998. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதோம். அப்போது அவர்கள் ஒன்று (ரக்அத்தைக்) கூட்டிவிட்டார்கள்; அல்லது குறைத்துவிட்டார்கள்.
)இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! இது (கூட்டினார்களா அல்லது குறைத்தார்களா என்ற ஐயப்பாடு) எனது தரப்பிலிருந்து ஏற்பட்டதேயாகும்.-
உடனே நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதேனும் வந்துவிட்டதா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "இல்லை" என்றார்கள். உடனே அவர்களிடம் அவர்கள் செய்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், "ஒருவர் (தமது தொழுகையில்) கூட்டிவிட்டாலோ அல்லது குறைத்துவிட்டாலோ அவர் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்" என்று சொல்லிவிட்டுப் பிறகு (தாம் மறந்துவிட்டதற்காக) இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.
அத்தியாயம் : 5
999. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மதியத் தொழுகைகளில் ஒன்றை (லுஹர் அல்லது அஸ்ர் தொழுகையைத்) தொழுவிக்கும்போது இரண்டு ரக்அத் முடிந்த உடனே சலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு பள்ளிவாசலின் கிப்லாத் திசையிலிருந்த ஒரு பேரீச்சம் கட்டைக்கு வந்து அதன்மீது சாய்ந்து கொண்டார்கள். அப்போது ஏதோ கோபத்தில் இருந்தார்கள். மக்களிடையேயிருந்த அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் நபியவர்களிடம் பேச்சுக்கொடுக்க அஞ்சினர். மக்களில் தொழுதுவிட்டு விரைந்து செல்பவர்கள் "தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது" என்று புறப்பட்டுச் சென்றும்விட்டனர்.
இந்நிலையில் "துல்யதைன்" (கிர்பாக் பின் அம்ர்-ரலி) என்பவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?" என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் வலப் பக்கமும் இடப் பக்கமும் (திரும்பிப்) பார்த்தார்கள். பிறகு "துல்யதைன் என்ன சொல்கிறார்?"" என்று கேட்டார்கள். மக்கள் "(ஆம்) அவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்"" என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் மேலும் இரு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் சொல்லி ஒரு சஜ்தாச் செய்துவிட்டு மற்றொரு தக்பீர் சொல்லி எழுந்(து அமர்ந்)தார்கள். பிறகு இன்னொரு தக்பீர் சொல்லி மற்றொரு சஜ்தாச் செய்தார்கள். பிறகு தக்பீர் சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களது அறிவிப்பில் "(இறுதியில்) சலாம் கொடுத்தார்கள்"" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1000. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதியத் தொழுகைகளில் ஒன்றை எங்களுக்குத் தொழுவித்தார்கள்" என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1001. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகையைத் தொழுவித்த போது இரண்டு ரக்அத் முடிந்ததும் சலாம் கொடுத்து விட்டார்கள். உடனே துல்யதைன் (கிர்பாக் பின் அம்ர்-ரலி) என்பார் எழுந்து, "தொழுகை(யின் ரக்அத் ஏதேனும்) குறைக்கப்பட்டு விட்டதா, அல்லாஹ்வின் தூதரே! அல்லது தாங்கள்தாம் மறந்துவிட்டீர்களா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவற்றில் எதுவுமே நடக்க வில்லை" என்று கூறினார்கள். துல்யதைன், "(இல்லை) இதில் ஏதோ ஒன்று நிகழவே செய்தது, அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி "துல்யதைன் சொல்வது உண்மைதானா?" என்று கேட்டார்கள். அப்போது மக்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எஞ்சிய ரக்அத்களையும் தொழு(வித்)துவிட்டு அந்த இருப்பிலேயே சலாம் கொடுத்த பின் இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் இரண்டு ரக்அத் முடிந்ததும் சலாம் கொடுத்துவிட்டார்கள். அப்போது பனூசுலைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (துல்யதைன்) வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத்) குறைக்கப்பட்டு விட்டதா, அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?" என்று கேட்டார்.
தொடர்ந்து முந்தைய ஹதீஸின் தொடர்ச்சி அப்படியே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1002. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹர் தொழுகை தொழுது கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது ரக்அத் முடிந்ததும் சலாம் கொடுத்துவிட்டார்கள். உடனே பனூசுலைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (துல்யதைன்) எழுந்தார்.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 5
1003. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையில் மூன்றாவது ரக்அத் முடிந்ததும் சலாம் கொடுத்துவிட்டுத் தமது இல்லத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். உடனே "கிர்பாக்" எனப்படும் கைகள் நீளமான ஒரு மனிதர் (துல்யதைன்) எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே!" என்றழைத்து அவர்கள் செய்ததை நினைவூட்டினார். அப்போது கோபத்தோடு தமது மேல்துண்டை தரையில் இழுத்தபடி வெளியேறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்துசேர்ந்தார்கள். பிறகு "இவர் சொல்வது உண்மைதானா?" என்று கேட்டார்கள். மக்கள் "ஆம்" என்றனர். உடனே அவர்கள் இன்னொரு ரக்அத் தொழுவித்து சலாம் கொடுத்தார்கள். பிறகு (மறதிக்காக) இரு சஜ்தாக்கள் செய்து விட்டுப் பிறகு (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1004. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகை (தொழும்போது) மூன்று ரக்அத் முடிந்ததும் சலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு எழுந்து தமது அறைக்குள் சென்று விட்டார்கள். உடனே நீளமான கைககளை உடைய ஒரு மனிதர் (துல்யதைன்) எழுந்து "தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்தோடு வெளியே வந்தார்கள். விடுபட்ட ரக்அத்தைத் தொழுவித்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள். பிறகு (மறதிக்கான) இரு சஜ்தாக்கள் செய்துவிட்டு, (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 21 (குர்ஆன்) ஓதலுக்கான சஜ்தா.
1005. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; சஜ்தா வசனமுள்ள அத்தியாயத்தை (எங்களுக்கு) ஓதிக்காட்டும் போது அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். உடனே நாங்களும் சிரவணக்கம் செய்வோம். அப்போது (ஏற்படும் இட நெருக்கடியால்) எங்களில் சிலருக்கு நெற்றி வைக்கக்கூட இடம் கிடைக்காது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1006. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில நேரங்களில் குர்ஆன் ஓதி, சஜ்தா வசனத்தைக் கடந்து செல்கையில் எங்களுடன் சேர்ந்து சஜ்தாச் செய்வார்கள். அப்போது இட நெருக்கடி ஏற்பட்டு எங்களில் ஒருவருக்கு சஜ்தாச் செய்யக் கூட இடம் கிடைக்காது. தொழுகை அல்லாத நேரங்களில் இவ்வாறு நடைபெற்றது.
அத்தியாயம் : 5
1007. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "அந்நஜ்ம்" எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதிய பின் சஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த (முஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள் ஆகிய) அனைவரும் சஜ்தாச் செய்தனர். அங்கிருந்த ஒரு வயோதிகன் மட்டும் ஒரு கையளவு கூழாங்கற்களையோ அல்லது மண்ணையோ அள்ளித் தனது நெற்றிவரை கொண்டு சென்றுவிட்டு, "இது எனக்குப் போதும்" என்று (சஜ்தாவைக் கேலி செய்து) சொன்னான். பிறகு அ(க்கிழ)வன் இறைமறுப்பாளனாகவே (பத்ருப் போரில்) கொல்லப்பட்டதை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1008. அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், இமாமைப் பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) கிராஅத் - ஓதுவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் "இமாமைப் பின்பற்றித் தொழுபவருக்கு ஓதல் (கிராஅத்) ஏதும் கிடையாது" என்று கூறினார்கள். மேலும், அவர்கள் கூறும்போது "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "வந்நஜ்மி இதா ஹவா..." (எனத் தொடங்கும் 53ஆவது) அத்தியாத்தை ஓதிக் காட்டினேன். அதற்காக அவர்கள் சஜ்தாச் செய்யவில்லை"என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1009. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொழுகையில்) எங்களுக்கு "இதஸ்ஸமாஉன் ஷக்கத்" எனும் (84ஆவது) அத்தியாயத்தை ஓதி அதில் (சஜ்தா வசனம் (21) வந்ததும்) சஜ்தாச் செய்தார்கள். அவர்கள் தொழுது முடித்துத் திரும்பிய பின் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியபோது சஜ்தாச் செய்தார்கள்" எனத் தெரிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1010. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "இதஸ்மாஉன் ஷக்கத்" (84), "இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க" (96) ஆகிய அத்தியாயங்களில் நபி (ஸல்) அவர்களுடன் சஜ்தாச் செய்தோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1011. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இதஸ்ஸமாஉன் ஷக்கத்..." (எனத் தொடங்கும் 84ஆவது அத்தியாயம்), "இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க..." (எனத் தொடங்கும் 96ஆவது அத்தியாயம்) ஆகியவற்றை ஓதியபோது சஜ்தாச் செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1012. அபூராஃபிஉ நுஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷாத் தொழுகையைத் தொழுதேன். அவர்கள் "இதஸ்ஸமாஉன் ஷக்கத்..." (எனத் தொடங்கும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, (சஜ்தா வசனம் வந்த) உடன் அதில் சஜ்தாச் செய்தார்கள். நான் அவர்களிடம், "இது என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதபோது தொழுகையிலேயே) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய)தற்காகச் சஜ்தாச் செய்திருக்கிறேன். அவர்களை நான் சந்திக்கும்வரை (அதாவது நான் இறக்கும்வரை) அ(தை ஓதிய)தற்காக நான் சஜ்தாச் செய்துகொண்டுதான் இருப்பேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அபுல்காசிம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால்" எனும் வாசகம் இடம்பெற வில்லை.
அத்தியாயம் : 5
1013. அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் "இதஸ்ஸமாஉன் ஷக்கத்..." (எனத் தொடங்கும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, சஜ்தாச் செய்ததை நான் கண்டேன். அப்போது நான் அவர்களிடம், "இ(தை ஓதிய)தற்காக சஜ்தாச் செய்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், என் உற்ற தோழர் இதை ஓதி சஜ்தாச் செய்ததை நான் கண்டேன். அவர்களை நான் சந்திக்கும்வரை (அதாவது நான் இறக்கும்வரை) அ(தை ஓதிய)தற்காக நான் சஜ்தாச் செய்து கொண்டுதான் இருப்பேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
)அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் "நபி (ஸல்) அவர்களையா (உற்ற தோழர் என) அறிவித்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ பின் அபீமைமூனா (ரஹ்) அவர்கள் "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 22 தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்காரும் முறையும், அப்போது தொடைகள் மீது இரு கைகளை வைக்கும் முறையும்.
1014. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்காரும்போது தமது இடது பாதத்தை (வலது) தொடைக்கும் கணைக்காலுக்கும் இடையே (அவற்றுக்குக் கீழே) வைத்து, வலது பாதத்தை விரித்து(ப் படுக்க)வைப்பார்கள். தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும், வலக் கையை வலது தொடையின் மீதும் வைத்துத் தமது (சுட்டு) விரலால் சைகை செய்வார்கள்.
அத்தியாயம் : 5
1015. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது (அத்தஹிய்யாத்) அமர்வில் பிரார்த்திக்க உட்கார்ந்தால் தமது வலக் கையை வலது தொடையின் மீதும், இடக் கையை இடது தொடையின் மீதும் வைத்துச் சுட்டு விரலால் சைகை செய்வார்கள். தமது பெருவிரலி(ன் நுனியி)னை நடு விரலின் (நுனி)மீது வைப்பார்கள். இடது உள்ளங்கையைத் தமது (இடக் கால்) மூட்டின் மீது வைத்து வளையமிட்டுப் பிடித்திருப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1016. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம் கைகளை முழங்கால்கள்மீது வைப்பார்கள். பெருவிரலை ஒட்டியுள்ள வலக் கை(சுட்டு) விரலை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். இடக் கையை இடது கால் மூட்டின் மீது விரித்து வைத்திருப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1017. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் உட்கார்ந்தால் தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும் வலக் கையை வலது கால் மூட்டின் மீதும் வைப்பார்கள். (அரபியர் வழக்கில்) ஐம்பத்து மூன்று என எண்ணுவதைப் போன்று (சிறு விரல், மோதிர விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களையும் உள்ளங்கையுடன் சேர்த்து) சுட்டு விரலால் சைகை செய்வார்கள்.
அத்தியாயம் : 5