5603. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெரும் பொய்யர்களான சுமார் முப்பது "தஜ்ஜால்"கள் அனுப்பப்படாமல் யுக முடிவுநாள் வராது. அவர்களில் ஒவ்வொருவரும் தம்மை இறைவனின் தூதர் என்று சொல்லிக்கொள்வார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 19 இப்னு ஸய்யாத் பற்றிய குறிப்பு.
5604. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றோம். அவர்களிடையே இப்னு ஸய்யாதும் இருந்தான். (எங்களைக் கண்டதும்) சிறுவர்கள் ஓடிவிட்டனர். இப்னு ஸய்யாத் (மட்டும்) அப்படியே உட்கார்ந்துகொண்டான். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்ததைப் போன்றிருந்தது. ஆகவே, அவனிடம், "உன் கரங்கள் மண்ணைத் தழுவட்டும்! நான் அல்லாஹ்வின் தூதர் என நீ உறுதிமொழி அளிக்கிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என நீர் சாட்சியமளிக்கிறீரா?" என்று கேட்டான்.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். நான் அவனைக் கொன்றுவிடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் கருதக்கூடிய ஒருவனாக (தஜ்ஜாலாக) இவன் இருந்தால், உம்மால் ஒருபோதும் அவனைக் கொல்லமுடியாது. (அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டவர் ஈசா (அலை) அவர்களே)" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5605. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்துசென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதைக் கடந்து சென்றார்கள். அவனிடம், "நான் உனக்காக (என் மனதிற்குள்) ஒன்றை மறைத்துவைத்துள்ளேன் (அது என்ன?)" என்று கேட்டார்கள். அதற்கு அவன் "துக்" என்று சொன்னான். (அதாவது "துகான்" எனும் அத்தியாயத்தை (44) "துக்" என அரைகுறையாகச் சொன்னான்.) அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தூரப்போ! உன்னால் உனது எல்லையைத் தாண்ட முடியாது" என்று சொன்னார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். நான் அவனது கழுத்தை வெட்டிவிடுகிறேன்" என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனை விட்டுவிடுக. நீர் அஞ்சுகின்ற ஒருவனாக (தஜ்ஜாலாக) இவன் இருந்தால், இவனைக் கொல்ல உம்மால் முடியாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5606. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் மற்றும் உமர் (ரலி) ஆகியோரும் மதீனாவின் வீதியொன்றில் அவனை (இப்னு ஸய்யாதை)ச் சந்தித்தார்கள். அவனிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இறைவனின் தூதர் என நீ சாட்சியம் அளிக்கிறாயா?"என்று கேட்டார்கள். அதற்கு அவன், "நான் இறைவனின் தூதர் என நீர் சாட்சியம் அளிக்கிறீரா?" என்று (திருப்பிக்) கேட்டான். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் நம்பிக்கை கொண்டேன். நீ என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், "தண்ணீரின் மீது சிம்மாசனம் ஒன்றைக் காண்கிறேன்" என்று சொன்னான்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ கடல்மீதுள்ள இப்லீஸின் சிம்மாசனத்தையே காண்கிறாய்" என்று கூறிவிட்டு, "இன்னும் என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "(அல்லாஹ்விடமிருந்து செய்திகளைக் கொண்டுவரும்) இரு உண்மையாளர்களையும் ஒரு பொய்யரையும், அல்லது இரு பொய்யர்களையும் ஓர் உண்மையாளரையும் நான் காண்கிறேன்" என்று சொன்னான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனுக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவனை விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5607. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் வழியாகவும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
"நபி (ஸல்) அவர்கள் தம்முடன் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் இருக்க, இப்னு ஸாயிதைச் சந்தித்தார்கள். அப்போது இப்னு ஸாயித் சிறுவர்களுடன் (விளையாடிக் கொண்டு) இருந்தான்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5608. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு ஸாயிதுடன் மக்காவரை பயணம் மேற்கொண்டேன். அப்போது அவன் என்னிடம், "நான் மக்களில் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் என்னை "தஜ்ஜால்" எனக் கருதுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தஜ்ஜாலுக்குக் குழந்தை இருக்காது" என்று கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?" என்று கேட்டான். நான், "ஆம் (கேட்டுள்ளேன்)" என்றேன்.
அவன், "எனக்குக் குழந்தை உள்ளது" என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தஜ்ஜால் மதீனாவுக்குள்ளும் மக்காவுக்குள்ளும் நுழையமாட்டான்" என்று கூறியதை நீங்கள் கேட்டதில்லையா?" என்றான். நான் "ஆம் (கேட்டுள்ளேன்)" என்றேன். அவன், "நான் மதீனாவில் பிறந்தேன். இதோ நான் மக்காவுக்குச் செல்லப் போகிறேன்" என்று கூறினான்.
பிறகு இறுதியாக அவன், "அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தஜ்ஜாலின் பிறப்பையும் அவனது வசிப்பிடத்தையும் இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நன்கறிவேன்" என்று கூறி, என்னைக் குழப்பிவிட்டான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5609. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இப்னு ஸாயித் என்னிடம் பேசியபோது, அவனைப் பழிப்பதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அவன், "(விவரம் தெரியாத காரணத்தால், என்னை "தஜ்ஜால்" என்று நினைக்கும்) பொது மக்களை நான் பொருட்படுத்தவில்லை. (ஆனால்,) முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே! உங்களுக்கும் எனக்குமிடையே என்ன பிரச்சினை? நபி (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) யூதன்" என்று சொல்லவில்லையா? ஆனால், நானோ இஸ்லாத்தை ஏற்றுவிட்டேன்; "அவனுக்குக் குழந்தையேதும் பிறக்காது" என்று நபியவர்கள் சொன்னார்கள். எனக்குக் குழந்தை இருக்கிறது. "அவன் மக்காவுக்குள் நுழைவதை அல்லாஹ் தடைசெய்துவிட்டான்" என்று நபியவர்கள் கூறினார்கள். நான் ஹஜ் செய்துவிட்டேன்" என்று கூறினான்.
இவ்வாறு அவனது சொல்,என்னில் ஒரு மதிப்பை உண்டாக்கும் அளவுக்கு அவன் பேசிக்கொண்டேயிருந்தான். பிறகு அவன், "அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! இப்போது அவன் (தஜ்ஜால்) எங்கே இருக்கிறான் என்பதை நான் அறிவேன். அவனுடைய தந்தையையும் தாயையும் நான் அறிவேன்" என்றான். அவனிடம் "அந்த (தஜ்ஜால் எனும்) மனிதனாக நீ இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறாயா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவன், "அவ்வாறு என்னிடம் கோரப்பட்டால் அதை நான் வெறுக்கமாட்டேன்" என்றான்.
இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5610. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் ஹஜ்ஜுக்கு, அல்லது உம்ராவுக்குச் சென்றோம். எங்களுடன் இப்னு ஸாயிதும் இருந்தான். (வழியில்) நாங்கள் ஓரிடத்தில் தங்கினோம். (ஓய்வெடுப்பதற்காக) மக்கள் கலைந்து சென்றபின் நானும் இப்னு ஸாயிதும் மட்டுமே எஞ்சியிருந்தோம். அவனைப் பற்றிச் சொல்லப்படுகிற விஷயங்களால் அவனருகில் இருப்பதை நான் மிகவும் வெறுத்தேன். அவன் தனது பயணச் சாமான்களைக் கொண்டுவந்து எனது பயணச் சாமான்களுடன் வைத்தான்.
அப்போது நான், "வெயில் கடுமையாக உள்ளது. அந்த மரத்திற்குக் கீழே நீ உன் பொருட்களை வைத்தால் நன்றாயிருக்குமே" என்றேன். அவ்வாறே அவன் செய்தான். அப்போது ஆட்டு மந்தை ஒன்று வந்தது. உடனே அவன் சென்று, ஒரு பெரிய கோப்பை (நிறைய பால்) உடன் என்னிடம் வந்து, "அபூசயீதே! பருகுவீராக" என்றான். நான், "வெயிலும் கடுமையாக உள்ளது. பாலும் சூடாக உள்ளது என்று -அவன் கையிலிருந்து வாங்கி அருந்தப் பிடிக்காமல்,அல்லது அவன் கையிலிருந்து வாங்கப் பிடிக்காமல்- சொன்னேன்.
அவன், "அபூசயீதே! நான் ஒரு கயிற்றை எடுத்துவந்து அதை ஒரு மரத்தில் மாட்டி தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நினைத்தேன். என்னைப் பற்றி மக்கள் பேசிக்கொள்கிற செய்திகளே காரணம். அபூசயீதே! யாருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் தெரியாவிட்டாலும், அன்சாரிகளே! உங்களுக்குத் தெரியாமல் போகாது.
(அபூசயீதே!) நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நன்கறிந்தவர்களில் ஒருவரல்லவா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) இறைமறுப்பாளன்" என்று சொல்லவில்லையா? நானோ ஒரு முஸ்லிமாக இருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) குழந்தை பாக்கியமற்ற மலடன்" என்று கூறவில்லையா? நானோ என் குழந்தையை மதீனாவில் விட்டுவந்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மதீனாவுக்குள்ளும் மக்காவுக்குள்ளும் நுழையமுடியாது" என்று கூறவில்லையா? நானோ,மதீனாவிலிருந்து மக்காவை நாடி வந்துகொண்டிருக்கிறேன்" என்று சொன்னான்.
இதையெல்லாம் கேட்டு அவனை மன்னிக்கும் அளவுக்கு நான் போய்விட்டேன். பிறகு அவன், "அறிந்துகொள்க: அல்லாஹ்வின் மீதாணையாக! தஜ்ஜாலை நான் அறிவேன். அவனது பிறப்பையும், இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நான் அறிவேன்" என்றான். அப்போது நான் "காலமெல்லாம் உனக்கு நாசமுண்டாகட்டும்" என்று கூறி (சபித்து)விட்டேன்.
அத்தியாயம் : 52
5611. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு ஸாயிதிடம், "சொர்க்கத்தின் மண் எது?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "அபுல்காசிமே! அது (நிறத்தில்) வெண்மையான மாவும் (மணத்தில்) கஸ்தூரியும் ஆகும்" என்றான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சரிதான்" என்றார்கள்.
அத்தியாயம் : 52
5612. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இப்னு ஸய்யாத், நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கத்தின் மண்ணைப் பற்றிக் கேட்டான். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வெண்மையான மாவும் சுத்தமான கஸ்தூரியுமாகும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 52
5613. முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், "இப்னு ஸாயித்"தான் தஜ்ஜால் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவதை நான் கண்டேன். நான், "அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "உமர் (ரலி) அவர்கள் "இப்னு ஸாயித்"தான் தஜ்ஜால் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே சத்தியம் செய்து கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5614. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் (அவர்களின் தோழர்களில்) ஒரு குழுவினருடனும் இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள். "பனூ மஃகாலா" குலத்தாரின் மாளிகைக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அவனது முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணரவில்லை.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இறைவனின் தூதர்தான் என்று நீ சாட்சியம் அளிக்கிறாயா?" என்று இப்னு ஸய்யாதிடம் கேட்டார்கள். இப்னு ஸய்யாத் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, "நீங்கள் (எழுதப்படிக்கத் தெரியாத மக்களான) "உம்மி" களின் தூதர் என்று நான் சாட்சியம் அளிக்கிறேன்" என்று பதிலளித்தான். மேலும் அவன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நான் இறைவனின் தூதர்தான் என்று நீங்கள் சாட்சியம் அளிக்கிறீர்களா?" என்றும் கேட்டான்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இஸ்லாத்தைப் பற்றி அவனிடம் எதுவும் கேட்காமல்) அவனை விட்டுவிட்டு, "நான் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
பிறகு அவனிடம், "(உன் நிலை பற்றி) நீ என்ன கருதுகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், "எனக்கு மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் உதிக்கின்றன" என்று கூறினான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உனக்கு இப்பிரச்சினையில் (உண்மையும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்பட்டுள்ளது" என்று கூறிவிட்டு, "நான் ஒன்றை மனதில் உனக்காக (உன்னைச் சோதிப்பதற்காக) மறைத்துவைத்துள்ளேன். (அது என்னவென்று சொல்)" என்று கூறினார்கள். இப்னு ஸய்யாத், "அது "துக்" என்று பதிலளித்தான். (அதாவது "துகான்" (44) எனும் அத்தியாயத்தின் 10ஆவது வசனம் என்பதை அரைகுறையாகச் சொன்னான்.)
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தூரவிலகிப்போ. நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது" என்று கூறினார்கள்.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இவனது கழுத்தை நான் வெட்டி விடுகிறேன்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவன் (இப்னு ஸய்யாத்) அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை; இவன் அவனில்லையென்றால், இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை" என்று சொன்னார்கள்.
- (தொடர்ந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்சந்தோட்டத்தை நோக்கி நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடும் முன்பே அவனிடமிருந்து அவனது பேச்சு எதையாவது கேட்டுவிட வேண்டுமென்று திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களுக்கிடையில் தம்மை மறைத்துக் கொண்டு நடந்தார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தனது படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வைக்குள் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான்.
இப்னு ஸய்யாதின் தாய், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக்கிடையே தம்மை மறைத்துக்கொண்டு வருவதைக் கண்டு, இப்னு ஸய்யாதை, "ஸாஃபியே!" (இது இப்னு ஸய்யாதின் பெயர்) இதோ முஹம்மத்!" என்றாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்து கொண்டான். (அதனால் அவனது பேச்சு எதையும் கேட்க முடியவில்லை.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் அவனை அப்படியே விட்டுவிட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவுபடுத்தியிருப்பான்" என்று சொன்னார்கள்.
- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்பப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, தஜ்ஜாலைப் பற்றிப் பின்வருமாறு பேசினார்கள்:
அவனைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்துத் தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விவரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான்; வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அம்ர் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரஹ்) அவர்கள், நபித்தோழர்களில் சிலர் தம்மிடம் கூறியதாகப் பின்வருமாறு என்னிடம் தெரிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றி எச்சரித்த அன்றைய தினத்தில், "தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையில் "காஃபிர்" (இறைமறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும். அவனது நடவடிக்கையை வெறுக்கின்ற ஒவ்வொருவரும் அதை வாசிப்பார்கள்; அல்லது ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரும் வாசிப்பார்கள்" என்றும், "அறிந்து கொள்ளுங்கள்: உங்களில் எவரும் இறப்பதற்கு முன் தம் இறைவனைப் பார்க்கமுடியாது" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5615. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் ஒரு குழுவினருடன் (இப்னு ஸய்யாதை நோக்கி) நடந்தார்கள். அவர்களுடன் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். இப்னு ஸய்யாத், பனூ முஆவியா குலத்தாரின் மாளிகைக்கருகே சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவன் பருவ வயதை எட்டியிருந்தான்.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அதில் உமர் பின் ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறிய செய்திவரையே இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில், "அவள் அவனை அப்படியே விட்டுவிட்டிருந்தால் அவன் தனது நிலையை தெளிவுபடுத்தியிருப்பான்" என்பதற்கு "அவனுடைய தாய் அவனை அப்படியே விட்டிருந்தால் அவன் தனது நிலையைத் தெளிவுபடுத்தியிருப்பான்" என்று யஅகூப் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5616. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் ஒரு குழுவினருடன் இப்னு ஸய்யாதைக் கடந்து சென்றார்கள். அவர்களுடன் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் இருந்தார்கள். இப்னு ஸய்யாத், "பனூ மஃகாலா" குலத்தாரின் மாளிகைக்கருகே சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சிறுவனாக இருந்தான்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அவற்றில் அப்து பின் ஹுமைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களுடன் (இப்னு ஸய்யாத் தங்கியிருந்த) பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்றதைப் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 52
5617. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இப்னு ஸாயிதை மதீனாவின் சாலைகளில் ஒன்றில் சந்தித்தார்கள். அவர்கள் அவனிடம் ஏதோ சொல்ல அவன் கோபப்பட்டான். உடனே அவனது உடல், தெருவையே அடைத்துக்கொள்ளும் அளவுக்கு (வீங்கி)ப் புடைத்தது. பின்னர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தம் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். நடந்த செய்தி முன்பே ஹஃப்ஸாவுக்குத் தெரிந்திருந்தது.
அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள், "அல்லாஹ் உமக்கு அருள்புரியட்டும்! நீர் இப்னு ஸாயிதிடமிருந்து என்ன எதிர்பார்த்தீர்?" என்று கேட்டுவிட்டு, "உமக்குத் தெரியுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் (தஜ்ஜால்) தனக்கேற்படும் ஒரு கோபத்தின் போதே புறப்படுவான்" என்று கூறியதை நீர் அறியவில்லையா? (ஒருகால் இப்னு ஸய்யாதே தஜ்ஜாலாக இருந்தால் என்னவாயிருக்கும்!)" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 52
5618. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நான் இப்னு ஸய்யாதை இரு முறை சந்தித்தேன். முதல் முறை சந்தித்துவிட்டு வந்து அவ(னுடைய நண்ப)ர்களில் ஒருவரிடம், "இவன் (இப்னு ஸய்யாத்), அவர் (நபி) என்று நீங்கள் பேசிக்கொள்கிறீர்களா?" எனக் கேட்டேன். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை" என்று பதிலளித்தார்.
அதற்கு நான், "நீர் என்னிடம் பொய் சொல்கிறீர். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னிடம், "அவன் உங்களிலேயே அதிகச்செல்வமும் நிறைய குழந்தைகளும் உள்ளவனாக ஆகாத வரை மரணிக்கமாட்டான்" என்று கூறினார்கள். அவனைப் பற்றி அவ்வாறே இன்றும் அவர்கள் கருதிக்கொண்டிருக்கிறார்கள் (நபி என்று கருதாவிட்டால் அவ்வளவு உறுதியாக நீங்கள் எப்படி இவ்வாறு நம்பினீர்கள்?)" என்று கேட்டேன் என்று கூறினார்கள்.
மேலும், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: பிறகு நாங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு,அவனிடமிருந்து நான் (புறப்பட்டு) வந்துவிட்டேன். பிறகு அவனை மறுபடியும் நான் சந்தித்தபோது, அவனது கண் ஒன்று வீங்கிப் புடைத்திருந்தது. நான், "இப்போது நான் காணுகின்ற நிலையில் உன்னுடைய கண் எப்போது மாறியது?"என்று கேட்டேன். அதற்கு அவன், "எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தான். "உன் தலையிலேயே அது இருக்க,உனக்கு எப்படி தெரியாமல் போகும்?" என்று கேட்டேன்.
அதற்கு அவன், "அல்லாஹ் நாடினால் உம்முடைய இந்தக் கைத்தடிக்கும் அல்லாஹ் (இந்தக் குறையுள்ள) கண்ணை உருவாக்குவான்" என்று கூறிவிட்டு, கழுதையைப் போன்று மிகக் கடுமையாகக் கத்தினான். அப்போது என் தோழர்களில் சிலர், என்னிடமிருந்த கைத்தடியால் அது உடையும் அளவுக்கு நான்தான் அவனை அடித்துவிட்டேன் என்று எண்ணினர். "அல்லாஹ்வின் மீதாணையாக! அ(வன் கத்திய)தற்கான காரணத்தை நான் அறியவில்லை.
பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை (ஹஃப்ஸா-ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றித் தெரிவித்தார்கள். அதற்கு இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்கள், "அவனிடம் உமக்கென்ன வேலை?" என்று கேட்டுவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனுக்கு (தஜ்ஜாலுக்கு) ஏற்படும் ஒரு கோபத்தை முன்னிட்டே அவன் மக்களிடையே முதன் முதலில் புறப்பட்டு வருவான்" என்று கூறியதை நீர் அறியவில்லையா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 20 தஜ்ஜால், அவனது தன்மை, அவனு டன் இருப்பவை ஆகியவை பற்றிய குறிப்பு.
5619. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அவர்கள், "அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். அறிந்துகொள்ளுங்கள்! மசீஹுத் தஜ்ஜால் வலக்கண் குருடானவன் ஆவான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5620. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எல்லா இறைத்தூதர்களும் தம் சமுதாயத்தாரை மகா பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். ஆனால், உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரு கண்களுக்கிடையே காஃப், ஃப, ரா (இறைமறுப்பாளன் - காஃபிர்) என்று (தனித் தனி எழுத்துகளில்) எழுதப்பட்டிருக்கும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 52
5621. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையே காஃப், ஃப, ர -அதாவது காஃபிர் (இறைமறுப்பாளன்)- என்று எழுதப்பட்டிருக்கும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5622. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தஜ்ஜால் ஒரு கண் தடவப்பட்டவன் ஆவான். அவனுடைய இரு கண்களுக்கிடையே "காஃபிர்" என்று எழுதப்பட்டிருக்கும். அதை ஒவ்வொரு முஸ்லிமும் வாசிப்பார்" என்று கூறிவிட்டு,அதைத் தனித்தனியாக (காஃப், ஃப, ர என்று) உச்சரித்துக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 52