2833. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் அல்லாஹ்விடம் மாபெரும் நம்பிக்கை(த் துரோகம்) யாதெனில், கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுவிட்டுப் பின்னர் அவளது இரகசியத்தை அவன் (மக்களிடையே) பரப்புவதேயாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 22 புணர்ச்சி இடைமுறிப்பின் ("அஸ்ல்") சட்டம்.
2834. அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அபூஸிர்மா (ரஹ்) அவர்களும் (பள்ளிவாசலில் அமர்ந்திருந்த) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அபூஸிர்மா அவர்கள், "அபூசயீத் அவர்களே! "அஸ்ல்" பற்றித் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைச் செவியுற்றுள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், "ஆம்" என்று கூறிவிட்டு(ப் பின்வருமாறு) அறிவித்தார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பனூ முஸ்தலிக் ("முரைசீஉ") போரில் கலந்து கொண்டோம். அப்போது,உயர்ந்த அரபு இனப் பெண்களைப் போர்க்கைதிகளாகப் பிடித்தோம். நீண்ட காலம் நாங்கள் திருமணம் செய்துகொள்ளாதவர்களாக (இருந்ததால், தாம்பத்திய உறவில் நாட்டம் கொண்டவர்களாக) இருந்தோம். அதே நேரத்தில், (போர்க் கைதிகளை விடுதலை செய்து) நஷ்டஈடு பெறுவதற்கு ஆசையும்பட்டோம், ஆகவே, (போர்க் கைதிகளான பெண்களிடம்) தாம்பத்திய சுகம் அடையவும், (அதே சமயம் அவர்கள் கருவுற்றுவிடக் கூடாது என்பதற்காக) "அஸ்ல்" செய்து கொள்ளவும் விரும்பினோம்.
இந்நிலையில் "நம்மிடையே அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க, அவர்களிடம் கேட்காமல் நாம் "அஸ்ல்"செய்வதா?" என்று நாங்கள் பேசிக்கொண்டோம். பின்னர் அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவ்வாறு நீங்கள் (அஸ்ல்) செய்யாமலிருப்பதால் உங்கள் மீது (குற்றம்) இல்லை. படைக்க வேண்டுமென அல்லாஹ் எழுதிவிட்ட எந்த ஓர் உயிரும் மறுமை நாள்வரை உருவாகியே தீரும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2835. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை தான் படைக்கவிருப்பவற்றை எழுதி (முடித்து)விட்டான்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2836. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில போர்க் கைதிகளைப் பெற்றோம். (எங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்ளவும்) "அஸ்ல்" செய்து கொள்ளவும் விரும்பினோம். அது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போது அவர்கள், "நீங்கள் (அஸ்ல்) செய்துகொண்டுதான் இருக்கிறீர்களா? நீங்கள் (அஸ்ல்) செய்துகொண்டு தான் இருக்கிறீர்களா? நீங்கள் (அஸ்ல்) செய்துகொண்டு தான் இருக்கிறீர்களா?" என்று கேட்டுவிட்டு, "மறுமை நாள்வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 16
2837. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அதை (அஸ்லை)ச் செய்யாமலிருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. ஏனெனில், அதுவெல்லாம் (அதாவது கருத்தரிப்பதும் கருத்தரிக்காமல் இருப்பதும்) விதி யாகும்" என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) மஅபத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம், "இதை நீங்கள் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 16
2838. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவ்வாறு நீங்கள் (அஸ்ல்) செய்யாமலிருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. ஏனெனில், அதுவெல்லாம் விதியாகும்" என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
பஹ்ஸ் பின் அசத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஷுஅபா (ரஹ்) அவர்கள் "நான் அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் "நீங்கள் இதை அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2839. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் "அஸ்ல்" (புணர்ச்சி இடைமுறிப்பு) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அவ்வாறு (அஸ்ல்) செய்யாமலிருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. அதுவெல்லாம் விதியாகும்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் "உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை" என்பது, தடையுத்தரவுக்கு நெருக்கமான சொல்லாட்சி என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 16
2840. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அருகில் "அஸ்ல்" (புணர்ச்சி இடைமுறிப்பு) பற்றிப் பேசப்பட்டது. அப்போது அவர்கள், "என்ன அது?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "பாலூட்டும் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும் ஒருவர், அதனால் அவள் கருவுற்று விடுவதை விரும்பாமல் இருக்கலாம். (அவ்வாறே) தம் அடிமைப்பெண்ணோடு உறவு கொள்ள விரும்பும் ஒருவர்,அதனால் அவள் கருவுற்றுவிடுவதை விரும்பாமல் இருக்கலாம். (அப்போது "அஸ்ல்" செய்துகொள்வார்)" என்று விடையளித்தனர். நபி (ஸல்) அவர்கள், "அவ்வாறு செய்யாமலிருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. அதுவெல்லாம் விதியாகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் ஹசன் பின் அபில் ஹசன் யசார் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது ஒரு கண்டனத்தைப் போன்றுள்ளது" என்று கூறினார்கள்.
- அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்து அப்துர் ரஹ்மான் பின் பிஷ்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மஅபத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள், "நாங்கள் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் "அஸ்ல் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் எதையேனும் நீங்கள் செவியுற்றுள்ளீர்களா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று "அதுவெல்லாம் விதியாகும்" என்பதுவரை அறிவித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2841. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) குறித்துப் பேசப்பட்டது. அப்போது அவர்கள், "அதை உங்களில் ஒருவர் ஏன் செய்கிறார்?" என்று கேட்டுவிட்டு, -(கவனிக்கவும்: "உங்களில் எவரும் அவ்வாறு செய்ய வேண்டாம்"என்று அவர்கள் குறிப்பிடவில்லை)- "படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2842. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) செய்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "விந்தின் அனைத்து (உயிரணு)க் கூறுகளிலிருந்தும் குழந்தை உருவாவதில்லை. (ஒரே உயிரணு போதும்.) அல்லாஹ் ஒன்றைப் படைக்க நாடிவிட்டால் அவனை எதுவும் தடுக்க முடியாது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2843. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கிறாள். அவளே எங்களுக்குப் பணிவிடை செய்பவளாகவும் தண்ணீர் சுமப்பவளாகவும் உள்ளாள். அவளிடம் நான் சென்றுவருகிறேன். (அதே சமயம்) அவள் கருவுற்றுவிடுவதை நான் விரும்பவில்லை" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ விரும்பினால் "புணர்ச்சி இடை முறிப்பு" (அஸ்ல்) செய்துகொள். ஆயினும், அவளுக்கு விதிக்கப்பட்டுள்ளது அவளிடம் நிச்சயம் வந்துசேரும்"என்றார்கள். அம்மனிதர் சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அந்த அடிமைப் பெண் கருவுற்றுவிட்டாள்" என்று கூறினார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவளுக்கு விதிக்கப்பட்டது நிச்சயம் அவளிடம் வந்துசேரும் என உம்மிடம் நான் ஏற்கெனவே கூறிவிட்டேனே!" என்றார்கள்.
அத்தியாயம் : 16
2844. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கிறாள். நான் அவளிடம் "புணர்ச்சி இடைமுறிப்பு"ச் செய்துவருகிறேன்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அ(வ்வாறு அஸ்ல் செய்வ)து அல்லாஹ் நாடியுள்ள எதையும் தடுத்து விடப்போவதில்லை" என்றார்கள். அந்த மனிதர் (சில நாட்களுக்குப் பின்) வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களிடம் குறிப்பிட்ட அந்த அடிமைப் பெண் கருவுற்று விட்டாள்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனுடைய தூதரும் ஆவேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 16
2845. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குர்ஆன் அருளப்பெறும் காலத்தில் நாங்கள் "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) செய்து கொண்டிருந்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அது தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருந்தால் அவ்வாறு செய்யக் கூடாதெனக் குர்ஆனே நமக்குத் தடை விதித்திருக்கும்" என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2846. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) செய்துகொண்டிருந்தோம்.
அத்தியாயம் : 16
2847. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் "புணர்ச்சி இடை முறிப்பு"ச் செய்துகொண்டிருந்தோம். இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தகவல் எட்டியபோது, அவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்கு அவர்கள் தடை விதிக்கவில்லை.
அத்தியாயம் : 16
பாடம் : 23 கருவுற்றிருக்கும் பெண்போர்க் கைதியைப் புணருவது தடை செய்யப்பட்டுள்ளது.
2848. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கூடாரத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்த, மகப்பேறு காலத்தை நெருங்கிய ஒரு (கைதிப்) பெண்ணைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவ(ளைச் சிறைப்பிடித்தவ)ர் அவளுடன் உறவுகொள்ள விரும்புகிறார் போலும்!" என்றார்கள். அதற்கு மக்கள் "ஆம்" என்ற(ஆமோதித்த)னர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நான் அவரைக் கடுமையாகச் சபிக்க விரும்பினேன். அ(ந்தச் சாபமான)து, அவருடன் அவரது சவக்குழிக்குள்ளும் நுழையும். அவர் தமக்கு அனுமதிக்கப்படாத ஒருவனை எவ்வாறு தம் வாரிசாக ஆக்கிக்கொள்ள முடியும்? அவர் தமக்கு அனுமதிக்கப்படாத ஒருவனைத் தம்முடைய ஊழியனாக எவ்வாறு பயன்படுத்த முடியும்?" என்று கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபுத்தர்தா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
பாடம் : 24 பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் தாம்பத்திய உறவு ("அல்ஃகீலா") கொள்ளலாம்; அப்போது "புணர்ச்சி இடைமுறிப்பு"ச் செய்வது வெறுக்கத் தக்கதாகும்.
2849. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ள ("அல்ஃகீலா") வேண்டாமென நான் தடை விதிக்க விரும்பினேன். ரோமர்களும் பாரசீகர்களும் அவ்வாறு செய்தும், அவர்களுடைய குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமலிருப்பதை நான் நினைவுகூர்ந்தேன் (எனவே, தடை விதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்).
இதை ஜுதாமா பின்த் வஹ்ப் அல் அசதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இவரது பெயர் ஜுஃதாமா என்று அறிவிப்பாளர் கலஃப் (ரஹ்) கூறுகிறார். ஆனால், யஹ்யா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளபடி "ஜுதாமா" ("ஃதால்" ஙு அல்ல; "தால்"கு) என்பதே சரி.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 16
2850. உக்காஷா (ரலி) அவர்களின் சகோதரி ஜுதாமா பின்த் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மக்களில் சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவைக்குச் சென்றேன். அப்போது அவர்கள், "பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள ("அல்ஃகீலா") வேண்டாமென நான் தடை விதிக்க விரும்பினேன். பிறகு ரோமர்களும் பாரசீகர்களும் தம் குழந்தைகள் பால் அருந்திக்கொண்டிருக்கும்போதே, அவர்கள் தம் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொண்டும் அதனால் அவர்களுடைய குழந்தைகளுக்கு எந்தப்பாதிப்பும் நேராமலிருப்பது குறித்து நான் யோசித்தேன். (எனவே, தடை விதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன்)" என்று கூறிக்கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்களிடம் "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) செய்வதைப் பற்றி வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது மறைமுகமான சிசுக்கொலை யாகும்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரீ (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிக்கும் அறிவிப்பில், "என்ன பாவத்திற்காகக் கொல்லப்பட்டாள் என உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது" எனும் (81:8,9 ஆவது) வசனத்தில் கூறப்பட்டுள்ள சிசுக் கொலைக்கு "அஸ்ல்" ஒத்திருக்கிறது என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16
2851. மேற்கண்ட ஹதீஸ் ஜுதாமா பின்த் வஹ்ப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்வது" என்பதைக் குறிக்க "ஃகீலா"என்பதற்குப் பகரமாக) "ஃகியால்" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 16
2852. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் என் மனைவியுடன் (உறவு கொள்ளும்போது) "புணர்ச்சி இடைமுறிப்பு" (அஸ்ல்) செய்கிறேன்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஏன் (அவ்வாறு) செய்கிறாய்?"என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், "அவளது குழந்தையின் மீது" அல்லது "அவளுடைய குழந்தைகள் மீது"பரிவுகாட்டு(வதற்காகவே அவ்வாறு செய்)கிறேன் என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அ(வ்வாறு பாலூட்டும் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்வ)து குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாயிருந்தால், பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமே!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இக்காரணத்திற்காகவே நீ அவ்வாறு செய்கிறாய் எனில்,அவ்வாறு செய்யலாகாது. அது பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையே!" என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 16