61. அபூகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு குழுவாக இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களுடன் இருந்தோம். எங்களிடையே புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அன்றைய தினம் இம்ரான் (ரலி) அவர்கள் "நாணம், முழுக்க முழுக்க நன்மையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எங்களுக்கு அறிவித்தார்கள். அப்போது புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்கள், "நாங்கள் "சில நூல்களில்" அல்லது "தத்துவ(ப் புத்தகத்)தில்" அல்லாஹ்விற்காக மேற்கொள்ளப்படும் சில (வகை) நாணத்தில் மன அமைதியும் கம்பீரமும் உண்டு. மற்றச் சில வகையில் பலவீனம் உண்டு என்று (எழுதப்பட்டிருப்பதைக்) காண்கிறோம்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இம்ரான் (ரலி) அவர்கள் தம் கண்கள் சிவக்கும் அளவிற்குக் கோபமடைந்தார்கள். "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாணம் முழுக்க நன்மைதான் என்று) கூறியதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்களோ அதற்கு எதிர்க்கருத்து கூறுகின்றீர்களே!" என்று சொல்லி விட்டுத் தாம் முன்பு சொன்ன ஹதீஸையே மீண்டும் சொன்னார்கள். புஷைர் அவர்களும் முன்பு தாம் சொன்னதையே மீண்டும் கூறினார்கள். அப்போதும் இம்ரான் (ரலி) அவர்கள் கோபமடைந்தார்கள். நாங்கள், "அபூநுஜைதே! அவர் நம்மைச் சார்ந்தவர்தாம். அவரிடம் (கொள்கைக்) குறைபாடு ஏதுமில்லை" என்று கூறி (இம்ரான் அவர்களை சமாதானப் படுத்தி)க்கொண்டிருந்தோம்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 13 இஸ்லாத்தின் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிக்கொண்ட அம்சம்.
62. சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். "தங்களுக்குப் பிறகு யாரிடமும்" அல்லது "தங்களைத் தவிர வேறு யாரிடமும்" அது குறித்து நான் கேட்க வேண்டிய திருக்கலாகாது" என்று வினவினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்" என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 14 இஸ்லாம் கூறும் நல்லறங்களுக்கிடையேயான வித்தியாசமும் அவற்றில் மிகவும் சிறந்தது எது என்பது பற்றிய விளக்கமும்.
63. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப்பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகம் அற்றவருக்கும் சலாம் (முகமன்) சொல்வதுமாகும்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
64. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
65. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
66. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (சிறந்தவர்; அவருடைய பண்பே சிறந்தது)" என்று பதிலளித்தார்கள். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று கேட்கப்பட்டது" என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது. மீதி மேற்கண்டவாறே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 15 இறைநம்பிக்கையின் இனிமையை உணர்ந்திட ஒருவரிடம் அமைந்திருக்க வேண்டிய பண்புகள் பற்றிய விளக்கம்.
67. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின் இனிமையை உணர்வார். (அவை:)
1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட நேசத்திற்குரியோராய் இருப்பது.
2. அவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை நெருப்பில் தாம் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று அவர் வெறுப்பது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
68. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்து கொள்வார்.
1. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசித்துக்கொண்டிருப்பது.
2. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட நேசத்திற்குரியோராவது.
3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே அவர் விரும்புவது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அனஸ் (ரலி) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அதில் "மீண்டும் யூதராகவோ கிறிஸ்தவராகவோ தாம் மாறுவதைவிட (நெருப்பில் வீசப்படுவதை அவர் விரும்புவது)" என்று (சிறு மாற்றத்துடன்) ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 16 மனைவி மக்களையும் பெற்றோரையும், மக்கள் அனைவரையும் விட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பது கடமை என்பது பற்றியும், அல்லாஹ்வின் தூதரை இந்த அளவு நேசிக்காதவரிடம் இறைநம்பிக்கை இல்லை என்று கூறலாம் என்பதும்.
69. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கு தம் குடும்பத்தார்,தமது செல்வம்,ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை “எந்த அடியாரும் அல்லது எந்த மனிதரும்,இறை நம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்.-இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
70. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு,அவருடைய குழந்தைகள்,பெற்றோர்,மற்ற மக்கள் அனைவரையும் விட நான் அதிகம் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறைநம்பிக்கையாளராக ஆகமாட்டார்.”-இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 17 தமக்கு விரும்பும் நன்மையை தம் சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவது,இறை நம்பிக்கையின் அடையாளக் குணங்களில் ஒன்றாகும் என்பதற்கான ஆதாரம்.
71. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே “தம் சகோதரருக்கும்” அல்லது தம் அண்டை வீட்டாருக்கும் விரும்பாதவரை அவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
72. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! தமக்கு விரும்புவதையே தம் அண்டை வீட்டாருக்கும் அல்லது தம் சகோதரருக்கும் விரும்பாத எந்த அடியாரும் முழுமையான இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்.
€இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 18 அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவது தடை செய்யப்பட்டுள்ளது.
73. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 19 அண்டைவீட்டாரைக் கண்ணியப்படுத்துதல்,நல்லதையே பேசுதல் அல்லது வாய்மூடி இருத்தல் ஆகியவற்றை தூண்டும் நபிமொழிகளும்,இக்குணங்கள் யாவும் இறைநம்பிக்கையில் அ$டங்கும் என்பதும்.
74. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்,அல்லது வாய்மூடி இருக்கட்டும்,அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்,அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
75. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தமது அண்டைவீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் ஒன்று நல்லதை பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
76. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆனால் அதில் “(அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர்) தம் அண்டை வீட்டாருக்கு உதவி செய்யட்டும் “ என்று (சிறு வித்தியாசத்துடன்) காணப்படுகிறது.
அத்தியாயம் : 1
77. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாருக்கு உதவி செய்யட்டும்,அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்,அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் (ஒன்று) நல்லதை பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
இதை அபூஷீரைஹ் அல்குஸாஈ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 20 தீமைகளை தடுப்பது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்;இறைநம்பிக்கை கூடலாம்;குறையலாம்;நல்லதை(ச் செய்யுமாறு) ஏவுவதும் தீமையை தடுப்பதும் இரு கடமைகளாகும் என்பன பற்றிய விளக்கம்.
78. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முதன்முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார்.(அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.)அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று,” “சொற்பொழிவுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும் என்று கூறினார்.
அதற்கு மர்வான் “முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டுவிட்டது (இப்போது அது நடைமுறையில் இல்லை) “ என்று கூறினார்.(அப்போது அங்கிருந்த$) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்,இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றிவிட்டார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டுள்ளேன்:
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்,முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்),அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
79. மர்வான் பின் ஹகம் சம்பவத்தின் போது அபூசயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவித்த மேற்கண்ட ஹதீஸ் வேறுசில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
80. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள்;அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள்.அந்தத் தோழர்களுக்கு பிறகு சிலர் வருவார்கள்.அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள்.தமக்கு கட்டளையிடப்படாதவற்றைச் செய்வார்கள்.ஆகவே,யார் இ(த்தகைய)வர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார்.யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறைநம்பிகையாளர்தாம்.இவற்றுக்கப்பால் இறை நம்பிக்கை என்பது கடுகளவு கூட கிடையாது.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கும்) அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸ் நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன்.அதை அவர்கள் மறுத்தார்கள்.இந்நிலையில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (மதினாவின் பள்ளத்தாக்குகளில் ஒன்றான)” “$கனாத்”“ எனும் இடத்திற்கு (ஒருமுறை) வந்தார்கள்,அப்போது அவர்களை நலம் விசாரிக்கச் சென்ற அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம்முடன் என்னை வருமாறு கூறினார்கள்.நானும் அவர்களுடன் சென்றேன். நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அமர்ந்த போது,
நான் இந்த ஹதீஸ் குறித்து அவர்களிடம் வினவினேன்.அப்போது அவர்கள் நான் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களுக்கு அறிவித்ததைப் போன்றே அதை எனக்கு அறிவித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(சர்ச்சைக்குரியவரான ஹாரிஸிடமிருந்து மட்டுமின்றி வேறு வழிகளிலும் இதை போன்றே அறிவிக்கப் பட்டுள்ளது.$)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் இருந்து மற்றோர் அறிவிப்பாளர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “ஒவ்வொரு இறைத்தூதருக்கும் சிறப்பு உதவியாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த இறைத்தூதரின் வழியில் நடப்பார்கள்; அவருடைய வழிமுறையைப் பின்பற்றுவார்கள்“என்று இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்ஸிலுள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஆனால், அதில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் “கனாத்“ எனும் பள்ளத்தாக்கிற்கு வந்தது பற்றியோ அவர்களை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சந்தித்தது பற்றியோ குறிப்பில்லை.
அத்தியாயம் : 1