5716. அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள், ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வி(யும் தம் துணைவியுமான உம்மு குல்ஸூம் அவர்களது) இல்லத்தில் இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நான் தும்மினேன். ஆனால், என் தந்தை எனக்கு மறுமொழி கூறவில்லை. அவர்களின் துணைவியார் தும்மியபோது மறுமொழி கூறினார்கள்.
நான் என் தாயாரிடம் திரும்பிவந்து, நடந்ததை அவரிடம் தெரிவித்தேன். என் தாயாரிடம் அபூமூசா (ரலி) அவர்கள் வந்தபோது, "உங்களுக்கு அருகில் என் பிள்ளை தும்மியபோது நீங்கள் மறுமொழி கூறவில்லை; அவள் தும்மியபோது மட்டும் மறுமொழி கூறியிருக்கிறீர்கள்" என்று கேட்டார்.
அதற்கு (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள், "உன் பிள்ளை தும்மியவுடன் "அல்ஹம்து லில்லாஹ்" என்று கூறவில்லை. எனவேதான், நான் அவருக்கு மறுமொழி பகரவில்லை. ஆனால், அவள் தும்மியவுடன் "அல்ஹம்து லில்லாஹ்" என்று கூறினாள். எனவேதான், அவளுக்கு நான் மறுமொழி பகர்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் தும்மி, "அல்ஹம்து லில்லாஹ்" என்று கூறினால் அவருக்கு நீங்கள் மறுமொழி கூறுங்கள். அவர் "அல்ஹம்து லில்லாஹ்" என்று கூறாவிட்டால், அவருக்கு நீங்கள் மறுமொழி கூறாதீர்கள்" என்று கூற நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5717. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் தும்மி ("அல்ஹம்து லில்லாஹ்" என்று கூறி)னார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் "யர்ஹமுகல்லாஹ்" (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக) என்று மறுமொழி கூறினார்கள். அவரே மற்றொரு முறை தும்மினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்த மனிதருக்கு ஜலதோஷம் ஏற்பட்டுள்ளது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5718. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கொட்டாவி ஷைத்தானிடமிருந்தே ஏற்படுகிறது. எனவே, உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது இயன்ற வரை அவர் (அதைக்) கட்டுப்படுத்திக்கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5719. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
5720. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால் தமது கையால் தடுத்துக்கொள்ளட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகிறான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
5721. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் கொட்டாவி ஏற்பட்டால், தம்மால் முடிந்த வரை (அதைக்) கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகிறான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 11 பல்வேறு (தலைப்பிலான) நபிமொழிகள்.
5722. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்"கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப் பட்டார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 12 எலியும் அது உருமாற்றம் பெற்ற உயிரினம் என்பதும்.
5723. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் ஒரு குழுவினர் (மர்மமான முறையில்) காணாமற்போய் விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே நான் கருதுகிறேன். எலிகளுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால், அவை அந்தப் பாலைக்குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால், அந்தப் பாலை அவை குடித்துவிடுகின்றனவே?
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தபோது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?" என்று வினவினார்கள். நான், "ஆம்" என்றேன். அவ்வாறே அவர்கள் பலமுறை கேட்டார்கள். "நான் "தவ்ராத்"தையா ஓதுகிறேன் (அதிலிருந்து சொல்வதற்கு)?" என்று நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் என்ன ஆனார்கள் என்று நாம் அறியவில்லை" எனக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 53
5724. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள், "எலிகள் உருமாற்றம் பெற்ற உயிரினமாகும். அதற்கு அடையாளம் என்னவென்றால்,அவற்றுக்கு முன்பாக ஆடுகளின் பால் வைக்கப்பட்டால், அவை அதைக் குடிக்கின்றன. (ஆனால்,) அவற்றுக்கு (முன்பாக) ஒட்டகங்களின் பால் வைக்கப்பட்டால் அவை அதைச் சுவைப்பதில்லை" என்று சொன்னார்கள்.
அப்போது கஅப் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?" என்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வினவினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், "பிறகு "தவ்ராத்" வேதமா எனக்கு அருளப்பட்டது?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
அத்தியாயம் : 53
பாடம் : 13 ஓர் இறைநம்பிக்கையாளர், ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
5725. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 14 இறைநம்பிக்கையாளரின் அனைத்து அம்சங்களும் நன்மையே ஆகும்.
5726. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.
இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 15 ஒருவர் குழப்பத்திற்கு ஆளாவார் எனும் அச்சம் இருக்குமானால், அவரை அளவு கடந்து புகழ்வது தடை செய்யப்பட்டுள்ளது.
5727. அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்.அப்போது நபி (ஸல்) அவர்கள் "உமக்கு நாசம்தான்! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே" என்று பலமுறை கூறினார்கள்.
பிறகு, "உங்களில் ஒருவர் தம் நண்பரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், "இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்" என்று (மட்டும்) கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரைப் பற்றி இன்னின்னவாறு கருதுகிறேன் என்றுகூட, அவர் அவ்வாறு இருக்கிறார் என அறிந்தால் மட்டுமே கூறட்டும்.
அத்தியாயம் : 53
5728. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதரைப் பற்றி (புகழ்ந்து) பேசப்பட்டது. அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் தூதருக்குப் பின்னால் இன்னின்ன விஷயத்தில் அந்த மனிதரைவிடச் சிறந்தவர் வேறெவருமில்லை" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான். உம்முடைய தோழரின் கழுத்தைத் துண்டித்துவிட்டீரே!" என்று பலமுறை கூறிவிட்டு, "உங்களில் ஒருவர் தம் தோழரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், "இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்" என்று மட்டும் கூறட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே கூறட்டும். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அப்போது ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதருக்குப் பின்னால் அந்த மனிதரைவிடச் சிறந்தவர் வேறெவருமில்லை" என்று கூறினார்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 53
5729. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அந்த மனிதரின் முதுகை அழித்துவிட்டீர்களே! அல்லது முறித்துவிட்டீர்களே" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 53
5730. அபூமஅமர் அப்துல்லாஹ் பின் சக்பரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் எழுந்து தலைவர்களில் ஒருவரைப் புகழ்ந்து பேசினார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள், (புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த) மனிதரின் மீது மண்ணை அள்ளி வீசலானார்கள். மேலும், "அளவுக்கதிகமாகப் புகழ்ந்து பேசுபவரின் முகங்களில் மண்ணை அள்ளி வீசுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5731. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (கலீஃபா) உஸ்மான் (ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசலானார். அப்போது மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள் அவரை நோக்கிச் சென்று முழந்தாளிட்டு அமர்ந்து, அவரது முகத்தில் பொடிக்கற்களை அள்ளி வீசலானார்கள். மிக்தாத் (ரலி) அவர்கள் உடல் பருமனான மனிதராயிருந்தார்கள். (எனவே தான், முழந்தாளிட்டு அமர்ந்தார்கள்.)
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, "உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். அதற்கு மிக்தாத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அளவுக்கதிகமாகப் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களுடைய முகங்களில் மண்ணை அள்ளி வீசுங்கள்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மிக்தாத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 16 வயதில் பெரியவருக்கு முதலில் கொடுப்பது.
5732. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஒரு கனவு கண்டேன். அதில் நான் ஒரு பல்துலக்கும் குச்சியால் பல்துலக்கிக் கொண்டிருந்தேன். அதைப் பெறுவதற்காக இரு மனிதர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரைவிட வயதில் பெரியவராயிருந்தார். அவர்களில் வயதில் சிறியவருக்கு நான் அந்தக்குச்சியைக் கொடுத்தேன். அப்போது என்னிடம், "முதியவருக்கு முதலில் கொடுங்கள்" என்று சொல்லப்பட்டது. ஆகவே, அதை நான் வயதில் பெரியவராயிருந்தவரிடம் கொடுத்தேன்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
பாடம் : 17 நபிமொழியை நிறுத்தி நிதானமாக அறிவிப்பதும் நபிமொழியை எழுதி வைத்துக் கொள்வது தொடர்பான விதியும்.
5733. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்கு அருகில் அமர்ந்து கொண்டு) நபிமொழிகளை அறிவிக்கலானார்கள். அப்போது "அறையின் உரிமையாளரே! நான் சொல்வதைக் கேளுங்கள்! அறையின் உரிமையாளரே! நான் சொல்வதைக் கேளுங்கள்" என்று கூறினார்கள்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். தொழுது முடித்ததும் அவர்கள் என்னிடம், "சற்று முன்னர் இவர் அறிவித்த (விதத்)தையும் இவர் கூறியதையும் நீ கேட்க வில்லையா? நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக்கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணிவிடுவார். (அந்த அளவுக்கு நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசிவந்தார்கள்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 53
5734. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும். என்னைப் பற்றி அறிவியுங்கள். தவறில்லை. யார் என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
ஹம்மாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ" என்று ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 18 தீக்குண்டத்தில் ("அல்உக்தூத்") போடப்பட்டோர், சூனியக்காரன், (வேதக்கார) துறவி, (அற்புதம் நிகழ்த்திய) சிறுவன் ஆகியோர் பற்றிய தகவல்.
5735. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன்னால் (ஒரு காலத்தில்) அரசன் ஒருவன் வாழ்ந்தான். அவனிடம் (குறி சொல்லும்) சூனியக்காரன் ஒருவன் இருந்தான். அந்தச் சூனியக்காரன் முதுமையடைந்த போது அரசனிடம், "நான் முதுமையடைந்துவிட்டேன். (என்னோடு இந்தச் சூனியக் கலை அழிந்துவிடக் கூடாது.) எனவே, சிறுவன் ஒருவனை அனுப்புங்கள். அவனுக்கு நான் சூனியக் கலையை கற்றுத் தருகிறேன்" என்று சொன்னான். அவ்வாறே, அக்கல்வியை அவன் கற்றுத் தருவதற்காகச் சிறுவன் ஒருவனை அவனிடம் அரசன் அனுப்பினான்.
சிறுவன் சூனியக்காரனிடம் செல்லும் வழியில் துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் சென்று அமர்ந்து அவருடைய அறிவுரைகளைச் சிறுவன் கேட்கலானான். அது அவனை ஈர்த்தது; அவன் சூனியக்காரனிடம் செல்லும் போதெல்லாம் அந்தத் துறவியிடம் சென்று அமர்ந்து கொள்வான். பிறகு சூனியக்காரனிடம் (தாமதமாகச்) செல்லும்போது அவனைச் சூனியக் காரன் அடிப்பான். இது பற்றி அச்சிறுவன் துறவியிடம் முறையிட்டான்.
அப்போது அந்தத் துறவி சூனியக்காரனைப் பற்றி நீ அஞ்சினால் அவனிடம், "என் வீட்டார் என்னைத் தடுத்துவிட்டனர் (அதனால் தான் தாமதம்) என்று கூறிவிடு; நீ உன் வீட்டாரைப் பற்றி அஞ்சினால், சூனியக்காரன் என்னைத் தடுத்துவிட்டான் (அதனால்தான் தாமதம்) என்று கூறிவிடு" என்று (யோசனை) கூறினார். அவ்வாறே அச்சிறுவன் செய்துகொண்டிருந்தான்.
இந்நிலையில், (ஒருநாள் அச்சிறுவன் செல்லும்போது) மிகப்பெரிய மிருகம் ஒன்றிடம் அவன் வந்தான்.அது மக்களை(ச்செல்லவிடாமல்) தடுத்துக்கொண்டிருந்தது. அப்போது அச்சிறுவன், "இன்று நான் அந்தச் சூனியக்காரன் சிறந்தவனா? அல்லது அந்தத் துறவி சிறந்தவரா என்று அறியப்போகிறேன்" என்று கூறிவிட்டு, ஒரு கல்லை எடுத்து, "இறைவா! அந்தத் துறவியின் நிலை அந்தச் சூனியக்காரனின் நிலையைவிட உனக்கு மிகவும் விருப்பமானதாயிருந்தால், இந்த மிருகத்தைக் கொன்று மக்களைச் செல்லவிடு" என்று கூறி, அந்த மிருகத்தை நோக்கி (கல்லை) எறிந்து, அதைக் கொன்றான். மக்களும் (அச்சமின்றி) நடந்துசென்றனர்.
பிறகு அந்தத் துறவியிடம் சென்று நடந்ததை அவரிடம் தெரிவித்தான். அப்போது அந்தத் துறவி, "அருமை மகனே! நீ இன்று என்னைவிடச் சிறந்தவனாகிவிட்டாய்! உன் தகுதியை நான் இப்போது (கண்கூடாகப்) பார்க்கும் நிலைக்கு நீ வந்துவிட்டாய். இனி நீ சோதனைக் குள்ளாக்கப்படுவாய். அவ்வாறு நீ சோதனைக்குள்ளாக்கப்படும் போது என்னைப் பற்றித் தெரிவிக்காதே" என்று கூறினார்.
அச்சிறுவன் பிறவிக் குருடருக்கும் தொழு நோயாளிகளுக்கும் நிவாரணம் வழங்கினான். இதர நோய்களிலிருந்தும் மக்களுக்கு நிவாரணம் அளித்தான். இதை அரசனின் அவையிலிருந்த ஒருவர் கேள்விப்பட்டார். அவர் (கண்பார்வையற்ற) குருடராக இருந்தார். அவர் ஏராளமான அன்பளிப்புகளுடன் அச்சிறுவனிடம் சென்று, "நீ எனது இந்த நோயைக் குணப்படுத்திவிட்டால், என்னிடமுள்ள இந்தப் பொருட்கள் அனைத்தும் உனக்கே உரியன" என்று கூறினார்.
அதற்கு அச்சிறுவன், "நான் யாருக்கும் நிவாரணமளிப்பதில்லை; அல்லாஹ்வே நிவாரணமளிக்கின்றான். நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டால் நான் (உங்களுக்காக) அல்லாஹ்விடம் பிரார்த்திப்பேன். அவன் உங்களுக்கு நிவாரணமளிப்பான்" என்று கூறினான்.
அவ்வாறே அக்குருடர் இறைநம்பிக்கை கொண்டபோது, அவருக்கு அல்லாஹ் நிவாரணமளித்தான். பிறகு அவர் வழக்கம் போல அரசனிடம் சென்று அமர்ந்தபோது அவரிடம் அந்த அரசர், "உமது பார்வையை உமக்குத் திருப்பிக்கொடுத்தவர் யார்?" என்று கேட்டான்.
அவர், "என் இறைவன்" என்று பதிலளித்தார். அதற்கு அரசன், "உனக்கு என் அல்லாத வேறு இறைவன் உண்டா?" என்று கேட்டான். அதற்கு அவர், "என் இறைவனும் உன்னுடைய இறைவனும் அல்லாஹ்தான்" என்று சொன்னார்.
உடனே அவரைப் பிடித்து, அந்தச் சிறுவனைப் பற்றி அவர் சொல்லும்வரை அவரை அரசன் வேதனைப்படுத்திக் கொண்டேயிருந்தான். பிறகு அந்தச் சிறுவன் கொண்டுவரப்பட்டான். அப்போது அரசன், "குழந்தாய்! நீ சூனியக்கலையால் பிறவிக்குருடரையும் தொழுநோயாளிகளையும் குணப்படுத்தி இன்னின்னவாறு செய்யுமளவுக்குச் சென்றுவிட்டாய்" என்று கூறினான்.
அதற்கு அச்சிறுவன், "நான் யாருக்கும் நிவாரணமளிப்பதில்லை. அல்லாஹ்வே நிவாரணமளிக்கிறான்" என்று கூறினான். பிறகு அச்சிறுவன் அந்தத் துறவியைப் பற்றித் தெரிவிக்கும்வரை அச்சிறுவனையும் அரசன் வேதனைப்படுத்தலானான்.
பிறகு அந்தத் துறவியும் கொண்டுவரப்பட்டார். அவரிடம், "உமது மார்க்கத்திலிருந்து நீர் திரும்பிவிடும்" என்று கூறப்பட்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். ஆகவே, ரம்பம் ஒன்றைக் கொண்டுவரச்சொல்லி, அவரது உச்சந்தலையில் வைத்து, அவரது உடலை இரண்டாகப் பிளந்தான் அரசன். அவர் இரண்டு துண்டாகி விழுந்தார்.
பிறகு அரசனின் அவையில் இருந்த அந்த மனிதர் கொண்டுவரப்பட்டு, "நீ உனது மார்க்கத்திலிருந்து திரும்பிவிடு!" என்று கூறப்பட்டது. அவரும் மறுத்துவிட்டார். எனவே, அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து இரண்டாகப் பிளந்தான் அரசன். அவரும் இரு துண்டுகளாகி விழுந்தார்.
பின்னர் அச்சிறுவன் கொண்டுவரப்பட்டான். அவனிடமும் "நீ உனது மார்க்கத்திலிருந்து திரும்பிவிடு" என்று சொல்லப்பட்டது. அவன் மறுத்துவிட்டான். உடனே அவனைத் தம் ஆட்கள் சிலரிடம் ஒப்படைத்து, "இவனை இன்ன இன்ன மலைக்குக் கொண்டுசெல்லுங்கள். மலை உச்சிக்கு இவனைக் கொண்டு சென்றதும் (அவனிடம் அவனது ஓரிறைக் கொள்கையைக் கைவிடுமாறு கூறுங்கள்.) அவன் தனது மார்க்க்ததிலிருந்து திரும்பிவிட்டால் சரி. இல்லையேல், அவனை மலையிலிருந்து தள்ளிவிடுங்கள்" என்று அரசன் கூறினான்.
அவ்வாறே அவர்கள் அச்சிறுவனை மலை உச்சிக்குக் கொண்டுசென்றனர். அப்போது அச்சிறுவன், "இறைவா! நீ நாடிய முறையில் இவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று" என்று பிரார்த்தித்தான். அப்போது அந்த மலை குலுங்கியது. அவர்கள் அனைவரும் மலையிலிருந்து கீழே விழுந்து விட்டனர்.
பிறகு அச்சிறுவன் அரசனை நோக்கி நடந்துவந்தான். அவனிடம் அரசன், "உன்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள்?"என்று கேட்டான். அதற்கு அச்சிறுவன், "அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைக் காப்பாற்றிவிட்டான்" என்று சொன்னான்.
பிறகு அச்சிறுவனைத் தம் ஆட்களில் வேறு சிலரிடம் ஒப்படைத்து, "இவனை மரக்கலமொன்றில் ஏற்றி,நடுக்கடலுக்குக் கொண்டுசெல்லுங்கள். இவன் தனது (ஏகயிறை) மார்க்கத்திலிருந்து திரும்பிவிட்டால் சரி. இல்லையேல், இவனைத் தூக்கிக் கடலுக்குள் எறிந்துவிடுங்கள்" என்று அரசன் உத்தரவிட்டான்.
அவ்வாறே அவர்கள் கொண்டுசென்றபோது அச்சிறுவன், "இறைவா! நீ நாடிய முறையில் இவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று" என்று பிரார்த்தித்தான். மரக்கலம் அதிலிருந்தவர்களுடன் சேர்ந்து கவிழ்ந்தது. அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கினர். பிறகு அச்சிறுவன் (மட்டும்) அரசனை நோக்கி நடந்துவந்தான்.
சிறுவனைக் கண்ட அரசன், "உன்னுடன் வந்தவர்கள் என்ன ஆனார்கள்?" என்று கேட்டான். அதற்கு அச்சிறுவன், "அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைக் காப்பாற்றிவிட்டான்" என்று கூறிவிட்டு, அரசனைப் பார்த்து, "நான் சொல்கிறபடி நீ நடந்துகொள்ளாத வரை என்னை உம்மால் கொல்ல முடியாது" என்று கூறினான்.
"அது என்ன?" என்று அரசன் கேட்டான். அதற்கு அச்சிறுவன், "நீ மக்கள் அனைவரையும் திறந்த வெளியொன்றில் ஒன்றுதிரட்டு. என்னைச் சிலுவையில் அறைந்துவிடு. பிறகு என் அம்புக்கூட்டிலிருந்து அம்பு ஒன்றை எடுத்து, வில்லில் பொருத்தி பிறகு, "இச்சிறுவனின் இறைவனான அல்லாஹ்வின் பெயரால்" என்று கூறி, (என்னை நோக்கி) அந்த அம்பைப் பாய்ச்சு. இவ்வாறு நீ செய்தால் உன்னால் என்னைக் கொல்ல முடியும்" என்று கூறினான்.
அவ்வாறே மக்களைத் திறந்த வெளியொன்றில் அரசன் ஒன்றுதிரட்டினான். சிறுவனைச் சிலுவையில் அறைந்தான். பிறகு அச்சிறுவனின் அம்புக்கூட்டிலிருந்து அம்பொன்றை எடுத்து வில்லில் பொருத்தி, "இச்சிறுவனின் இறைவனான அல்லாஹ்வின் பெயரால்" என்று கூறி, அந்தச் சிறுவனை நோக்கி அம்பை எய்தான்.
அந்த அம்பு சிறுவனின் நெற்றிப் பொட்டில் பாய்ந்தது. அச்சிறுவன் அம்பு பாய்ந்த நெற்றிப் பொட்டில் கையை வைத்துக்கொண்டே இறந்துபோனான்.
அதைக் கண்ட மக்கள், "நாங்கள் இச்சிறுவனின் இறைவன்மீது நம்பிக்கை கொண்டோம்; நாங்கள் இச்சிறுவனின் இறைவன்மீது நம்பிக்கை கொண்டோம், நாங்கள் இச்சிறுவனின் இறைவன்மீது நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினர்.
பிறகு அரசனிடம் வந்து, "(அரசரே!) நீர் எதை அஞ்சிக்கொண்டிருந்தீரோ அதை நேரடியாகப் பார்த்துவிட்டீரா? அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் அஞ்சியது நடந்தேவிட்டது. மக்கள் அனைவரும் (அச்சிறுவனின் இறைவன்மீது) நம்பிக்கை கொண்டுவிட்டனர்" என்று கூறப்பட்டது.
உடனே அந்த அரசன் தெரு முனைகளில் அகழ் தோண்டுமாறு உத்தரவிட்டான். அவ்வாறே தோண்டப்பட்டதும் அதில் நெருப்பு மூட்டினான்.
பிறகு "யார் (தாம் ஏற்றுக்கொண்ட அந்த ஓரிறை) மார்க்கத்திலிருந்து திரும்பி வரவில்லையோ அவர்களை இதில் எரித்துவிடுங்கள்; அல்லது தூக்கிப்போட்டுவிடுங்கள்" என்று உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் செய்தனர்.
இறுதியில் ஒரு பெண் வந்தாள். அவளுடன் அவளுடைய குழந்தை ஒன்றும் இருந்தது. அ(ந்தத் தீக்குண்டத்)தில் விழ அவள் தயங்கினாள். அப்போது அந்தக் குழந்தை, "அம்மா! (மனதைத் திடப்படுத்தி) பொறுமையுடன் இரு! ஏனெனில், நீ சத்தியத்தில் இருக்கிறாய்" என்று சொன்னது.
அத்தியாயம் : 53