4119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் நின்றுகொண்டு அருந்தவேண்டாம். யாரேனும் மறந்து(போய் நின்று கொண்டு அருந்தி)விட்டால் அவர் வாந்தி எடுத்துவிடட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 15 ஸம்ஸம் தண்ணீரை நின்றுகொண்டு அருந்துவது.
4120. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அருந்துவதற்கு ஸம்ஸம் தண்ணீரைக் கொடுத்தேன். அதை அவர்கள் நின்றுகொண்டு அருந்தினார்கள்.
அத்தியாயம் : 36
4121. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஸம்ஸம் (கிணற்றின்) தண்ணீரை ஒரு வாளியில் எடுத்து, அதை நின்றுகொண்டு அருந்தினார்கள்.
அத்தியாயம் : 36
4122. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு ஸம்ஸம் தண்ணீரை அருந்தினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4123. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அருந்துவதற்கு ஸம்ஸம் தண்ணீர் கொடுத்தேன். அதை அவர்கள் நின்றுகொண்டு அருந்தினார்கள். இறையில்லம் கஅபா அருகில் இருந்தபோதுதான் அவர்கள் தண்ணீர் கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஆகவே, அவர்களுக்கு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்தேன்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 16 (பருகும்) பாத்திரத்தினுள் மூச்சு விடுவது வெறுக்கத்தக்கதாகும். பாத்திரத்திற்கு வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத்தக்கதாகும்.
4124. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் (பருகும்) பாத்திரத்தினுள் மூச்சு விட வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 36
4125. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பருகும்போது) மூன்று முறை பாத்திரத்தி(ற்கு வெளியி)ல் மூச்சு விட்டு(ப் பருகி)வந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4126. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி)வந்தார்கள். மேலும், "இதுவே நன்கு தாகத்தைத் தணிக்கக்கூடியதும் (உடல்நலப்) பாதுகாப்பிற்கு ஏற்றதும் அழகிய முறையில் செரிக்கச் செய்யக்கூடியதும் ஆகும்" என்று கூறினார்கள்.
ஆகவேதான், நானும் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி) வருகிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பாத்திரத்தில் (பருகும்போது)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 17 (ஓர் அவையில் பரிமாறப்படும்) தண்ணீர், பால் உள்ளிட்ட பானங்களை (பரிமாறுகின்ற) முதல் நபர், தமது வலப்பக்கத்திலிருந்து கொடுத்துவருவது விரும்பத்தக்கதாகும்.
4127. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தண்ணீர் கலந்த பால் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்களுக்கு வலப்பக்கம் கிராமவாசி ஒருவரும் இடப்பக்கம் அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாலைப்) பருகிய பின் (மீதியை வலப்பக்கமிருந்த) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, "(பரிமாறும்போது முதலில்) வலப்பக்கம் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப்பக்கமிருப்பவருக்கும் (கொடுக்கவேண்டும்)" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 36
4128. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது நான் பத்து வயதுடையவனாக இருந்தேன். நான் இருபது வயதுடையவனாக இருந்தபோது அவர்கள் இறந்தார்கள். என் (தாய், தாயின் சகோதரி உள்ளிட்ட) அன்னையர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்யுமாறு என்னைத் தூண்டிக்கொண்டேயிருந்தார்கள்.
இந்நிலையில் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுக்காக (எங்கள்) வீட்டில் வளர்ந்த ஓர் ஆட்டிலிருந்து நாங்கள் பால் கறந்து, வீட்டிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து நீரெடுத்து அதில் கலந்து (அடர்த்தி நீக்கி, குளுமையாக்கி) அவர்களுக்குக் கொடுத்தோம். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பருகினார்கள். அப்போது அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ருக்குக் கொடுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப்பக்கத்தில் இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமக்கு வலப் பக்கத்திலிருந்த) கிராமவாசி ஒருவருக்கே கொடுத்தார்கள். மேலும், "(பானங்கள் உள்ளிட்டவற்றைப் பரிமாறும்போது முதலில்) வலப்பக்கம் இருப்பவருக்கும் அடுத்து (அவருக்கு) வலப்பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுக்க வேண்டும்)" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4129. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, அருந்துவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். ஆகவே,அவர்களுக்காக நாங்கள் ஓர் ஆட்டின் பாலைக் கறந்தோம். பிறகு எனது இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, அதில் கலந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்தினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபியவர்களின் இடப் பக்கத்திலும், உமர் (ரலி) அவர்கள் நபியவர்களின் முன் பக்கத்திலும், ஒரு கிராமவாசி நபியவர்களுக்கு வலப் பக்கத்திலும் இருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இதோ அபூபக்ர் (அவருக்கு மீதியுள்ள பாலைக் கொடுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!" என்று (இடப்பக்கத்திலிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்களைக் காட்டிக் கூறினார்கள். எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலப்பக்கமிருந்த) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் கொடுக்கவில்லை.
மேலும், "(பரிமாறும்போது முதலில்) வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்). வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்). வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்)" என்று கூறினார்கள்.
(இறுதியில்) அனஸ் (ரலி) அவர்கள், "இதுவே நபிவழியாகும்; இதுவே நபிவழியாகும்; இதுவே நபிவழியாகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4130. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதோ பானம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களுக்கு வலப்பக்கம் சிறுவர் ஒருவரும் இடப்பக்கத்தில் முதியோர் சிலரும் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவரிடம், "இ(ந்தப் பானத்தை இம்முதிய)வர்களுக்கு அளிக்க என்னை நீ அனுமதிப்பாயா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அச்சிறுவர், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்த நற்பேற்றை வேறெவருக்கும் நான் விட்டுத்தரமாட்டேன்" என்று பதிலளித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,அதை அச்சிறுவனின் கையிலேயே அழுத்தி வைத்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 36
4131. மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் குதைபா மற்றும் யஅகூப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (அச்சிறுவனின் கையிலேயே) அழுத்தி வைத்துவிட்டார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. ஆயினும், யஅகூப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எனவே, அ(ச் சிறு)வருக்கே அதைக் கொடுத்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 18 (உணவு உண்டு முடித்ததும்) விரல்களைச் சூப்புவதும், உணவுத் தட்டை வழித்து உண்பதும், கீழே தவறிவிழுந்த உணவுக் கவளத்தில் படும் தூசைத் துடைத்துவிட்டு அதை உண்பதும் விரும்பத்தக்கவை ஆகும். விரல்களைச் சூப்புவதற்கு முன் கையைத் துடைப்பது வெறுக்கத்தக்கதாகும்.
4132. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உட்கொண்டால், அவர் தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத்தராமல் அதை அவர் துடைத்துக்கொள்ள வேண்டாம்.- இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4133. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உட்கொண்டால், அவர் தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத்தராமல் கையைத் துடைத்துக் கொள்ள வேண்டாம். - இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4134. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உணவு உண்ட பின் தம்முடைய மூன்று விரல்களை உறிஞ்சுவதை நான் பார்த்திருக்கிறேன்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "மூன்று" எனும் குறிப்பு இல்லை.
- கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் உணவு உண்பார்கள். (உண்டு முடித்த பின்) கையைத் துடைப்பதற்கு முன் கையை உறிஞ்சுவார்கள்.
அத்தியாயம் : 36
4135. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் உணவு உட்கொள்வார்கள். உண்டு முடித்ததும் அவ்விரல்களை உறிஞ்சுவார்கள்.
இதை அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள், அல்லது அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4136. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களை உறிஞ்சுமாறும் தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும், "உணவின் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 36
4137. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது உணவுக்கவளம் (உண்ணும்போது தவறி) விழுந்துவிட்டால் அவர் அதை எடுத்து, அதில் ஒட்டியிருப்பதை அகற்றி(ச் சுத்தம் செய்து)விட்டு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். மேலும், (உண்ட பின்) தம் விரல்களை உறிஞ்சுவதற்கு முன் கைக்குட்டையால் கையைத் துடைத்துவிட வேண்டாம். ஏனெனில், தமது உணவில் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதைக் கைக்குட்டையால் துடைத்துவிட வேண்டாம்" என்பதும் அதற்குப் பின்னுள்ள தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36
4138. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற்கிறான். மனிதன் உணவு உண்ணும்போதும் அவன் பங்கேற்கிறான். (உண்ணும்போது) உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக் கவளம் கீழே விழுந்துவிட்டால், அதில் படுவதை சுத்தப்படுத்தி விட்டு, பிறகு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம்.
உண்டு முடித்ததும் அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். ஏனெனில், அவரது எந்த உணவில் வளம் (பரக்கத்) இருக்கும் என்பதை அவர் அறியமாட்டார்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "உங்களில் ஒருவரிடமிருந்து உணவுக்கவளம் விழுந்துவிட்டால்" என்பதிலிருந்தே ஹதீஸ் ஆரம்பமாகிறது. "உங்களில் ஒருவருடைய ஒவ்வொரு அலுவலிலும் ஷைத்தான் பங்கேற்கிறான்" எனும் ஆரம்பக் குறிப்பு அவற்றில் இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "கை விரல்களை உறிஞ்சிக் கொள்வது" தொடர்பாக இடம்பெற்றுள்ளது. அபூசுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உணவுக் கவளம் விழுந்துவிடுவது" தொடர்பான குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36