3265. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணத்தில்) எனது ஒட்டகம் நன்றாக இயங்காதிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். பிறகு எனது ஒட்டகத்தைக் குத்தினார்கள். அது குதித்தோடலாயிற்று. பின்னர் நபி (ஸல்) அவர்கள் சொல்வதைக் கேட்பதற்காக அதன் கடிவாளத்தைப் பிடித்து அதன் வேகத்தை மட்டுப்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால், என்னால் முடியவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னை வந்தடைந்த போது, "அதை எனக்கு விற்றுவிடு" என்றார்கள். நான் அதை ஐந்து "ஊக்கியா"க்களுக்கு அவர்களுக்கு விற்றுவிட்டேன்.
அப்போது "மதீனா சென்றடையும்வரை அதன் மீது பயணம் செய்துகொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனும் நிபந்தனையின்பேரில்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் "மதீனா சென்றடையும்வரை அதன் மீது நீ பயணம் செய்துகொள்ளலாம்" என்றார்கள். நான் மதீனா வந்து சேர்ந்தபோது, அந்த ஒட்டகத்தை அவர்களிடம் (ஒப்படைக்க) கொண்டுசென்றேன். (அதன் விலையையும்) கூடுதலாக ஓர் "ஊக்கியா"வும் அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பின்னர் அந்த ஒட்டகத்தையும் எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 22
3266. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் -("அறப்போர் வீரனாக" என்றும் கூறினார்கள் என்றே எண்ணுகிறேன்)- கலந்துகொண்டேன். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், பின்வருமாறு கூடுதலாகவும் இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஜாபிர்! (ஒட்டகத்தின்) விலை முழுவதையும் பெற்றுக் கொண்டாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விலையும் உனக்கே உரியது; ஒட்டகமும் உனக்கே உரியது. விலையும் உனக்கே உரியது; ஒட்டகமும் உனக்கே உரியது" என்றார்கள்.
அத்தியாயம் : 22
3267. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) இரண்டு "ஊக்கியா"க்களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹங்களைக் கொடுத்து என்னிடமிருந்து ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். (மதீனாவிற்கு அருகிலுள்ள) "ஸிரார்"எனுமிடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அறு(த்து சமை)க்கப்பட்டது. அதை அனைவரும் உண்டார்கள்.
மதீனாவுக்கு வந்தபோது, பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (பின்னர்) ஒட்டகத்தின் விலையை எனக்குக் கொடுத்தார்கள். சற்று தாராளமாகவே நிறுத்தார்கள்.
அத்தியாயம் : 22
3268. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "ஒரு தொகையைக் குறிப்பிட்டு என்னிடமிருந்து அ(ந்த ஒட்டகத்)தை வாங்கிக்கொண்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. இரண்டு "ஊக்கியா"க்களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹங்களைக் கொடுத்து எனும் (ஐயப்பாட்டுடனான) குறிப்பு இல்லை. மேலும் அதில், "ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அறுக்கப்பட்டது. பின்னர் அதன் இறைச்சியைப் பங்கிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3269. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "நான்கு தீனார்களுக்காக உனது ஒட்டகத்தை நான் வாங்கிக்கொண்டேன்; நீ மதீனா சென்றடையும்வரை அதன் மீது நீ பயணிக்கலாம்" என்றார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 22 ஒருவர் தாம் கடனாகப் பெற்றதை விடச் சிறந்ததைத் திருப்பிச் செலுத்துவதும், "வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்" எனும் நபி மொழியும்.
3270. அபூராஃபிஉ அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் இளம் வயது ஆண் ஒட்டகம் ஒன்றைக் கடன் வாங்கியிருந்தார்கள். தர்ம ஒட்டகங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த போது, (அவற்றிலிருந்து விலைக்கு வாங்கி) அம்மனிதருக்குரிய இளம் வயது ஒட்டகத்தைக் கொடுத்துவிடுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். நான் சென்றுவிட்டுத் திரும்பிவந்து, "அவற்றில் ஆறுவயது முழுமையடைந்த (கடைவாய்ப் பற்கள் முளைத்து விட்ட) ஒட்டகங்களைத் தவிர வேறெதையும் நான் காணவில்லை" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அ(ந்த ஒட்டகத்)தையே அவருக்குக் கொடுத்து விடுங்கள் (ஏனெனில்,) அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே சிறந்தவர் ஆவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3271. மேற்கண்ட ஹதீஸ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமையாயிருந்த அபூராஃபிஉ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இளம்வயது ஆண் ஒட்டகம் ஒன்றை, அதைப் போன்றதைத் திருப்பித் தருவதாகக் கூறி கடன் வாங்கியிருந்தார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. எனினும் அதில், "ஏனெனில், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே அல்லாஹ்வின் அடியார்களில் சிறந்தவர் ஆவார்" என்று (சிறிது மாற்றத்துடன்) இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3272. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்குக் கடன் கொடுக்க வேண்டியிருந்தது. (அதைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டுவந்தபோது) அவர் கடுஞ்சொற்களை பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரை(ப் பிடித்து)க் கண்டிக்கத் தயாராயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவரை விட்டுவிடுங்கள்.) கடன்காரருக்கு (இவ்வாறு) பேச உரிமை உண்டு" என்று கூறிவிட்டு, "அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒட்டகமொன்றை வாங்கி வாருங்கள்" என்றார்கள். மக்கள் (சென்றுவிட்டு வந்து) அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தைவிட அதிக வயதுடைய ஒட்டகங்களைத் தவிர வேறெதையும் நாங்கள் காணவில்லை" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அழகியமுறையில் திருப்பிச் செலுத்துபவரே "உங்களில் சிறந்தவர்களில் உள்ளவர்" அல்லது "உங்களில் சிறந்தவர்" ஆவார்"என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 22
3273. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகமொன்றை கடன் வாங்கினார்கள். அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தினார்கள். மேலும், "அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் ஆவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3274. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (கடனாகக்) கொடுத்திருந்த ஒட்டகத்தைக் கேட்டு ஒரு மனிதர் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தை அவருக்குக் கொடுங்கள்" என்றும் "அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 22
பாடம் : 23 ஓர் உயிரினத்தை அதே இன உயிரினத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்பது செல்லும்.
3275. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஓர் அடிமை நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்ல உறுதிமொழி அளித்தார். அவர் ஓர் அடிமை என்பது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பின்னர் அவருடைய உரிமையாளர் நபி (ஸல்) அவர்களைத் தேடிவந்(து, அது பற்றி முறையீடு செய்)தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "அவரை எனக்கு விற்றுவிடு"என்று கூறி விட்டு, இரு கறுப்பு அடிமைகளைக் கொடுத்து அவரை வாங்கிக் கொண்டார்கள். பின்னர் "ஒருவர் அடிமையா?" என்று கேட்காத வரை (தம்மிடம் உறுதிமொழி அளிக்க வருபவர்) எவரிடமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதிமொழி பெறவில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 24 அடைமானமும், அது உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் என்பதும்.
3276. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள். அதற்காகத் தமது (இரும்புக்) கவசத்தை அவரிடம் அடகு வைத்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3277. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை (கடனாக) வாங்கினார்கள். (அதற்காக) இரும்புக் கவசத்தை அடகு வைத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3278. சுலைமான் பின் மிஹ்ரான் அல் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் முன்பண வணிகத்தில் (சலம்) அடைமானம் பற்றிப் பேசினோம். அப்போது இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தவணைக்கு உணவுப் பொருளை (கடனாக) வாங்கினார்கள்; அதற்காகத் தமது இரும்புக் கவசத்தை அடைமானம் வைத்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என நமக்கு அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. - அதில், "இரும்பு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 22
பாடம் : 25 முன்பண வணிகம் (சலம்).
3279. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஓராண்டு அல்லது ஈராண்டுகளில் பெற்றுக்கொள்வதாகக் கூறி,பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்துவந்தனர். நபி(ஸல்) அவர்கள், "ஒருவர் (இவ்வாறு) பின்னால் பெற்றுக்கொள்வதாகக் கூறி, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுப்பதானால், குறிப்பிட்ட எடைக்காகவும் அளவுக்காகவும் குறிப்பிட்ட தவணைக்கு மட்டுமே கொடுக்கட்டும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3280. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தபோது, (பின்னர் பொருளைப் பெற்றுக்கொள்வதாகக் கூறி) மக்கள் முன்பணம் செலுத்திவந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பொருளைப் பின்னர் பெற்றுக் கொள்வதாகக் கூறி) முன்பணம் கொடுப்பவர், குறிப்பிட்ட அளவுக்காகவும் குறிப்பிட்ட எடைக்காகவுமே முன்பணம் கொடுக்கட்டும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "குறிப்பிட்ட தவணைக்கு" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "குறிப்பிட்ட தவணைக்கு" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 26 உணவுப் பொருட்களைப் பதுக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
3281. யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பதுக்கல் செய்பவன் பாவியாவான்" என்று சொன்னார்கள் என மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்றார்கள். அப்போது சயீத் பின் அல் முசய்யப் (ரஹ்) அவர்களிடம், "நீங்கள் பதுக்குகிறீர்களே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு சயீத் (ரஹ்) அவர்கள், "இந்த ஹதீஸை அறிவித்துவந்த மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களும் பதுக்குபவராகவே இருந்தார்கள்"என்றார்கள்.
அத்தியாயம் : 22
3282. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாவியே பதுக்கல் செய்வான்.
இதை மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் பனூ அதீ பின் கஅப் குலத்தைச் சேர்ந்த மஅமர் பின் அப்தில்லாஹ் பின் நாஃபிஉ பின் அபீமஅமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 27 வியாபாரத்தில் (தேவையில்லாமல்) சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது.
3283. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சத்தியம் செய்வது பொருளை விலை போகச் செய்யும்; இலாபத்தை அழித்துவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3284. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வியாபாரத்தில் அதிகமாகச் சத்தியம் செய்ய வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், அது (பொருளை) விலைபோகச் செய்யும்; பின்னர் (வளத்தை) அழித்துவிடும்.
இதை அபூகத்தாதா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22