983. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ஒரு மனிதர் எழுந்து "(காணாமற் போன எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?" என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்" என்று சொன்னார்கள்.
- புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுத பின் ஒரு கிராமவாசி வந்து பள்ளி வாசலின் கதவு வழியே தமது தலையை நீட்டினார்.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 5
பாடம் : 20 தொழுகையில் மறதி ஏற்படுவதும் அதற்கு(ப் பரிகாரமாக) சஜ்தாச் செய்வதும்.
984. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றால் அவரிடம் ஷைத்தான் வந்து, அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இந்நிலை ஏற்பட்டால் (தொழுகையின் இறுதியில்) அமர்வில் அவர் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
985. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கான அறிவிப்புச் செய்யப்பட்டால் அதன் ஒலி தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் வாயு வெளியேறியவனாகத் திரும்பி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்துவிட்டால் அவன் திரும்பிவருகிறான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் மீண்டும் ஓடிவிடுகிறான். இகாமத் சொல்லி முடியும்போது திரும்பிவந்து, (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதரின் உள்ளத்தில் ஊடுருவி "இதை இதையெல்லாம் நினைத்துப்பார்" என்று கூறுகிறான்; அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டுகிறான்; (அதன் விளைவாக) அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை அறியாதவராகிவிடுகிறார். உங்களில் ஒருவருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பது தெரியாவிட்டால் அவர் (தொழுகையின் இறுதியில்) அமர்வில் (மறதிக்குப் பரிகாரமாக) இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
986. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும்போது ஷைத்தான் வாயு வெளியேறியவனாக ஓடுகிறான்.
தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றிருப்பதுடன் "மேலும், அவன் திரும்பிவந்து தொழுகையில் ஈடுபட்டுள்ள மனிதருக்குப் பல்வேறு எண்ணங்களையும் ஆசைகளையும் ஊட்டுகிறான். அவர் இதுவரை நினைத்துப்பார்த்திராத பல அலுவல்களை அவருக்கு அவன் நினைவுபடுத்துகிறான்" என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
987. அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான்கு ரக்அத்கள் கொண்ட) ஒரு தொழுகையில் இரண்டு ரக்அத்கள் தொழுவித்து முடித்த பின் (முதலாம் அத்தஹிய்யாத் இருப்பில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, அவர்களோடு மக்களும் எழுந்துவிட்டனர். தொழுகை முடியும் தறுவாயில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த அமர்விலேயே சலாம் கொடுப்பதற்கு முன் தக்பீர் கூறி (மறதிக்குப் பரிகாரமாக) இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பிறகு சலாம் கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 5
988. பனூ அப்தில் முத்தலிப் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் புஹைனா அல்அசதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் (முதல் அத்தஹிய்யாத் இருப்பில்) உட்கார வேண்டியதிருக்க (உட்காராமல் மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்து விட்டார்கள். பிறகு தொழுகையை முடிக்கும் தறுவாயில் (இறுதி) அமர்வில் சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்தார்கள். ஒவ்வொரு சஜ்தாவின்போதும் தக்பீர் கூறினார்கள். மக்களும் அவர்களோடு இரு சஜ்தாக்கள் செய்தனர். (முதல்) இருப்பை மறந்ததற்குப் பகரமாகத்தான் இவ்வாறு செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
989. அப்துல்லாஹ் பின் புஹைனா அல்அஸ்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் இரண்டு ரக்அத்களை முடித்த பின் அமருவதை விரும்புவார்கள். ஆனால், (ஒரு நாள்) அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்து தொடர்ந்து தொழுதார்கள். தொழுகை முடியும் தறுவாயில் சலாம் கொடுப்பதற்கு முன் (முதல் இருப்பில் அமராததற்குப் பரிகாரமாக இரு) சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 5
990. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்குத் தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுதுவிட்டு சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும். அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுது விட்டிருந்தால் (மறதிக்காகச் செய்த அவ்விரு சஜ்தாக்களால்) அவரது தொழுகையை அந்த (ஐந்து) ரக்அத்கள் இரட்டைப்படை ஆக்கிவிடும். அவர் நான்கு ரக்அத்கள் பூர்த்தி செய்துவிட்டிருந்தால் அவ்விரு சஜ்தாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமையும்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்" என்றே இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
991. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையை வழக்கத்திற்கு மாறாகக்) கூட்டியோ அல்லது குறைத்தோ தொழுவித்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்)தபோது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதும் ஏற்பட்டுவிட்டதா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்ன அது?" என்று கேட்டார்கள். மக்கள் "நீங்கள் இப்படி இப்படித் தொழுவித்தீர்கள் (அதனால்தான் கேட்கிறோம்)" என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில் அமர்வதைப் போன்று) தம் கால்களை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள். பின்னர் எங்களை நோக்கித் திரும்பி, "ஒரு விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் புதிய அறிவிப்பு வருமானால் கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். ஆயினும், நானும் மனிதன்தான்; (சில நேரங்களில்) நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன். அவ்வாறு நான் எதையேனும் மறந்து விட்டால் எனக்கு (அதை) நினைவுபடுத்துங்கள். உங்களில் ஒருவர் தொழுகையில் (எதையேனும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ செய்துவிட்டதாகச்) சந்தேகித்தால் யோசித்து முடிவு செய்து,அதற்கேற்ப தொழுகையைப் பூர்த்தி செய்யட்டும். பிறகு இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
992. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இப்னு பிஷ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவற்றில் சரியானதை முடிவு செய்ய அவர் நன்கு யோசிக்கட்டும்" என்றும், வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "யோசித்து முடிவு செய்யட்டும்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
மன்ஸூர் (ரஹ்) அவர்களது அந்த அறிவிப்பில் "அவற்றில் சரியானதை முடிவு செய்ய அவர் நன்கு யோசிக்கட்டும்"என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் மன்ஸூர் (ரஹ்) அவர்கள், "அவர் யோசித்து முடிவு செய்யட்டும்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் வரும் மன்ஸூர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவற்றில் சரியானதற்கு மிக நெருக்கமானதை யோசித்து முடிவு செய்யட்டும்" என்று இடம் பெற்றுள்ளது.
- மற்றோர் அறிவிப்பில் "இதுதான் சரி எனக்கருதப்படுவதை யோசித்து முடிவு செய்யட்டும்" என்று இடம்பெற்றுள்ளது.
- மற்றோர் அறிவிப்பில் "சரியானதை யோசித்து முடிவு செய்யட்டும்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
993. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்)தபோது அவர்களிடம், "தொழுகையில் (ரக்அத்) அதிகமாக்கப்பட்டுவிட்டதா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "என்ன அது?" என்று கேட்டார்கள். மக்கள், "நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்" என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.
அத்தியாயம் : 5
994. அல்கமா (ரஹ்) அவர்களது மற்றோர் அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்கமா (ரஹ்) அவர்கள் எங்களுக்கு லுஹர் தொழுகையில் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்தபோது (அவர்களிடம்) மக்கள், "அபூஷிப்ல்! தாங்கள் ஐந்து ரக்அத் தொழுவித்து விட்டீர்கள்!"என்று கூறினர். அதற்கு அவர்கள், "இல்லை; அவ்வாறு நான் செய்யவில்லை" என்று கூறினார்கள். மக்கள் "ஆம்" (அவ்வாறு தான் செய்தீர்கள்) என்று கூறினர். அப்போது சிறுவனாயிருந்த நான் கூட்டத்தின் ஓரத்தில் இருந்து கொண்டிருந்தேன். நானும், "ஆம், தாங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்துவிட்டீர்கள்" என்று கூறினேன். அல்கமா (ரஹ்) அவர்கள் என்னைப் பார்த்து, "மாறு கண்ணா! (அஃவர்!), நீயுமா இவ்வாறு கூறுகிறாய்?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். உடனே அவர்கள் அப்படியே திரும்பி இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் சலாம் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு கூறினார்கள்:
)ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது மக்கள் தமக்கிடையே முணு முணுத்துக்கொண்டனர். அப்போது அவர்கள், "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) அதிகமாக்கப் பட்டுவிட்டதா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை" என்றார்கள். "அவ்வாறாயின், தாங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்துவிட்டீர்களே?" என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அப்படியே) திரும்பி, இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பிறகு சலாம் கொடுத்தார்கள். மேலும் "நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன்" என்று கூறினார்கள்.
இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களில் ஒருவர் (தமது தொழுகையில்) மறந்து விட்டால் அவர் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
995. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) ஏதேனும் அதிகமாக்கப் பட்டுவிட்டதா?" என்று கேட்டோம். அவர்கள், "என்ன அது?" என்று கேட்டார்கள். மக்கள், "தாங்கள் ஐந்து ரக்அத் தொழுவித்தீர்கள்!" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் நினைப்பதைப் போன்று நானும் நினைக்கிறேன். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறக்கிறேன்" என்று கூறிவிட்டு, பிறகு மறதிக்கான இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.
அத்தியாயம் : 5
996. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். அதில் அவர்கள் கூட்டியோ குறைத்தோ தொழவைத்துவிட்டார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (கூட்டினார்களா அல்லது குறைத்தார்களா என்பதில்) சந்தேகம் எனக்குத் தான்.-
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) ஏதேனும் அதிகமாக்கப் பட்டுவிட்டதா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன். ஆகவே, உங்களில் ஒருவர் (தொழுகையில்) மறந்துவிட்டால் அதே இருப்பில் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்" என்று கூறிவிட்டுப் பிறகு (கிப்லாவை நோக்கித்) திரும்பி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.
அத்தியாயம் : 5
997. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து (மக்களிடம்) பேசிய பின் மறதிக்கான இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
998. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதோம். அப்போது அவர்கள் ஒன்று (ரக்அத்தைக்) கூட்டிவிட்டார்கள்; அல்லது குறைத்துவிட்டார்கள்.
)இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! இது (கூட்டினார்களா அல்லது குறைத்தார்களா என்ற ஐயப்பாடு) எனது தரப்பிலிருந்து ஏற்பட்டதேயாகும்.-
உடனே நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதேனும் வந்துவிட்டதா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "இல்லை" என்றார்கள். உடனே அவர்களிடம் அவர்கள் செய்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், "ஒருவர் (தமது தொழுகையில்) கூட்டிவிட்டாலோ அல்லது குறைத்துவிட்டாலோ அவர் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்" என்று சொல்லிவிட்டுப் பிறகு (தாம் மறந்துவிட்டதற்காக) இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.
அத்தியாயம் : 5
999. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மதியத் தொழுகைகளில் ஒன்றை (லுஹர் அல்லது அஸ்ர் தொழுகையைத்) தொழுவிக்கும்போது இரண்டு ரக்அத் முடிந்த உடனே சலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு பள்ளிவாசலின் கிப்லாத் திசையிலிருந்த ஒரு பேரீச்சம் கட்டைக்கு வந்து அதன்மீது சாய்ந்து கொண்டார்கள். அப்போது ஏதோ கோபத்தில் இருந்தார்கள். மக்களிடையேயிருந்த அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் நபியவர்களிடம் பேச்சுக்கொடுக்க அஞ்சினர். மக்களில் தொழுதுவிட்டு விரைந்து செல்பவர்கள் "தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது" என்று புறப்பட்டுச் சென்றும்விட்டனர்.
இந்நிலையில் "துல்யதைன்" (கிர்பாக் பின் அம்ர்-ரலி) என்பவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?" என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் வலப் பக்கமும் இடப் பக்கமும் (திரும்பிப்) பார்த்தார்கள். பிறகு "துல்யதைன் என்ன சொல்கிறார்?"" என்று கேட்டார்கள். மக்கள் "(ஆம்) அவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்"" என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் மேலும் இரு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் சொல்லி ஒரு சஜ்தாச் செய்துவிட்டு மற்றொரு தக்பீர் சொல்லி எழுந்(து அமர்ந்)தார்கள். பிறகு இன்னொரு தக்பீர் சொல்லி மற்றொரு சஜ்தாச் செய்தார்கள். பிறகு தக்பீர் சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களது அறிவிப்பில் "(இறுதியில்) சலாம் கொடுத்தார்கள்"" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1000. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதியத் தொழுகைகளில் ஒன்றை எங்களுக்குத் தொழுவித்தார்கள்" என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1001. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகையைத் தொழுவித்த போது இரண்டு ரக்அத் முடிந்ததும் சலாம் கொடுத்து விட்டார்கள். உடனே துல்யதைன் (கிர்பாக் பின் அம்ர்-ரலி) என்பார் எழுந்து, "தொழுகை(யின் ரக்அத் ஏதேனும்) குறைக்கப்பட்டு விட்டதா, அல்லாஹ்வின் தூதரே! அல்லது தாங்கள்தாம் மறந்துவிட்டீர்களா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவற்றில் எதுவுமே நடக்க வில்லை" என்று கூறினார்கள். துல்யதைன், "(இல்லை) இதில் ஏதோ ஒன்று நிகழவே செய்தது, அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி "துல்யதைன் சொல்வது உண்மைதானா?" என்று கேட்டார்கள். அப்போது மக்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எஞ்சிய ரக்அத்களையும் தொழு(வித்)துவிட்டு அந்த இருப்பிலேயே சலாம் கொடுத்த பின் இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் இரண்டு ரக்அத் முடிந்ததும் சலாம் கொடுத்துவிட்டார்கள். அப்போது பனூசுலைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (துல்யதைன்) வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத்) குறைக்கப்பட்டு விட்டதா, அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?" என்று கேட்டார்.
தொடர்ந்து முந்தைய ஹதீஸின் தொடர்ச்சி அப்படியே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1002. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹர் தொழுகை தொழுது கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது ரக்அத் முடிந்ததும் சலாம் கொடுத்துவிட்டார்கள். உடனே பனூசுலைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (துல்யதைன்) எழுந்தார்.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 5