பாடம் : 12 பாத்திரங்களை மூடிவைத்தல், தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டு வைத்தல், கதவைத் தாழிடுதல்,இவற்றின்போது அல்லாஹ்வின் பெயர் கூறல், உறங்கச் செல்கையில் விளக்கையும் நெருப்பையும் அணைத்துவிடுதல், மஃக்ரிபுக்குப் பின் (இரவின் சிறிது நேரம் கழியும்வரை) குழந்தைகளையும் கால்நடைகளையும் (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடல் ஆகியவற்றைச் செய்யுமாறு வந்துள்ள கட்டளை.
4099. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள்; கதவைத் தாழிட்டுவிடுங்கள்; விளக்கை அணைத்துவிடுங்கள்; ஏனெனில், ஷைத்தான் (சுருக்கிட்டு மூடிவைக்கப்பட்ட) எந்தப் பையையும் அவிழ்ப்பதில்லை; மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை; (மூடிவைக்கப்பட்ட) எந்தப் பாத்திரத்தையும் திறப்பதில்லை.
உங்களில் ஒருவர் தமது பாத்திரத்தின் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது அல்லாஹ்வின் பெயர் சொல்லி மூடிவைக்க முடியுமானால் அவ்வாறே அவர் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், எலி (விளக்கின் திரியை இழுத்துச் சென்று) வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்துவிடும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கதவைத் தாழிட்டுவிடுங்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில்"பாத்திரத்தைக் கவிழ்த்து(க் கொட்டி)விடுங்கள்; அல்லது பாத்திரத்தை மூடிவையுங்கள்" என்று இடம்பெற்றுள்ளது. "பாத்திரத்தின் மீது குச்சியைக் குறுக்காக வைப்பது" தொடர்பான குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "கதவைத் தாழிட்டுவிடுங்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் "பாத்திரத்தை மூடிவையுங்கள்" என்றும், "(எலி) வீட்டாரின் உடைகளை எரித்துவிடும்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மேற்கண்ட ஹதீஸில் உள்ள விவரங்களுடன் "எலி வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்துவிடும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4100. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இரவின் இருள் பரவத் தொடங்கிவிட்டால்" அல்லது "அந்திப் பொழுதாகிவிட்டால்" உங்கள் குழந்தைகளை (வெளியே திரியவிடாமல்) தடுத்துவிடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (புத்தெழுச்சியுடன் பூமியெங்கும்) பரவுகின்றனர். இரவின் சிறிது நேரம் கழிந்துவிட்டால் குழந்தைகளை (வெளியே செல்ல) விட்டுவிடுங்கள். மேலும், (வீட்டின்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். அப்போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை.
உங்கள் தண்ணீர் பையின் வாய்ப் பகுதியைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட முடியாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
எனினும், அதில் "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட இரு ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4101. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மறைந்துவிட்டால் இரவின் (ஆரம்பநேர) இருள் விலகும்வரை உங்கள் கால்நடைகளையும் குழந்தைகளையும் வெளியே விடாதீர்கள். ஏனெனில், ஷைத்தான்கள் சூரியன் மறைந்துவிட்டால் இரவின் (ஆரம்பநேர) இருள் விலகும்வரை கிளம்பிச் செல்கின்றனர்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4102. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள். ஏனெனில்,ஆண்டின் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. மூடியில்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடிவைக்காத தண்ணீர் பையையும் கடந்து செல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஆண்டில் ஒரு நாள் உண்டு. அந்நாளில் கொள்ளை நோய் இறங்குகிறது" என்று இடம்பெற்றுள்ளது. ஹதீஸின் இறுதியில் "நமக்கு அருகிலுள்ள அரபியர் அல்லாதோர் டிசம்பர் மாதத்தில் அந்த நாள் வருவதாகக் கருதி அஞ்சுகின்றனர்" என்று லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4103. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள்.- இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4104. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் ஒரு வீடு இரவில் (தீ விபத்துக்குள்ளாகி) வீட்டாரோடு எரிந்துவிட்டது. அவர்களின் நிலை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது, "இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானதே ஆகும். ஆகவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குமுறைகளும் விதிமுறைகளும்.
4105. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (சேர்ந்து) உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்கமாட்டோம். ஒருமுறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப்போனாள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவரைப் போன்று (விரைந்து வந்து பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உணவில் கை வைக்க) வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே,இவரது கையைப் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக்கொண்டது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு உண்ண (விருந்துக்கு) அழைக்கப்பெற்றால்..."என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இதில் ("தள்ளிவிடப்பட்டவரைப் போன்று" என்பதற்குப் பதிலாக) "துரத்தப்பட்டவரைப் போன்று" என்றும், முதலில் கிராமவாசி வந்தார்; பிறகு அச்சிறுமி வந்தாள் என்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், ஹதீஸின் இறுதியில் "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) சொல்லி உணவு உண்டார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள் ளது.
அதில் "கிராமவாசிக்கு முன் அச்சிறுமி வந்தாள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 36
4106. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை" என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது" என்று சொல்கிறான்.
அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்" என்று சொல்கிறான்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால், அவர் இல்லத்திற்குள் நுழையும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் (ஷைத்தான் "இந்த இரவில் நீங்கள் தங்குமிடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்" என்று கூறுகிறான்)" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4107. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இடக்கையால் உண்ணாதீர்கள். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான்; இடக் கையால்தான் பருகுகிறான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிபபாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4109. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் இடக் கையால் உண்ண வேண்டாம்; இடக் கையால் பருக வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால்தான் உண்கிறான்; இடக்கையால் தான் பருகுகிறான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் "இடக் கையால் வாங்காதீர்கள். இடக் கையால் கொடுக்காதீர்கள்" என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள். அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களில் ஒருவர் (இடக் கையால்) உண்ண வேண்டாம்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4110. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வலக் கையால் உண்பீராக!" என்று சொன்னார்கள். அவர், "என்னால் முடியாது" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மால் முடியாமலே போகட்டும்!" என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது.
அத்தியாயம் : 36
4111. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்தேன். (ஒருமுறை) எனது கை, உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்துகொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குழந்தாய்! (உண்ணும்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வாயாக! உன் வலக்கரத்தால் உண்பாயாக! உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பாயாக!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4112. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு அருந்தினேன். தட்டின் மூலைகளிலிருந்து இறைச்சியை எடுக்கலானேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன(து கை)க்கு அருகிலிருந்து எடுத்து உண்பாயாக!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4113. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை, அவற்றின் வாய்ப்பகுதியை வெளிப் பக்கமாகச் சுருட்டிவிட்டு அதிலிருந்து நீரருந்த வேண்டாமென ("இக்தினாஸ்") தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 36
4114. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை, அவற்றின் வாய்ப் பகுதியி(னை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதி)லிருந்து நீர் பருக வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இக்தினாஸ்" என்பது, அவற்றின் வாய்ப்பகுதியை வெளிப்பக்கமாகத் திருப்பிவிட்டு, அதிலிருந்து நீர் பருகுவதாகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 14 நின்றுகொண்டு நீர் அருந்துவது வெறுக்கத்தக்கதாகும்.
4115. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.
அத்தியாயம் : 36
4116. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், ஒருவர் நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்" என்று கூறினார்கள். உடனே நாங்கள், "அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா?" என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அது அதைவிட மோசமானது; அருவருப்பானது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் கத்தாதா (ரஹ்) அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36
4117. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.
அத்தியாயம் : 36
4118. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36