5560. மேற்கண்ட ஹதீஸ் அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மாடி)அறை ஒன்றில் இருந்தார்கள். அப்போது அதற்குக் கீழே நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே தொடர்கின்றன.
அதில் அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள், "ஃபுராத் அல்கஸ்ஸார் (ரஹ்) அவர்கள் "அந்த நெருப்பு அவர்கள் வாகனங்களிலிருந்து இறங்கித் தங்கும்போதும் அவர்கள் மதிய ஓய்வு மேற்கொள்ளும்போதும் அவர்களுடனேயே இருக்கும்" என்று கூறியதாகவே நான் கருதுகிறேன்" எனத் தெரிவித்ததாக இடம்பெற்றுள்ளது.
மேலும் ஷுஅபா (ரஹ்) அவர்கள், "இந்த ஹதீஸை அபூசரீஹா (ரலி) அவர்களிடமிருந்து அபுத்துபைல் (ரஹ்) அவர்களும் அவர்களிடமிருந்து மற்றொரு மனிதரும் எனக்கு அறிவித்தனர்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை.
மேலும் அபூசரீஹாவிடமிருந்து அறிவிக்கும் இவ்விருவரில் ஒருவர், "மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குவார்கள்" என்பதையும், மற்றொருவர் "ஒரு காற்று கிளம்பி மக்களைத் தூக்கிக் கடலில் வீசும்" என்பதையும் குறிப்பிட்டனர்" என்று காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசரீஹா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஓர் அறிவிப்பில், "நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது (மாடியிலிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை எட்டிப்பார்த்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மற்றோர் அறிவிப்பில், "பத்தாவது அடையாளம், மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குவதாகும்" என்று இடம்பெற்றுள்ளது. அதில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரை அப்துல் அஸீஸ் பின் ருஃபை (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக முடிக்கவில்லை. அபூசரீஹா (ரலி) அவர்கள் கூறியதாகவே முடிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 14 ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பாத வரை யுக முடிவு நாள் வராது.
5561. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டிலுள்ள) "புஸ்ரா" (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளை ஒளிரச் செய்யாத வரை யுகமுடிவு நாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 15 யுக முடிவு நாளுக்குமுன் மதீனாவின் குடியிருப்புகளின் நிலை.
5562. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(யுக முடிவு நாளுக்குமுன் மதீனாவிலுள்ள) குடியிருப்பு (பகுதி)கள் "இஹாப்" அல்லது "யஹாப்" எனுமிடத்திற்குச் சென்றுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) சுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்களிடம், "இந்த (இஹாப் எனும்) இடம் மதீனாவிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?" என்று கேட்டேன். அவர்கள், "இவ்வளவு இவ்வளவு மைல் தூரத்தில் உள்ளது" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 52
5563. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மழை பொய்த்துவிடுவதற்குப் பெயர் பஞ்சமன்று. மாறாக, பஞ்சம் என்பது, மழை பெய்து கொண்டேயிருந்தும் பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காமலிருப்பதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 16 ஷைத்தானின் இரு கொம்புகள் உதயமாகும் கிழக்குத் திசையிலிருந்தே குழப்பங்கள் தோன்றும்.
5564. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை முன்னோக்கி, "நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும். நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து" என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5565. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டுவாசலில் நின்றுகொண்டு, கிழக்குத் திசையை நோக்கித் தமது கையால் சைகை செய்து, "குழப்பம், இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து" என்று இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
5566. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிழக்குத்திசையை முன்னோக்கி, "நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும். நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும்; நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5567. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து, "இறைமறுப்பின் தலை (குழப்பம்), இங்கிருந்து -அதாவது கிழக்கிலிருந்து-தான் தோன்றும்; ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5568. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் கிழக்குத்திசையை நோக்கி சைகை செய்து, "நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும். நினைவில் கொள்ளுங்கள் குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும்"என்று மூன்று முறை கூறிவிட்டு, "ஷைத்தானின் கொம்புகள் உதயமாகும் இடத்திலிருந்து" என்று கூறியதைக் கேட்டேன்.
அத்தியாயம் : 52
5569. ஃபுளைல் பின் ஃகஸ்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இராக்வாசிகளே! நீங்கள் பெரும்பாவத்தைச் செய்துகொண்டு, சிறுபாவத்தைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருப்பது வியப்பையே அளிக்கிறது. என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிழக்குத்திசையை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்தவாறு, குழப்பம் இங்கிருந்துதான் தோன்றும்; ஷைத்தானின் கொம்புகள் உதயமாகும் இடத்திலிருந்து" என்று கூறியதை நான் கேட்டேன்.
(இராக்வாசிகளே!) உங்களில் சிலர் சிலரது கழுத்தை வெட்டிக்கொண்டிருக்கிறீர்கள். (அதைப் பற்றிக்கேட்டால் இறைத்தூதர் மூசா, ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் ஒருவனைக் கொன்றதைச் சான்றாகக் கூறுவீர்கள்.) மூசா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் ஒருவனைத் தவறுதலாகவே கொன்றார்கள்.
எனவேதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மூசா (அலை) அவர்களிடம், "நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து நாம் காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம்" (20:40) என்று கூறினான்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 17 "தவ்ஸ்" குலத்தார் "துல்கலஸா" கடவுள் சிலையை வழிபடாதவரை யுக முடிவு நாள் வராது.
5570. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தவ்ஸ்" குலப்பெண்களின் புட்டங்கள் "துல்கலஸா"வைச் சுற்றி அசையாத வரை யுக முடிவு நாள் வராது.
துல்கலஸா என்பது, "தவ்ஸ்" குலத்தார் அறியாமைக்காலத்தில் (யமனிலுள்ள) "தபாலா" எனுமிடத்தில் வழிபட்டுவந்த கடவுள் சிலையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5571. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அறியாமைக்கால கடவுள் சிலைகளான) "லாத்"தும் "உஸ்ஸா"வும் வழிபாடு செய்யப்படாத வரை இரவும் பகலும் (இல்லாமற்) போகாது" என்று கூறியதைக் கேட்டேன்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! இணை கற்பிப்போர் வெறுத்தபோதிலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நல்வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அவனே தன் தூதரை அனுப்பினான்" (9:33; 61:9) என அல்லாஹ் அருளியபோது, இந்த மார்க்கம் முழுமையடையும் என்றே நான் எண்ணிக்கொண்டிருந்தேன். (ஆனால்,தாங்கள் வேறு விதமாகச் சொல்கிறீர்களே!)" என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உண்மைதான்) விரைவில் அல்லாஹ் நாடிய அளவு இது நடக்கும். பிறகு அல்லாஹ் நல்ல காற்று ஒன்றை அனுப்புவான். அது யாரது உள்ளத்தில் கடுகுமணியளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அந்த ஒவ்வொருவரையும் கைப்பற்றிக்கொள்ளும். பிறகு எந்த நன்மையும் இல்லாதவர்களே (பூமியில்) எஞ்சியிருப்பர். அவர்கள் தம் மூதாதையரின் மார்க்கத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுவர்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 18 ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையைக் கடந்து செல்லும்போது, "நான் இவரது இடத்தில் (இக்குழிக்குள்) இருக்கக் கூடாதா" என்று ஆசைப்படாத வரை யுக முடிவு நாள் வராது; அவர் அனுபவிக்கும் சோதனையே அதற்குக் காரணமாகும்.
5572. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்றை)க் கடந்து செல்லும்போது, "அந்தோ! நான் இவரது இடத்தில் (கப்றுக்குள்) இருக்கக் கூடாதா?" என்று (ஏக்கத்துடன்) கூறாதவரை யுக முடிவு நாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5573. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு மனிதர் (மற்றொரு மனிதரின்) மண்ணறையை (கப்றை)க் கடந்து செல்லும்போது, அதன்மீது அவர் படுத்துப்புரண்டவாறு "அந்தோ! நான் இந்த மண்ணறையில் இருப்பவரது இடத்தில் இருக்கக்கூடாதா" என்று கூறாத வரை உலகம் அழியாது. இ(வ்வாறு அவர் செய்வ)தற்கு,அவர் (வாழ்க்கையில்) சந்திக்கும் சோதனையே காரணமாக இருக்குமே தவிர, மார்க்கம் காரணமாக இருக்காது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5574. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! மக்களுக்கு ஒரு காலம் நிச்சயமாக வரும். (அப்போது) கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொலை செய்தான் என்பது தெரியாது. கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பது தெரியாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5575. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! மக்களுக்கு ஒருநாள் வராதவரை உலகம் அழியாது. அன்று கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொன்றோம் என்பது தெரியாது. கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டோம் என்பது தெரியாது" என்று கூறினார்கள்.
அப்போது "அது எவ்வாறு நடக்கும்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கொலை சர்வ சாதாரணமாகிவிடும். கொன்றவனும் கொல்லப்பட்டவனும் நரகத்திற்குச் செல்வார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5576. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் உடைய ஒரு மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5577. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் உடைய ஒரு மனிதன் கஅபாவை (இடித்து)ப் பாழாக்குவான்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5578. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்கள் உடைய ஒரு மனிதன் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் இல்லத்தை (கஅபாவை இடித்து)ப் பாழாக்குவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5579. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கஹ்தான்" குலத்திலிருந்து ஒரு மனிதர் தோன்றி, தமது கைத்தடியால் மக்களை வழி நடத்தாத வரை யுக முடிவு நாள் வராது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52