41. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை (அபூதாலிப்) உடைய மரண தறுவாயில் "லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள்; இதை வைத்து உங்களுக்காக நான் மறுமைநாளில் (அல்லாஹ்விடம்) சாட்சியம் கூறுவேன்" என்று கூறினார்கள். ஆனால் அவர், (ஏகத்துவ உறுதிமொழி கூற) மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ், "(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது" எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
42. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் பெரிய தந்தை (அபூதாலிபின் மரண தறுவாயில்) அவர்களிடம், "லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். இதை வைத்து உங்களுக்காக நான் மறுமைநாளில் சாட்சியம் கூறுவேன்" என்று கூறினார்கள். அதற்கு அவர், "பயம்தான் அவரை இவ்வாறு செய்யவைத்தது என்று என்னைப் பற்றிக் குறைஷியர் குறை கூறிவிடுவார்கள் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் (ஏகத்துவ உறுதிமொழியான) இதைக் கூறி உம்முடைய கண்களை நான் குளிர வைத்திருப்பேன்" என்று கூறினார். அப்போதுதான் அல்லாஹ் "(நபியே!) நீங்கள் விரும்பியவரை (யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்" எனும் (28:56 ஆவது) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 1
பாடம் : 10 ஓரிறைக் கோட்பாட்டில் இறந்தவர் சொர்க்கம் செல்வது உறுதி என்பதற்கான ஆதாரம்.
43. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (மனமார) அறிந்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வார்.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
44. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது மக்களிடம் இருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. அதனால் மக்களின் (உணவுக்காகப்) பயண ஒட்டகங்களில் சிலவற்றை அறுக்கலாம் என்று கூட நபி (ஸல்) அவர்கள் எண்ணினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களை ஒன்றுதிரட்டி, அதில் (பெருக்கம் ஏற்பட) தாங்கள் பிரார்த்தித்தால் நன்றாயிருக்குமே!" என்று கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள். அப்போது தம்மிடம் கோதுமை வைத்திருந்தவர் கோதுமையைக் கொண்டுவந்தார்; பேரீச்சம் பழங்கள் வைத்திருந்தவர் பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். -அறிவிப்பாளர் தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) கூறுகிறார்கள்: முஜாஹித் (ரஹ்) அவர்கள், "பேரீச்சம் பழங்களின் கொட்டைகள் வைத்திருந்தவர் பேரீச்சம்பழக் கொட்டைகளைக் கொண்டுவந்தார்" என்று கூறினார்கள். நான், "பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை வைத்து மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவற்றை வாயிலிட்டுச் சுவைத்துவிட்டு, அதற்கு மேல் தண்ணீரை அருந்திக்கொள்வார்கள்" என்று கூறினார்கள்.-
(மக்களிடமிருந்த உணவுப் பொருட்கள் ஒன்று திரட்டப்பட்டன.) அதில் (பெருக்கம் ஏற்பட) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அவ்வாறே பெருக்கம் ஏற்பட்டது.) எந்த அளவிற்கென்றால் மக்கள் அனைவரும் தங்கள் பயண(த்திற்கு வேண்டிய) உணவை நிரப்பிக் கொண்டனர். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரு உறுதிமொழிகளுடன், அவற்றில் சந்தேகம் கொள்ளாமல் இறைவனைச் சந்திக்கும் அடியார் எவரும் சொர்க்கம் செல்லாமல் இருக்கமாட்டார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
45. அபூஹுரைரா (ரலி), அல்லது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தபூக் போரின்போது மக்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களுக்கு அனுமதி அளித்தால் நாங்கள் எங்கள் ஒட்டகங்களை அறுத்துச் சாப்பிடவும் (அவற்றின் கொழுப்புகளை உருக்கி) எண்ணெய் எடுத்துக்கொள்ளவும் செய்வோமே!" என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவ்வாறே) செய்துகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! இவ்வாறு நீங்கள் செய்(ய அனுமதியளித்)தால் வாகனப் பிராணிகள் குறைந்துவிடும். இதைவிடுத்து, மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள். பின்னர் அவற்றில் பெருக்கம் (பரக்கத்) ஏற்பட அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள். அல்லாஹ் அதில் (பெருக்கத்தை) ஏற்படுத்தக்கூடும்" என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறிவிட்டு, ஒரு தோல் விரிப்பைக் கொண்டுவந்து விரிக்கச் சொன்னார்கள். பிறகு மக்களிடம் எஞ்சியிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டுவரச் சொன்னார்கள்.
(மக்களில்) ஒருவர் ஒரு கையளவு கோதுமையைக் கொண்டுவரலானார். மற்றொருவர் ஒரு கையளவு பேரீச்சம் பழங்களுடன் வந்தார். இன்னொருவர் ரொட்டித் துண்டு ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த விரிப்பின் மீது சிறிதளவு உணவுப் பொருட்கள் சேர்ந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு "உங்கள் பைகளில் நிரப்பிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே மக்களும் தம் பைகளில் நிரப்பிக் கொண்டனர். அந்தப் படையினர் தம்மிடம் இருந்த எந்தப் பையையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றிலும் நிரப்பிக்கொண்டனர். மக்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டனர். (இருப்பினும்) இன்னும் அது எஞ்சியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரண்டு உறுதிமொழிகளையும் சந்தேகம் கொள்ளாமல் நம்பிய நிலையில் அல்லாஹ்வைச் சந்திக்கும் எந்த அடியாரும் சொர்க்கத்தைவிட்டுத் தடுக்கப்படமாட்டார்"என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
46. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாளன் யாருமில்லை. முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்; (இறைத் தூதர்) ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய அடிமையின் புதல்வரும் ஆவார்; அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ("ஆகுக" எனும்) ஒரு வார்த்தை(யில் பிறந்தவர்); அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என்றெல்லாம் யார் உறுதிமொழி கூறுகின்றாரோ அவரைச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக அல்லாஹ் நுழைவிப்பான்.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆனால், (அதன் இறுதியில்) "அவரை அல்லாஹ் அவருடைய செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்" என்று இடம்பெற்றுள்ளது. "சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக நுழைவிப்பான்" என்பது இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 1
47. அபூஅப்தில்லாஹ் அப்துர் ரஹ்மான் பின் உசைலா அஸ்ஸுனாபிஹீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்று அழுதேன். அப்போது அவர்கள் "அமைதியாயிருங்கள். ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! சாட்சியம் கூறுமாறு எனக்கு வாய்ப்பளிக்கப் பட்டால் உங்களுக்காக நான் சாட்சியம் கூறுவேன். பரிந்துரை செய்ய எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் உங்களுக்காக நான் பரிந்துரைப்பேன்; எனக்கு சக்தி இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு நான் பயன் அளிப்பேன்" என்று கூறினார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற உங்களுக்குப் பயனுள்ள எந்தச் செய்தியையும் உங்களிடம் தெரிவிக்காமல் இருந்ததில்லை. ஆனால், ஒரே ஒரு செய்தியைத் தவிர. அந்தச் செய்தியையும் இதோ என் உயிர் பிரியப்போகும் இந்நேரத்தில் உங்களிடம் நான் சொல்லப் போகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைத் தடை செய்துவிடுகிறான்.
அத்தியாயம் : 1
48. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) இருந்தேன். எனக்கும் அவர்களுக்குமிடையே (ஒட்டகச்) சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டைதான் இருந்தது. (அவ்வளவு நெருக்கத்தில் இருந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், "முஆத் பின் ஜபல்" என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)" என்றேன். பிறகு சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) "முஆத் பின் ஜபல்" என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)" என்றேன். சிறிது தூரம் சென்ற பின் (மீண்டும்) "முஆத்பின் ஜபல்!!" என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)" என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், "அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது" என்றார்கள்.
இன்னும் சிறிது தூரம் சென்ற பின் "முஆத் பின் ஜபல்" என்று அழைத்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)" என்றேன். அவர்கள், "அவ்வாறு (அல்லாஹ்வையே வழிபட்டு அவனுக்கு இணைவைக்காமல்) செயல்பட்டுவரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "(இத்தகைய) அடியார்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பது தான்" என்று சொன்னார்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
49. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் "உஃபைர்" என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "முஆத்! அல்லாஹ்வுக்கு அடியார்கள் மீதுள்ள உரிமை என்ன? அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று (என்னிடம்) கேட்டார்கள்.
நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதில் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும், அவனுக்கு எதையும் இணையாக்கக்கூடாது; அல்லாஹ்வின் மீது அடியார்களுக்குள்ள உரிமை யாதெனில், அவனுக்கு எதையும் இணைகற்பிக்காமலிருப்பவரை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்கள்"என்று பதிலளித்தார்கள்.
இதை அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
50. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "முஆத்! அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வே வணங்கப்பட வேண்டும். அவனுக்கு எதுவும் இணையாக்கப்படக்கூடாது"என்று கூறிவிட்டு, "அவ்வாறு (அல்லாஹ்வையே வணங்கி, அவனுக்கு இணைகற்பிக்காமல்)செயல்பட்டுவரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இத்தகைய) அடியார்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதாகும்" என்று சொன்னார்கள்.
இதை அல்அஸ்வத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
51. அல்அஸ்வத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆத் (ரலி) அவர்கள், "என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளித்தேன். அப்போது அவர்கள் "மனிதர்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள்". (இவ்வாறு கூறிவிட்டு) மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
52. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். எங்களுடன் அமர்ந்திருந்த சிலரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போது எங்களிடையேயிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நெடுநேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பி) வரவில்லை. அவர்களுக்கு (எதிரிகளால்) ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; நாங்கள் பீதி அடைந்தவர்களாக (அங்கிருந்து) எழுந்தோம். பீதியுற்றவர்களில் நானே முதல் ஆளாக இருந்தேன். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடிக்கொண்டு புறப்பட்டேன். பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். அத்தோட்டத்தின் வாசல் எங்கே என்று (தேடியவனாக) அதைச் சுற்றி வந்தேன். ஆனால் (அதன் வாசலை) நான் காணவில்லை. அத்தோட்டத்திற்கு வெளியே இன்னொரு தோட்டத்திலிருந்து வாய்க்கால் ஒன்று அதனுள் சென்று கொண்டிருந்தது. உடனே நான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று (என் உடலைக்) குறுக்கிக் கொண்டு (அந்த வாய்க்கால் வழியே தோட்டத்திற்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "அபூஹுரைராவா?" என்று கேட்டார்கள். நான், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள். "நீங்கள் எங்களிடையே இருந்து கொண்டிருந்தீர்கள். (திடீரென) எழுந்து சென்றீர்கள். நெடுநேரமாகியும் நீங்கள் எங்களிடம் திரும்பவில்லை. எனவே, (எதிரிகளால்) ஏதேனும் உங்களுக்கு ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; பீதியுற்றோம். நான்தான் பீதியுற்றவர்களில் முதல் ஆளாவேன். எனவேதான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று உடலைக் குறுக்கிக்கொண்டு இந்தத் தோட்டத்திற்கு வந்தேன். இதோ மக்கள் என் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா!" (என்று என்னை அழைத்து) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, "இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!" என்று கூறினார்கள்.
நான் உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இவை என்ன காலணிகள்,அபூஹுரைரா?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி, இக்காலணிகளை (ஆதாரமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்" என்று சொன்னேன். உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். "திரும்பிச் செல்லுங்கள், அபூஹுரைரா!" என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள்.
நான், "உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்துவிட்டேன். பிறகு, "திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறினார்" என்றேன். அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?" என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பிவைத்தீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் (நற்)செயல் புரிய விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள் (அவர்கள் நற்செயல் புரியட்டும்)" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
53. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்த முஆத்பின் ஜபல் (ரலி) அவர்களை "முஆத்!" என்று அழைத்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)" என்று முஆத் பதிலளித்தார்கள். (சிறிது தூரம் சென்ற பின்) "முஆத்!" என்று (மீண்டும்) அழைத்தார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)" என்றார்கள். (இன்னும் சிறிது தூரம் சென்ற பின்) "முஆத்!" என்று (மீண்டும்) அழைத்தார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)" என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிகூறுகின்ற எந்த அடியாருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா? (இதைக் கேட்டு அவர்கள்) மகிழ்ச்சி அடைவார்களே!" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் மக்கள் இதையே நம்பிக் கொண்டு (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்கள்" என்று கூறினார்கள்.
(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது இறப்பின்போதுதான் இதை முஆத் (ரலி) அவர்கள் (மக்களிடையே) அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
54. மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவுக்குச் சென்று இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களைச் சந்தித்து, "தங்களைப் பற்றிய ஒரு செய்தி எனக்கு எட்டியது (அது உண்மையா? கூறுங்கள்!)" என்றேன். அப்போது இத்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
என் பார்வையில் ஏதோ ஏற்பட்டு (என் கண்பார்வை போய்)விட்டது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி "நீங்கள் வந்து என் வீட்டில் தொழ வேண்டும். அதை நான் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன்" என்று சொல்லியனுப்பினேன். எனவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் அல்லாஹ் நாடிய சிலரும் (மறுநாள் என் வீட்டுக்கு) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) வந்து வீட்டி(ன் ஒரு மூலையி)ல் தொழுது கொண்டிருந்தார்கள். நபித் தோழர்களோ தம்மிடையே (நயவஞ்சகர்களைப் பற்றியும் அவர்களால் தங்களுக்கு ஏற்படும் தொந்தரவு பற்றியும்) பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு அதில் மாலிக் பின் துக்ஷுன் அவர்களுக்குப் பெரும் பங்கிருப்பதாகக் கூறினர்.
அவருக்கெதிராக நபியவர்கள் பிரார்த்தித்து அவர் அழிந்துபோக வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அவருக்கு ஏதேனும் கேடு நேரவேண்டும் என்றும் விரும்பினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர் (மாலிக் பின் துக்ஷும்) சாட்சியம் கூறவில்லையா?" என்று கேட்டார்கள். மக்கள், "அவர் அவ்வாறு (சாட்சியம்) கூறுகிறார். ஆனால், அது அவருடைய இதயத்தில் இல்லையே?" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் சாட்சியம் கூறும் ஒருவர் "நரகத்தில் நுழையமாட்டார்" அல்லது "நரகம் அவரைத் தீண்டாது" " என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை (மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்களிடமிருந்து) அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸ் என்னை வியப்படையச் செய்தது. ஆகவே, நான் என் புதல்வரிடம் "இதை எழுதி வைத்துக்கொள்" என்று கூறினேன். அவ்வாறே அவர் அதை எழுதி வைத்துக் கொண்டார்.
அத்தியாயம் : 1
55. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:
எனக்குக் கண்பார்வை போய்விட்டது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி "(என் வீட்டுக்கு) நீங்கள் வந்து எனக்காக நான் தொழுமிடம் ஒன்றை அறிவியுங்கள்" என்று கூறினேன். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களும் (என் வீட்டுக்கு) வந்தனர். அப்போது மக்களில் மாலிக் பின் துக்ஷும் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதரைப் பற்றி விமர்சிக்கப்பட்டது. (இவ்வாறு கூறிவிட்டு) சுலைமான் பின் அல்முஃகீரா (ரஹ்) அவர்களின் மேற்கண்ட அறிவிப்பிலுள்ளதைப் போன்றே தொடர்ந்து கூறினார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 11 அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டவர் இறை நம்பிக்கையாளர் (முஃமின்)தாம். அவர் பெரும் பாவங்களைச் செய்திருந்தாலும் சரியே- என்பதற்கான ஆதாரம்.
56. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டாரோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை அடைந்துவிட்டார்.
இதை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 12 இறைநம்பிக்கையின் கிளைகளின் எண்ணிக்கை, அவற்றில் உயர்ந்தவை மற்றும் தாழ்ந்தவை, இறைநம்பிக்கையின் ஓர் அம்சமான நாணத்தின் சிறப்பு ஆகியவை பற்றிய விளக்கம்.
57. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை (ஈமான்) என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
58. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான" அல்லது "அறுபதுக்கும் அதிகமான" கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
59. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தம் சகோதரருக்கு, (அதிகமாக) நாணம் (கொள்வதால் ஏற்படும் நஷ்டம்) தொடர்பாக அறிவுரை கூறிக்கொண்டிருந்ததை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள்.
அப்போது "(அவரை விட்டுவிடு!) நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்" என்று நபியவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
"நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் தம் சகோதரருக்கு நாணப்படுவது தொடர்பாக அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்" என்று அந்த அறிவிப்பு (சிறு வித்தியாசத்துடன்) தொடங்குகிறது.
அத்தியாயம் : 1
60. அபுஸ் ஸவ்வார் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் "நாணம் நன்மையே தரும்" என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்கள், "சில (வகை) நாணத்தில் கம்பீரம் உண்டு; சில (வகை) நாணத்தில் மன அமைதி உண்டு எனத் தத்துவ(ப் புத்தக)த்தில் எழுதப்பட்டுள்ளது" என்று கூறினார். அப்போது (அவரிடம்) இம்ரான் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கூறியது) பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் ஏடுகளில் உள்ளவை குறித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே!" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1