5540. மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ("ஆலியா" பகுதியிலிருந்து) வந்தேன். அப்போது அவர்களுடன் அவர்களுடைய தோழர்களில் சிலரும் இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ முஆவியா பள்ளிவாசலைக் கடந்து சென்றார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
பாடம் : 6 யுக முடிவு நாள்வரை நிகழவிருப்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு.
5541. அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நான்,எனக்கும் யுக முடிவு நாளுக்குமிடையே நிகழப்போகும் குழப்பங்கள் குறித்து மக்களிலேயே நன்கு அறிந்தவன் ஆவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் குறித்து எனக்குச் சிலவற்றை இரகசியமாகச் சொல்லியிருந்ததே அதற்குக் காரணமாகும். மற்றவர்கள் அவற்றை அறிவிக்கவில்லை.
எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அவையில் குழப்பங்கள் குறித்துப் பேசினார்கள். அங்கு நானும் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நிகழப்போகும்) குழப்பங்களை எண்ணிக் கணக்கிட்டபடி, "அவற்றில் மூன்று குழப்பங்கள் உள்ளன. அவை எதையுமே விட்டுவைக்காது. அவற்றில் இன்னும் சில குழப்பங்கள் உள்ளன. அவை கோடைகால (வெப்பக்)காற்றைப் போன்றவையாகும். அவற்றில் சிறிய குழப்பங்களும் உள்ளன;பெரிய குழப்பங்களும் உள்ளன" என்று கூறினார்கள்.
(இந்தச் செய்தியைச் செவியுற்ற) அக்குழுவினரில் என்னைத் தவிர மற்ற அனைவரும் (இறந்து) போய்விட்டனர்.
அத்தியாயம் : 52
5542. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நீண்ட நேரம் நின்று கொண்டு, யுக முடிவு நாள் ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் ஒன்றுவிடாமல் குறிப்பிட்டார்கள். அதை மனனமிட்டவர்கள் மனனமிட்டுக்கொண்டார்கள். அதை மறந்தவர்கள் மறந்து விட்டார்கள். இதோ இந்த என் தோழர்கள் அதை அறிந்துகொண்டனர். அவற்றில் ஏதேனும் ஒன்றை நான் மறந்துவிட்டிருந்தாலும் அதை நேரில் காணும் போது, அது என் நினைவிற்கு வந்துவிடும்; தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரது முகத்தை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அதை மறந்தவர்கள் மறந்துவிட்டார்கள்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 52
5543. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யுக முடிவு நாள்வரை ஏற்படும் (குழப்பங்கள்) அனைத்தையும் பற்றி எனக்குத் தெரிவித்தார்கள். அவற்றில் ஒவ்வொன்றைக் குறித்தும் அவர்களிடம் நான் கேள்வி கேட்(டுத் தெரிந்து கொண்)டேன். ஆனால், "மதீனாவாசிகளை மதீனாவிலிருந்து வெளியேற்றுவது எது?" என்பதைப் பற்றி அவர்களிடம் நான் கேட்கவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5544. அபூஸைத் அம்ர் பின் அக்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு "ஃபஜ்ர்" தொழுகை தொழுவித்து விட்டு, சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி எங்களுக்கு உரையாற்றினார்கள். இறுதியில் லுஹர் தொழுகை நேரம் வந்தபோது (மேடையிலிருந்து) இறங்கி, தொழுவித்துவிட்டுப் பிறகு மீண்டும் மேடைமீதேறி "அஸ்ர்" தொழுகைவரை உரையாற்றினார்கள். பிறகு மேடையிலிருந்து இறங்கி (அஸ்ர் தொழுகை) தொழுவித்து விட்டு பிறகு மறுபடியும் மேடைமீதேறி சூரியன் மறையும்வரை உரையாற்றினார்கள். நடந்தவை, நடக்கவிருப்பவை அனைத்தையும் பற்றி (அன்று) எங்களுக்குத் தெரிவித்தார்கள். எங்களில் நன்கறிந்தவர் (அவற்றை) நன்கு மனனமிட்டவர் ஆவார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 7 கடல் அலை போன்று அடுக்கடுக்காய் வரும் குழப்பங்கள்.
5545. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒருமுறை கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் யார் (இனி தலைதூக்கவிருக்கும்) குழப்பங்கள் (ஃபித்னா) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை, அவர்கள் சொன்னதைப் போன்றே நினைவில் வைத்திருக்கிறார்?" என்று கேட்டார்கள். "நான் (நினைவில் வைத்திருக்கிறேன்)"என்றேன்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள் "நீர் துணிவு மிக்க மனிதர்தான்" என்று கூறிவிட்டு, "எப்படிச் சொன்னார்கள்?" என்று கேட்டார்கள். நான், "ஒரு மனிதன் தன் குடும்பத்தார் விஷயத்திலும் (அதாவது அவர்கள்மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதன் மூலமும்), தனது செல்வம் விஷயத்திலும் (அதாவது அது இறைவனைப் பணிந்து வாழும் வாழ்க்கையிலிருந்து திசை திருப்புவதன் மூலமும்), தன் விஷயத்திலும், தன் குழந்தை குட்டிகள் விஷயத்திலும், தன் அண்டை வீட்டார் விஷயத்திலும் (நிறைவேற்ற வேண்டிய உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) சோதனையில் (ஃபித்னா) ஆழ்த்தப்படும்போது தொழுகை, தானதர்மம், நன்மை புரியும்படி ஏவுதல், தீமையிலிருந்து தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமையும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டேன் என்றேன்.
உமர் (ரலி) அவர்கள், "நான் (சோதனை எனும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதைப் பற்றிக் கேட்கவில்லை. கடல் அலையைப் போன்று அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (அல்லாஹ்வின் தூதரால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட "குழப்பம்"எனும் பொருள் கொண்ட ஃபித்னா)வைப் பற்றியே கேட்கிறேன்" என்று சொன்னார்கள்.
நான், "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கும் அதற்குமிடையே என்ன தொடர்பு? (அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.) உங்களுக்கும் அதற்குமிடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது (உங்கள் ஆட்சியில் அவற்றில் ஏதும் தலைதூக்கப் போவதில்லை)" என்று கூறினேன்.
உமர் (ரலி) அவர்கள், "அந்தக் கதவு உடைக்கப்படுமா? அல்லது திறக்கப்படுமா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை;அது உடைக்கப்படும்" என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "(அப்படியானால்) அது ஒருபோதும் மூடப்படாமலிருக்க ஏற்றதே ஆகும்" என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், "உமர் (ரலி) அவர்கள் அந்தக் கதவு (என்பது) யாரைக் குறிக்கும் என அறிந்திருந்தார்களா?" என்று கேட்டோம்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள், "ஆம்; பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று உமர் (ரலி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் அவருக்கு அறிவித்தேன்" என்று பதிலளித்தார்கள்.
அந்தக் கதவு என்பது யாரைக் குறிக்கிறது என ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே,அவர்களிடம் மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்களைக் கேட்கச் சொன்னோம். அவர் (அந்தக் கதவு என்பது யாரைக் குறிக்கிறது என்று) கேட்டதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், "உமர் (ரலி) அவர்கள்தான் அந்தக் கதவு" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5546. மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உமர் (ரலி) அவர்கள், "குழப்பங்கள்" (ஃபித்னா) பற்றி எமக்கு அறிவிப்பவர் யார்?" என்று கேட்டார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 52
5547. ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கூஃபாவாசிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் நியமனம் செய்த ஆளுநரைத் திருப்பியனுப்பிய) "அல்ஜரஆ" தினத்தன்று நான் (கூஃபாவில் ஓரிடத்திற்கு) வந்தேன். அப்போது, அங்கு ஒரு மனிதர் அமர்ந்திருந்தார்.
நான், "இன்றைய தினம் இங்கு இரத்த ஆறு ஓடப்போகிறது" என்று சொன்னேன். அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; (இரத்த ஆறு ஓடாது)" என்று சொன்னார். நான், "ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! (இரத்த ஆறு ஓடும்)" என்றேன். அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை (ஓடாது)" என்றார். நான், "ஆம்;அல்லாஹ்வின் மீதாணையாக (இரத்த ஆறு ஓடும்)" என்றேன். அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை (இரத்த ஆறு ஓடாது). இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்" என்றார்.
நான், "இன்று முதல் நீர் எனக்கு ஒரு தீயநண்பர் ஆவீர். நான் உமக்கு மாறாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர். நீர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றிருந்தும் (ஆரம்பத்திலேயே) என்னை நீர் தடுக்கவில்லையே?" என்று சொன்னேன். பிறகு "ஏனிந்தக் கோபம்?" என்று (எனக்கு நானே) கூறிக்கொண்டு, அவரை நோக்கிச் சென்று அவரைப் பற்றி விசாரித்தேன். அந்த மனிதர் ஹுதைஃபா (ரலி) அவர்களாவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 8 யூப்ரடீஸ் நதி வற்றி, தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தாத வரை யுக முடிவு நாள் வராது.
5548. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மேற்காசியாவில் பாயும்) யூப்ரடீஸ் நதியானது வற்றி, தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தாத வரை யுக முடிவு நாள் வராது. அதற்காக (உரிமை கொண்டாடி) மக்கள் சண்டையிட்டுக்கொள்வர். அப்போது ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்றொன்பது பேர் கொல்லப்படுவர். அவர்களில் ஒவ்வொருவரும் "உயிர் பிழைப்பவர் நானாக இருக்க வேண்டுமே!" என்று கூறுவர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் தக்வான் (ரஹ்) அவர்கள், "அதை நீ கண்டால், அதை நெருங்க வேண்டாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5549. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூப்ரடீஸ் நதியானது வற்றி, தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்தப்போகிறது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துவிட வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5550. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூப்ரடீஸ் நதியானது வற்றி, தங்கமலை ஒன்றை வெளிப்படுத்தப்போகிறது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துவிட வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5551. அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களுடன் நின்றுகொண்டிருந்தேன். அப்போது அவர்கள், "உலகத்தைத் தேடுவதில் மக்கள் தம் கழுத்துகளை நீட்டிக் கொண்டேயிருக்கிறார்கள் (அல்லவா?)" என்று கூறினார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:
யூப்ரடீஸ் நதியானது வற்றி, தங்கமலை ஒன்றை வெளிப்படுத்தப்போகிறது. அதைப் பற்றி மக்கள் கேள்விப்படும்போது,அதை நோக்கிச் செல்வார்கள். அப்போது அந்த மலை அருகில் இருப்பவர், "அதிலிருந்து சிறிதளவை எடுத்துக்கொள்ளட்டும் என மக்களை நாம் விட்டு விட்டால், முழுவதுமாகக் கொண்டு போய்விடுவார்கள்" என்று கூறுவார். எனவே, அதற்காகச் சண்டையிட்டுக்கொள்வார்கள். அப்போது ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்றொன்பது பேர் கொல்லப்படுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகாமில் ஃபுளைல் பின் ஹுசைன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நானும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் ஹஸ்ஸான் கோட்டையின் நிழலில் நின்று கொண்டிருந்தோம்" என (அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் கூறியதாக) ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 52
5552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இராக், தனது (நாணயமான) திர்ஹமையும் (அளவையான) கஃபீஸையும் (தர) மறுக்கும். ஷாம், (சிரியா) தனது (அளவையான) "முத்யு"வையும் தீனாரையும் (தர) மறுக்கும். மிஸ்ர் (எகிப்து), தனது (அளவையான) "இர்தப்பை"யும் தீனாரையும் (தர) மறுக்கும். ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள். ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், "இதற்கு அபூஹுரைராவின் சதையும் இரத்தமும் சாட்சியமளிக்கின்றன" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 9 கான்ஸ்டாண்டிநோபிள் வெற்றி கொள்ளப்படுவதும், (மகா பொய்யன்) தஜ்ஜால் புறப்படுவதும், மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் இறங்குவதும்.
5553. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரோம பைஸாந்தியர், அஃமாக் மற்றும் தாபிக் ஆகிய இடங்களில் நிலைகொள்ளாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களை நோக்கி மதீனாவிலிருந்து ஒரு படை புறப்படும். அன்றைய நாளில் பூமியில் வசிப்போரில் அவர்களே சிறந்தவர்களாயிருப்பர். அவர்கள் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள், எங்களுக்கும் எங்களில் சிறைக்கைதிகளாகப் பிடிக்கப் பட்டோருக்குமிடையே நாங்கள் போர் செய்ய எங்களை விட்டு விடுங்கள்" என்று கூறுவார்கள்.
அப்போது முஸ்லிம்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் சகோதரர்கள் மீது போர் தொடுக்க உங்களை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்" என்று சொல்வார்கள்.
ஆகவே, ரோமர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பார்கள். அப்போது முஸ்லிம்களில் மூன்றிலொரு பகுதியினர் தோற்று வெருண்டோடுவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். அவர்களில் மூன்றிலொரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த உயிர்த்தியாகிகளாவர்; மூன்றிலொரு பகுதியினர் (ரோமர்களை) வெற்றிகொள்வார்கள். அவர்கள் (அதன் பின்னர்) ஒருபோதும் சோதனைக்குள்ளாக்கப் படமாட்டார்கள். இவ்வாறு அவர்கள் கான்ஸ்டாண்டிநோபிளை வெற்றி கொள்வார்கள்.
அவர்கள் தம் வாட்களை ஆலிவ் மரங்களில் தொங்கவிட்டுப் போர்ச்செல்வங்களை பங்கிட்டுக்கொண்டிருக்கும்போது,அவர்களிடையே ஷைத்தான், "நீங்கள் புறப்பட்டு வந்த பின் உங்கள் குடும்பத்தாரிடையே மசீஹ் (தஜ்ஜால்) வந்துவிட்டான்" என்று குரலெழுப்புவான்.
உடனே அவர்கள் தம் குடும்பத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் செல்வார்கள். ஆனால், அது பொய்யான செய்தியாயிருக்கும். அவர்கள் ஷாமுக்கு (சிரியா) வரும்போது "மசீஹ்" (தஜ்ஜால்) புறப்படுவான். இந்நிலையில் அவர்கள் போருக்காக ஆயத்தமாகி அணிகளைச் சீர் செய்து கொண்டிருக்கும்போது, தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும். அப்போது மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி வந்து அவர்களுக்குத் தலைமையேற்பார்கள்.
அவரை அல்லாஹ்வின் விரோதி (தஜ்ஜால்) காணும்போது, தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று கரைந்துபோவான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால்கூட அவன் தானாகக் கரைந்து அழிந்துவிடுவான். ஆயினும், ஈசாவின் கரத்தால் அவனை அல்லாஹ் அழிப்பான். அப்போது ஈசா (அலை) அவர்கள் தமது ஈட்டி முனையில் படிந்துள்ள அவனது இரத்தத்தை மக்களுக்குக் காட்டுவார்கள்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 10 ரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுக முடிவு ஏற்படும்.
5554. உலைய்யு பின் ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் அல்குறஷீ (ரலி) அவர்கள், அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுக முடிவு ஏற்படும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். அப்போது அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "நீர் சொல்வதை யோசித்துக் கொள்ளும்"என்று கூறினார்கள். அதற்கு முஸ்தவ்ரித் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதையே நான் சொல்கிறேன்" என்றார்கள்.
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "நீர் இவ்வாறு கூறுவீராயின் அவர்களிடையே (ரோமர்களிடையே) நான்கு குணங்கள் இருக்கும் (என்பதையும் அறிந்துகொள்க என்றார்கள். (அவையாவன:)
1. அவர்கள் சோதனையின்போது மக்களிலேயே மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஆவர்.
2. சோதனைக்குப் பின்னர் மிக விரைவாக விழித்துக்கொள்பவர்கள்.
3. (களத்திலிருந்து) வெருண்டோடிய பின்னர் மிக விரைவாகத் திரும்பி வருபவர்கள்.
4. ஏழைகள், அநாதைகள், நலிந்தோர் ஆகியோருக்கு நல்லுதவிகள் புரிபவர்கள். ஜந்தாவதாக அவர்களிடம் அழகிய குணம் ஒன்று உண்டு. ஆட்சியாளர்களின் அநீதியிலிருந்து (மக்களைக்) காப்பவர்கள்.
அத்தியாயம் : 52
5555. அப்துல் கரீம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஸ்தவ்ரித் அல்குறஷீ (ரலி) அவர்கள், "ரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுகமுடிவு ஏற்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" என்று கூறினார்கள். இச்செய்தி அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியபோது, "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உங்களிடமிருந்து அறிவிக்கப்படும் இந்த ஹதீஸ்கள் என்ன?" என்று கேட்டார்கள்.
அதற்கு முஸ்தவ்ரித் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதையே கூறினேன்" என்றார்கள். அதற்கு அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "நீர் இவ்வாறு சொல்லியிருந்தால், "அவர்கள் (ரோமர்கள்) சோதனையின்போது மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்கள்; சோதனையின்போது மக்களில் நன்கு நிவாரணம் மேற்கொள்பவர்கள்; தம்மிடையேயுள்ள ஏழைகளுக்கும் நலிந்தவர்களுக்கும் மக்களிலேயே நல்லுதவி புரிபவர்கள்" (என்பதையும் சேர்த்து அறிந்துகொள்க" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 11 தஜ்ஜால் புறப்படும் வேளையில் ரோமர்கள் ஏராளமானோரைக் கொலை செய்து முன்னேறுவார்கள்.
5556. யுசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை இராக்கிலுள்ள) கூஃபாவில் அனல்காற்று வீசியது. அப்போது ஒரு மனிதர், "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களே! யுகமுடிவு வந்துவிட்டது" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வந்தார். உடனே சாய்ந்துகொண்டிருந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நேராக எழுந்து அமர்ந்து, "சொத்துகள் பங்கு போடப்படாத நிலையும் போர்ச்செல்வத்தின் மூலம் மகிழ்ச்சியடையாத நிலையும் ஏற்படாத வரையில் யுகமுடிவு ஏற்படாது" என்று கூறிவிட்டு, தமது கரத்தால் (ஷாம் நாட்டின் திசையை நோக்கி) சைகை செய்து, "இஸ்லாமியரைத் தாக்குவதற்காக எதிரிகளின் படையொன்று ஒன்றுதிரளும். அவர்களை எதிர்கொள்வதற்காக இஸ்லாமியரும் ஒன்றுதிரளுவர்" என்று கூறினார்கள்.
உடனே நான், "ரோம (இத்தாலியக் கிறித்தவ)ர்களையா (எதிரிகள் என்று) கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "ஆம்" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அந்தப் போரின்போது கடுமையான பலப்பிரயோகம் இருக்கும். அப்போது முஸ்லிம்கள் முதலில் ஒரு படையை அனுப்புவார்கள். ஒன்று வீர மரணம், அல்லது வெற்றியை இலக்காகக் கொண்டு அவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள். அவர்கள் (சென்று) போரிட்டுக்கொண்டிருக்கும்போது இரவு நேரம் குறுக்கிட்டுவிடும். ஆகவே, அவர்களில் எவரும் வெற்றி பெறாமல் இரு அணியினரும் (தாக்குதலை நிறுத்திவிட்டுத் தமது முகாமிற்குத்) திரும்பிவிடுவர். ஆனால்,முதலில் சென்ற படையினர் (போரில்) அழிந்துவிடுவர்.
பிறகு (மறுநாள்) முஸ்லிம்கள், ஒன்று வீர மரணம் அல்லது வெற்றி என்ற இலக்கில் மற்றொரு படையை முதலில் அனுப்புவார்கள். அவர்கள் (சென்று) போரிட்டுக்கொண்டிருப்பார்கள். இரவு குறுக்கிடும்போது அவர்களில் எவருமே வெற்றி பெறாமல் திரும்பி விடுவர். ஆனாலும், முதலில் சென்ற அணியினர் அழிந்துவிடுவார்கள்.
பிறகு (மூன்றாம் நாளு)ம், ஒன்று வீர மரணம் அல்லது வெற்றியை இலக்காக்கி மற்றொரு படையை முஸ்லிம்கள் அனுப்புவார்கள். அவர்கள் (சென்று) மாலை நேரமாகும் வரை போரிட்டு எவருக்கும் வெற்றிகிட்டாமல் திரும்பிவிடுவர். அப்போதும் முதலில் சென்ற அணியினர் அழிந்துவிடுவார்கள்.
நான்காம் நாளாகும்போது முஸ்லிம் (படை)களில் எஞ்சியிருப்பவர்கள் எதிரிகளை நோக்கி முன்னேறிச் செல்வார்கள். அப்போது அவர்களுக்கு அல்லாஹ் தோல்வியையே தருவான். (இருந்தாலும்) அவர்கள் ஏராளமான பேரைக் கொன்றுவிட்டிருப்பார்கள். அதைப் போன்ற ஓர் உயிரிழப்பை உலகம் கண்டிராது. எந்த அளவுக்கென்றால், அவர்களைச் சுற்றி பறவைகள் பறக்கும். அவற்றில் ஒன்றுகூட அவர்களைக் கடந்து செல்ல முடியாமல் செத்து விழும் (அந்த அளவுக்குப் பெரிய பரப்பளவில் அவர்கள் மடிந்து கிடப்பார்கள்). நூறு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒரேயொருவர் மட்டுமே எஞ்சுவார்.
அப்போது எந்தப் போர்ச் செல்வத்தைக் கொண்டு மகிழ்ச்சி ஏற்படும்? அல்லது எந்தச் சொத்து பங்கிடப்படும்? இவ்வாறே அவர்கள் இருந்துகொண்டிருக்கும்போது இதைவிட மிகப்பெரிய பேராபத்து ஒன்றைப் பற்றி அவர்கள் கேள்விப்படுவார்கள். அப்போது ஒருவர் (வந்து), "உங்கள் குடும்பத்தாரிடையே தஜ்ஜால் வந்துவிட்டான்" என்று கூவியறிவிப்பார். உடனே அவர்கள் தம் கைகளிலுள்ளவற்றை அப்படியே போட்டுவிட்டு (தம் குடும்பத்தாரை) முன்னோக்கிவருவார்கள். முன்னதாக (தஜ்ஜாலைப் பற்றி அறிவதற்காக) பத்துக் குதிரை வீரர்களை உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் அவர்களுடைய பெயர்களையும் அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் அவர்களுடைய குதிரைகளின் நிறங்களையும் நன்கறிவேன். அன்றைய நாளில் பூமியின் மீதுள்ள குதிரை வீரர்களில் அவர்களே சிறந்தவர்கள்; அல்லது அன்றைய நாளில் பூமியின் மீதுள்ள சிறந்த குதிரை வீரர்களில் அவர்களும் அடங்குவர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (யுசைர் பின் ஜாபிர் என்பதற்குப் பகரமாக) உசைர் பின் ஜாபிர் என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் யுசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அனல் காற்று வீசியது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
ஆனாலும், மேற்கண்ட அறிவிப்பே முழுமையானதும் விரிவானதும் ஆகும்.
- மேற்கண்ட ஹதீஸ் உசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அதில், "நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தேன். அப்போது வீடு நிறைய மக்கள் இருந்தனர். அப்போது கூஃபாவில் அனல் காற்று வீசியது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 12 தஜ்ஜால் வருவதற்குமுன் முஸ்லிம்களுக்குக் கிட்டும் வெற்றிகள்.
5557. நாஃபிஉ பின் உத்பா பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது கம்பளியாடை அணிந்த ஒரு கூட்டத்தார் மேற்கிலிருந்து வந்து ஒரு குன்றின் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள். அக்கூட்டத்தார் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில்) நின்றுகொண்டிருந்தார்கள்.
அப்போது என் மனம், "நீ சென்று அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதருக்குமிடையே நின்று கொள். அல்லாஹ்வின் தூதரை அவர்கள் திடீரெனத் தாக்கிவிட வேண்டாம்" என்று சொன்னது. பிறகு நான், "அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதேனும் இரகசியம் பேசிக்கொண்டிருக்கலாம்" என்று நினைத்தேன். பிறகு அவர்களிடம் வந்து அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் நடுவில் நின்றுகொண்டேன். அப்போது என் கைவிரல்களில் எண்ணியபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு விஷயங்களை மனனமிட்டேன்.
1. நீங்கள் அரபு தீபகற்பம் முழுவதையும் போரிட்டு வெற்றி காணும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
2. பிறகு பாரசீகர்களை வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
3. பிறகு ரோம (பைஸாந்திய)ர்களுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
4. பிறகு நீங்கள் (மகா குழப்பவாதியான) தஜ்ஜாலுடன் போரிட்டு அவனையும் வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
இதன் அறிவிப்பாளரான ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) நாஃபிஉ பின் உத்பா (ரலி) அவர்கள், "ஜாபிரே! ரோமர்கள் வெற்றி கொள்ளப்படாத வரை தஜ்ஜால் புறப்பட்டு வருவான் என நாங்கள் கருதவில்லை" என்றார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 13 யுக முடிவு நாளுக்கு முந்தைய சில அடையாளங்கள்.
5558. அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் (நபி (ஸல்) அவர்களது அறைக்குக் கீழே) பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, "எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். மக்கள், "யுகமுடிவு நாளைப் பற்றி (பேசிக் கொண்டிருக்கிறோம்)" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (பெரிய) பத்து அடையாளங்களைக் காணாத வரை யுகமுடிவு நாள் ஏற்படவே செய்யாது" என்று கூறிவிட்டு, அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள்:
1. புகை, 2. தஜ்ஜால், 3. (பேசும்) பிராணி, 4. மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது, 5. மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் இறங்குதல், 6. யஃஜூஜ், மஃஜூஜ், 7.8.9. மூன்று நில நடுக்கங்கள். ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும், இன்னொன்று அரபு தீபகற்பத்திலும், 10. இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக்கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்றுகூட்டும்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5559. அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மாடி) அறையொன்றில் இருந்தார்கள். நாங்கள் கீழே இருந்தோம். அப்போது அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, "என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். நாங்கள், "யுக முடிவைப் பற்றி (பேசிக்கொண்டிருக்கிறோம்)" என்று சொன்னோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "பத்து அடையாளங்கள் நிகழாதவரை யுகமுடிவு நாள் வராது. 1. கிழக்கில் ஒரு நிலநடுக்கம் 2. மேற்கில் ஒரு நிலநடுக்கம் 3. அரபு தீபகற்பத்தில் ஒரு நிலநடுக்கம் 4. புகை 5. தஜ்ஜால் 6.பூமிக்குள்ளிருந்து வெளிப்படும் (அதிசயப்) பிராணி 7. யஃஜூஜ், மஃஜூஜ் 8. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது 9. (யமன் நாட்டிலுள்ள)"அதன்" பகுதியின் கடைக்கோடியிலிருந்து ஒரு நெருப்புக் கிளம்பி மக்களை வாகனங்களில் ஏறிப் பயணம் புறப்படச் செய்வது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹுதைஃபா பின் அசீத் (ரலி) அவர்களிடமிருந்து அபுத்துஃபைல் (ரஹ்) அவர்களும் அபுத்துஃபைலிடமிருந்து அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்களும் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் எனக்குக் கிடைத்தது. அதில் மேற்கண்ட செய்தி அபூசரீஹா ஹுதைஃபா (ரலி) அவர்களின் கூற்றாகவே வந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இல்லை.
ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இந்த ஹதீஸை மேற்கண்ட இரு அறிவிப்பாளர்களில் ஒருவர்,பத்தாவது "மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குதல்" என்றும், மற்றொருவர் "ஒரு காற்று கிளம்பி மக்களைக் கடலில் தூக்கி வீசுதல்" என்றும் கூறினர்.
அத்தியாயம் : 52