4609. ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "நான் எனது ("அல் கவ்ஸர்") தடாகத்தில் நீர் அருந்தும் பகுதியில் நின்றுகொண்டு யமன்வாசிகளுக்(கு முன்னுரிமை அளிப்பதற்)காக மற்றவர்களை விரட்டுவேன். யமன்வாசிகளுக்குத் தண்ணீர் கிடைப்பதற்காக எனது (கையிலுள்ள) தடியின் மூலம் மற்றவர்களை அடிப்பேன்" என்று சொன்னார்கள்.
அப்போது நபியவர்களிடம் அத்தடாகத்தின் அகலம் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அது, எனது வசிப்பிட(மான மதீனா நகர)த்திலிருந்து "அம்மான்"வரை உள்ள தொலைவிற்கு அகலமானதாகும்" என்றார்கள்.
அத்தடாகத்தின் பானம் குறித்து வினவப்பட்டபோது, "அது, பாலைவிட வெண்மையானது; தேனைவிட இனிமையானது. சொர்க்கத்திலிருந்து நீளுகின்ற இரு வடிகுழாய்கள் அத்தடாகத்திற்குள் தொடர்ச்சியாகத் தண்ணீரைப் பாய்ச்சிக்கொண்டிருக்கும். அக்குழாய்களில் ஒன்று தங்கத்தாலானது; மற்றொன்று வெள்ளியாலானது" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் மறுமை நாளில் (அல்கவ்ஸர்) தடாகத்தில் நீர் அருந்தும் பகுதியில் இருப்பேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
-(அல்கவ்ஸர்) தடாகம் தொடர்பான மேற்கண்ட ஹதீஸ், ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது:
நான் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த யஹ்யா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்களிடம், "நீங்கள் இந்த ஹதீஸை அபூஅவானா (ரஹ்) அவர்களிடமிருந்தே செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள், "இதை நான் ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்தும் செவியுற்றுள்ளேன்" என்று பதிலளித்தார்கள். உடனே நான், "அது குறித்து நன்கு சிந்தித்துச் சொல்லுங்கள்" என்று கேட்டேன். அப்போது அவர்கள் நன்கு சிந்தித்துவிட்டு, அவ்வாறே (ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்தே) எனக்கு அறிவித்தார்கள்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4610. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ("அல்கவ்ஸர்" எனும்) எனது தடாகத்தைவிட்டு, ஒட்டகங்களிடமிருந்து அந்நிய ஒட்டகங்களை விரட்டுவதைப் போன்று சில மனிதர்களை விரட்டுவேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4611. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தடாகத்தின் (பரப்பு) அளவு, யமனிலுள்ள "ஸன்ஆ" நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) "அய்லா"நகரத்திற்கும் இடையேயான (தொலைதூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (எண்ணற்ற) கோப்பைகள் இருக்கும். - இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4612. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னுடனிருந்த என் தோழர்களில் சிலர் (மறுமையில் "அல்கவ்ஸர்") தடாகத்துக்கு என்னிடம் வருவார்கள். நான் அவர்களைப் பார்க்கும்போது அவர்கள் (நானிருக்கும் பகுதிக்கு) ஏறிவருவர். அப்போது என்னைவிட்டு அவர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். அப்போது நான், "இறைவா! (இவர்கள்) என் அருமைத் தோழர்கள்; என் அருமைத் தோழர்கள்" என்பேன். அதற்கு, "உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீர் அறியமாட்டீர்" என்று என்னிடம் கூறப்படும்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அதன் கோப்பைகள் விண்மீன்களின் (கணக்கிலடங்கா) எண்ணிக்கையில் அமைந்ததாகும்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4613. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது (அல்கவ்ஸர்) தடாகத்தின் இரு கரைகளுக்கிடையிலான தொலைதூரம், (யமனிலுள்ள) "ஸன்ஆ"வுக்கும் மதீனாவுக்கும் இடையேயுள்ள தொலைதூரம் போன்றதாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4614. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (ஸன்ஆவுக்கும் மதீனாவுக்கும் இடையேயுள்ள தொலைதூரம் போன்றதாகும்.) அல்லது மதீனாவுக்கும் அம்மானுக்கும் இடையேயுள்ள தொலைதூரம் போன்றதாகும் என ஐயப்பாடுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அபூ அவானா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எனது (அல்கவ்ஸர்) தடாகத்தின் இருகரைகளுக்கும் இடையேயுள்ள தொலைதூரம்..."என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 43
4615. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அத்தடாகத்தில் விண்மீன்களின் எண்ணிக்கை அளவுக்குப் பொன்னாலும் வெள்ளியாலுமான கோப்பைகள் காணப்படும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அதன் கோப்பைகள் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவையாகும்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
4616. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு முன்பே ("அல்கவ்ஸர்" எனும்) அத்தடாகத்தினருகில் உங்களுக்காகக் காத்திருப்பேன். அதன் இரு ஓரங்களுக்கு இடையேயுள்ள தூரம், (யமனிலுள்ள) "ஸன்ஆ"வுக்கும் "அய்லா"வுக்கும் இடையே உள்ள தூரத்தைப் போன்றதாகும். அதிலுள்ள கோப்பைகள் (எண்ணிக்கையில்) விண்மீன்களைப் போன்றவையாகும்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4617. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் அடிமை நாஃபிஉ மூலம் ஜாபிர் பின சமுரா (ரலி) அவர்களுக்கு "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்குத் தெரிவியுங்கள்" என்று கடிதம் எழுதினேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் உங்களுக்கு முன்பே சென்று (உங்களுக்கு நீர் புகட்டக்) காத்திருப்பேன்" என்று கூறியதைக் கேட்டுள்ளேன்" என்று பதில் கடிதம் எழுதினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) அவர்களுக்காக (வானவர்கள்) ஜிப்ரீல் (அலை), மீக்காயீல் (அலை) ஆகியோர் (எதிரிகளுடன்) போரிட்டது.
4618. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரு மனிதர்களை -அதாவது ஜிப்ரீல் (அலை), மீக்காயீல் (அலை) ஆகியோரை- நான் பார்த்தேன். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4619. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வலப் பக்கமும் இடப் பக்கமும் வெண்ணிற ஆடைகள் அணிந்த இரு மனிதர்களை நான் பார்த்தேன். அவ்விரு மனிதர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.
அத்தியாயம் : 43
பாடம் : 11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும்.
4620. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (குணத்திலும் தோற்றத்திலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடைகுணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
ஒரு (நாள்) இரவு மதீனவாசிகள், (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியுற்றார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களில் சிலர் நடந்தனர். (உண்மை நிலை அறிய) அத்திசையை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்பே சென்று விட்டிருந்தார்கள். பிறகு அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூதல்ஹா (ரலி) அவர்களது (சேணம் பூட்டப்படாத) வெற்றுடலான குதிரையின்மீது அமர்ந்தவண்ணம் திரும்பி வந்து மக்களைச் சந்தித்து, "பீதியடையாதீர்கள்; பீதியடையாதீர்கள்" என்று (மக்களைப் பார்த்துச்) சொன்னார்கள்.
பிறகு "(அலை வீசும்) கடலாகவே (தங்கு தடையின்றி ஓடக்கூடியதாகவே) இக்குதிரையை நாம் கண்டோம்" அல்லது "இக்குதிரை ஒரு கடலாகும்" என்று சொன்னார்கள். (அதற்கு முன்னர்) அக்குதிரை மெதுவாக ஓடக்கூடியதாகவே இருந்தது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4621. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி மக்களிடையே) பீதி ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குரிய "மன்தூப்" எனப்படும் குதிரை ஒன்றை இரவல் வாங்கி, (உண்மை நிலையைக் கண்டறிய எதிரிகள் வருவதாகச் சொல்லப்பட்ட திசையில்) அக்குதிரையிலேறிச் சென்றார்கள்.
பிறகு திரும்பி வந்து "பீதியூட்டும் எதையும் நாம் காணவில்லை. இக்குதிரையை (தொடர்ந்து அலை வீசும்) கடலாகவே (தங்குதடையின்றி ஓடக்கூடியதாகவே) நாம் கண்டோம்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குரிய" என்பதற்குப் பதிலாக "எங்களுக்குரிய குதிரை" ஒன்றை இரவல் வாங்கினார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 12 மக்களிலேயே நபி (ஸல்) அவர்கள், தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றை விட அதிகமாகச் செல்வங்களை வாரி வழங்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
4622. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே செல்வங்களை அதிகமாக வாரி வழங்கக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் ரமளான் மாதத்தில் மேன்மேலும் அதிகமாக வாரி வழங்குவார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் (ஒவ்வோர் இரவிலும்) அந்த மாதம் முடியும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். அவ்வாறு ஜிப்ரீல் தம்மைச் சந்திக்கும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட அதிகமாகச் செல்வங்களை வாரி வழங்குவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களிலேயே மிகவும் அழகான பண்புகள் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள்.
4623. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை (மனம் வேதனைப்படும்படி) "ச்சீ" என்றோ "இதை ஏன் செய்தாய்?" என்றோ, "நீ இப்படிச் செய்திருக்கக் கூடாதா?" என்றோ எதற்காகவும் அவர்கள் (கடிந்து) சொன்னதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபுர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பணிவிடை செய்பவர் செய்ய வேண்டிய ஒரு செயலில் ("ச்சீ"என்றோ, "இதை ஏன் செய்தாய்?" என்றோ அவர்கள் கேட்டதில்லை)" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மேலும், "அல்லாஹ்வின் மீதாணையாக!" எனும் குறிப்பு அதில் இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4624. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது (என் தாயாரின் இரண்டாம் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள், எனது கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலிப் பையன்; அவன் தங்களுக்குப் பணிவிடை செய்யட்டும்" என்று சொன்னார்கள்.
அதன்படி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும்போதும் பயணத்தில் இருக்கும்போதும் அவர்களுக்குப் பணிவிடை செய்துவந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் செய்த எதைப் பற்றியும் "இதை நீ ஏன் இப்படிச் செய்தாய்?" என்றோ, நான் செய்யாமல் விட்ட எதைப் பற்றியும் "இதை நீ ஏன் இப்படிச் செய்யவில்லை?" என்றோ அவர்கள் என்னிடம் கேட்டதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4625. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அவர்கள் ஒருபோதும் என்னிடம் "இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?" என்று கேட்டதாக எனக்குத் தெரியவில்லை; அவர்கள் எதற்காகவும் என்னை ஒருபோதும் குறை கூறியதுமில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4626. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போகமாட்டேன்" என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது.
நான் புறப்பட்டுச் சென்றபோது, கடைத்தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்தபோது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். "அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்; செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னேன்.
மேலும் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒன்பது ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த எதைப் பற்றியும் "இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?" என்றோ, நான் செய்யாமல் விட்டுவிட்ட எதைப் பற்றியும் "நீ இன்னின்னதைச் செய்திருக்கக் கூடாதா?" என்றோ அவர்கள் என்னிடம் கேட்டதாக எனக்குத் தெரியவில்லை.
அத்தியாயம் : 43
4627. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய பண்புகள் கொண்டவர்களாய்த் திகழ்ந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் "இல்லை" என்று சொன்னதில்லை என்பதும், அவர்கள் தாராளமாக நன்கொடைகள் வழங்கியதும்.
4628. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் "இல்லை" என்று சொன்னதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்படியே ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43