பாடம் : 1 பிறப்பால் ஏற்பட்ட (இரத்த) உறவால் மணமுடிக்கத் தடை விதிக்கப்பட்டவர்கள், பால்குடி உறவாலும் தடை விதிக்கப்படுவர்.
2853. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். அப்போது நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டில் (யாரோ) ஒரு மனிதர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைக் கேட்டேன். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ உங்கள் (துணைவியார் ஹஃப்ஸாவின்) வீட்டுக்குள் செல்ல ஒருவர் அனுமதி கேட்கிறார்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் இன்ன மனிதர் என நான் கருதுகிறேன்" என்று ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துச் சொன்னார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! இன்ன மனிதர் உயிருடன் இருந்தால் அவர் என்னைத் திரையின்றி சந்தித்திருக்க முடியும்தானே!" என்று என்னுடைய பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம் (முடியும்); பிறப்பு எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால்குடியும் நெருங்கிய உறவுகளாக்கி விடும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 17
2854. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "பிறப்பால் ஏற்பட்ட (இரத்த) உறவால் மணமுடிக்கக்கூடாதவர்களை, பால்குடி உறவாலும் மணமுடிக்கக்கூடாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 2 பால்குடித் தந்தையின் (இரத்த) உறவினரும் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினர்தாம்.
2855. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபுல்குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார். பர்தா (ஹிஜாப்) சட்டம் அருளப்பட்ட பின் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது நான் அவருக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் நான் செய்தது குறித்து அவர்களிடம் தெரிவித்தேன். நான் அவருக்கு அனுமதியளிக்க வேண்டும் என அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 17
2856. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூகுஐஸின் புதல்வர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார்"என்று இடம்பெற்றுள்ளது. மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), "(அவருடைய) மனைவிதான் எனக்குப் பாலூட்டினார்; அவர் எனக்குப் பாலூட்டவில்லை. (எனவே அஃப்லஹ் அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன்)" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் இரு கைகளும் அல்லது உனது வலக்கை மண்ணைக் கவ்வட்டும்" என்று கூறினார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 17
2857. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபுல்குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் வந்து, என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். -அபுல்குஐஸ் ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தை ஆவார்.- பர்தா (ஹிஜாப்) சட்டம் அருளப்பட்ட பின் இச்சம்பவம் நடைபெற்றது. அப்போது நான், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்காமல் அஃப்லஹ் (ரலி) அவர்களுக்கு அனுமதியளிக்கமாட்டேன். ஏனெனில், அபுல்குஐஸ் எனக்குப் பாலூட்டவில்லை; அவருடைய துணைவிதான் எனக்குப் பாலூட்டினார்" என்று கூறினேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் நான் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! (என் பால்குடித் தந்தை) அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். உங்களிடம் அனுமதி கேட்காமல் அவருக்கு அனுமதியளிக்க எனக்கு விருப்பமில்லை. (எனவே, அவருக்கு நான் அனுமதியளிக்க வில்லை)" என்று தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு அனுமதியளி" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதன் அடிப்படையில்தான் ஆயிஷா (ரலி) அவர்கள், "இரத்த உறவால் எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவுகளாக நீங்கள் ஆக்குவீர்களோ அந்த உறவுகளைப் பால்குடி உறவின் மூலமும் நெருங்கிய உறவுகளாக ஆக்கிவிடுங்கள்" என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 17
2858. மேற்கண்ட ஹதீஸ் (2857) மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உனது வலக்கை மண்ணைக் கவ்வட்டும். அவர் (அஃப்லஹ்) உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், "அபுல்குஐஸ் ஆயிஷா (ரலி) அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாயின் கணவர் ஆவார்" என்றும் காணப்படுகிறது.
அத்தியாயம் : 17
2859. 2859 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் பால்குடித் தந்தையின் சகோதரர் (அஃப்லஹ் (ரலி) அவர்கள்) வந்து, என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்து ஆலோசனை கேட்காமல் அவருக்கு அனுமதியளிக்க முடியாது" என்று மறுத்துவிட்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் நான், "என் பால்குடித் தந்தையின் சகோதரர் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். நான் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டேன்" என்று தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் உன் வீட்டிற்குள் வரட்டும்" என்று கூறினார்கள். அப்போது நான், "(அவருடைய) மனைவி தான் எனக்குப் பாலூட்டினார்; அவர் எனக்குப் பாலூட்டவில்லையே?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்) என்னிடம், "அவர் உன்னுடைய (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார். எனவே, அவர் உன் வீட்டிற்குள் வரட்டும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அபுல்குஐஸின் சகோதரர் ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தை) அபுல்குஐஸ் (ரலி) அவர்களே ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுமதிகேட்டார் என வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2860. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், "என் பால்குடித் தந்தையின் சகோதரர் அபுல்ஜஅத் (ரலி) அவர்கள் வந்து என் வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டார். நான் அதை மறுத்துவிட்டேன். பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்ததும் இது குறித்து அவர்களிடம் தெரிவித்தேன்" என்று கூறினார்கள்.
- ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் "அபுல்குஐஸ்தான் அவர் (அதாவது ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தையின் சகோதரர்) ஆவார்" என்று கூறினார்கள்.-
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உனது வலக் கை, அல்லது உனது கை மண்ணைக் கவ்வட்டும்! நீ அவருக்கு அனுமதியளித்திருக்க வேண்டாமா?" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2861. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், "என் பால்குடித் தந்தையின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் என் வீட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி கேட்டார். நான் அவருக்கு (அனுமதி அளிக்காமல்) திரையிட்டுக் கொண்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைத் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "நீ அவரிடம் திரையிட்டு (மறைத்து)க்கொள்ள வேண்டாம். ஏனெனில், இரத்த உறவால் எந்த உறவுகளெல்லாம் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவுகளாக ஆகுமோ, அந்த உறவுகளெல்லாம் பால்குடி உறவாலும் நெருங்கிய உறவுகளாகிவிடும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2862. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் பால்குடித் தந்தையின் சகோதரர்) அஃப்லஹ் பின் குஐஸ் (ரலி) அவர்கள் என்னிடம் எனது வீட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். பின்னர் அவர் (ஒருவரை என்னிடம்) அனுப்பி, "என் சகோதரரின் மனைவி உங்களுக்குப் பாலூட்டியிருக்கிறார்; நான் உங்களுக்குப் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவேன் (எனவே நீங்கள் எனக்கு அனுமதியளியுங்கள்)" என்று கூறினார். அப்போதும் அவருக்கு நான் அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் இதைத் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அவர் உன் வீட்டிற்குள் வரட்டும்; ஏனெனில், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 17
பாடம் : 3 பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
2863. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நம் (பனூ ஹாஷிம் குடும்பத்துப் பெண்கள் தம்)மை விட்டுவிட்டு, குறைஷியரில் (வேறு பெண்களை மணப்பதில்) நீங்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உங்களிடம் (நம் குடும்பத்துப் பெண்) யாரும் இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அப்போது நான், "ஆம்! (என் பெரிய தந்தை) ஹம்ஸா (ரலி) அவர்களின் புதல்வி இருக்கிறார்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர் எனக்கு (திருமணம் செய்ய) அனுமதிக்கப்பட்டவர் அல்லர். ஏனெனில், அவர் என்னுடைய பால்குடிச் சகோதரரின் புதல்வி ஆவார்"என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2864. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹம்ஸா (ரலி) அவர்களின் புதல்வியை மணமுடித்துக்கொள்ளும்படி நபி (ஸல்) அவர்களிடம் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவர் எனக்கு (திருமணம் செய்ய) அனுமதிக்கப்பட்டவர் அல்லர். ஏனெனில், அவர் என் பால்குடிச் சகோதரரின் மகளாவார். மேலும், இரத்த உறவால் எந்த உறவுகளெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக ஆகுமோ, அந்த உறவுகளெல்லாம் பால்குடி உறவாலும் நெருங்கிய உறவுகளாக ஆகிவிடும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 17
2865. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர் என் பால்குடிச் சகோதரரின் புதல்வியாவார்" என்பதுடன் ஹதீஸ் முடிவடைகிறது. சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இரத்த உறவு" என்பதைக் குறிக்க "ரஹிம்" எனும் சொல்லுக்குப் பதிலாக "நசப்" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 17
2866. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் விஷயத்தில் உங்களது நிலை என்ன?" அல்லது, "ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் மகளை நீங்கள் பெண் கேட்கக் கூடாதா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஹம்ஸா என் பால்குடிச் சகோதரர் ஆவார். (எனவே, நான் அவருடைய மகளை மணப்பது எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 4 மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்கு வந்துள்ள தடை.
2867. (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) அபூசுஃப்யானின் புதல்வி உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தபோது, நான் அவர்களிடம், "என் சகோதரியான அபூசுஃப்யானின் புதல்வி விஷயத்தில் தங்களுக்கு நாட்டம் உண்டா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள். நான் "அவளை நீங்கள் மணந்துகொள்ள வேண்டும்" என்றேன். அவர்கள், "இதை நீயே விரும்புகிறாயா?" என்று கேட்டார்கள். நான், "(ஆம்! மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்)பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்" என்று சொன்னேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப் பட்டதன்று" என்றார்கள். (சகோதரிகளை ஒரே நேரத்தில் மணப்பது கூடாது என்பதே காரணம்.)நான், "தாங்கள் அபூசலமாவின் மகள் "துர்ரா"வைப் பெண் கேட்பதாகக் கேள்விப் பட்டேனே!"என்று கூறினேன். அதற்கு அவர்கள், "(அதாவது என் துணைவியார்) உம்மு சலமாவுக்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?" என்று கேட்க, நான் "ஆம்" என்றேன். அவர்கள், "அவள் (உம்மு சலமாவின் மகள்) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடிச் சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் அவளுடைய தந்தை (அபூசலமாவு)க்கும் "ஸுவைபா" (எனும் அடிமைப் பெண்) பாலூட்டியிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்து கொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்படியே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2868. நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! (அபூசுஃப்யானின் புதல்வியான) என் சகோதரி "அஸ்ஸா"வைத் தாங்கள் மணந்து கொள்ளுங்கள்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீயே விரும்புகிறாயா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! ஆம். (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்" என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(சகோதரிகளை ஒரே நேரத்தில் மணமுடிப்பது கூடாது என்பதால்) அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அபூசலமாவின் மகள் "துர்ரா"வை மணந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோமே!" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "(அதாவது என் துணைவியார் உம்மு சலமாவின் முந்தைய கணவர்) அபூசலமாவின் மகளையா?" என்று கேட்க, நான் "ஆம்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் (அபூ சலமாவின் மகள்) எனது மடியில் வளர்ப்பு மகளாக (இருந்துவருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடிச் சகோதரரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூசலமாவிற்கும் "ஸுவைபா" (எனும் அடிமைப் பெண்) பாலூட்டியிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் (உம்மு ஹபீபா (ரலி) அவர்களுடைய சகோதரியின் பெயர்) "அஸ்ஸா" என்ற குறிப்பு காணப்படவில்லை. யஸீத் பின் அபீஹபீப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே அது இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 17
பாடம் : 5 (ஒரு குழந்தை செவிலித் தாயிடம்) ஓரிரு முறை பால் உறிஞ்சிக் குடிப்பது தொடர்பான சட்டம்.
2869. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஒரு குழந்தை செவிலித்தாயிடம்) ஒரு தடவையோ, இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (அவ்விருவருக்கு மிடையே) பால்குடி உறவு ஏற்பட்டுவிடாது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2870. (நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் துணைவியாரான) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்தபோது, ஒரு கிராமவாசி வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம்,அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருக்கும் நிலையில் நான் மற்றொரு பெண்ணை மணந்துகொண்டேன். என்னுடைய முதல் மனைவி, "நான் உம்முடைய புதிய மனைவிக்கு ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ பாலூட்டியிருக்கிறேன். (எனவே, இந்தத் திருமணம் செல்லாது) என்று கூறுகிறார்" எனத் தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் (உறிஞ்சிக் குடிக்கும் வகையில்) பாலூட்டுவதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்பட்டுவிடாது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2871. (நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் துணைவியாரான) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ஆமிர் பின் ஸஃஸஆ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு தடவை மட்டும் உறிஞ்சிப் பால் குடிப்பதால் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவு ஏற்படுமா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இல்லை" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 17
2872. (நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் துணைவியாரான) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் குடிப்பதால் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது. அல்லது ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் உறிஞ்சிப் பால் குடிப்பதால் (மண முடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 17