4919. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அன்சாரிகளுக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அன்சாரிகளின் சந்ததிகளுக்கும் அன்சாரிகளால் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்கும் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்தார்கள் என்றே நான் எண்ணுகிறேன். இதில் நான் ஐயம் கொள்ளவில்லை.
அத்தியாயம் : 44
4920. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
திருமண விருந்தொன்றுக்குச் சென்று விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த (அன்சாரிப்) பெண்களையும் சிறுவர்களையும் நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று அவர்களுக்கு நேராக நின்று, "இறைவா! (நீயே சாட்சி)" என்று கூறிவிட்டு, "மக்களிலேயே நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். இறைவா! (நீயே சாட்சி) மக்களிலேயே நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்" என்று அன்சாரிகளைப் பற்றிக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4921. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அன்சாரிப் பெண்களில் ஒருவர் வந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்" என்று மூன்று முறை சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4922. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள். (அன்சாரிகள்) குறைந்துவிடுவார்கள். ஆகவே, அன்சாரிகளில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந்தன்மையுடன்) மன்னித்து விடுங்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 44 அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களின் சிறப்பு.
4923. அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பமாகும். பிறகு பனூ சாஇதா குடும்பமாகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு" என்று சொன்னார்கள்.
அப்போது (பனூ சாஇதா குடும்பத்தைச் சேர்ந்தவரான) சஅத் (பின் உபாதா (ரலி) அவர்கள்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைவிட (மற்ற மூன்று குலங்களைச்) சிறப்பித்துக் கூறியதாகவே நான் அறிகிறேன்" என்று சொன்னார்கள். அப்போது அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இங்கே குறிப்பிடப்படாத இன்னும்) பலரையும்விட உங்களைச் சிறப்பித்துக் கூறி விட்டார்களே!" என்று சொல்லப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஉசைத் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
ஆனால், ஹதீஸி(ன் இறுதியி)ல் இடம்பெற்றுள்ள சஅத் பின் உபாதா (ரலி) அவர்களின் கூற்று இங்கு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4924. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ அப்தில் அஷ்ஹல் அந்நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பமும் பனூ சாஇதா குடும்பமும் ஆகும்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் பின் முஹம்மத் பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அபூஉசைத் (ரலி) அவர்கள், (மதீனா ஆட்சியரான) வலீத் பின் உத்பாவுக்கு அருகில் உரையாற்றியபோது கூறினார்கள். மேலும், அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் ஒன்றுக்கு நான் முதலிடம் தருவதாக இருந்தால், (பனூ சாஇதா எனும்) என் குடும்பத்தாருக்கே முதலிடம் அளித்திருப்பேன்" என்றும் சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4925. அபூஉசைத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது "பனுந் நஜ்ஜார்" குடும்பமாகும். பிறகு "பனூ அப்தில் அஷ்ஹல்" குடும்பமாகும். பிறகு "பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ்" குடும்பமாகும். பிறகு "பனூ சாஇதா" குடும்பமாகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூஉசைத் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது இட்டுக்கட்டுவேனா? நான் பொய்யுரைப்பவனாயிருந்தால், என் பனூசாஇதா குடும்பத்தாரையே முதலில் கூறியிருப்பேன்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிய செய்தி சஅத் பின் உபாதா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது,அவர்கள் மன வேதனைப்பட்டார்கள். மேலும், "(பனூ சாஇதா குலத்தாராகிய) நாங்கள் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டோம். என் கழுதையில் சேணம் பூட்டுங்கள்; நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்லப்போகிறேன்" என்று கூறினார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் மகன் சஹ்ல் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்க நீங்கள் செல்லப் போகிறீர்களா? அல்லாஹ்வின் தூதர்தான் (இதைப் பற்றி) நன்கு அறிந்தவர்கள். (சிறப்பித்துக் கூறப்பட்ட) நான்கு குடும்பங்களில் நான்காவது குடும்பமாக நீங்கள் இருப்பது போதுமாகவில்லையா?" என்று கேட்டார்கள்.
உடனே சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். மேலும், தமது கழுதையை அவிழ்த்துவிடும்படியும் கட்டளையிட்டார்கள். அவ்வாறே அது அவிழ்த்துவிடப்பட்டது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஉசைத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அன்சாரிகளில் சிறந்தவர்கள் அல்லது அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி, கிளைக் குடும்பங்கள் தொடர்பான மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் பற்றிய நிகழ்வு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 44
4926. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஸ்லிம்கள் திரளாகக் குழுமியிருந்த ஓர் அவையில், "அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்ததைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம்; அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர்கள்) "பனூ அப்தில் அஷ்ஹல்" குடும்பத்தார் ஆவர்" என்றார்கள். மக்கள், "பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பிறகு "பனுந் நஜ்ஜார்" குடும்பத்தார்" என்றார்கள். மக்கள், "பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்க, "பிறகு "பனுல் ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ்" குடும்பத்தார்" என்றார்கள்.
"பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டதற்கு, "பிறகு "பனூ சாஇதா" குடும்பத்தார்" என்று விடையளித்தார்கள். "பிறகு யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று மககள் கேட்க, "பிறகு அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது" என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் குலத்தாரின் பெயரை நான்காவதாகக் கூறியதைக் கேட்டு சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கோபத்துடன் எழுந்து, "நான்கு குடும்பங்களில் நாங்கள் தான் கடைசியா?" என்று கேட்டபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அது பற்றிப்) பேச முனைந்தார்கள்.
அப்போது அவர்களுடைய குலத்தைச் சேர்ந்த சிலர், "அமருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் குடும்பத்தை நான்கு குடும்பங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டதே உங்களுக்குத் திருப்தியளிக்கவில்லையா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட குடும்பத்தாரின் எண்ணிக்கையே, பெயர் குறிப்பிட்ட குடும்பங்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகும்" என்று கூறினர்.
ஆகவே, சஅத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேசாமல் விலகிக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 45 அன்சாரிகளுடன் நல்லுறவு பாராட்டல்.
4927. அனஸ் பின் மாலிக் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அவர்கள் எனக்குப் பணிவிடைகள் செய்துவந்தார்கள். நான் "(எனக்கு) நீங்கள் (பணிவிடைகள்) செய்ய வேண்டாம்" என்று அவர்களிடம் கூறினேன்.
அதற்கு ஜரீர் (ரலி) அவர்கள், "அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் செய்த (உயர்ந்த நன்மை) ஒன்றை நான் பார்த்திருக்கிறேன். (அன்றே) "அன்சாரிகளில் எவருடன் நான் சென்றாலும் அவருக்கு நான் பணிவிடைகள் செய்தே தீருவேன்" என்று சத்தியம் செய்துவிட்டேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னுல் முஸன்னா (ரஹ்), இப்னு பஷ்ஷார் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், "ஜரீர் (ரலி) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைவிடப் பெரியவராக இருந்தார்கள்" என்றும், இப்னு பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அனஸ் (ரலி) அவர்களைவிட வயதில் மூத்தவராக இருந்தார்கள்" என்றும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 46 நபி (ஸல்) அவர்கள் "ஃகிஃபார்" மற்றும் "அஸ்லம்" குலத்தாருக்காகச் செய்த பிரார்த்தனை.
4928. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குவானாக. அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச்செய்வானாக" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4929. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "நீங்கள் உங்கள் (ஃகிஃபார்) குலத்தாரிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச்செய்வானாக! ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குவானாக!" எனப் பிரார்த்தித்தார்கள் என்று கூறுங்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4930. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச்செய்வானாக. ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் பாவ மன்னிப்பு அருள்வானாக" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இதே ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாகவும் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4931. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அஸ்லம் குலத்தாருக்கு அல்லாஹ் அமைதியை வழங்கிவிட்டான். ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு அருளிவிட்டான். இவ்வாறு நான் சொல்லவில்லை. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்தான் சொன்னான்" என்றார்கள்.
அத்தியாயம் : 44
4932. குஃபாஃப் பின் ஈமா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு தொழுகையில், "இறைவா! பனூ லிஹ்யான், ரிஅல், தக்வான் ஆகியோரைச் சபிப்பாயாக! உஸைய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்துவிட்டனர். ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குவானாக! அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச் செய்வானாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 44
4933. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குவானாக! அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் அமைதி காணச்செய்வானாக! உஸைய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்துவிட்டனர்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஸாலிஹ் மற்றும் உசாமா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி இவ்வாறு கூறினார்கள்" என்று காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
பாடம் : 47 ஃகிஃபார், அஸ்லம், ஜுஹைனா, அஷ்ஜஉ, முஸைனா, தமீம், தவ்ஸ், தய்யி ஆகிய குலத்தாரின் சிறப்புகள்.
4934. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகளும், முஸைனா குலத்தாரும், ஜுஹைனா குலத்தாரும், ஃகிஃபார் குலத்தாரும், அஷ்ஜஉ குலத்தாரும், பனூ அப்தில்லாஹ் குலத்தில் இருப்போருமே (இஸ்லாத்தை, அதன் ஆரம்பக் கட்டத்திலேயே தழுவிய காரணத்தால்) என் சிறப்பு உதவியாளர்கள் ஆவர்; மற்றவர்கள் அல்லர். அவர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே பொறுப்பாளர்கள் ஆவர். - இதை அபூஅய்யூப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 44
4935. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குறைஷியரும், அன்சாரிகளும், முஸைனா குலத்தாரும், ஜுஹைனா குலத்தாரும், அஸ்லம் குலத்தாரும், ஃகிஃபார் குலத்தாரும், அஷ்ஜஉ குலத்தாரும் என் சிறப்பு உதவியாளர்கள் ஆவர். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அன்றி பொறுப்பாளர்கள் வேறெவரும் இலர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் சில குலத்தார் குறித்து அறிவிப்பாளர் சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகையில் "நான் அறிந்தவரையில் இவ்வாறு தான்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 44
4936. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, "ஜுஹைனா குலத்தில் இருப்போர்" அல்லது ஜுஹைனா ஆகிய குலங்கள், பனூ தமீம்,பனூ ஆமிர் மற்றும் ஒன்றுக்கு ஒன்று நட்புறவு கொண்டிருந்த அசத் மற்றும் ஃகதஃபான் குலங்கள் ஆகியவற்றைவிடச் சிறந்தவை ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4937. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஃகிஃபார், அஸ்லம், "முஸைனா", அல்லது "முஸைனா குலத்தில் இருப்போர்", "ஜுஹைனா குலத்தில் இருப்போர்" அல்லது "ஜுஹைனா" ஆகிய குலங்கள் மறுமை நாளில் அல்லாஹ்விடம் அசத், தய்யி, ஃகதஃபான் ஆகிய குலங்களைவிடச் சிறந்தவையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44
4938. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்லம் குலத்தாரும், ஃகிஃபார் குலத்தாரும், "முஸைனா மற்றும் ஜுஹைனா குலத்தாரில் சில குடும்பங்களும்"அல்லது "ஜுஹைனா மற்றும் முஸைனா குலத்தாரில் சில குடும்பங்களும்" மறுமை நாளில் அல்லாஹ்விடம் அசத், ஃகதஃபான், ஹவாஸின், தமீம் ஆகிய குலங்களைவிடச் சிறந்தவை ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 44