4469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; ஆந்தை பற்றிய (மூட)நம்பிக்கையும் (உண்மை) இல்லை; நட்சத்திர இயக்கத்தால்தான் மழை பொழிகிறது என்பதும் (உண்மை) இல்லை; ஸஃபர் (தொற்று நோய்) என்பதும் கிடையாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4470. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தானும் கிடையாது.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4471. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தானும் கிடையாது; ஸஃபர் (தொற்றுநோய்) என்பதும் கிடையாது.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4472. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; ஸஃபர் (தொற்றுநோய்) என்பதும் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தானும் கிடையாது.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாபிர் (ரலி) அவர்கள் "ஸஃபர் கிடையாது" என்பதற்கு விளக்கமளிக்கையில், "ஸஃபர் என்பது வயிறாகும்" என்று கூறினார்கள். ஜாபிர் (ரலி) அவர்களிடம், "(அது) எப்படி?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "வயிற்றில் உருவாகும் ஒரு புழுவாகும் என்று சொல்லப் படுவதுண்டு" என்றார்கள்.
ஆனால், ஜாபிர் (ரலி) அவர்கள், ("வர்ண ஜாலம் காட்டும் சாத்தான்" என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) "ஃகூல்" என்பதற்கு விளக்கமளிக்கவில்லை. ஆயினும், பல வண்ணம் காட்டுவதே இந்த "ஃகூல்" என்பதாகும்.
இதை அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 34 பறவை சகுனமும் நற்குறியும் அபசகுனம் எதில் உள்ளது என்பதும்.
4473. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்" என்று கூறியதை நான் செவியுற்றேன். அப்போது, "நற்குறி என்பது என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நீங்கள் செவியுறுகின்ற நல்ல (மங்கலகரமான) சொல்தான்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "செவியுற்றேன்" என்ற குறிப்பு இடம்பெறவில்லை. ஷுஐப் பின் அல்லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் செவியுற்றேன்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4474. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் ஏதும் கிடையாது; நற்குறி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. (மங்கலகரமான) நல்ல, அழகான சொல்லே நற்குறி ஆகும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4475. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்று சொன்னார்கள். அப்போது "நற்குறி என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "(மங்கலகரமான) நல்ல சொல்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4476. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் ஏதும் கிடையாது; (ஆனால்) நற்குறியை நான் விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4477. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; ஆந்தை பற்றிய (மூட)நம்பிக்கை (உண்மை) இல்லை; பறவை சகுனம் ஏதும் கிடையாது. (ஆனால்,) நான் நற்குறியை விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4478. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபசகுனம் (இருப்பதென்றால்) மனை, மனைவி, புரவி (குதிரை) ஆகிய மூன்றில்தான் இருக்கும். - இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; சகுனம் பார்ப்பது (இருப்பதென்றால்) மூன்று விஷயங்களில்தான். மனைவியிலும் குதிரையிலும் (குடியிருக்கும்) வீட்டிலும்தான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபசகுனம் தொடர்பான மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களைத் தவிர வேறெவரது அறிவிப்பிலும் தொற்றுநோய், பறவை சகுனம் ஆகியவை பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 39
4480. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபசகுனத்தில் ஏதேனும் உண்மை இருக்குமானால், குதிரையிலும் மனைவியிலும் வீட்டிலும்தான் இருக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "உண்மை" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 39
4481. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபசகுனம் எதிலேனும் இருக்குமானால், குதிரையிலும் வீட்டிலும் மனைவியிலும்தான் இருக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4482. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அது -அதாவது அபசகுனம்- (எதிலேனும்) இருக்குமானால், மனைவியிலும் குதிரையிலும் வீட்டிலும்தான் இருக்கும்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4483. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அ(பசகுனமான)து எதிலேனும் இருக்கு மானால், வீட்டிலும் பணியாளரிலும் குதிரையிலும் தான் இருக்கும்.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 35 சோதிடம் பார்ப்பதும் சோதிடர்களிடம் செல்வதும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
4484. முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் பல (பாவ) காரியங்களைச் செய்துவந்தோம்; சோதிடர்களிடம் சென்று (குறி கேட்டுக்) கொண்டிருந்தோம்" என்று கூறினேன். அதற்கு அவர்கள், "சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்" என்றார்கள். மேலும், "நாங்கள் பறவையை வைத்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தோம்" என்று நான் கூறினேன். அதற்கு நபியவர்கள், "இது உங்களில் சிலர் தம் உள்ளங்களில் காணும் (ஐதிகம் சார்ந்த) விஷயமாகும். இது உங்களை (செயலாற்றுவதிலிருந்து) தடுத்துவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் முஆவியா பின் அல் ஹகம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பறவை சகுனம் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது; சோதிடர்கள் பற்றிய குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் முஆவியா பின் அல்ஹகம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான், "எங்களில் சிலர் (நற்குறி அறிய மணலில்) கோடு வரை(யும் பழங்கால கணிப்பு முறையை மேற்கொள்)கின்றனர்" என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நபிமார்களில் ஒருவர் (இவ்வாறு) கோடு வரைந்துவந்தார். யார் அவரைப் போன்று கோடு வரைகிறாரோ அது (சாத்தியம்)தான்" என்று பதிலளித்தார்கள்" என முஆவியா பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4485. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! சோதிடர்கள் (சில வேளைகளில்) எங்களுக்கு ஒன்றை அறிவிக்க, அது உண்மையாகிவிடுவதைக் காண்கிறோமே (அது எப்படி)?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அது ஜின்னிடமிருந்து சோதிடன் எடுத்துக் கொண்ட உண்மையான சொல்லாகும். அ(ந்த உண்மையான கருத்)தை ஜின் தனது சோதிட நண்பனின் காதில் போட, அதனுடன் அவன் நூறு பொய்களைக் கூட்டி(ச் சொல்லி) விடுகிறான்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 39
4486. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்களில் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (பொருட்படுத்தத்தக்க) ஒரு பொருள் அல்லர்" என்று சொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சோதிடர்கள் (சில வேளைகளில்) ஒன்றை அறிவிக்கிறார்கள்; அது உண்மையாகிவிடுகிறதே?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த உண்மையான சொல் (வானவர்களிடமிருந்து) ஜின் (கள்ளத்தனமாக) எடுத்துக்கொண்டதாகும். அது தன் சோதிட நண்பனின் காதில் கோழி கொக்கரிப்பதைப் போன்று கொக்கரிக்க, அவன் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்துவிடுகிறான்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4487. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரி நபித்தோழர்களில் ஒருவர் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்:
ஒரு நாள் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (வானிலிருந்து) ஒரு நட்சத்திரம் எறியப்பட்டு ஒளிர்ந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் "இதைப் போன்று (வானிலிருந்து) நட்சத்திரம் எறியப்பட்டால், நீங்கள் அறியாமைக் காலத்தில் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள். (அறியாமைக் காலத்தில் இவ்வாறு நட்சத்திரம் எறியப்பட்டால்) இன்றிரவு ஒரு மாமனிதர் பிறந்திருக்கிறார்; ஒரு மாமனிதர் இறந்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்" என்று பதிலளித்தனர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய பிறப்புக்காகவோ யாருடைய இறப்புக்காகவோ அது எறியப்படுவதில்லை. மாறாக, வளமும் புகழும் கொண்ட நம் இறைவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்துவிட்டால், அரியணையை (அர்ஷ்) சுமக்கும் வானவர்கள் இறைவனை(ப் போற்றி)த் துதிக்கின்றனர். பிறகு (அதைக் கேட்டு) அதற்கடுத்த வானிலுள்ள (வான)வர்களும் (இறைவனைப் போற்றித்) துதிக்கின்றனர். (இவ்வாறே ஒவ்வொரு வானிலுள்ள வானவர்கள் துதிக்கின்றனர்.) இறுதியில் அத்துதி பூமிக்கு அருகிலுள்ள வானவர்களை வந்தடைகிறது.
பின்னர் அரியணையைச் சுமக்கும் வானவர்களுக்கு அருகிலிருப்பவர்கள், அரியணையைச் சுமக்கும் வானவர்களிடம், "உங்கள் இறைவன் என்ன சொன்னான்?" என்று வினவுகின்றனர். அதற்கு அரியணையைச் சுமக்கும் வானவர்கள் இறைவன் என்ன சொன்னான் என்பதை அவர்களிடம் தெரிவிக்கின்றனர். உடனே வானிலிருப்போரில் சிலர் வேறுசிலரிடம் அது குறித்து விசாரித்துக் கொள்கின்றனர்.
முடிவில் அச்செய்தி பூமிக்கு அருகிலுள்ள வானத்தை வந்தடைகிறது. உடனே அதை ஜின்கள் ஒட்டுக்கேட்டு, அதைத் தம் (சோதிட) நண்பர்களிடம் போடுகின்றனர். (அப்போது) அவர்கள்மீது நட்சத்திரங்கள் எறியப்படுகின்றன. உள்ளது உள்ளபடி சோதிடர்கள் தெரிவிப்பது உண்மையாகும். ஆயினும், அவர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக (மக்களிடம்) கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஆயினும், அவற்றில் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அன்சாரி நபித்தோழர்கள் சிலர் கூறினர் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அவ்ஸாஈ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆயினும், சோதிடர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக (மக்களிடம்) அறிவிக்கின்றனர்" என்று இடம்பெற்றுள்ளது.
யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆயினும், சோதிடர்கள் அதில் சேர்த்துக் கூடுதலாக அறிவிக்கின்றனர்" என்று காணப்படுகிறது. மேலும், அவர்களது அறிவிப்பில், "அ(வ்வான)வர்களது அச்சம் விலகியதும் அவர்கள் "உங்கள் இறைவன் என்ன சொன்னான்?" என்று கேட்கின்றனர். அதற்கு அவர்கள் "உண்மையே சொன்னான்" என்று பதிலளிக்கின்றனர் (34:23)" என்று இடம்பெற்றுள்ளது.
மஅகில் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அவ்ஸாஈயின் அறிவிப்பில் உள்ளதைப் போன்றே "ஆயினும், சோதிடர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக அறிவிக்கின்றனர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4488. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரிடமிருந்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39