பாடம்: 9 (தொழுகையின் தொடக்கத்தில் சொல்லப்படும்) தக்பீரத்துல் இஹ்ராம், ருகூஉவிற்குச் செல்லும்போதும் ருகூஉவிலிருந்து எழும்போதும் சொல்லப்படும் தக்பீர் ஆகியவற்றின்போது இரு கைகளையும் தோளுக்கு நேராக உயர்த்துவது விரும்பத் தக்கதாகும். சஜ்தாவிலிருந்து எழும்போது அவ்வாறு கைகளை உயர்த்தலாகாது.
638. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது தம் தோள்களுக்கு நேராக தம்மிரு கைகளையும் உயர்த்துவதை நான் பார்த்திருக்கிறேன். மேலும், ருகூஉ செய்வதற்கு முன்பும் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் (அவ்வாறு செய்வார்கள்). இரண்டு சஜ்தாக்களுக்கு மத்தியில் கைகளை உயர்த்தமாட்டார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
639. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தம்மிரு கைகளையும் தம் தோள்களுக்கு நேராக இருக்கும் வகையில் உயர்த்திய பின் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறுவார்கள். ருகூஉச் செய்ய விரும்பும்போதும், ருகூஉவிலிருந்து நிமிரும்போதும் அவ்வாறு செய்வார்கள். சஜ்தாலிருந்து தலையை உயர்த்தும்போது அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
அத்தியாயம் : 4
640. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தம்மிரு கைகளையும் தம் தோள்களுக்கு நேராக இருக்கும் வகையில் உயர்த்திய பின் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் சொல்வார்கள்.
அத்தியாயம் : 4
641. அபூகிலாபா (அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அம்ர்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பித்தால் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் சொல்லி தம்மிரு கைகளை உயர்த்துவதையும், அவர்கள் ருகூஉச் செய்ய விரும்பும்போதும், ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தும்போதும் தம்மிரு கைகளை உயர்த்துவதையும் நான் பார்த்திருக்கிறேன். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துகொண்டிருந்தார்கள் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
642. மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில் ஆரம்பத்) தக்பீர் சொல்லும்போதும், ருகூஉ செய்யும்போதும் தம்மிரு கைகளையும் தம் காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறும்போதும் அதைப் போன்றே கைகளை உயர்த்துவார்கள்.
அத்தியாயம் : 4
643. மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நபி (ஸல்) அவர்கள் தம்மிரு காதுகளின் கீழ் முனைகளுக்கு நேராக இரு கைகளையும் உயர்த்தியதை நான் கண்டேன் என (மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 10 தொழுகையில் ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூற வேண்டும். ருகூஉவிலிருந்து நிமிரும் போது மட்டும் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூற வேண்டும்.
644. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துவந்தார்கள். ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும் போதும் அன்னார் தக்பீர் கூறுவார்கள். தொழுது முடிந்ததும் அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 4
645. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றவுடன் (ஆரம்பத்தில்) தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூஉச் செய்யும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு ருகூஉவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ரப்பனா வ லக்கல் ஹம்து (எங்கள் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள். பிறகு சஜ்தாவுக்காகச் சரியும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) சஜ்தாவுக்குச் செல்லும்போதும், பின்னர் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தொழுது முடிக்கும்வரை இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் அமர்ந்துவிட்டு எழும்போதும் தக்பீர் கூறுவார்கள் என்று கூறினார்கள்.
பிறகு உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
646. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றவுடன் தக்பீர் கூறுவார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.
ஆனால், உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டது அதில் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 4
647. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் ஹகம் என்பார், அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுநராக நியமித்த காலகட்டத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் தொழுவிக்கத் துவங்கும்போது தக்பீர் (தஹ்ரீம்) கூறுவார்கள் என்று தொடங்கி முந்தைய ஹதீஸைப் போன்றே (645) குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இந்த அறிவிப்பில், தொழுது முடித்துவிட்டு சலாம் கொடுத்ததும் பள்ளிவாசலில் இருப்பவர்களை முன்னோக்கி அமர்ந்துகொண்டு என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 4
648. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் தொழுகையில் ஒவ்வொரு முறை நிமிரும்போதும் குனியும்போதும் தக்பீர் கூறிக்கொண்டிருந்தார்கள். (தொழுகை முடிந்ததும் அவர்களிடம்) நாங்கள், அபூஹுரைரா! இது என்ன தக்பீர்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை இவ்வாறுதான் அமைந்திருந்தது என்று பதிலளித்தார்கள்
அத்தியாயம் : 4
649. அபூஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொழுகையில்) ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் கூறிவந்தார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துவந்ததாகவும் அறிவிப்பார்கள்.
அத்தியாயம் : 4
650. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் தாலிப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் (நின்று அவர்களைப் பின்பற்றித்) தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தாவுக்காகக் குனியும்போது தக்பீர் கூறினார்கள். (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும்போதும் தக்பீர் கூறினார்கள். நாங்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் இம்ரான் (ரலி) அவர்கள் (மகிழ்ச்சியுடன்) எனது கையைப் பிடித்து நமக்கு இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையைப் போன்றே தொழுவித்தார் அல்லது இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவுபடுத்திவிட்டார் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 11 (தொழுகையில்) ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதுவது கட்டாயமாகும். ஒருவருக்கு அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை முறைப்படி ஓதத் தெரியாமலும் அதைக் கற்றுக்கொள்ள முடியாமலும் போனால் அவருக்குத் தெரிந்த இதர இறைவசனங்களை அவர் ஓதிக்கொள்ளலாம்.
651. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
652. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
653. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள். (மஹ்மூத் சிறுவராக இருந்தபோது) அவர்களது கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி (வாயில் செலுத்திய பின்) அவரது முகத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செல்லமாக) உமிழ்ந்தார்கள்.
அத்தியாயம் : 4
654. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் (குர்ஆனின் அன்னை எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தையும்) அதற்கு மேலாகவும் ஓதாதவருக்குத் தொழுகையே கிடையாது என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
655. அப்துர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்; நிறைவு பெறாததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நாங்கள் இமாமக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறோம் (அப்போதுமா ஓத வேண்டும்)? என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: அதை உங்களுடைய மனதில் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல்,பிரார்த்தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைத் துதித்துவிட்டான் என்று கூறுவான். அடியான் மாலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான் என்றும் கூறியுள்ளார்கள்.)
மேலும், அடியான் இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். அடியான் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அலாஉ பின் அப்திர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அன்னார் தமது இல்லத்தில் நோயுற்றிருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றிருந்தேன். அப்போது நானே இந்த ஹதீஸ் குறித்து அன்னாரிடம் கேட்டேன்.
அத்தியாயம் : 4
656. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
657. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இவ்விரு அறிவிப்புகளிலும் தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன். அதில் ஒரு பகுதி எனக்கும் மற்றொரு பகுதி என் அடியானுக்கும் உரியதாகும் என்று அல்லாஹ் கூறினான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4