4589. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் என் சமுதாயத்தாரின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். விட்டில் பூச்சிகளும் இதர பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. (நரக நெருப்பில் விழுவதிலிருந்து உங்களைத் தடுக்க) உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்), நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4590. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலை ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளி வீசியபோது நெருப்பைச் சுற்றும் விட்டில் பூச்சிகளும் இதர பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றை(த் தீயில் விழவிடாமல்) தடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரையும் மீறி அவை தீயில் விழுகின்றன.
இதுதான் எனது நிலையும் உங்களது நிலையும் ஆகும். (நரக) நெருப்பி(ல் விழுவதி)லிருந்து உங்களைத் தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக்கொண்டிருக்கிறேன். "நெருப்பிலிருந்து விலகி வாருங்கள். நெருப்பிலிருந்து விலகி வாருங்கள்" என்று சொல்கிறேன். ஆனால், நீங்களோ என்னையும் மீறி நரகத்தில் நுழைந்துகொண்டிருக்கிறீர்கள்.
அத்தியாயம் : 43
4591. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் உங்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அதில் வெட்டுக்கிளிகளும் விட்டில் பூச்சிகளும் விழலாயின. அவர் அதி(ல் விழுவதி)லிருந்து அவற்றைத் தடுத்துக்கொண்டிருந்தார். (இவ்வாறுதான்) நரக நெருப்பி(ல் விழுவதி)லிருந்து (உங்களைத் தடுக்க) உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனது கையிலிருந்து நீங்கள் நழுவிக்(கொண்டு நெருப்பை நோக்கி ஓடிக்)கொண்டிருக்கிறீர்கள்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 7 நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதர் என்பது பற்றிய குறிப்பு.
4592. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் (எனக்கு முன்பிருந்த) இதர இறைத்தூதர்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு கட்டடத்தை நேர்த்தியாகவும் அழகாகவும் கட்டினார். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு "இதைவிட அழகான கட்டடத்தை நாங்கள் கண்டதேயில்லை. இதோ இந்த (மூலையில் வைக்கப்படாமலிருக்கும்) செங்கலைத் தவிர" என்று கூறினர். நான்தான் அந்தச் செங்கலாக இருக்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4593. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் நேர்த்தியாகவும் அழகாகவும் முழுமையாகவும் (பல அறைகள் கொண்ட) இல்லம் ஒன்றைக் கட்டினார். இல்லத்தின் ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவைத்தார். மக்கள் (வந்து) அதைச் சுற்றிப் பார்க்கலாயினர். அந்த இல்லம் அவர்களைக் கவர்ந்தது. அப்போது அவர்கள், "நீர் இந்த இடத்தில் ஒரு செங்கல் வைத்திருக்கக்கூடாதா? (வைத்திருந்தால்) உமது கட்டடம் முழுமையடைந்திருக்குமே!" என்று கூறினர்.
நான்தான் அந்தச் செங்கல் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 43
4594. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்கள் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு கட்டடத்தை அழகாகவும் எழிலாகவும் கட்டினார். அதன் ஒரு மூலையில் ஒரு செங்கல் வைக்குமளவுக்கான இடத்தை மட்டும் விட்டு வைத்தார். மக்கள் வந்து அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவரிடம் (அதன் அழகு குறித்து) வியப்புத் தெரிவித்தனர்; "(இந்த இடத்தில்) இந்தச் செங்கல் வைக்கப்பட்டிருந்தால் நன்றாயிருக்குமே!" என்று கூறினர். நானே அந்தச் செங்கல். நானே இறுதி இறைத்தூதர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வாயிலாகவும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் "எனது நிலையும் இதர இறைத்தூதர்களின் நிலையும்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 43
4595. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது நிலையும் இதர இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமையாகவும் நிறைவாகவும் அந்த வீட்டைக் கட்டி முடித்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டுவிட்டு) வியப்படைந்து, "இந்தச் செங்கல்லின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!" என்று கூறலாயினர். நானே அந்தச் செங்கல்லின் இடத்தில் இருக்கிறேன். நானே நபிமார்களில் இறுதியாக வந்தேன். - இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "முழுமையாகவும்" என்பதற்குப் பகரமாக "அழகாகவும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 43
பாடம் : 8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள்புரிய விரும்பினால், அதற்கு முன்பே அதன் தூதரைக் கைப்பற்றிக்கொள்வான்.
4596. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் தன் அடியார்களில் ஒரு சமுதாயத்தாருக்கு அருள்புரிய நாடினால்,அதற்கு முன்னரே அதன் தூதரைக் கைப்பற்றி, அவரை அந்தச் சமுதாயத்தாருக்கு முன்பே சென்று (தக்க ஏற்பாடுகளுடன்) காத்திருக்கச் செய்கிறான். அல்லாஹ் ஒரு சமுதாயத்தாரை அழிக்க நாடினால், அந்தச் சமுதாயத்தாரின் தூதர் உயிருடனிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்போதே அச்சமுதாயத்தாரை வேதனைக்குள்ளாக்கி அழிக்கிறான். அவரை நம்ப மறுத்து அவரது கட்டளைக்கு மாறுசெய்யும்போது, அவர்களை அழிப்பதன் மூலம் அவரைக் கண் குளிர்ச்சி அடையச் செய்கிறான்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
பாடம் : 9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் "அல்கவ்ஸர்" எனும்) நீர்த் தடாகம் உண்டு என்பதும் அதன் சிறப்புத் தன்மைகளும்.
4597. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு முன்பே ("அல்கவ்ஸர்") தடாகத்திற்குச் சென்று (உங்களுக்கு நீர் புகட்டக்) காத்திருப்பேன்.
இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4598. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு முன்பே ("அல்கவ்ஸர்") தடாகத்திற்குச் சென்று (உங்களுக்கு நீர் புகட்டக்) காத்திருப்பேன். யார் (என்னிடம்) வருகிறாரோ அவர் (அத்தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு ஒருபோதும் தாகமே ஏற்படாது. (அத்தடாகத்தினருகில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடை ஏற்படுத்தப்படும்.
இதை சஹல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸை சஹ்ல் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை அறிவித்துக்கொண்டிருந்தபோது, அதைச் செவியுற்றுக்கொண்டிருந்த நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்கள் "இவ்வாறு சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?"என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அப்போது நுஅமான் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அபூசயீத் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூடுதலாக அறிவித்ததையும் நான் செவியுற்றேன்:
அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் (என் தோழர்கள்)" என்று சொல்வார்கள். அப்போது "உங்களுக்குப் பின்னால் அவர்கள் செய்ததை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறப்படும். "அப்போது நான், எனக்குப் பின்னர் (தமது மார்க்கத்தை) மாற்றிக்கொண்டவர்கள் தொலைந்து போகட்டும்; தொலைந்து போகட்டும்" என்று கூறுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் (ரலி) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாக இன்னோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4599. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
("அல்கவ்ஸர்") எனும் எனது தடாகம் (பரப்பளவில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவு கொண்டதாகும். அதன் அனைத்து மூலைகளும் சமஅளவு கொண்டவையாகும். அதன் நீர் வெள்ளியைவிட வெண்மையானதாகும். அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்ததாகும். அதன் (விளிம்பிலிருக்கும்) கூஜாக்கள், (எண்ணிக்கையில்) விண்மீன்கள் போன்றவையாகும். யார் அதன் நீரை அருந்துகிறாரோ அவர் அதன்பின் ஒருபோதும் தாகமடையமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு சொன்னார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (எனது "அல்கவ்ஸர்" எனும்) தடாகத்தினருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்கவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள்.
உடனே நான் "இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்" என்பேன். அதற்கு "உமக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீர் அறிவீரா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தம் குதிகால்கள்மீது (தமது பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றுகொண்டேயிருந்தார்கள்" என்று கூறப்படும்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ பின் உமர் அல்ஜுமஹீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதனால்தான் இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்கள்மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் எங்கள் மார்க்கம் தொடர்பாகக் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று பிரார்த்திப்பார்கள்.
அத்தியாயம் : 43
4600. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் முன்னிலையில் இருந்தபடி கூறினார்கள்: நான் எனது ("அல்கவ்ஸர்" எனும்) தடாகத்தினருகில் உங்களில் என்னிடம் வருபவர் யார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னிடம் நெருங்கவிடாமல் தடுக்கப்படுவர். அப்போது நான் "இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்" என்று கூறுவேன். அதற்கு இறைவன், "இவர்கள் உமக்குப் பின்னால் செய்ததை நீர் அறியமாட்டீர். இவர்கள் தம் குதிகால்கள்மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றுகொண்டேயிருந்தனர்" என்று கூறுவான்.
அத்தியாயம் : 43
4601. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் ("அல்கவ்ஸர்" எனும் சிறப்புத்) தடாகம் குறித்துக் கூறுவதை நான் கேள்விப் பட்டுவந்தேன். ஆனால், அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எதையும் நான் செவியுறவில்லை. இந்நிலையில் ஒரு நாள் என் அடிமைப் பெண் எனக்குத் தலைவாரிக்கொண்டிருந்தாள்.
அப்போது (பள்ளிவாசலின் சொற்பொழிவு மேடையிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களே!" என்று அழைத்தார்கள். உடனே நான் அந்த அடிமைப் பெண்ணிடம், " என்னைவிட்டு (சிறிது) விலகிக்கொள்" என்று சொன்னேன். அதற்கு அவள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களைத்தான் அழைத்தார்கள். பெண்களை அழைக்கவில்லை" என்று சொன்னாள். அதற்கு நான் "நானும் மக்களில் ஒருவரே" என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (எனது "அல்கவ்ஸர்" எனும்) தடாகத்தினருகில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அங்கு என்னிடம் வருவோருக்கு ஓர் எச்சரிக்கை! உங்களில் எவரும் வழி தவறிவந்த ஒட்டகம் விரட்டப்படுவதைப் போன்று (என்னை நெருங்கவிடாமல்) என்னிடமிருந்து விரட்டப்பட வேண்டாம்.
அப்போது நான், "ஏன் இவ்வாறு (விரட்டுகிறீர்கள்)?" என்று கேட்பேன். அதற்கு, "உங்களுக்குப் பின்னால் இவர்கள் புதிது புதிதாக (மார்க்கத்தில்) எதையெல்லாம் உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது" என்று சொல்லப்படும். அப்போது நான், "தொலையட்டும்! (அவர்கள்)" என்பேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உம்மு சலமா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி "மக்களே!"என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது நான் தலைவாரிக்கொண்டிருந்தேன். உடனே நான் எனக்குத் தலைவாரிவிட்டுக்கொண்டிருந்த அடிமைப் பெண்ணிடம், தலை முடியைச் சேர்த்து (கொண்டை போட்டு)விடு என்று சொன்னேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 43
4602. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுவிப்பதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழுதார்கள்.
பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பரு)க்குத் திரும்பிவந்து "உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது ("அல்கவ்ஸர்" எனும்) என் தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு "பூமியின் கருவூலத் திறவுகோல்கள்" அல்லது "பூமியின் திறவுகோல்கள்" கொடுக்கப் பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (ஏக இறைவனுக்கு) இணை கற்பிப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகச் செல்வங்களுக்காக நீங்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றுதான் அஞ்சுகிறேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 43
4603. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹுதுப் போர் உயிர்த்தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி (உரை நிகழ்த்தி)னார்கள். அ(வ்வுரையான)து உயிரோடுள்ளவர்களிடமும் இறந்தவர்களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது.
அவ்வுரையில் அவர்கள், "நான் ("அல்கவ்ஸர்" எனும் எனது) தடாகத்தினருகில் உங்களுக்(கு நீர் புகட்டுவதற்)காகக் காத்திருப்பேன். அத்தடாகத்தின் பரப்பளவு "அய்லா"விலிருந்து "ஜுஹ்ஃபா" வரையுள்ள தொலைதூரத்தைப் போன்றதாகும். எனக்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டு, சண்டையிட்டுக்கொண்டு, உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்ததைப் போன்று நீங்களும் அழிந்துவிடுவீர்களோ என்றே நான் அஞ்சுகிறேன்" என்று சொன்னார்கள்.
இதுவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை இறுதியாகச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது பார்த்த நிகழ்வாக அமைந்தது.
அத்தியாயம் : 43
4604. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு முன்பே ("அல்கவ்ஸர்" எனும்) தடாகத்திற்குச் சென்று (உங்களுக்கு நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது மக்களில் சிலருக்காக நான் வாதாடுவேன். ஆனால், அதில் நான் தோற்றுவிடுவேன். அப்போது நான் "இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்; என் தோழர்கள்" என்பேன். அதற்கு "உமக்குப் பின்னர் இவர்கள் (மார்க்கத்தில்) புதிது புதிதாக என்னென்ன செய்தார்கள் என்பதை நீர் அறியமாட்டீர்" என்று சொல்லப்படும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "(இவர்கள்) என் தோழர்கள்; என் தோழர்கள் (என்பேன்)" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் வழியாகவும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4605. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"("அல்கவ்ஸர்" எனும்) எனது தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) "ஸன்ஆ"விற்கும் மதீனாவிற்கும் இடையேயான தொலைதூரம் கொண்டதாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன் என்று சொன்னேன்.
அப்போது முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் என்னிடம் "அதன் கோப்பைகள் குறித்து நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறவில்லையா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். அதற்கு முஸ்தவ்ரித் (ரலி) அவர்கள், "(அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் (எண்ணிக்கையில்) நட்சத்திரங்களைப் போன்று காணப்படும்" என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்ததாகச் சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஹாரிஸா பின் வஹ்ப் அல்குஸாஈ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்கவ்ஸர்" தடாகத்தைப் பற்றி மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி அறிவித்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது. முஸ்த்தவ்ரித் (ரலி) அவர்களின் கூற்றும் அவர்களுக்கு ஹாரிஸா (ரலி) அவர்கள் அளித்த பதிலும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 43
4606. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு எதிரில் (மறுமையில்) ஒரு தடாகம் உள்ளது. (அதை நீங்கள் காண்பீர்கள்.) அதன் இரு மூலைகளுக்கு இடையேயுள்ள தொலைதூரம் (அன்றைய "ஷாம்" நாட்டின்) "ஜர்பா" மற்றும் "அத்ருஹ்" ஆகிய நகரங்களுக்கிடையே உள்ள தூரத்தைப் போன்றதாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு எதிரில் (மறுமை நாளில்) ஒரு தடாகம் உள்ளது. (அதை நீங்கள் காண்பீர்கள்). அது (அன்றைய "ஷாம்"நாட்டின்) "ஜர்பா" மற்றும் "அத்ருஹ்" ஆகியவற்றுக்கு இடையே உள்ளதைப் போன்ற (தொலைதூரத்தைக் கொண்ட)தாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "எனது தடாகம்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள், பின்வருமாறு கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது:
நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் (அவ்விரு ஊர்களின் தூரத்தைப் பற்றிக்) கேட்டேன். அதற்கு நாஃபிஉ (ரஹ்) அவர்கள், "(அவ்விரண்டும்) "ஷாம்" நாட்டிலுள்ள இரு ஊர்களாகும். அவ்விரண்டுக்குமிடையே மூன்று இரவு பயணத்தொலைவு உள்ளது" என்று பதிலளித்தார்கள்.
இப்னு பிஷ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூன்று நாட்கள் பயணத்தொலைவு உள்ளது" என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 43
4607. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு எதிரில் (மறுமை நாளில்) தடாகம் ஒன்று உள்ளது. (அதை நீங்கள் காண்பீர்கள். அதன் நீளம், அன்றைய ஷாம் நாட்டிலுள்ள) "ஜர்பா" மற்றும் "அத்ருஹ்" ஆகியவற்றுக்கிடையே உள்ள (தொலைதூரத்)தைப் போன்றதாகும். அதில் விண்மீன்களைப் போன்று கோப்பைகள் உள்ளன. யார் அங்கு வந்து அதிலிருந்து அருந்துகிறாரோ அவருக்கு அதற்குப் பின்னர் ஒருபோதும் தாகமே ஏற்படாது.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 43
4608. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (அல்கவ்ஸர் எனும்) அத்தடாகத்தின் கோப்பைகள் என்ன?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அதன் கோப்பைகள் (எண்ணிக் கையானது), மேகமோ நிலவோ இல்லாத இரவில் காட்சியளிக்கும் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானதாகும். அவையே சொர்க்கத்தின் கோப்பைகளாகும்.
யார் அ(த்தடாகத்)தில் அருந்துகிறாரோ அவருக்கு இறுதிவரை தாகமே ஏற்படாது. அதில் சொர்க்கத்திலிருந்து இரு வடிகுழாய்கள் வழியாக நீர் வந்துசேருகிறது. அதில் அருந்துபவருக்குத் தாகமே ஏற்படாது. அத்தடாகத்தின் அகலம் அதன் நீளத்தைப் போன்று (சமஅளவில்) இருக்கும். அதன் தொலைதூரம் (அன்றைய ஷாம் நாட்டிலிருந்த) "அம்மானு"க்கும் "அய்லா"வுக்கும் இடையேயுள்ள தொலைதூரத்தைக் கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது; தேனைவிட மதுரமானது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 43