பாடம் : 25 தஜ்ஜாலைப் பற்றிய இன்னும் சில தகவல்கள்.
5643. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜாலைப் பின்தொடர்ந்து "அஸ்பஹான்" (ஈரான்) நாட்டைச் சேர்ந்த யூதர்களில் எழுபதாயிரம் பேர் வருவார்கள். அப்போது அவர்கள் "தயாலிசா" எனும் (கோடு போட்ட கெட்டியான) ஒரு வகை ஆடை அணிந்திருப்பார்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5644. உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "மக்கள் தஜ்ஜாலிடமிருந்து வெருண்டோடி மலைகளுக்குச் சென்றுவிடுவார்கள்" என்று கூறக்கேட்டேன். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! (இறைவழியில் போராடும்) அரபியர் அப்போது எங்கே இருப்பார்கள்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்போது அவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பார்கள்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உம்மு ஷரீக் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5645. அபுத்தஹ்மா (ரஹ்), அபூகத்தாதா (ரலி) உள்ளிட்ட ஒரு குழுவினர் கூறியதாவது:
நாங்கள் ஹிஷாம் பின் ஆமிர் (ரலி) அவர்களைக் கடந்து இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் செல்வோம். ஒரு நாள் ஹிஷாம் (ரலி) அவர்கள், "நீங்கள் என்னைக் கடந்து சில மனிதரை நோக்கிச் செல்கிறீர்கள். அவர்கள் என்னைவிட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் இருந்ததுமில்லை; என்னைவிட அதிகமாக அவர்களிடமிருந்து ஹதீஸ்களைச் செவியுற்றதுமில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைப் படைத்தது முதல் யுக முடிவுநாள் ஏற்படும்வரை தஜ்ஜாலைவிட (குழப்பத்தை ஏற்படுத்துகின்ற) மிகப் பெரும்படைப்பேதும் இல்லை" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இதை ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5646. மேற்கண்ட ஹதீஸ் ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "என் கூட்டத்தைச் சேர்ந்த மூன்றுபேர் கொண்ட ஒரு குழுவினர் என்னிடம் கூறினர். அவர்களில் அபூகத்தாதா (ரலி) அவர்களும் ஒருவராவார். நாங்கள் ஹிஷாம் பின் ஆமிர் (ரலி) அவர்களைக் கடந்து இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் செல்வோம்" என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. அதில், ("தஜ்ஜாலைவிட மிகப்பெரும் படைப்பு" என்பதற்குப் பதிலாக) "தஜ்ஜாலைவிட மிகப் பெரும் பிரச்சினை" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5647. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆறு அடையாளங்கள் நடைபெறுவதவற்கு முன் விரைந்து நற்செயல் புரியுங்கள். சூரியன் மேற்கிலிருந்து உதித்தல்,அல்லது புகை, அல்லது தஜ்ஜால், அல்லது (அதிசயப்) பிராணி, அல்லது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏற்படும் மரணம், அல்லது ஒட்டுமொத்தமாக ஏற்படும் (யுக) முடிவு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5648. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆறு அடையாளங்கள் ஏற்படுவதற்கு முன் விரைந்து நற்செயல் புரியுங்கள். 1. தஜ்ஜால் 2. புகை. 3. பூமியிலிருந்து வெளிப்படும் (அதிசயப்)பிராணி 4. சூரியன் மேற்கிலிருந்து உதயமாதல் 5. ஒட்டுமொத்தமாக ஏற்படும் (யுகமுடிவு) விஷயம் 6. தனிப்பட்ட முறையில் உங்களில் ஒருவருக்கு ஏற்படும் இறப்பு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 26 கொந்தளிப்பான காலத்தில் (இறைவனை) வழிபடுவதன் சிறப்பு.
5649. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கொந்தளிப்பான காலத்தில் இறைவனை வழிபடுவது, (நற்பலனில்) என்னிடம் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வருவதைப் போன்றதாகும்.
இதை மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மஅகில் பின் யசார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 27 யுக முடிவு நாள் நெருங்குதல்.
5650. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் தீயவர்கள் மீதே யுக முடிவு நாள் ஏற்படும். (அதற்கு முன்பே நல்லவர்கள் அனைவரும் மறைந்துவிடுவர்.)
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5651. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தமது பெருவிரலுக்கு அடுத்த (சுட்டு) விரலையும் நடுவிரலையும் (இணைத்துக் காட்டி) சைகை செய்து, "நானும் யுக முடிவு நாளும் இதோ இதைப் போன்று (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்" என்று கூறியதைக் கேட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5652. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் யுக முடிவு நாளும் இதோ இந்த (சுட்டு விரல், நடு விரல் ஆகிய) இரு விரல்களைப் போன்று (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
கத்தாதா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை (எனக்கு) அறிவிக்கும்போது, "(உயரத்தில் அவ்விரல்களில்) ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்திருப்பதைப் போன்று" என்று கூறினார்கள். அதை அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்களா, அல்லது தாமாகவே கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5653. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் யுக முடிவு நாளும் இவ்வாறு அனுப்பப் பட்டுள்ளோம்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும் போது, தம் சுட்டு விரலையும் நடுவிரலையும் இணைத்து (இவ்வாறு என்று) சைகை செய்து காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5654. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் சுட்டு விரலையும் நடுவிரலையும் இணைத்தவாறு "நானும் யுக முடிவு நாளும் இவ்விரு விரல்களைப் போன்று அனுப்பப் பட்டுள்ளோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5655. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வரும்போது யுக முடிவு நாளைப் பற்றி, "அது எப்போது வரும்?" என்று கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அம்மக்களிலேயே வயதில் மிகச்சிறிய மனிதரைப் பார்த்து, "இதோ இவர் உயிருடன் வாழ்ந்தால் இவர் முதுமையை அடையாமல் இருக்கும்போதே உங்களின் யுக முடிவு (இறப்பு) நாள் சம்பவிக்கும்" என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5656. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "யுக முடிவு நாள் எப்போது வரும்?" என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் "முஹம்மத்" எனப்படும் அன்சாரி சிறுவர் ஒருவர் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தச் சிறுவரைக் காட்டி), "இந்தச் சிறுவர் உயிருடன் வாழ்ந்து, அவருக்கு முதுமைப்பருவம் ஏற்படாமலிருக்கும் நிலையில் யுக முடிவு நாள் வரலாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5657. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "யுக முடிவு நாள் எப்போது வரும்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு தமக்கு முன்னாலிருந்த "அஸ்த் ஷனூஆ" குலத்தைச் சேர்ந்த சிறுவர் ஒருவரைக் கூர்ந்து பார்த்துவிட்டு, "இவருக்கு வாழ்நாள் கிடைத்து, முதுமைப் பருவம் ஏற்படாமலிருக்கும்போது யுக முடிவு நாள் வரும்" என்று சொன்னார்கள்.
அந்தச் சிறுவர் அன்று என் வயதொத்தவர்களில் ஒருவராக இருந்தார்.
அத்தியாயம் : 52
5658. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் அடிமைகளில் ஒருவர் (எங்களைக்)கடந்து சென்றார். அவர் என் வயதொத்தவர்களில் ஒருவராக இருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவரது வாழ்நாள் தள்ளிப்போய் இவரை முதுமைப் பருவம் அடைவதற்கு முன்பே யுக முடிவு நாள் வந்துவிடும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5659. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தமது ஒட்டகத்தில் பால் கறந்து அந்தப் பாத்திரத்தைத் தமது வாயருகே கொண்டுசென்றிருக்கமாட்டார். அதற்குள் யுக முடிவு சம்பவித்துவிடும். இரு மனிதர்கள் துணியை விரித்துப்போட்டுப் பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேரத்தை முடிப்பதற்கு முன்பே யுக முடிவு ஏற்பட்டுவிடும். ஒரு மனிதர் தமது தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக்கொண்டிருப்பார். அவர் அதை முடிப்பதற்கு முன்பே யுக முடிவு ஏற்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 28 இரு எக்காளங்களுக்கும் ("ஸூர்") இடைப்பட்ட காலம்.
5660. அபூஸாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த இரு எக்காளத்திற்கு (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பதாகும்" என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.
அப்போது மக்கள், "அபூஹுரைரா அவர்களே! நாட்களில் நாற்பதா?" என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், "(இதற்குப் பதில் சொல்வதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்" என்று கூறினார்கள். மக்கள், "மாதங்களில் நாற்பதா?"என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், "(மீண்டும் நான் விலகிக்கொள்கிறேன்" என்று சொன்னார்கள்.
மக்கள், "வருடங்களில் நாற்பதா?" என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் (மீண்டும்), "நான் விலகிக் கொள்கிறேன் (எனக்கு இது குறித்துத் தெரியாது)" என்று கூறிவிட்டு, "பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான். உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப்போய் விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனது முதுகுத்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5661. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர! அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன் முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5662. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மனிதனின் உடலில் எலும்பு ஒன்று உள்ளது. அதை பூமி ஒருபோதும் புசிக்காது. அதை வைத்தே (மீண்டும்) மறுமை நாளில் அவன் படைக்கப்படுவான்" என்று சொன்னார்கள்.
மக்கள், "அது எந்த எலும்பு அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "உள்வால் எலும்பின் நுனி" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 52