பாடம் : 1 தொழுகை அறிவிப்பின் (பாங்கு) துவக்கம்.
618. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்பு விடுப்பதெற்கென யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடி தொழுகை(க்கு வரவேண்டிய) நேரத்தை முடிவு செய்துகொள்வார்கள். ஒரு நாள் இதுதொடர்பாக அவர்கள் கலந்து பேசினர். அப்போது அவர்களில் சிலர், கிறிஸ்தவர்கள் மணி அடிப்பதைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர், யூதர்கள் கொம்பூதுவதைப் போன்று கொம்பூதுங்கள் என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை நீங்கள் நியமிக்கக் கூடாதா? என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிலால் (ரலி) அவர்களிடம்) பிலாலே! எழுந்து தொழுகைக்காக (மக்களை) அழையுங்கள்! என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 2 தொழுகை அறிவிப்பு வாசகங்களை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்ல வேண்டும்.
619. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்பின் வாசகங்களை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (இகாமத்தில் சொல்லப்படும்) கத் காமத்திஸ் ஸலாஹ் என்ற வாசகத்தைத் தவிர என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. (இகாமத்தில் அந்த வாசகத்தை மட்டும் இரண்டு முறை கூற வேண்டும்.)
அத்தியாயம் : 4
620. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காக, அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய (அறிவிப்பு) முறையை உருவாக்குவது குறித்து (நபித்தோழர்கள்) பேசினார்கள். அப்போது சிலர், நெருப்பு மூட்டுவோம்; அல்லது மணி அடிப்போம் என்றனர். (இவை யூத, கிறிஸ்தவக் கலாசாரம் என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.) இதையடுத்து தொழுகை அறிவிப்பு வாசகங்கள் இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்கள் ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.
அத்தியாயம் : 4
621. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் காலித் அல்ஹத்தாஉ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்:
முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமானபோது, தொழுகை நேரத்தை மக்களுக்கு அறிவிக்கும் முறை குறித்துப் பேசினார்கள். அவர்களில் சிலர், நெருப்பு மூட்டுவோம்; அல்லது மணி அடிப்போம் என்றனர்.
அத்தியாயம் : 4
622. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்பின் வாசகங்களை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 3 தொழுகை அறிவிப்பு முறை.
623. அபூமஹ்தூரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தொழுகை அறிவிப்பு(பாங்கு) முறையைக் கற்றுத் தந்தார்கள்:
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்).
(பின்னர் மெதுவாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்).
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்).
பின்னர் மீண்டும் (சப்தமாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.
பின்னர் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இரு முறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இரு முறையும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (ஹய்ய அலல் ஃபலாஹ் என்பதற்குப் பிறகு) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லக் கற்றுக்கொடுத்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 4 ஒரே பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அறிவிப்பாளர்களை ஏற்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.
624. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய பள்ளிவாசலு)க்கு இரு தொழுகை அறிவிப்பாளர்கள் இருந்தனர். ஒருவர் பிலால் (ரலி) அவர்கள்; மற்றொருவர் கண்பார்வை இழந்த இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 5 கண்பார்வையற்றவர் தொழுகை அறிவிப்புச் செய்வது செல்லும்; (தொழுகை நேரத்தை அறிந்து சொல்ல) அவருடன் கண்பார்வை உள்ள ஒருவர் இருந்தால்.
625. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய பள்ளிவாசலு)க்கு இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பாளராக இருந்தார்கள். அன்னார் கண் பார்வையற்றவராவார். (அவருக்கு உதவியாளராக பிலால் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.)
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 6 (இஸ்லாமிய அரசின் துருப்புகள்) இணை வைப்பாளர்கள் வாழும் நாட்டில் (போருக்காகச் செல்லும்போது) அவர்களிடையே தொழுகை அறிவிப்பின் சப்தம் கேட்டால் அந்த மக்களைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்.
626. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போர்க் காலத்தில்) ஃபஜ்ர் நேரம் ஆரம்பிக்கும்போது போர் தொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். (போரை ஆரம்பிக்கு முன்) ஃபஜ்ர் தொழுகையின் அறிவிப்பு சப்தத்தை எதிர்பார்ததுக் கொண்டிருப்பார்கள். அப்படி தொழுகை அறிவிப்பு சப்தத்தைக் கேட்டால் போரை நிறுத்திவிடுவார்கள். இல்லையென்றால் தாக்குவார்கள்.
(ஒரு முறை) ஒரு மனிதர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லக் கேட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீ இயற்கையில் (இஸ்லாத்தில்) இருக்கிறாய் என்று சொன்னார்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீ நரகத்திலிருந்து (விடுதலை பெற்று) வெளியேறி விட்டாய் என்று சொன்னார்கள். நபித்தோழர்கள் அவர் யாரென்று பார்த்தபோது அவர் வெள்ளாடுகளை மேய்க்கும் ஓர் இடையர் என்று தெரிந்தது.
அத்தியாயம் : 4
பாடம் : 7 தொழுகை அறிவிப்பை (பாங்கை)க் கேட்பவர், அறிவிப்பாளர் கூறுவதைப் போன்றே கூறுவதும் பின்பு நபி (ஸல்) அவர்கள்மீது ஸலவாத் கூறி, அவர்களுக்குச் சொர்க்கத்தின் உயர்ந்த பதவி கிடைப்பதற்காகப் பிரார்த்திப்பதும் விரும்பத்தக்கதாகும்.
627. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பை நீங்கள் செவியேற்றால், அறிவிப்பாளர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
628. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
629. அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்(அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
630. அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் (அறிவிப்பு முடிந்த பின்பு) அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன் என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (அஷ்ஹது (உறுதிமொழிகிறேன்) என்பதற்கு பதிலாக) வ அன அஷ்ஹது (நானும் உறுதிமொழிகிறேன்) என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 8 தொழுகை அறிவிப்புச் செய்வதன் (பாங்கு) சிறப்பும், தொழுகை அறிவிப்பைக் கேட்கும் போது ஷைத்தான் வெருண்டோடுவதும்.
631. ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள்,மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஆவியா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
632. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் ரவ்ஹா எனும் இடம்வரை அவன் (வெருண்டோடிச்) சென்றுவிடுவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் அ(ந்த ரவ்ஹா எனும் இடத்)தைப் பற்றி நான் கேட்டேன். அதற்கு அவர்கள், அது மதீனாவிலிருந்து முப்பத்தாறு மைல் தொலைவிலுள்ள ஓர் இடமாகும் என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
633. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் அந்தச் சப்தத்தை கேட்காமலிருப்பதற்காக வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரம்) வெருண்டோடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர்களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான். இகாமத் சொல்லும் சப்தத்தைக் கேட்கும்போது அந்தச் சப்தத்தை கேட்காமலிருப்பதற்காக (மீண்டும் வெகுதூரம்) வெருண்டோடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர்களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
634. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்புச் செய்பவர் அறிவிப்புச் செய்ய ஆரம்பித்தால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் புறமுதுகுகிட்டு ஓடுகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
635. சுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) என் தந்தை (அபூஸாலிஹ்) என்னை பனூ ஹாரிஸா கூட்டத்தாரிடம் அனுப்பினார்கள். என்னுடன் எங்களுடைய அடிமை ஒருவரும் அல்லது எங்களுடைய நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அப்போது என்னுடன் வந்தவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சுவருக்கு அப்பாலிருந்து ஒருவர் அவரை அழைத்தார். என்னுடன் வந்தவர் அந்தச் சுவரின் மீதேறிப் பார்த்தபோது அங்கு யாரும் தென்படவில்லை. பின்னர் இதைப் பற்றி என் தந்தையிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள், இப்படி ஒரு நிலையை நீ சந்திக்க நேரிடும் என்று நான் உணர்ந்திருந்தால் உன்னை நான் அனுப்பியிருக்கமாட்டேன். எனினும், (இது போன்ற) சப்தத்தை நீ கேட்டால் தொழுகை அறிவிப்பை நீ சப்தமாகக் கூறு. ஏனெனில், தொழுகை அறிவிப்புச் செய்யப்பட்டால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் வெருண்டோடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துக் கொண்டிருந்ததை நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
636. நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
தொழுகைக்காக அறிவிப்புச் செய்யப்பட்டால் ஷைத்தான் தொழுகை அறிவிப்பைக் கேட்காமலிருப்பதற்காக வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரத்திற்கு) பின்வாங்கி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வருகிறான். பின்னர் இகாமத் சொல்லப்பட்டால் பின்வாங்கி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிக்கப் பட்டதும் (திரும்பவும் பள்ளிவாசலுக்கு) வந்து, (தொழுது கொண்டிருக்கும்) மனிதரின் உள்ளத்தில் ஊசலாட்டத்தைப் போடுகிறான். அவரிடம் இன்ன இன்னதை நினை என்று தொழுகைக்கு முன்பு அவரது நினைவில் வராதவற்றையெல்லாம் (தொழுகையில் நினைத்துப் பார்க்கும்படி) கூறுகிறான். இறுதியில், அந்த மனிதருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதேகூடத் தெரியாமல் போய்விடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
637. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (அந்த மனிதருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதேகூடத் தெரியாமல் போய்விடும் என்பதற்கு பதிலாக) அந்த மனிதருக்குத் தாம் எப்படித் தொழுதோம் என்பதேகூடத் தெரியாமல் போய்விடும் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4