பாடம் : 3 "கலாலா" பற்றிய வசனமே இறுதியாக அருளப்பெற்ற வசனமாகும்.
3305. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற வசனம் "(நபியே!) உம்மிடம் ("கலாலா" குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்" (4:176) என்று தொடங்கும் வசனமாகும்.
அத்தியாயம் : 23
3306. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குர்ஆனில்) இறுதியாக அருளப்பெற்ற வசனம், கலாலா பற்றிய (4:176ஆவது) இறை வசனமாகும். இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயம் "பராஅத்" (அல்லது "அத்தவ்பா") எனும் (9ஆவது) அத்தியாயமாகும். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 23
3307. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களுக்கு) முழுமையாக அருளப்பெற்ற அத்தியாயங்களில் இறுதியானது "அத்தவ்பா" எனும் (9ஆவது) அத்தியாயமாகும். இறுதியாக அருளப்பெற்ற வசனம் "கலாலா" பற்றிய (4:176ஆவது) வசனமாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "முழுமையாக" என்பதைக் குறிக்க ("தாம்மத்தன்" என்பதற்குப் பகரமாக) "காமி லத்தன்" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 23
3308. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற இறைவசனம் "(நபியே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர்" என்று தொடங்கும் (4:176ஆவது) வசனமாகும்.
அத்தியாயம் : 23
பாடம் : 4 ஒருவர் ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால், அது அவருடைய வாரிசுகளுக்கே உரியதாகும்.
3309. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கடன் உள்ள நிலையில் இறந்துவிட்ட ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்படுவார். அப்போது "தம்மீதுள்ள கடனை அடைக்க ஏதேனும் அவர் ஏற்பாடு செய்துள்ளாரா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் அத்தகைய ஏற்பாடுகளைச் செய்துவிட்டுச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டால்,அவருக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிப்பார்கள். அவ்வாறில்லை எனில், (முஸ்லிம்களிடம்) "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள்" என்று கூறிவிடுவார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்(து மதீனா அரசில் நிதி குவிந்)த போது, "இறைநம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களை விட நானே நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். ஆகவே, யார் தம்மீது கடன் இருக்கும் நிலையில் (அதை அடைப்பதற்காக ஒன்றையும் விட்டுச்செல்லாமல்) இறந்து விடுகிறாரோ, அந்தக் கடனை அடைப்பது எனது பொறுப்பாகும். யார் இறக்கும்போது செல்வத்தை விட்டுச்சென்றுள்ளாரோ, அது அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும்" என்று கூறுவார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 23
3310. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! பூமியின் மீதுள்ள எந்த இறைநம்பிக்கையாளருக்கும் மற்றெல்லா மக்களையும்விட நானே நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன். ஆகவே, உங்களில் யார் ஏதேனும் கடனையோ அல்லது திக்கற்ற மனைவி மக்களையோ விட்டுச்செல்கிறாரோ,அவருக்கு நானே பொறுப்பாளன் ஆவேன். உங்களில் யார் ஒரு செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ, அது அவருடைய நெருங்கிய ஆண் உறவினருக்கு உரியதாகும்; அவர் யாராக இருப்பினும் சரியே!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 23
3311. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த நபிமொழிகளாகும். அவற்றில் பின்வரும் நபிமொழியும் ஒன்றாகும்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தில், நானே இறை நம்பிக்கையாளர்களுக்கு அனைத்து மக்களையும்விட நெருக்கமான (உரிமையுடைய)வன் ஆவேன் (எனக் குறிப்பிடப்பட்டுள்ளது). ஆகவே, உங்களில் யார் கடனையோ திக்கற்ற மனைவி மக்களையோ விட்டுச்செல்கிறாரோ, (அவருக்காக ஆட்சித் தலைவராகிய) என்னை அழையுங்கள். நானே அவருடைய பொறுப்பாளன் ஆவேன். உங்களில் யார் செல்வத்தை விட்டுச்செல்கிறாரோ,அவருடைய நெருங்கிய ஆண் உறவினருக்கே அவரது சொத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்; அவர் யாராக இருப்பினும் சரியே!
அத்தியாயம் : 23
3312. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்துவிட்ட) ஒருவர் ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால், அது அவருடைய வாரிசுகளுக் குரியதாகும். ஒருவர் (திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்சென்றால், அவர்களைப் பராமரிப்பது (ஆட்சித் தலைவரான) எமது பொறுப்பாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (முஹம்மத் பின் ஜஅஃபர்) ஃகுன்தர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருவர் திக்கற்ற மனைவி மக்களை விட்டுச்சென்றால், அவருக்கு நானே பொறுப்பேற்றுக் கொண்டேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 23

பாடம் : 1 ஒருவர் தானமாகக் கொடுத்ததைத் தானம் பெற்றவரிடமிருந்து அவரே விலைக்கு வாங்குவது விரும்பத்தகாத செயலாகும்.
3313. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் (பயணம் மேற்கொள்வதற்காக) உயர்ரகக் குதிரையொன்றில் (அவருக்கே அதைத் தானமாகக் கொடுத்து) அனுப்பிவைத்தேன். அந்தக் குதிரைக்காரர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். அவர் அதை மலிவான விலைக்கு (கேட்டால்கூட) விற்றுவிடுவார் என்று நான் எண்ணினேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை விலைக்கு வாங்காதீர். உமது தானத்தைத் திரும்பப்பெறாதீர். தனது தானத்தைத் திரும்பப் பெறுபவன் நாய்க்கு நிகரானவன் ஆவான். தான் எடுத்த வாந்தியைத் தானே தின்கிறது நாய்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அதை அவர் உமக்கு ஒரு வெள்ளிக் காசுக்குக் கொடுத்தாலும் சரி, அதை விலைக்கு வாங்காதீர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 24
3314. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (பயணம் மேற்கொள்வதற்காக ஒருவரை) குதிரையொன்றில் ஏற்றி (அதை அவருக்குத் தானமாகக் கொடுத்து) அனுப்பினார்கள். அந்தக் குதிரை அந்த மனிதரிடம் (சரியாகப் பராமரிக்கப்படாததால்) பாழாகி விட்டிருப்பதைக் கண்டார்கள். அவர் வசதி குறைந்த (ஏழை) மனிதராக இருந்தார். ஆகவே, அவரிடமிருந்து அதைத் தாமே விலைக்கு வாங்கிக்கொள்ள உமர் (ரலி) அவர்கள் விரும்பினார்கள். எனவே,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அது குறித்துக் கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை விலைக்கு வாங்காதீர். அதை ஒரு வெள்ளிக் காசுக்கு அவர் உமக்குத் தந்தாலும் சரியே! தனது தானத்தைத் திரும்பப் பெற்றவனின் நிலை, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. நாய்தான், தான் எடுத்த வாந்தியைத் தானே தின்கிறது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், மேற்கண்ட ஹதீஸ்களே முழுமையானவையும் மிகுதியானவையும் ஆகும்.
அத்தியாயம் : 24
3315. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (ஒருவரை) அல்லாஹ்வின் பாதையில் (பயணிக்க) குதிரையொன்றில் ஏற்றி (அதை அவருக்குத் தானமாகத் தந்து) அனுப்பினார்கள். பிறகு அந்தக் குதிரை விற்கப்படுவதைக் கண்டு, அதைத் தாமே வாங்கிக்கொள்ள விரும்பினார்கள். ஆகவே, இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை விலைக்கு வாங்காதீர். உமது தானத்தைத் திரும்பப்பெறாதீர்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3316. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் (ஒருவரை) அல்லாஹ்வின் பாதையில் (பயணிக்க) ஒரு குதிரையின் மீதேற்றி (அதை அவருக்குத் தானமாக வழங்கி) அனுப்பி வைத்தார்கள். பின்னர் அந்தக் குதிரை விற்கப்படுவதைக் கண்டார்கள். அதைத் தாமே விலைக்கு வாங்கிக்கொள்ள விரும்பினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமரே, உமது தானத்தைத் திரும்பப்பெறாதீர்"என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
பாடம் : 2 கொடுத்த தானத்தையும் அன்பளிப்பையும் அது (உரியவரின்) கைக்குப் போய்ச் சேர்ந்த பின் திரும்பப்பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவர் தம் மகன், மகனின் மகன் ஆகியோருக்கு அன்பளிப்பாக வழங்கியதைத் தவிர!
3317. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் தான் எடுத்த வாந்தியை நோக்கிச் சென்று அதைத் தின்கிறது நாய்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் முஹம்மத் பின் அலீ பின் ஹுசைன் பின் அலீ (ரஹ்) அவர்களின் பெயர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்களின் புதல்வர் (அதாவது கொள்ளுப்பேரர்) முஹம்மத் (பாகிர்)" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 24
3318. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செய்துவிட்டுப் பின்னர் தனது தர்மத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் எடுத்த வாந்தியைத் தின்கிறது நாய்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3319. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவன், தான் எடுத்த வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3320. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவன் நாயைப் போன்றவன் ஆவான். வாந்தியெடுத்த பிறகு எடுத்த வாந்தியைத் தின்கிறது நாய்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
பாடம் : 3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது விரும்பத்தகாத செயலாகும்.
3321. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் சிறுவனாக இருந்தபோது) என்னை என் தந்தை (பஷீர் பின் சஅத் - ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "நான் என்னுடைய இந்த மகனுக்கு என்னிடமிருந்த ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கியுள்ளேன்" என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைப் போன்றே அன்பளிப்பு வழங்கியுள்ளீரா?" என்று கேட்டார்கள். என் தந்தை "இல்லை" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், அதை (உங்கள் அன்பளிப்பை)த் திரும்பப் பெற்றுக்கொள்க" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3322. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் சிறுவனாக இருந்தபோது) என்னை என் தந்தை (பஷீர் பின் சஅத் - ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "நான் என்னுடைய இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கியுள்ளேன்" என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் மகன்கள் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கினீர்களா?" என்று கேட்டார்கள். என் தந்தை "இல்லை" என்று பதிலளித்தார்கள். "அப்படியானால், அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
3323. மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், யூனுஸ் மற்றும் மஅமர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "உங்கள் மகன்கள் அனைவருக்கும்" என்று இடம்பெற்றுள்ளது. லைஸ் மற்றும் இப்னு உயைனா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும்" என இடம்பெற்றுள்ளது.
முஹம்மத் பின் நுஅமான் (ரஹ்) மற்றும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) ஆகியோரிடமிருந்து லைஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் "பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள் (தம் புதல்வர்) நுஅமான் (ரலி) அவர்களுடன் வந்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 24
3324. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (பஷீர் பின் சஅத் - ரலி)) அவர்கள் (சிறுவனாக இருந்த) எனக்கு ஓர் அடிமையை (அன்பளிப்பாக) வழங்கியிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், "இது என்ன அடிமை?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "என் தந்தை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், (என் தந்தையிடம்) "இவருடைய சகோதரர்கள் அனைவருக்கும் இவருக்கு வழங்கியதைப் போன்று வழங்கினீரா?" என்று கேட்டார்கள். என் தந்தை "இல்லை" என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் "அவ்வாறாயின், அந்த அடிமையைத் திரும்பப் பெற்றுக்கொள்வீராக!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 24