1018. அலீ பின் அப்திர் ரஹ்மான் அல்முஆவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (சிறிய வயதில்) தொழுகையில் சிறு கற்களால் விளையாடிக்கொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் (அவ்வாறு செய்யலாகாது என) என்னைத் தடுத்தார்கள். "(தொழுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் போன்று நீயும் செய்!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம்முடைய வலது முன் கையை வலது தொடையின் மீது வைத்துத் தம் (வலக் கை) விரல்கள் அனைத்தையும் மடக்கிக்கொண்டு, பெருவிரலை ஒட்டியுள்ள (சுட்டு)விரலால் சைகை செய்வார்கள். இடது முன் கையை இடது தொடையில் வைப்பார்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் இப்னு உமர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் தொழுதுகொண்டிருந்தேன்" என்று (அலீ பின் அப்திர் ரஹ்மான் அல்முஆவீ (ரஹ்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 23 )தொழுது முடித்து) தொழுகையிலிருந்து வெளியேறுவதற்காக அதன் இறுதியில் சலாம் சொல்வதும் அதன் முறையும்.
1019. அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்காவின் ஆட்சியாளராக இருந்த ஒருவர் (தொழுகையை முடிக்கும்போது வலம் இடமாக(
இரு முறை சலாம் கூறுவார். (இதைக் கண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "இந்த (வழி)முறையை அவர் எவ்வாறு அறிந்துகொண்டார்!" என்று (வியப்போடு) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஹகம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்வார்கள்" என்று (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1020. அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஓர் ஆட்சியாளர்" அல்லது "ஒரு மனிதர்" (தொழுகையை முடிக்கும்போது வலம் இடமாக) இரு முறை சலாம் கூறுவார். (இதைக் கண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "இந்த (வழி)முறையை அவர் எவ்வாறு அறிந்து கொண்டார்!" என்று (வியந்து) கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1021. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையை முடிக்கும்போது) வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் (முகத்தைத் திருப்பி இருமுறை) சலாம் கூறுவார்கள். (அவ்வாறு திரும்பும்போது) அவர்களுடைய கன்னத்தின் வெண்மையை நான் காண்பேன்.
அத்தியாயம் : 5
பாடம் : 24 தொழுகைக்குப் பின் ("அல்லாஹு அக்பர்" என) திக்ர் செய்தல்.
1022. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை, (மக்கள் "அல்லாஹ் அக்பர்" என்று) தக்பீர் கூறுவதைவைத்து நாங்கள் அறிந்துகொள்வோம்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை எனக்கு அபூமஅபத் (ரஹ்) அவர்கள்தாம் அறிவித்தார்கள். பிறகு (இதை நான் அபூமஅபத் அவர்களிடம் எடுத்துரைத்த போது) அவர்களே அதை (அவ்வாறு தாம் அறிவிக்கவில்லை என) மறுத்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 5
1023. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை, (மக்கள் கூறும்) தக்பீரின் மூலமே நாங்கள் அறிந்துவந்தோம்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் அபூமஅபத் (ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தபோது "இதை நான் உமக்கு அறிவிக்கவில்லை" என்று கூறினார்கள். ஆனால், அவர்கள்தாம் முன்னர் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 5
1024. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் கடமையான (ஃபர்ள்) தொழுகையை முடிக்கும்போது சப்தமாக திக்ருச் செய்யும் நடைமுறை நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது. அவ்வாறு (மக்கள் உரத்த குரலில் திக்ருச்) செய்வதைக் கேட்டால் மக்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 25 )தொழுகையில்) கப்றுடைய வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவது விரும்பத்தக்கதாகும்.
1025. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் யூதப்பெண் ஒருவர் "உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் சவக்குழிகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்படுவீர்கள்" என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்கள். மேலும் "யூதர்கள்தாம் (சவக்குழிகளில்) வேதனை செய்யப்படுவார்கள்" என்றார்கள்.
சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீ அறிவாயா: சவக்குழிகளில் நீங்கள் வேதனை செய்யப்படுவீர்கள் என இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவக்குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1026. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குப் பின் சவக்குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1027. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக்கொண்டிருந்தபோது) "சவக் குழிகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர்" என்று கூறினர். அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்ப மறுத்தேன். அவர்கள் கூறியதை நம்புவதற்கு என் மனம் இடம் தரவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! மதீனா யூத மூதாட்டியரில் இருவர் என்னிடம் வந்து "சவக்குழிகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர்" என்று கூறினர்" என அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் சொன்னது உண்மையே. (சவக் குழிகளிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகின்றனர். அந்த வேதனை(யால் அவர்களிடும் ஓலம்)தனை மிருகங்கள் செவியேற்கின்றன" என்று கூறினார்கள். அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையிலும் சவக்குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1028. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குப் பிறகு தாம் தொழுத எந்தத் தொழுகையிலும் சவக்குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 26 தொழுகையில் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை.
1029. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றிருக்கிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1030. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (தொழுகையில்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும்போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபி ஜஹன்னம, வ மின் அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, வ மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.
)பொருள்: இறைவா, உன்னிடம் நான் நரகத்தின் வேதனையிலிருந்தும், சவக்குழியின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும், (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.(
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1031. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் "அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்றி, வ அஊது பிக மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வ அஊது பிக மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் மஃஸமி வல்மஃக்ரம்" (இறைவா! உன்னிடம் நான் சவக்குழியின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று பிரார்த்திப்பார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "தாங்கள் கடன்படுவதிலிருந்து (இவ்வளவு) அதிகமாகப் பாதுகாப்புக் கோரக் காரணம் என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 5
1032. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (தமது தொழுகையில்) கடைசி அத்தஹிய்யாத் ஓதியதும் நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (அவை:) நரகத்தின் வேதனை, சவக்குழியின் வேதனை, வாழ்வு மற்றும் இறப்பின் சோதனை, (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் தீங்கு ஆகியனவாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உங்களில் ஒருவர் அத்தஹிய்யாத் ஓதியதும்..." எனும் வாசகமே இடம் பெற்றுள்ளது. "கடைசி அத்தஹிய்யாத்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 5
1033. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்றி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, வ ஷர்ரில் மஸீஹித் தஜ்ஜால்" (இறைவா! உன்னிடம் நான் சவக்குழியின் வேதனையிலிருந்தும், (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்பின் சோதனையிலிருந்தும், (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 5
1034. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். சவக்குழியின் வேதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1035. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சவக்குழியின் வேதனையிலிருந்தும் நரகத்தின் வேதனையிலிருந்தும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்.
அத்தியாயம் : 5
1036. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கீழ்க்காணும் பிரார்த்தனையைக் குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று கற்றுத்தருவார்கள். "நீங்கள் "அல்லா ஹும்ம இன்னா நஊது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம, வ அஊது பி(க்)க மின் அதாபில் கப்றி, வ அஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வ அஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்" (இறைவா, உன்னிடம் நாங்கள் நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகின்றோம். சவக்குழியின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகின்றேன். (பெருங்குழப்பவாதி) மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்) என்று பிரார்த்தியுங்கள்" என்று அவர்கள் கூறுவார்கள்.
முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகின்றேன்:
தாவூஸ் (ரஹ்) அவர்கள் தம் புதல்வரிடம், "உனது தொழுகையில் நீ இவ்வாறு பிரார்த்தித்தாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவருடைய புதல்வர் "இல்லை" என்றார். அதற்கு தாவூஸ் (ரஹ்) அவர்கள் "தொழுகையை மீண்டும் தொழுவாயாக!" என்று கூறினார்கள் என எனக்குச் செய்தி எட்டியது. ஏனெனில், இதை தாவூஸ் (ரஹ்) அவர்கள் மூன்று அல்லது நான்கு அறிவிப்பாளர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 27 தொழுகைக்குப் பின் திக்ர் செய்வது விரும்பத்தக்கதாகும் என்பதும் அதன் முறை பற்றிய விவரமும்.
1037. ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மூன்று முறை இறைவனிடம் பாவமன்னிப்பு (இஸ்திஃக்பார்) கோரிவிட்டு, "அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம், வ மின்கஸ் ஸலாம். தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம்" (இறைவா, நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. வலிமையும் மேன்மையும் உடையவனே! நீ சுபிட்சமிக்கவன்) என்று கூறுவார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம், "எவ்வாறு பாவமன்னிப்புக் கோர வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்தஃக் ஃபிருல்லாஹ்; அஸ்தஃக்ஃபிருல்லாஹ் (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்; நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று கூறுவீராக!" என்றார்கள்.
அத்தியாயம் : 5