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டாமல் விடுவதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3294. அபூசலமா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எனக்கும் என் கூட்டத்தாருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்துவந்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். ஆயிஷா (ரலி) அவர்கள், "அபூசலமா! மண்ணாசையைத் தவிர்த்துக் கொள்க! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அநியாயமாக ஒரு சாண் அளவு நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மாலையாக மாட்டப்படும்" என்று கூறியுள்ளார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 31 பாதை விஷயத்தில் பிரச்சினை ஏற்படும்போது, பாதைக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிலத்தின் அளவு.
3295. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாதை விஷயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், ஏழு முழங்கள் அகலமுள்ள நிலத்தைப் பொதுவழியாக ஆக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22

பாடம் : ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார்.
3296. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார்.ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 23
பாடம் : 1 (குர்ஆனில் குறிப்பிடப்பட்ட) பாகங்களை அவற்றுக்கு உரியோரிடம் சேர்த்து விடுங்கள். எஞ்சிய பாகம், இறந்தவரின் நெருங்கிய ஆண் உறவினருக்கு உரியதாகும்.
3297. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில்) நிர்ணயிக்கப்பெற்றுள்ள பாகங்களை, (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது (இறந்தவரின்) மிக நெருக்கமான ஆண் உறவினருக்கு உரியதாகும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 23
3298. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில்) நிர்ணயிக்கப்பெற்றுள்ள பாகங்களை, (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பாகம் நிர்ணயிக்கப்பெற்றவர்கள் (எடுத்தது போக) விட்டுவைப்பது, (இறந்தவரின்) மிக நெருக்கமான ஆண் உறவினருக்கு உரியதாகும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 23
3299. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்தவர் விட்டுச்செல்லும்) சொத்தை, (முதலில்) அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி பாகம் நிர்ணயிக்கப் பெற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுங்கள். பாகம் நிர்ணயிக்கப் பெற்றவர்கள் எடுத்ததுபோக விட்டுவைப்பது, (இறந்தவரின்) மிக நெருக்கமான ஆண் உறவினருக்கு உரியதாகும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 23
பாடம் : 2 மூல வாரிசுகளோ கிளை வாரிசுகளோ இல்லாதவரின் ("கலாலா") சொத்துரிமை.
3300. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நோயுற்றிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்தே வந்து என்னை உடல்நலம் விசாரித்தார்கள். அப்போது எனக்கு மயக்கமேற்பட்டது. பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு எஞ்சிய தண்ணீரை என்மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண் விழித்)தேன். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! என் செல்வத்தின் விஷயத்தில் நான் என்ன முடிவு செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். அப்போது அவர்கள் எனக்குப் பதிலேதும் கூறவில்லை. முடிவில் வாரிசுரிமை தொடர்பான "(நபியே!) உம்மிடம் ("கலாலா" குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்" (4:176)என்று தொடங்கும் வாரிசுரிமை தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 23
3301. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் பனூ சலிமா எனும் (என்) குலத்தாரிடையே நான் (நோயுற்றுத் தங்கி) இருந்தபோது, நடந்தே வந்து என்னை உடல்நலம் விசாரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், நான் (நோயின் கடுமையால்) சுயநினைவு இழந்தவனாக இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். ஆகவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி, அதிலிருந்து அங்கத் தூய்மை (உளூச்) செய்து, எஞ்சிய தண்ணீரை என்மீது தெளித்தார்கள். நான் மயக்கம் தெளிந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் என் செல்வத்தின் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?" என்று கேட்டேன். அப்போதுதான் "ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களின் பாகத்திற்குச் சமமானது கிடைக்கும் என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்துகின்றான்" (4:11) என்று தொடங்கும் இறைவசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 23
3302. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நோயுற்றிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்முடனிருக்க நடந்தே வந்து என்னை உடல்நலம் விசாரித்தார்கள். அப்போது நான் (நோயின் கடுமையால்) மயக்கமுற்ற நிலையில் இருப்பதைக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூச்) செய்து, எஞ்சிய தண்ணீரை என்மீது ஊற்றினார்கள். நான் மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது, என்னருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டேன். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! எனது செல்வத்தின் விஷயத்தில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?" என்று கேட்டேன். அப்போது அவர்கள் எனக்குப் பதிலேதும் கூறவில்லை. முடிவில் வாரிசுரிமை தொடர்பான (4:11ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 23
3303. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நோய்வாய்ப்பட்டு சுயநினைவில்லாமல் இருந்தபோது, (என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை செய்துவிட்டு, எஞ்சிய தண்ணீரை என்மீது ஊற்றினார்கள். உடனே எனக்குச் சுயநினைவு திரும்பியது. அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நேரடி ஆண் வாரிசுகள் அல்லாதவர்கள் ("கலாலா")தாம் எனக்கு வாரிசாகிறார்கள் (இந்நிலையில் சொத்துப் பங்கீடு எவ்வாறு அமையும்?)" என்று கேட்டேன். அப்போதுதான் வாரிசுரிமை தொடர்பான (4:11ஆவது) இறைவசனம் அருளப் பெற்றது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்களிடம், "(நபியே!) உம்மிடம் ("கலாலா" குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர் (4:176) எனும் இறைவசனமா (ஜாபிர் (ரலி) அவர்கள் தொடர்பாக அருளப் பெற்றது)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இந்த விஷயத்தில்தான் அருளப்பெற்றது" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் வஹ்ப் பின் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அப்போதுதான் பாகப் பிரிவினை (ஃபராயிள்) தொடர்பான வசனம் அருளப்பெற்றது" என்றும், நள்ர் பின் ஷுமைல் மற்றும் அபூஆமிர் அல்அகதீ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "பாகப் பிரிவினை (ஃபர்ள்) வசனம்" என்றும் இடம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்புகளில் எவற்றிலும் முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்களிடம் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கேட்டதைப் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 23
3304. மஅதான் பின் அபீதல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தன்று உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்) நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் நினைவுகூர்ந்தார்கள். பிறகு கூறினார்கள்: நான் எனக்குப் பின்னால் "கலாலா"வைவிட ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுச்செல்லவில்லை. இந்த "கலாலா" குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் விவாதித்ததைப் போன்று வேறு எதற்காகவும் விவாதித்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது தொடர்பாக என்னிடம் கடிந்து கொண்டதைப் போன்று வேறு எதற்காகவும் என்னிடம் கடிந்துகொண்டதில்லை. எந்த அளவிற்கு (அவர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள்) எனில், அவர்கள் தமது விரலால் என் நெஞ்சில் குத்தினார்கள். "உமரே! அந்நிசா அத்தியாயத்தின் இறுதியிலுள்ள கோடைக்கால(த்தில் அருளப்பெற்ற) வசனம் (4:176) உமக்குப் போதுமானதாக இல்லையா?" என்று கேட்டார்கள்.
நான் இன்னும் (சிறிது காலம்) வாழ்ந்தால் இந்த "கலாலா" தொடர்பாகக் குர்ஆனைக் கற்றோரும் கல்லாதோரும் தீர்ப்பளிக்கும் விதத்தில் தெளிவான ஒரு தீர்ப்பை வழங்குவேன்" என்றும் (உமர் (ரலி) அவர்கள் தமது உரையில்) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 23